1000.0ல் 1.0வன்(அல்லது 0.001)… பராக்!
December 8, 2018
ரூ 10, 000 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படவிருக்கும் இந்த 0.001 அறிவியல்-புனைவு-பௌராணிகப் படத்துக்கும் நான் தான் கதைவஜனம் எழுதியிருக்கிறேன். என்ன செய்வது சொல்லுங்கள், தமிழ்த்திரைப்படத்துறையில் அவ்வளவு ஞானசூனிய வறட்சி. :-(
2010 ஏப்ரல் ஒன்றாம் தேதியன்றே கதை முடிவாகிவிட்டது, அதை எழுதிவிட்டுத்தான் நான் குளிக்க அகன்றேன்.
ஆனால் அன்று வாசற்கதவை நான் மூடாது அகன்றது என் கெட்டூழ். தேவையற்ற சுயவிலக்கம்.
ஆகவே, இலங்கையிலிருந்து ரிட்டர்ன்ஃப்ளைட்டில் வந்துகொண்டிருந்த ஹனுமான், அதை எடுத்துக்கொண்டு ஓடிப்போய்விட்டார். யோவ், இது மஹாபாரதக் கதை, ராமாயணக் கதையல்ல எனப் படித்துப்படித்து (அதாவது, என் வழமையேபோல, மூல நூல்களைப் படிக்காமல்படிக்காமல்) சொல்லியும், மோனியர்வில்லியம்ஸ் அகராதியாலேயே அவர் மண்டையில் பொளேரென்று அடித்துப் பார்த்தும், அப்படியொரு அழிச்சாட்டியம். :-(
…’அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ எனும் அரேபியக் கதையிலிருந்து தான் ‘அனுமான் சாலீஸா’ எனும் ‘அனுமான் நாற்பது’ வந்தது என்ற உஂண்மையை நான் சொன்னால் அவரால் தாங்கத் தான் கூடுமா? அவர் தம் திருமுகத்தை எங்கு வைத்துக்கொண்டு போவார்?? ஆனால் நான் எளிமையும் கனிவும் மதச்சார்பின்மையும் நிரம்பியவன். ஞானம் ததும்புபவன்; அப்படித்தான் என் குரு என் தாள்சரணடைந்து சொல்வார்.
அதனால்… ஹனுமனிடம் கெஞ்சி, வாலிலே வெண்ணிலா ஆடுதே பாடுதே வானம்பாடி கூவலாமா எனவெல்லாம் சந்தில் சிந்துபாடி, ஒருவழியாக என் கதையைத் திரும்பப் பெற்றால், என்னவோ தெரியவில்லை, ஹிந்துத்துவா வெறியரான யோகி ஆதித்யநாத்துக்கும் என்னுடைய வெண்முரசுக் காவியத்தைப் பிடிக்கவில்லை போலும், அந்தக் கதையை என்னிடம் இருந்து மதவெறியுடன் பிடுங்கிக்கொண்டு இளித்துக்கொண்டே போஸ் கொடுக்கிறார் பாருங்கள், தேவையா? :-(
இவர்களுக்கெல்லாம் வெட்கமேயில்லை. :-(
இதனால்தான் மோதி 2019ல் பதவிக்கு மீண்டும் வருவதை எதிர்க்கிறேன் என்பதும் ஆகவே போர்க்களவீரத்துக்கான பிவிஸி – பரம்வீர்சக்ரா விருது அளிக்கப்படும் வரை இப்படியேதான் இருப்பேன் என்பதும் இன்னொரு கதை; ஏனெனில் தமிழ் எழுதத் தெரியாத கண்டகண்ட கழுதைகளுக்கும் ஸாஹித்ய விருது கொடுத்து நாறடித்துக் கொண்டிருக்கிறார்கள் – ஆகவே எனக்கு அந்த விருது வாங்க விருப்பமில்லை; மாறாக, இந்த பரம வீர சக்கரவிருது கிடைத்தால் என்னை ஓரளவுக்காவது திருப்திபடுத்திக்கொண்டது போலாகும்…
ஏனெனில், வெண்முரசில், என் மஜாபாரத வீரர்களை எங்குபார்த்தாலும், எப்போதும் ஏதாவது தரையிலோ அல்லது கன்னத்திலோ அல்லது சுவற்றிலோ அறைந்து அறைந்து வீரத்துடன் முழ நீள வசனம் பேசவைத்த எனக்குக் கொடுக்காமல் வேறு யாருக்கு பிவிஸி கொடுத்தாலும், அவர்கள் வீட்டில் பிவிஸி குழாய் பிளந்து தண்ணீரே வராது என்பது தான் என் ஙப்போல் வளையும் ப்ளாஸ்டிக் அறமும் சாபமும்…
இந்த நாட்டில் இலக்கியவாதிக்கு இருக்கும் அறவுணர்ச்சிதான் அவனை மதவெறிச் சக்திகள் படுகுழியில் தள்ளும் காரணம். ஒர்ரே அறச்சீற்றம் அறச்சீற்றமாக வருகிறது.
சரி, கதையை எங்கு விட்டேன்? :-(
ஓ… கதையின் கதையைக் கதைத்துக்கொண்டிருந்தேன் அல்லவா? சும்மா என்னை டிஸ்டர்ப் செய்யாதீர்கள், ஆமாம் சொல்லிப்புட்டேன். ட்ராக் மாறிவிடுகிறது பாருங்கள்!
ஹ்ம்ம்…
…பின்னர் வேறு வழியேயில்லாமல், தேனீக்களின் மாபெரும் இனியஅரசனும், அவர்களுக்கு மெழுகாக உருகும் மறவோனுமான பீமனுக்கு மட்டுமேயென அடுத்த பத்து வெண்முரசு நூல்களில் (ஒவ்வொன்றிலும் சுமார் 100 அத்தியாயங்கள்) பிரதான இடம் கொடுப்பதாக சத்தியம் செய்து, பின் அவனிடம் இருந்த நல்ல திடமான, காத்திரமான கதையை வாங்கி அதனை மேலதிகமாக உருட்டி ஒரு ஷேப்புக்குள் கொணர்வதற்குள் – நான் வெண்முரசின் அடுத்த 20, 000, 000 பதிவுகளை எழுதியிருப்பேன்! (பீமன் என்றால் தேனீ மனிதன், bee man, எனத்தான் நானே சொந்தமாக எழுதிக் கொண்ட மோனியர்-வில்லியம்ஸ் ஸம்ஸ்க்ருத-ஆங்கில அகராதியில் இருக்கிறது; ஆகவே, குற்றம் கண்டு பிடிக்கும் அனைத்து ஹிந்துத்துவ லும்பன் சூதர் நக்கீரர்களும் சூத்தை மூடிக்கொண்டு இவ்விடத்தை விட்டு அகலவும்!)
ஆகவே – 0.001 படப்பிடிப்பு இனிதாக ஆரம்பித்து விட்டது. 2020ல் இது ரிலீஸ் ஆகும்.
இந்த 1000.0த்தில் ஒருவ ஆச்சரியம் என்னவென்றால் – இந்தப் படத்தில் அனைவருமே வில்லன்கள் – திரைப்பட இயக்குநர் கிங்கர் உட்பட.
ஆனால் – இதில் கடூரமாகக் கத்தும் கர்ணன் தான் முக்கிய வில்லன். இது கர்ணநிதியின் சுருக்கம். இந்தப் பாத்திரத்தின் தனித்துவம் வாய்ந்த ஸ்டைலே, பொழுதன்னிக்கும் புறங்கையை நக்குதல்தான். ஆனால், இதற்கும் கருணாநிதிக்கும் தொடர்பு இல்லை. இது அரசியல் படமில்லை. அறிவியல் அகோர அதிசாகசமீள்புனைவு வகை சார்ந்தது. லையல் வாட்ஸன் அருள்பெற்றது. ஐஸாக் அஸிமோவ் ஆசி பெற்றது. ரோஜர் பென்ரோஸால் ஞானஸ்நானம் அளிக்கப்பட்டது. அன்றன்றுள்ள அப்பம் அன்றன்றைக்கே சாப்பிடப்பட்டது. பின், வேதாகம ஏப்பம் விடப்பட்டது.
இன்னொரு செய்தி: இந்தப் படத்தில் மிக முக்கியமான திராவிட சமூக நீதிப் பிரகடனம் இருக்கிறது – அதாவது, இடஒதுக்கீடும் உண்டு. ஆகவே நிஜக் கர்ணனையே கூப்பிட்டு நடிக்க வைத்திருக்கிறோம். இதனால் ஒரு அனுகூலம் என்னவென்றால் – அவர் தம் படத்தைத் தானே கதைஎழுதி இயக்கி இசையமைத்து எடிட் செய்து ரிலீஸ் செய்கிறேன் என்று ஆணையிட்டார். சமாதான ஏச்சுவார்த்தைகளுக்குப் பின், ஆகவே, ஒரிஜினலாக இதனை இயக்கியிருக்கவேண்டிய கிங்கர் இதில் வேறு வழியில்லாமல், வில்லங்கம் வேண்டாம் என்று இன்னொரு வில்லன் ஆகி விட்டார். ஆகவே தயாரிப்புச் செலவு குறைந்திருக்கிறது.
கர்ணன் கருணை மிக்கவர். ஆகவே, அவர் வழக்கமேபோல, ‘தாம் மட்டும்தான் தான் நடித்த படத்தைப் பார்க்கவேண்டும், பிறர் எவரும் பார்க்கவும் முடியாது, கூடவும் கூடாது!’ என அதிகாரபூர்வமான நீதிமன்ற ஆணை வெளியிட்டு விடாமல் அமைதி காக்கிறார். சரி. ஆனால் பெண்ணியமும் பெண்முதல்வாதமும் முக்கியம். ஆகவே நீதிமன்ற பெண்ணை வெளியிடலாம் என ஏகமனதாகத் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இட ஒதுக்கீடு என்றால் அதுவும் சமனம் செய்யப்படவேண்டுமல்லவா? பேலன்ஸ் (வங்கியிலும்) முக்கியம். ஆகவே – வல ஒதுக்கீட்டில், ஒவ்வொரு ஸீனிலும், பின்புலத்தில் சுற்றிக் கொண்டே இருப்பார்கள் பலர். அவர்களுக்கு வலம் வருவதற்கு வேண்டுமென்கிற இடம் கிடைத்தால் சரி. சாரி.
ரஜினி இதில் ரஜினியாகவே நடிக்கிறார் என்பது தான் இதில் ஸ்பெஷல். இவருடைய வில்லத்தனமான உரத்த பஞ்ச் டையலாக் சிந்தனையைக் கேட்கமுடியாமல் போகும் என்பது எனக்குத் திண்ணமாகத் தெரியுமாதலால், திரைப்பட ஷூட்டிங் போதே எல்லோரும் காதில் பஞ்ச் அடைத்துக்கொள்ள, பஞ்ச்மாபாதகத் திட்டம் ஒன்று கைவசம் இருக்கிறது.
ஆனால் படத்தில் இவருக்கு வயது ஆறு ஆண்டுகள் ஏழு மாதங்கள். அவருடைய 67 வயதுக்கும் அவருடைய ரோலுக்கும் பொருத்தமாக குழந்தைவில்லத்தனமாக இருக்கவேண்டும் என இவருடைய சொட்டைத் தலையில் ஜிகினா ஒட்டி பிரம்மாண்டமான என்ட்ரி ஸீனில் அவருடன் ஒரு கோடி நட்டுவாக்கிளிகளும் சிலந்திகளும் அவருடைய ரஜினி ஷ்டைல் நடையைப் போலவே பக்கவாட்டிலும் விட்டத்திலும் பின்னாலும் முன்னாலும் ஒரே நேரத்தில் மண்டைகளில் எல்இடி டார்ச் லைட்களைக் கட்டிக்கொண்டு நடந்துவருவதைப் போன்ற பிறிதொன்று ஸீன் வேறெந்தப் படத்திலுமில்லை. இது ஒன்றுக்கு மட்டுமே 1000 கோடி செலவு. ஜிகினா செலவு தனி. படத்தில் இவர் பெயர் நரேந்திர மோடி. (இதில் அரசியல் இல்லை. இது வில்லன்களுக்கு ஆப்பிரிக்காவில் சாதாரணமாக வைக்கும் பெயர்தான் என, ஒரு பட டிஸ்கஷனுக்காக நமீபியா சென்றிருந்தபொது அங்கிருந்த ஒரு பழங்குடி (fruit drink) என்னிடம் சொன்னார்)
கமல்ஹாசன் இன்னொரு வில்லன் – மனிதனாக நடிக்கும்போது அவர் பெயர் கமலாதித்த மாமல்லன். ஆனால் தாராளமாக வொலக மயமாக்கம் செய்யப்பட்டவரான அவருடைய தொழில்நுட்ப ஆர்வத்தாலும், குணசித்திர நடிப்பில் சுடர் விடக்கூடிய தன்மையினாலும் – இவர் கேமராவாகவும் க்ரேனாகவும் ட்ரால்லியாகவும், ஏன் படச்சுருளாகவும் கூடத் தானே நடித்திருக்கிறார். காணக் கண்கோடி மட்டுமல்ல, பர்ஸிலும் கோடி வேண்டும். மேலும் அவர் தன் வாயாலேயே தம் மய்யத்தின் கொள்கைத் திட்டத்தை விளக்கும்போது, அதனைக் கேட்டுப் பய்யந்து குழம்பும் பிறவில்லன்கள் கதிகலங்கிச் சிதறியோடுவது ஒர் நகைச்சுவை உச்சம்.
ப்ரகாஷ் ராஜ் இன்னொரு வில்லன். குச் பீ குச் பீ என கண்ணை உருட்டிக்கொண்டு பினாத்துவது மட்டுமே இந்த லும்பன் பாத்திரத்தின் வேலை.
‘குச் பீ குச் பீ ராக்கப்பா‘ எனும் இவருடைய என்ட்ரி பாடல் அற்புதம். ஏஆர்ரஹ்மான் இதற்காகவே பிரத்யேகமாக மொராக்கோவிலிருந்து இசையை இறக்குமதி செய்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தப் படத்தில் இந்த வில்லப் பாத்திரத்தின் பெயர் அரவிந்தன் கண்டநீலன் c/o நாரோயில். இதற்கும் அரவிந்த்சாமி எனும் அக்கால நடிகருக்கும் தொடர்பில்லை.
மொகாம்போ எனும் பாரம்பரிய ஹிந்தி வில்லன் நடிகர் (படத்தில் இவர் பாத்திரத்தின் பெயர் வெட்டிசை சாமராமி) ஒரம்போ ஓரம்போ எனப் பாடிக்கொண்டே வருவது ஒரு இனிய ஆரம்போ. சிவசம்போ.
இவருடைய ஸ்பெஷல் மேக்கப்புக்காக, அவருடைய இரு கண்களையும் நோண்டி சிவப்புக் கண்ணாடிக் கோளங்களைப் பதித்து உடலெல்லாம் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அவருடைய இஷ்டவாகனமான கோவேறு கழுதையில் அவரோகணிக்காமல் ஆரோகணிக்கவைக்க ஒரு திட்டம் இருக்கிறது. இதற்கும் ஹிந்துத்துவ மேல்சாதி மேட்டிமைவாத லும்பன்களுக்கும் இணைய வசைபாடிகளுக்கும் தொடர்பில்லை என்பதைச் சொல்வதையன்றி வேறெந்த அக்கப்போரறமும் இல்லை.
மங்கோலியாவிலிருந்து ஒரு வில்லன் கையில் வில்லும் அம்பறாத்தூணியில் அம்புமாக, அன்புமழை பொழிகிறார். ஒவ்வொரு துளியிலும் உன்முகம் தெரிகிறார். ஆனால் மன்னிக்கவும், இவர் இந்திரன் தோட்டத்து முந்திரியல்லர். ஆனால் மங்கோலிய நாட்டின் மந்திரி. ஜெங்கிஸ்கான். ஷாருக் கானுக்கு மாமன் முறை. ஆமிர் கான் ஆத்தாவின் பாட்டா. ஜோடி விலை ரூ299.99/- ஜிஎஸ்டி தனி.
இவரை, இஷ்டமித்ர பந்துக்களுடன் ஃபுட்பாலாடிக்கொண்டேபோய் காலா எந்திரனில் பயணித்து, சுமார் 1000 வருடங்கள் முன்னே சென்று, செந்நா தீப்பந்தத்துடன் அணுக்கமாக அணுகி செங்கங்குகளைத் தீண்டி முகத்தில் மும்முறை அறைந்து முன்ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். (இந்தப் பாத்திரத்தின் பெயர் சாருநிவேதிதாகான். இந்தப் பெயரை நான் வில்லனுக்குக் கொடுக்கப்போவதை எப்படியோ அறிந்து – முன்கூட்டியே விளம்பரத்துக்கு ஆலாகப் பறக்கும் ஒரு நபர், இந்தப் பெயரை வைத்துக்கொண்டு விட்டார்! பிரபலமாவதற்கு எப்படியெல்லாம் வழிகள் இருக்கின்றன பாருங்கள்!)
தமிழ்ப் படங்களின் இன்றியமையாத தேவை என்பது – தொட்டுக்கொள்ள ஒரு வெள்ளைக்காரச் சிற்றழகி – இவர் வெள்ளையாக இருக்கும் வெள்ளைக்காரியாக இருக்கவேண்டும், சும்மா பஞ்சாப்பிலிருந்து இறக்குமதி செய்வதை எக்காரணம் கொண்டும் அனுமதியோம். (இந்தப் பாத்திரத்தின் பெயர் ஜெமோ – மங்கோலியாவிலும் ஜன்னல் சீலைகள் உட்பட எல்லாத் திரைச்சீலைகளிலும் 0.001 ரிலீஸ் செய்யப்படப் போவதால் இப்படிச் சுருக்கமாக, பன்னாட்டு மக்களும் ஏகோபித்து அனுபவிக்கும் பொருட்டுப் பெயர் வைத்திருக்கிறோம்)
எதற்காக இந்தச் சிற்றழகி, அழகிய முட்டாள் சிட்டுக்குருவி, என என்னை நான் எனக்காகவே கேட்டுக்கொள்கிறேன். பட்டெனத் தோன்றியது இது: இவர் அவ்வப்போது காட்சியளித்து, திவ்ய தரிசனம் கொடுத்து, ரசிகர்களையும் நிர்வாண நிலைக்கு உயர்த்துவது என்பது நம் பாரம்பரியங்களில் ஒன்று. எந்தப் புத்தரில் எந்தப் பாம்போ. இந்தச் சிற்றழகிக்கு இப்போது பத்துவயதிருக்கலாம். அப்போதுதான் நம் கதாநாயக வில்லன்களின் 70-80 இளம் வயதுக்குப் பொருத்தமாக அமைவார். (இந்த இளஞ்சிட்டுச் சிற்றழகி அணியும் உள்ளாடைகளாகக் கூடத் தானே குணசித்திரமாக நடிக்கத் தயார் என என் நண்பர் நவசாம்பார் நாயகன் கமல்ஹாஸன் சொன்னார். ஆனால் அது திராவிடர்களைக் குறிக்கும் ஆண்குறியீடாகிவிடுமோ என கிங்கர் பணிவுடன் மறுத்துவிட்டார்!)
ஸ்பெஷல் எஃபெக்ட்களுக்கு பல்கலை (tooth art) மன்னர் கமல்ஹாசர் சார் அறிவுரை கொடுத்திருக்கிறார் என்பதைக் குறிப்பிடவேண்டிய அவசியமில்லை.
சாதாஅபத்தக் களஞ்சிய சிச்சுவேஷன் காமெடி எஃபெக்ட்களுக்கு வடிவேலு – என ஸெட்டில் ஆகிவிட்டோம்.
என் தனித் திறமையைக் காட்டவும், புதிய கலைச்சொற்களைத் தமிழில் நான் உருவாக்கும் பாங்கினைத் தெளிவு படுத்தி என் தனித்துவத்தை நிலை நாட்டவும் – ஒரு வயதான ரோபாட் தம்பதியை அறிமுகப் படுத்தியிருக்கிறேன். அவர்களுடைய பெயர்கள்: ரோபாட்டன், ரோபாட்டி. இவர்களுக்கு என்ட்ரி கொடுக்கும்போது அவர்கள் ஸெல்ஃபோன் டவரைச் சுற்றிப் பாடுவது ஒரு லல்லல்லா ரோபாட்டு.
அறிவியல் தொழில் நுட்பத்துக்கு அறிவுரை கூற இருக்கவே இருக்கிறார் – முன்னோடி அறிவாளிய அறிவுஜீவி மதன் கார்கீ. இவர் தமிழுலகில் அவதரித்திருப்பது நம் பாக்கியம். இவருடைய வாழ்நாள் பணியென்பது அறிவியலுக்கும் தமிழுக்கும் தொடர்பில்லை என்ற உண்மையைப் பறைசாற்றுவது முதல் – அதற்கும் மேற்பட்டு, அறிவுக்கும் தமிழனுக்குமேகூட ஒரு மசுத்துக்கும்கூட ஸ்நானப் ப்ராப்தியில்லை என நிறுவுவதேயாம்.
நான் நன்கறிந்த, கரைகண்ட ஞானப்புலங்களை நான் அடக்கத்துடன் வெளிப்படுத்திக்கொண்டு, பலப்பல விஞ்ஞான பூர்வமாக நிறுவப்பட்ட கருத்துகளை, இந்தப் படத்தில் வழி நெடுக அள்ளியிறைத்திருக்கிறேன்: ஆரா( ‘ஆர்வம் கொண்டவர்கள் விக்கிபீடியாவிலேயே ஆரா பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.‘ அல்லது வீரம் கொண்டவர்கள் வீரா படம் பார்த்து அனுபூதி நிலையை அடையலாம்) பற்றி ஆற்றாமை (river tortoise), இயந்திரபூர்வ அறிதல், நேனோ டெக்னாலஜி, ஸெல்ஃபோன் கதிரியக்கங்கள் கிளப்பும் சூட்டை வைத்து அறிவியற்புனைவு சாம்பார் செய்தல், செவ்வாய் கெரகத்துக்கு டூரிஸ்ட் பஸ் அனுப்புதல், திட நிலை எரிபொருட்கள், ஆர்ட்வீனோ மூலம் விரைவீக்கத்தையும் மூலத்தையும் கட்டுக்குள் வைப்பது எப்படி, குறுதெய்வங்களுக்குக் கீழே மைக்ரோ தெய்வங்கள், அதற்கும் கீழே நேனோ தெய்வங்கள் எனவெல்லாம்…
எடுத்துக்காட்டாக, நம் ஊரில் செய்ன் திருடுதல் என ஒரு புறநானூற்று மழபுலவஞ்சி திராவிடத் திருடல் முறை இருக்கிறதல்லவா? இதனை அப்க்ரேட் செய்து அமோகமாக மேம்படுத்தி ‘ப்ளாக் செய்ன்‘ திருடுதல் எனச் சமகால தொழில் நுட்பலீலைகளை ஒருங்கிணைத்திருக்கிறேன்.
-0-0-0-0-
என்ன செய்வது சொல்லுங்கள்! என் குரு அடிக்கடி என்னிடம் சொல்வதைப் போல, என்னை விட்டால் அறிவியலுக்கும் புனைவுக்கும் யார் இருக்கிறார்கள் இந்தக் கூறுகெட்ட மலட்டுத் தமிழ் நாட்டில்? ஹ்ம்ம்ம்…
பின்குறிப்பு: அடுத்த சில நாட்களில் திரைக்கதையினையும் வெளியிடப் போகிறேன். அதுவரை பொறுமையாகக் காத்திருக்கவும்…
December 8, 2018 at 07:05
Saar. Thale suthudu.bitu Bidi.vadaleyandi.
December 8, 2018 at 07:50
சிலுக்கு, ஜெயமாலினி இல்லாத படங்களை நான் பார்ப்பதில்லை,
எப்படியாவது கிராபிக்ஸில் கொண்டு வரவும், அதற்கு மாயாவை உபயோகிக்கவும்.
:)
December 8, 2018 at 08:58
please enter periyaar the old man who was in my favourite pet
December 8, 2018 at 09:01
எல்லாரும் கிடந்து சாவுங்கடா !
December 8, 2018 at 21:17
Forget cursor Murasu. Any mention about three measure gold for one rupee? Did you notice nowadays a series of articles being posted praising DMK rule ? Any package deal ?
December 9, 2018 at 06:20
ஐயா, நான் அவரைத் தொடர்ந்து படிப்பதில்லை. ஆகவே அவருடைய தற்காலச் சாய்வுகள் பற்றித் தெரியாது. ஆனாலும், அதில் பொட்டி இருக்குமா என்பது சந்தேகமே – அந்த அளவுக்கு மோசமில்லை என நம்பத்தான் ஆசை. ஆனால் உங்கள் அங்கலாய்ப்பு புரிகிறது.
ஒருவிஷயம்: அவருடைய வழக்கமான ட்ரெண்ட் படி, இந்தப் பக்கம் கொஞ்சம் சாய்ந்தால், அடுத்த பக்கம் கொஞ்சம் சாய்வார். தஞ்சாவூர் பொம்மை. பூசிமெழுகிக்கொண்டே நிரவிக்கொண்டே இருப்பார். கழுவும் அலக்கியத்தில் நழுவும் ஆன்மிகமரபு. ஆனால், வரவர – இரண்டு சப்பைக்கட்டுகளிலுமே சாரமில்லை. இருந்தாலும் புதுப்புது வாசகர்கள் வந்து விழுந்துகொண்டிருக்கிறார்கள்.
ஒருவேளை இவர்கள் ஜெயமோகப் பிரமைகளைத் தாண்டி மேலெழும்ப சாத்தியக் கூறுகளே இல்லையோ?
December 9, 2018 at 09:04
Sir,
As usual , well laugh-inducing ..”Kuch Bee” is the piece of cake!
Guess this article of yours was in reference to New Karna film where our Jeymo is the writer/script fine-tuner.
Your article is sigh fall short of this one …Worship being now drifted to Mam too.
https://www.jeyamohan.in/115000#.XAyYvNszbIU
As you write profusely about our Triumvirate (Jeymo/Es Ra/Charu) – in arithmetic progression- their getting the benefits of them all do grow geometrically …They must be happy about it.
You also disprove the fact of ‘like attract like’ postulated by
Rhonda Byrne of The secret fame.
Sir, Thanks for the articles though.
Regards
SB
December 9, 2018 at 09:22
ஐயய்யோ!
“அருண்மொழி அன்னை” ???
ஆனால் எனக்கு அவருடன் பிணக்கு ஒன்றுமில்லை. ஆகவே.
புல்லரிப்பாக மட்டும் இருக்கிறது, என்ன செய்ய!