எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் எதிர்த்தாக்குதல்! (ஐயய்யோ!)
January 11, 2014
யுத்த தர்மம் என்று ஒன்று உணடு. ஆனால், வாயையும் கையையும் கீபோர்டையும் தவிர வேறு எந்த ஆயுதத்தையும் இக்காலங்களில் பிரயோகிக்கத் தெரியாத என்மேல் — என் குற்றச்சாட்டுகளுக்கு(=தீர்ப்புகள்), நேரிடையாகப் பதில் சொல்லாமல், எதிர்வினை தராமல் – இப்படி ஒரு கெரில்லாத் தாக்குதலை முடுக்கி விட்டிருக்கிறார் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள்! கிருஷ்ணர்களுக்கும் தருமத்துக்கும் ஒரு தொடர்புமே இல்லையோ!
பாருங்கள் இந்த அநியாயத்தை – அவர் வலைத் தளத்திலிருந்து ஒரு மகாமகோ முழிபெயர்ப்புச் சாத்தானை ஏவி விட்டிருக்கிறார்!
இவருக்கென்று பிரத்யேகமாக — படு பீதியளிக்கும் பயங்கர ட்ரான்ஸ்லேஷன், டிக்ஷனரி ஆயுதங்களை ஏந்தி, வாசகர்களின் கபாலங்களின் மீது கோரதாண்டவம் ஆடும் பயங்கரவாத ஆபத்துதவிப் படையினர் இருக்கின்றனர் என்று எனக்கு இதுவரை தெரியவே தெரியாது. அந்த எழவெடுத்த பொன்னியின்செல்வனில் இது பற்றி ஒன்றுமே இல்லை… Read the rest of this entry »
நோ, எஸ் ராமகிருஷ்ணன்! மன்னிக்கவும், கலிலியோ மண்டியிட்டார்தான்!
January 10, 2014
அதாவது, உங்களிடம்.
‘என்னை விட்டுவிடுங்கள்’ என்று நாத்தழுதழுக்க, கண்ணில் நீர் பெருக, குரல் கம்ம, நெஞ்சு படபடக்க, கைகள் நடுங்க – அவர் உங்களிடம் மண்டியிட்டுக் கைகூப்பிக் காலில் விழுந்து இறைஞ்சியதை நானே என் கண்ணால் பார்த்தேன்… என்ன சோகம்! :-(
(அல்லது) எஸ் ராமகிருஷ்ண லீலா தரங்கிணி… (2/3)
… … ‘அறிவியலாளர்’களைப் பற்றிய, மகாமகோ எஸ் ராமகிருஷ்ண அமரகாவியமான ‘கலிலியோ மண்டியிடவில்லை‘ புத்தகம் உயிர்மை (மகாமகோ உலகத்தரம் வாய்ந்த கவிஞ்சரின் திராவிடத்தரமான நிறுவனம்தான்!) பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.
சேசுவே! பாவிகளை மன்னியும்.
இந்தப் புத்தகத்தின் அறிமுகமாக, எஸ்ரா அவர்களின் சொந்தமோசொந்தக் குறிப்பு:
“அறிவியலோ இலக்கியமோ எதுவாயினும் கற்பனைதான் அதன் ஆதாரம். ஆகவே கற்பனையான ஜீவராசிகளின் வழியே இந்த இரண்டு துறைகளையும் நான் அறிந்துகொள்ள முயன்றதே இக்கட்டுரைகள். அதிகம் விவாதிக்கப்பட்ட இந்தக் கட்டுரைகள் அறிவியல், இலக்கியம், சினிமா, கவிதை என்று நான்கு தளங்களின் பொதுப் புள்ளிகளை அடையாளப்படுத்துகிறது.”
— எஸ்.ராமகிருஷ்ணன் (http://www.uyirmmai.com/publications/BookDetails.aspx?bid=375)
கோனார் உரை: கற்பனையான ஜீவராசி = கழுதை என்பதறிக.
ஆனால், ஆசிரிய பல்துறைசார்வாள், இந்த ஜீவராசியின் வாய்வழியே அறிவியலையும் இலக்கியத்தையும் அறிந்து கொள்ள முயன்றாரா, அல்லது பின்னாலிருக்கும் ஓட்டையினூடேவா என்பதைத் தெளிவாக விளக்கவில்லை. Read the rest of this entry »
எஸ் ராமகிருஷ்ண லீலா தரங்கிணி… (1/3)
January 8, 2014
B-( 8-( :-( … … :-{
… (அல்லது) எஸ் ராமகிருஷ்ணன் எழுத்துகளில் சோகச்சித்திரங்கள்…
முதலில், ஒரு முக்கியமான தன்னிலை விளக்கம்: இக்கட்டுரைத் தொடரில் முதல் பகுதியான கட்டெறும்பு பெருத்து கழுதையான கதை என்பதில் கட்டெறும்பு என்பதுதான் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களைக் குறிக்கிறது; கழுதையென்பது அடியேனை. அதாவது முன்னவர், தனக்கேயுரிய பாணியில் எழுதி எழுதித் தள்ளி, என் அளவுக்கு மிக மிகப் பரிதாபமாக இறங்கி விடுகிறார் என்பதைக் குறிப்பதற்கே, இந்தத் தலைப்பு. இதைத் தயவுசெய்து தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.
இன்னொரு விஷயம்: ‘வரவர மாமியார் கழுதை போல் ஆனாராம்’ என்கிற ஔவையாரின் மூதுரையுடன், நீங்கள் இந்தத் தலைப்பினை இணைத்துக் குழப்பிக்கொண்டு, தவறுதலாகப் புரிந்துகொள்ளவேண்டாம் எனவும் தெண்டனிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். தவறான புரிதல்களினால் — சின்னஎஸ்ராவே, கட்டெறும்பு என் மாமியாரக் கடிக்குது-என்றெல்லாம் நான், நடிகை சுகன்யா நடிகர் பிரபுதேவா அவர்களைப் போல விலுக்விலுக்கென்று இடுப்பை வெட்டிக்கொண்டு பாடியாடவேண்டியிருக்கும், உங்களுக்கு இது தேவையா?? Read the rest of this entry »
ஹாஹ்ஹாவென்று எழுந்த ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ யுகப்புர்ச்சியின் ஒரு (ஒரேயொரு ?) சந்தோஷமான முடிவு!
January 6, 2014
(அல்லது) n = n +1
எல்லா நாட்களிலும் இப்படி நடப்பதில்லை. நடந்தால் நன்றாக இருக்கும்தான். ஆனால்…
… நேற்று மாலை, என்னவோ யோசனையில் (யாக்கை நிலையாமை என) ஆழ்ந்துகொண்டு, மெதுவாக சைக்கிள் ஓட்டிக் கொண்டு வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது – ஒரு மோட்டார்சைக்கிள் பீய்ங் பீய்ங் என்று ஹார்ன் அடித்துக்கொண்டு என் பின்னாலேயே வந்து கொண்டிருந்தது. முடிந்தவரை இடதுபக்க ஓரம் சென்றாலும் ஒரே பீய்ங் பீய்ங். சாலை என்னவோ விசாலமாக இருந்தாலும் இப்படி! Read the rest of this entry »
கட்டெறும்பு பெருத்து, கழுதையான கதை :-(
January 5, 2014
(அல்லது) எஸ் ராமகிருஷ்ணன் ஏன் இப்படியே எழுதிக் கொண்டிருக்கிறார், பாவம்…
ஹ்ம்ம்… இதுவரை, பொதுவாக — நம்முடைய பலதடவை முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி அவர்கள், எதனைப் பற்றி என்ன சொன்னாலும் எழுதினாலும் – அது உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பானதாகவும், முன்னுக்குப் பின் முரணாகவும்தான் இருக்கும் என்றுதான் அவற்றினை அணுகியிருக்கிறேன். ஆச்சரியம், ஆச்சரியம் – அவையும், ஒரு விதிவிலக்கு கூட இல்லாமல் இதுவரை அப்படியேதான் இருக்கின்றன. இயற்கைக்கு நன்றி.
ஆனால் — இவரைப் புரிந்து கொள்ள முடிவதற்கு, ஒப்புக் கொள்ளக்கூடிய பல காரணங்கள் (= இவர் ஒரு தொழில்முறை திராவிடத் தலைவர், தொட்டில் பழக்கம் என்றிருக்கிறதே, மாபெரும் குடும்ப நலன்களைக் கவனித்துக் கொள்ளவேண்டுமே – என்பது போல) இருக்கின்றன.
ஆனால் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்துகளை – என்னால் இக்காலங்களில் புரிந்து கொள்ள முடியவேயில்லை; தாளவும் முடியவில்லை! Read the rest of this entry »
வெள்ளெயானே வெளியேறு!
January 1, 2014
(அல்லது) இதுதாண்டா விமர்சனம்!
மொதல்ல ஒங்க அல்லார்க்கும் ஒரு ஸலாம் வெச்சுக்றேன்!
வணக்கம் ஸார். வணக்கம் லேடீஸ்.
பகத்சிங்க வெள்ளக்காரனுக்குப் போட்டுக்கொட்த்த, அம்பேத்கார் முதுக்ல குத்துன, பெரியார் மேல சூனியம் வெச்ச அந்த ஆரிய காந்தியப் பத்தி – மானாவாரியா, மூச்சுமுட்ட ஒரேடியா வுடாத ஆதரிச்சிக்கினு தெனாவெட்டா எளுதிக்கினே கீராரே இந்த செயமோகன் – அவ்ரே ஒரு புது பொத்தகத்தையும் எளுதிருக்காரு. புக்கு, பாக்க கொஞ்சம் குண்டாத்தான் கீது. வெள்ளேயானேன்னிட்டு எம்மாந் தெகிர்யத்தோட, வெள்ளக்காரனுங்க நெஞ்சத்ல கீற மஞ்சாசோத்த எடுக்றாமாரீ, நாக்கப் பிடுங்கிக்றாமாரீ எள்திருக்காரு இந்த செயமோகன்? பொத்தகத்தோட தலப்பே டாப்டக்கராத்தான் கீது.
ஆனாக்க என்க்கு மன்ஸ்ல ஒரு பெத்த கேள்வீ… அந்த குவிட் இண்டியா 1942 ஆகஷ்டு புர்ச்சி மண்ணாங்கட்டீ தெர்ப்பிள்தீ பத்தீ, இப்ப டெசம்பர்லயா – அதுவும் அத் நட்ந்த எளுவ்து வர்ஸத்துக்கு அப்றமாவா ஒரு புக்க எள்தீ – அத்த 2013ல ரிலீஸ் பண்வாங்க?
… இன்னாடா இது – பிர்யவே மாட்டேங்க்து… இந்தப் பதிப்பாளனுங்க்ளையிம் தூண்ல கட்டி நல்லா ஒதிக்கணும் – பேமானிப் பசங்ளுக்கு எப்போ என்னாமாரீ புக்கு போட்டா அது விக்கும்னிட்டு தெரீயவே மாட்டேங்து… எப்படியோ வித்துட்டானுங்கன்னாலும், எளுத்தாளனுங்க ராயல்டீ கேட்டாக்க, லைப்பரி ஆர்டர் கெடக்கலேன்னிட்டு டபாய்ப்பானுங்க. எளுத்தாலங்க அல்லாம், அவங்க பொண்டாட்டியோட வந்து அள்து பொரண்டுக்கினு றொம்பொ ப்ரெஸ்ஸர் போட்டாக்க, ராயல்டீ இல்ல கவிஞ்சரே, கொஞ்சம் ரெட்லேபிள் சூப்பர்டஸ்ட் டீதான் கீதுன்னுட்டு ஒரு லோட்டா கொடுப்பானுங்க… சூடா குடிச்சிட்டு சூத்தாமட்டைய தொடச்சிக்கினு ரிட்டர்ன் ஆய்ட்ணும். அவ்ளோதான். Read the rest of this entry »
தமிழ இயல்பு: ஸ்னெல் ஒளித்தடம் + ஸிப்ஃப் மானுட இயல்புக் கோட்பாடுகள்
December 20, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (16/n)
சாளரம் #8: ஸ்னெல் ஒளித் தடக் கோட்பாடு: ஓளியானது, எதிர்ப்பு குறைவாகவுள்ள பாதையில், ஆக அது வேகமாக செல்லக்கூடிய, நேரம் குறைவாக எடுத்துக் கொள்ளக் கூடிய பாதையில் மட்டுமே செல்லும்.
உப ஸிப்ஃப் கோட்பாடு: மனிதனின் தாங்குசக்தியும் மனவலிமையும் பொதுவாக மிகக் குறைவு – அப்படியே அவை இயங்கினாலும் அவை, எதிர்ப்பு குறைவாகவுள்ள, சுளுவான வழிமுறைகளில் மட்டுமே ஈடுபடுபவை.

இது 1949-ல் வெளிவந்த, பின்னர் பலராலும், மொழியியல் உட்படப் பல துறைகளிலும் மிகவும் பேசப்பட்ட ஒரு புத்தகம். பேராசிரியர் ஸிப்ஃப் அவர்கள் ஒரு மாமேதை என்பதில் ஐயமேயில்லை. (என்னிடம் இருப்பது, இந்தப் பழைய பதிப்பு தான்)
இதன் புதுக் கருக்குக் குலையாத ஒரு அச்சுஅசலான ஃபேக்ஸிமிலி பதிப்பு 2012ல் வந்திருக்கிறது. அதன் அட்டைப் படம் (அமேஸானிலிருந்து), கீழே: Read the rest of this entry »
இதுதாண்டா கொழுப்புத் தமிழர்களின் விழுக்காடு!
December 13, 2013
நான் வேலைவெட்டியற்றுக் கொழுப்பெடுத்து, நாம் தமிழர்கள்: தோலடிக் கொழுப்பும், நொதுமல் நிலையும் எனும் காட்டுரையை எழுதியதற்கு, என். பக்கிரிசாமி அவர்கள் ஒரு பின்னூட்டமிட்டிருக்கிறார்கள்.
தாங்கள் கூறும் இத்தகைய தமிழர்கள் எத்தனை சதவிகிதம் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?
கேட்டதற்கு நன்றி, பக்கிரிசாமி அவர்களே! மேலதிக ஆராய்ச்சி செய்ய என்னை நீங்கள் உந்துகிறீர்கள் என நினைக்கிறேன், மிக்க நன்றி. தமிழன் காணாத உன்னத உச்சங்களே இருக்கக் கூடாதல்லவா? ஆக, எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும், நான் மேலே தொடர்கிறேன்… ஏதோ ணம் செள்ளட் டமிளுக்கு, டமிளர்கலுக்கு, எண்ணாள் ஆண வுதவீ.
ஒரு முக்கியமான விஷயம்: உங்கள் நகைச்சுவையுணர்ச்சி மீது நம்பிக்கை வைத்து, நீங்கள் கோபித்துக் கொண்டு கண்டமேனிக்கும் (பல மற்றவர்கள், இனமானர்கள் போல) என்னைத் திட்டமாட்டீர்கள் என்கிற தைரியத்தில், இதற்கு இரண்டுவிதமான பதில்களைக் கொடுக்கிறேன் – ஏற்க முடிவதை ஏற்றுக் கொண்டு, மற்றவைகளைக் கடாசலாம், சரியா? Read the rest of this entry »
நாம் தமிழர்கள்: தோலடிக் கொழுப்பும், நொதுமல் நிலையும்
December 10, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (14/n)
சாளரம் #7: தமிழர்களுக்குத் தொடர்ந்து தங்கு தடையில்லாமல் வளர்ந்துகொண்டிருப்பது, அவர்கள் சிந்தனையின் / செயல்பாட்டின் ஆழமோ வீச்சோ அல்ல; உரையாடல்களின் செறிவோ அல்லது நுட்பமான வாசிப்பை அனுபவங்களோடு பொருத்திச் சிந்தனைகளை வளர்த்தெடுத்துச் செல்லும் மனப்பாங்கோ அல்ல – ஆச்சரியமே தராதவிதத்தில், ஏகோபித்து வளர்ந்துகொண்டிருக்கும் அதுவானது, அவர்களின் தோலின் கீழுள்ள வளமையான கொழுப்புசார் அடிமான அடுக்கு (subcutaneous fat) மட்டுமே!
அதாவது, நம்முடைய தோலின் தடிமன், அதனால் நாம் புளகாங்கிதம் அடைந்து பெறும் – வெட்கம், மானம், சூடு, சொரணை சாராத ‘தடித்தனம்’ என்பது தாங்கவொண்ணாச் சக்தியுடையது; உலகத்தில் மகோன்னதமாக எது நடந்தாலும் ‘என்னத்த பண்ணி, என்னத்த செஞ்சு’ எனப் புலம்பி, ‘நமக்கெல்லாம் இது ஒத்துவர்ராத் சார்’ என வெகு சாவகாசமாகக் குண்டி மண்ணைத் தட்டிக்கொண்டு போகவைக்கும் மனப்பான்மையை, எதனையும் கற்றுக்கொள்ளாமல் கிடந்துழலும் எண்ணப்போக்கை வளர்ப்பது இது.
இதனைப் புரிந்துகொள்வதற்கு சரியான படிமம்: ’எருமையின் மேல் மழை பெய்வதைப்போல…’
-0-0-0-0-0-0-0-0-0-
நாம் தெரிந்து செய்யும் தவறுகளை, யார் கண்டுபிடிக்கப்போகிறார்கள் என்கிற அசட்டுத் தைரியத்தில் செய்யும் பிழைகளை, ஒருவர் சுட்டிக்காட்டினால் அதனைக் கண்டுகொள்ளாமல், மேலும் மேலும் அதே தவறுகளைச் செய்யும் தடித்தனம். மேலதிகமாக, நம் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்மீது கோபம் – இதில் கோபம் என்பதை விடக் கொலைவெறிதான் அதிகம் என்பது உண்மை.
வசீகரக் கோமாளிகள்: தினவுக் காரர்களும், வினவுக் காரர்களும்
December 5, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (13/n)
… சினிமாக்காரர்களின், வசீகரக் கோமாளிகளின் கோனார் உரைகளும், தமிழ அறிதல்களும் — யின் தொடர்ச்சி…

புல்லரிப்பு சத்யாவேசம் அறவுணர்வு எல்லாம் சரி. பேஷ் பேஷ், றோம்ப நல்லாவே கீது! ஆனால், இவருக்கு யார் இப்படி கோனார் உரை கொடுக்கிறார்கள்? இம்மாதிரி மதச்சார்பின்மைச் சாமி வந்து உளறிக்கொட்டும் ஆட்களைப் பார்த்தால் – வேறு வழியேயில்லாமல், இவர்களுடைய கவிதைகளே(!) பரவாயில்லை என்கிற முடிவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. போலிப் பெண்ணியம் பேசுவதற்கு அப்பாற்பட்டு — இம்மாதிரி வசீகரக் கோமாளிகளுக்கெல்லாம், விசாரணை, புலனாய்வு, வழக்குப்பதிப்பு, வழக்காடல், தீர்ப்பு, மேல்முறையீடு சுற்றல்கள், முடிவான தீர்ப்பு என்றெல்லாம் விரியும் நீதிமன்ற நடப்புகளைப் பற்றி ஒரு எழவும் தெரியாது என்பதை மீண்டும் மீண்டும் உளறிக் கொட்டி, கருத்துதிர்த்துப் பேசித் திரிகிறார்கள்; இவர்கள் போட்டுக் கொண்டிருக்கும் அசட்டுக் கண்ணாடிகளைக் கழற்றினாலே இவர்களுக்கு பச்சை நிறம், சிவப்பு நிறம் என்றெல்லாம் நிறங்கள் தெரியமாட்டா. தங்களுக்குக் கொஞ்சமாவது அடிப்படை நேர்மை இருக்கிறதா என்று கேட்டுக் கொள்ளாமலேயே, வெட்கம் கெட்டவர்கள்– ஊருக்கு உபதேசமும், சகட்டுமேனிக்கு அறிவுரைகளும் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள், அதாவது என்னைப் போல… (படத்துக்கு நன்றி: ‘சவுக்கு;’ இந்த நகைச்சுவைக் கோனார் உரை, ஃபேஸ்புக்கில் வந்திருக்கும் என நினைக்கிறேன்.)
சரி, வசீகரக் கோமாளிகள் நமக்காகக் கோனார் உரையாற்றும் பணி புரிகிறது. ஆனால், அவர்களும் சுயசிந்தனை அற்றவர்கள்தாமே! ஆக, அவர்களுக்கு யார் கோனார் உரை கொடுக்கிறார்கள்? எப்படி ஆணித்தரமாகப் பல விஷயங்களில் கருத்தைத் தெரிவிக்கிறார்கள் – கருத்துச்சிதைவுகளை விரிக்கிறார்கள்? அவ்வளவு மூளையிருக்கிறதா என்ன அவர்களுக்கு?
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (12/n)
இந்தச் சாளரம் எனக்கு ஒவ்வொரு தடவை யோசிக்கும்போதும் மிகமிக மிக ஆச்சரியம் தரும் விஷயம்; உலகில் வேறெந்தப் பண்பாட்டுக்கும் இந்த மாதிரிக் கேவலமான நிலையில்லை என்றுதான் என் எண்ணம்…
சாளரம் #6: தமிழர்களாகிய நாம், நேரடியாக, நேரடியான அல்லது அவதானித்த அனுபவங்கள் / சிந்தனைகள் / கோட்பாடுகள் பெறுவதை விட, அவற்றின் தர்க்கரீதியான வளர்த்தெடுத்தல்களை விட — கடன் வாங்கிய, இன்னொருவரால் ‘கோனார் உரை’க்கப்பட்ட, தரகு வேலை செய்யப்பட்ட விஷயங்களையே விரும்புகிறோம். நமக்கு இம்மாதிரி சாணிக்காகிதப் பதவுரைகளும் விரிப்புரைகளும் இல்லையென்றால், நம்மால் வாழ்க்கையையே நடத்த முடியாது.
இந்தக் கடன்கோட்பாடுகளுக்கு எதிராக ஆயிரம் நிதர்சன, பிரத்யட்ச உண்மைகள், மறுக்கமுடியாத தரவுகள் இருந்தாலும், பின்னவை நம் தமிழுலகில் ஒரு பொருட்டே இல்லை. மேலும், இந்தக் கோனார் உரைகள், வசீகரம் உடையவர்களால் (எகா: திரைப்படக்கார வசீகரக் குளுவான்கள் இன்னபிறர்; பெரியார், அண்ணா போன்ற, இயக்கத் தலைவர்களல்லாத, அரசியல் தலைவர்கள்) விளம்பப்பட்டால் அவை இன்னமும் சக்தி வாய்ந்தவையாக மாறி மக்களின் செயல்பாட்டை, சிந்தனைப் போக்கை மாற்றி, மழுங்க அடிக்கக் கூடியவை.
மேலதிகமாக, இம்மாதிரி வசீகரத் தலைவர்களால் செய்யப்பட்ட உரைகளுக்கு, ஊடகங்களின் அசமனமான குயுக்திக் குவிமையமும் கிடைத்தால் (எகா: “அடிக்கறாங்க, அடிக்கறாங்க...”), நாம் பொதுவாக மூளையைச் சுத்தமாக உபயோகிக்காமல் சுத்தமாகக் துடைத்து ஒரு ஓரமாக வைத்துவிட்டு – கடன் வாங்கிய கருத்துகளில், அவற்றின் திணிப்புகளில் கேள்வியே கேட்காமல், திளைத்துக்கொண்டிருப்போம். (We, the people, specifically us Tamils – prefer inter-mediated experiences to direct experiences – and our interpretations understanding of our life and reactions thereof are, all about how some significant, charismatic OTHERS tell us of THEIR inter-mediated experiences. So, often times we go rather GROSSLY wrong)
நம் தமிழர்களின் அதிசயிக்கவைக்கும் அறியாமையும், அது குறித்து நாம் கொண்டிருக்கும் பெருமையும்
December 1, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (11/n)
சாளரம் #5: தமிழகத்தில் பொதுவாக – மானுடப் பரிணாமம், இனம், மொழி, இயக்கம், வர்க்கம், ஜாதி, போராட்டம், கட்சி, அரசியல், அரசு போன்ற அடிப்படைகளின் மீது சரியான புரிதல்கள் இல்லை; போராட்டங்களும், இயக்கங்களும் – அரசியல் கட்சிகள் போலல்லாமல் இன்னொரு வித ஜந்துக்கள் என்றுகூட நாம் புரிந்துகொள்ள மாட்டோம் – ஆக, கந்தறகோளங்களை நம் புரிதல்களாக அவதானித்து, மகாமகோ கர்வத்துடன், பொறுக்கமுடியாத இறுமாப்புடன் பவனி வருபவர் நாம்.
இதற்கு – தமிழ், திராவிடம், இனம் என ஆரம்பித்த தமிழ்த்தேசிய அரசியல் – பிரித்தானியக் காலனிய வேலை வாய்ப்புகளில் ஒரு சாராரே உட்புகுகிறார்கள் எனக் கருதி, இன்னொரு சாராருக்கும் பங்கு வேண்டும் என ஆரம்பித்து – பின்னர் வேறு எதற்கோ ஆரம்பித்தோம் எனக் கட்டுக்கதைகளை உருவாக்கி, அதற்குப் பின்னர் திராவிட இயக்கமாய் உருமாறி – அதற்குப் பின் தேய்ந்துபோய் கட்டெறும்பு ஆகிவிட்டதும் ஒரு காரணம். (Tamil nationalistic (actually notionalistic) politics – from where it started off – hankering after colonial jobs – is now mainly indulging in the continual institutionalization of sheer lumpen stupidity.)
ஹஹ்ஹா! நம் தமிழர்களுடைய நகைச்சுவை உணர்ச்சி!! (= நகைச்சுவை)
November 30, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (10/n) — சாளரம் #4
சாளரம் #4:பொதுவாக நம் தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி என்பது ஒரு சுக்குக்கும் கிடையாது, அப்படியே தப்பித்தவறி இருந்தாலும் அது, மிகமிகக் குறைவாகவும் அதுவும் — ஒருவழிச் சாலையாகவும் இருக்கும் – அதாவது மற்றவர்கள் கிண்டலடிக்கப்படும்போது, பகடி செய்யப் படும்போது அதனால் புளகாங்கிதம் அடைவோம்.
ஆனால், நம்மை யாராவது, நாக்கின்மேல் பல்லைப் போட்டுச் சொன்னால்…. அவ்வளவுதான்! நமக்கு, அதனைப் பொறுக்கவே முடியாது. கோபப்படுவோம், அழுது மூக்கைச் சிந்திப் பிலாக்கணம் வைப்போம், ‘என் கையறு நிலையைப் பாரீர்’ என, சக பேராண்மைக் குறைவாளர்களிடம் முறையிடுவோம்.

மைக்கெல் பிக்கரிங், ஷரன் லாக்யெர் / பேல்க்ரேவ் மேக்மில்லன் / 2009 / flipkart / இப்புத்தகத்தில் அழகான, நம் அறிவை விரிவாக்கும், நகைச்சுவையைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டியவையை விளக்கும், கோடிட்டுக் காட்டும் கட்டுரைகள் உள்ளன. இம்மாதிரிப் புத்தகங்கள் தமிழில், நம் பண்பாட்டிற்கேற்ப விரிக்கப் பட்டு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இப்புத்தகத்தின் துணைத் தலைப்பைப் படித்தால், நகைச்சுவையின் எல்லைகள் குறுக்கப்படவேண்டும் என்று இது சொல்வதாகத் தோன்றும்; ஆனால், இப்புத்தகம் அப்படியில்லை.
பகபகத் சிங்: நான் ஏன் ஆத்திகன் ஆனேன்?
November 29, 2013
என் நண்பர் பகபகத் சிங் அவர்களின் ‘ நான் ஏன் ஆத்திகன் ஆனேன்’ என்கிற புத்தகத்தை அறிமுகம் செய்வதில், உள்ளபடிக்கே மிகவும் பெருமையடைகிறேன்.
இவரை நான் பல வருடங்களாக அறிவேன்; இவர் என்னுடன் வாய்-பாடு — அதாவது 2×3=8 == ரெண்ட் மூண் வொம்போத் வகையறா – ஆனால் தேவனுக்கு நன்றியுடன் சங்கீதமாகப் பாடுவது பாடுபொருள் — கற்றுக் கொள்கிறார்; ஏப்ரல் 1, 2014 அன்று சென்னை தாக்கர் பாபா பள்ளி வளாகத்தில் எங்களுடைய முதல் வாய்பாடுக் கச்சேரி எனத் திட்டம் வைத்திருக்கிறோம்; இவர் பெயரில் உள்ளது ஆங்கில sing – தமிழ் சிங், அதாவது அசிங் (-1 அல்லது -2) அல்.
ஒரு விண்ணப்பம்: கச்சேரிக்கு அலைகடலென ஆர்பரித்துத் திரண்டு வரவும்.
அதற்குள் மறந்து விட்டீர்களானால், மறுபடியும் சொல்கிறேன் – இந்தப் புத்தகத்தின் தமிழ் மொழித் தலைப்பு: வை டிட் ஐ பிகம் எ தீய்ஸ்ட்? – அதாவது ஆங்கிலத்தில்: naan yen aaththigan aanen?
இதுதாண்டா தமிழனின் பேராண்மை இழப்பீடு!
November 27, 2013
மன்னிக்கவும்: எனக்குக் கொஞ்சம் தேவைக்கதிகமாகவே வெட்கமும் அவையடக்கமும் உண்டு. என்னுடைய பெருமைகளை நானே தம்பட்டம் அடித்துக் கொள்வது என்பது, எனக்கு எப்போதுமே என்னவோ போலிருக்கும். இருந்தாலும் வழக்கம்போலத் தொடர்கிறேன்.
இரண்டு பதிவுகள் முன், ஒரு பின்னூட்டத்தில் திரு ‘ரவிக்குமார்’ அவர்கள், டெலக்ஸ் முறையில் (அல்லது தற்கால எஸெம்மீஸ் மொழியில்) அவருடைய உள்ளக் கிடக்கையை, ஒரு தமிழராகத் தம் சகோதரத் தமிழரை அறிய அவருக்கிருக்கும் ஆர்வத்தை, ஜெம்மொழி ஆங்கிலமொழிப் பின்னூட்டமிட்டு ஜெவ்வனே வெளிப்படுத்தினார்கள்: “sir, thankz for recomending book. plz tell when the book released.” இவர் ஒரு தகவல்தொழில் நுட்பத் தட்டச்சுக் குளுவானாகத்தான் இருப்பாரென்று என்னுடைய அனுமானம். ஏனெனில் இவருக்குத் தமிழிலும் எழுதமுடியவில்லை; ஆங்கிலத்தையும், பாவம் என்னைப் போல எழுதுகிறார். எழுதியதை இடஞ்சுட்டிப் பொருள் புரிந்துகொள்ளும் முனைப்பும் இல்லை. கொஞ்சம் வெள்ளந்தி மனிதரோ?
சரி… இதனால் வாழ்க்கையையே வெறுத்துவிட்ட நான், முதலில் அதற்கு விட்டேற்றியாக ஒரு பதில் அளித்திருந்தேன். ஆனால் அது சரியில்லை, நியாயமில்லை என்று தோன்றியதால, வேறு வழியில்லாமல் உண்மையைச் சொல்லிவிடலாம் எனத்தான் இந்தப் பதிவு. மன்னித்தருளவும். Read the rest of this entry »
தமிழர், ஆண்மையின்மைக்கு இழப்பீடு பெறுவது எப்படி
November 25, 2013
தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (7/n)
சாளரம் #3: தமிழர்கள், தங்கள் ஆண்மை குறித்த தாழ்வுணர்ச்சியால் வாடுபவர்கள் … யின் தொடர்ச்சி:
… நமக்குப் பேரும் புகழும் பெற்று, உலகறிய வாழவேண்டும் என ஆசை. நாம் எலியளவு இருந்தாலும் புலிபோல் காட்டிக்கொள்ள ஆசை. ஆக நாம் — நமக்கும், நாம் வழிபடும் சினிமாக்காரர்களுக்கும் அரசியல்காரர்களுக்கும் பெரிய்ய பெரீய்ய கந்தறகோள விளம்பரத் தட்டிகளை வைத்து இதன் வழியாக நம் சாசுவதத்தன்மையையும், மேன்மையையும் உலகுக்கு அறிவிக்கிறோம். …
நம் தமிழ் நாட்டில் உள்ள அளவு ஃப்லெக்ஸ் தட்டிகள், கட்-அவுட்கள் உலகில் வேறெங்கும் இருக்குமா என எனக்குச் சந்தேகமே! ஃப்லெக்ஸ் தட்டி அச்சிடும் கருவிகளைத் தயாரிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைசெய்யும் விற்பனை விற்பன்னர் ஒருவரிடம் என் சந்தேகத்தைக் கேட்டபோது என் கருத்தை ஆமோதித்தார். இந்தியாவில், அதுவும் தமிழ் நாட்டில்தான் இதற்கு ஏக வரவேற்பு! Read the rest of this entry »
சாளரம் #3: தமிழர்கள், தங்கள் ஆண்மை குறித்த தாழ்வுணர்ச்சியால் வாடுபவர்கள்
November 24, 2013
சாளரம் #3: பொதுவாக, நம் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு, தங்கள் ‘ஆண்மை’ (பேராண்மை?) குறித்த, இனம் புரியாத ஒரு தாழ்வு மனப்பான்மையும் – ஆகவே அதன் தொடர்பான உளைச்சலும் அரிப்பும் இருக்கின்றன.
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (6/n) [தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ?? வரிசையில் ஆறாம் பாகம்]
இது பரவாயில்லைதான் – எவ்வளவோ விஷயங்களில் தாழ்வுமனப்பான்மை கொண்டிருக்கவேண்டிய நாம், எவ்வளவோ விஷயங்களுக்காகப் பெருமை (=மற்றவர்களை ஒடுக்கும், அற்பமாக நினைக்கும் கர்வ வகையறா அல்ல) கொள்ளவேண்டிய நாம் – பொதுவாக, இவற்றுக்கு எதிர்ப்பதமாகவே நடந்து கொண்டிருக்கிறோம் என்பதும் உண்மைதான்.
ஆக, நிதர்சனம் எப்படியோ — ஆண்மை, பேராண்மை போன்ற விஷயங்களில் தாழ்வு மனப்பான்மையிருப்பது பரவாயில்லைதான் – பல விஷயங்களில் இது ஒன்று மட்டும் தானே – ஆகவே, இது தன்னளவில் ஒரு பெரிய பிரச்சினையுமில்லை.
ஆனால், இதனால் நமக்கு ஏற்படுவது ஒரு மகாமகோ சிடுக்கல் பிரச்சினை!
… இந்தக் கையலாகாத்தன – அய்யய்யோ, நமக்குத் தேவையான அளவு ஆண்மையில்லையே – என்கிற மனப்பான்மையானது — நம்மைப் பலவிதங்களிலும் பாடுபடுத்தும் இந்தத் தாழ்ச்சியை, அநியாயமாக நமக்கு இழைக்கப்பட்ட அநீதியாக நாம் கருதுவதை — எப்படியாகவேனும் ஈடு செய்ய அநியாயத்துக்கு உந்துகிறது. Read the rest of this entry »
சாளரம் #2: வரலாறு = குத்துமதிப்பாக இது, ஒருவேளை வரலைந்துக்கும் வரலேழுக்கும் நடுவில் தொங்கிக் கொண்டிருக்கும் ஜந்துவோ என்னவோ?
November 20, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (5/n)
அதாவது, வரலாறு என்பது முதற்சங்கத்துக்கும் முன்னால், பஃறுளியாறு லெமூரியாவில் குமரிக்கண்டத்தில் ஓட ஆரம்பித்தற்கும் முன்னால், ஏன் கல் தோன்றுவதற்கே கூட முன்னால், தமிழகமெங்கும் ஓடோதி ஓட்டமாக ஓட்டமெடுத்துக் கொண்டிருந்த ஒரு பண்டமிழ் ஆறு என்பதை அறிக. மேலும், அச்சமயத்திலேயே, நம் முன்னோதிமுந்தைய மூதாதைகளின் பேரரசன் அதிமுற்காலச் சோழன் – ஒன்றரையாம் கபாடபுரம் கண்டாராதித்தன் இமையம் சென்று கோவேறுகழுதைகளைப் பிடித்துக் கொண்டு வந்ததையும் மேலதிகமாக அறிக! (எனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான இமையம் அவர்களை இப்படி உபயோகிப்பதற்கு அவர் என்னை மன்னிப்பாரா?)
சாளரம் #2: பொதுவாக, நமக்கு வரலாற்றறிவு என்பது குறைவு. மிக முக்கியமாக, சமகால வரலாற்றை அவதானிப்பது என்பது இன்னமும் குறைவு.
இவ்வரிசையில், முந்தைய பதிவுகள்: தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??
-0-0-0-0-0-0-0-0-0-0-
ஏன் நமக்கு வரலாற்றைப் பற்றிய பிரக்ஞை இல்லையென்றால், நமக்குப் பல முக்கியமான விஷயங்களைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கோ, தெரிந்து தெளிவதற்கோ சிரத்தையில்லை. நாம் பெரும்பாலும் நுனிப்புல் மேய்பவர்கள் என்பதை தனிப்பட்ட முறையில், நேரடியாக அறிவேன். எப்படியெனில், நானும் இந்த நுனிப்புல் மேயும் ஜாதியின் பிரதம அங்கத்தினன் தான் என்பதை மட்டில்லா மகிழ்ச்சியுடன் இங்கு தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன் – என்ன இருந்தாலும் நானும் ஒரு தமிழன் தானே! Read the rest of this entry »
சாளரம் #1: மரக்காணம் நிகழ்வுகள், ஜாதிக் கட்சிகள், தமிழ் எழுத்துரு /வரிவடிவப் பொங்கல்கள்…
November 16, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (4/n)
(அல்லது) சாளரம் #1: நமக்கு மாற்றங்களை, நிகழ்வுகளை – சமனநிலையுடன் எதிர்கொள்ளவே தெரியாது! (2/2)
முந்தைய பாகம்: சாளரம் #1: நமக்கு மாற்றங்களை, நிகழ்வுகளை – சமனநிலையுடன் எதிர்கொள்ளவே தெரியாது! (1/2)
… நாம் இந்தச் சாளரத்துக்கான மேலதிகமான எடுத்துக் காட்டுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
வெகு அண்மையில் நடந்த விஷயம்: சித்திரைப் பௌர்ணமி – பாமக மாமல்லபுரம் விழா – பாமக_வன்னியர்களுக்கும், விசிகே_தலித்களுக்கும் இடையே மரக்காணம் சுற்றுப்புறத்தில் வன்முறை உரையாடல்கள் – பொதுச் சொத்து நாசம் – பொய் / ஜாதிவெறி அறிக்கைகள்.
குறுகிய காலத் தாக்கத்து – இவை மட்டும் பெரிதாகப் பேசப்படும்: டாக்டர் ராமதாஸ் பொய் சொல்கிறார், பொதுச்சொத்து நாசத்தை பாமக இழப்பீடு செய்யவேண்டும், பாமகவின் ஜாதிவெறிப் பேச்சுக்கள், வன்முறைகளைத் தடுக்கவேண்டும். உடனடி தண்டனை கொடுக்கப்படவேண்டும், இன்னபிற இன்னபிற. Read the rest of this entry »
சாளரம் #1: நமக்கு மாற்றங்களை, நிகழ்வுகளை – சமனநிலையுடன் எதிர்கொள்ளவே தெரியாது! (1/2)
November 15, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (3/n)
முந்தைய பதிவுகள்:
- பத்ரி, தமிழர்களாகிய நாம், ஏன் இப்படி இருக்கிறோம்? 02/11/2013
- தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (1/n) 12/11/2013
- தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (2/n) 14/11/2013
சாளரம் #1: மாற்றங்களை, நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது, அவற்றைப் பற்றி அவதானிக்கும்போது, நமக்குப் பொதுவாக நிதானமே இருப்பதில்லை. அவற்றின் காரணமாக – உடனடியாக, மிகக் குறைந்த கால அளவில், பல பெரிய சாதக விளைவுகள் ஏற்படும் என்று எண்ணிக் குதூகலம் அடைவோம், அல்லது பாதகங்கள் ஏற்படும் எனப் படு பயங்கர பீதியுறுவோம், அதீத உணர்ச்சிகளுக்கும் புல்லரிப்புகளுக்கும் இரையாவோம்.
அதேசமயம் – நாம், அம்மாற்றங்களினால், நிகழ்வுகளினால் – நெடிய கால அளவில், மெதுவாக, திடமாக நடக்கும், நடக்கப்போகும் சாதக/பாதக விளைவுகளைப் பற்றி எண்ணிப் பார்க்கவே மாட்டோம். அப்படியே எண்ணிப் பார்த்தாலும், அவற்றை, அவற்றின் தாக்கத்தை – மிகமிகக் குறைவாகவே மதிப்பிடுவோம்.


