(“தூயசக்தி” Vs “…த்தூ…யசக்தி”) + (“கொஞ்சம் டைம் கொடுங்க சார்!”): தமிழக வெறிக் கழகக் குறிப்புகள்

June 11, 2026

கேள்விப்படும் விஷயங்கள் ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை – மாறாக எல்லாம் எதிர்பார்த்ததுதான்; இந்த தமிழக வெற்றிக் கழகம் உண்மையில் ஒருமாதிரி வெறிக் கழகம் என்பதுதான் உண்மையென நிரூபிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வளவுதான்.

எப்படியும், ஏற்கனவே தெரியும் – இந்த வெறிக்கழகமும் ஒரு திராவிடமாடல் காட்சிதான் என்று!

-0-0-0-0-0-0-

சிலபல சகவேலைவெட்டியற்ற நண்பர்கள் (‘நல்லெண்ணத்துடன்’ என எடுத்துக்கொண்டு தொலைக்கிறேன்; + இவர்களில் சிலர் மகன் சொன்னான் அல்லது பேரன்/பேத்தி பரிந்துரைத்தனர் ப்ளடிஹெல் என நடிகருக்கு வாக்களித்திருக்கின்றனர் என்பது உபரித் தகவல் – ஆகவே அவர்களுடைய ‘இருப்பின் அவஸ்தை’ எழவானது புரிந்துகொள்ளக் கூடியதே!) சொல்வது என்னவென்றால்… 

(not that any of us old/decrepit crones really matters, in the big picture after all, but still…)

“கொஞ்ச நாளாவது இந்த விஜய் அரசுக்கு அவகாசம் அளிக்க வேண்டாமா? முதலையமைச்சர் உட்பட அனைவருக்கும், இந்த நாட்டு நிர்வாக விஷயங்களைப் பற்றிப் பெரும்பாலும் முன்னனுபவம் இருந்திருக்கவில்லைதாமே? எப்படித்தான் ஒரே மாதத்தில் ஊழல் திராவிடத்தால் துப்புரவாக ஒழிக்கப் பட்ட நிர்வாகத்தைச் சரி செய்ய முடியும்? ஆறுமாதம் ஒருவருடம் என ஹனிமூன் சனிமூன் கொடுப்பது நியாயமாகத்தானே இருக்கும்?”

சரிதான்.உங்கள் வாதம் முழுக்க முழுக்க தவறு, பிறழ்வு என்று ஒர்ரேயடியாகச் சொல்ல முடியாது; புதிய ஆட்சிக்கு ஒரு அளவு அவகாசம் தேவை என்பதும் ஒருமாதிரி (பிற சமயங்களில்) ஒப்புக்கொள்ளக்கூடிய நியாயமான கருத்துதான். ஆனால், அதையே காரணமாகக் கொண்டு எந்த விமர்சனத்தையும் ஒத்திவைக்க முடியாது என்பதும் உண்மை. 

எது எப்படியோ… நண்பர்களின் கருணையும் கரிசனமும் மிகுந்த பார்வையைக் கேள்விக்குள்ளாக்க, சில தர்க்கரீதியான(!) எதிர்வாதங்களை முன் வைத்தேன் – அவற்றை ஒருமாதிரி தொகுத்து அளிக்கிறேன்… (எதிர்கருத்துகளைத் தாராளமாக முன்வைக்கலாம்)

-0-0-0-0-0-0-

தேர்தலுக்கு முன் இருந்த அசாத்தியமான தன்னம்பிக்கை, தேர்தலுக்குப் பிறகும் பொருந்தி வரவேண்டும், செயலில் காண்பிக்கப் படவேண்டும்

ஆட்சி நடத்தத் தயாராக இருக்கிறோம் என்று சொல்லித்தான் வாக்கு கேட்டார்கள். வென்ற பிறகு மட்டும் ‘எங்களுக்கு அனுபவம் இல்லை, நேரம் கொடுங்கள்’ என்றால், தேர்தலுக்கு முன் சொன்ன தயார்நிலை என்ன ஆனது?

அது அட்ச்சிவுடல் புளுகுதானே?

“அனுபவம் இல்லை” என்பது பொறுப்பிலிருந்து விலக்கு அளித்துக்கொள்ள சால்ஜாப்பு அல்ல

விமானம் ஓட்ட அனுபவம் இல்லாதவரிடம் விமானத்தை ஒப்படைத்த பிறகு, ‘அவருக்கு அனுபவம் இல்லையே, கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்’ என்று பயணிகளிடம் சொல்ல முடியுமா? அனுபவம் இல்லாதது நடப்புக்குக் காரணமாக இருக்கலாம்; ஆனால் அது தோல்விக்கான, நொதுமல் நிலைக்கான நியாயம் ஆகாது.

எதற்கெடுத்தாலும் பழைய ஆட்சியைக் குறை மட்டும் (அவை அனைத்தும் உண்மைதான் என்றாலும், திமுக அஇஅதிமுக திராவிடன்கள் அயோக்கியப் பொறுக்கி ராஸ்கல்ஸ் என்றாலும்) கூறுவது செயல்திறன் அல்ல

ஒரு மருத்துவர் நோயாளியைப் பார்த்து, ‘முந்தைய மருத்துவர் எல்லாம் கெடுத்து விட்டார், சொதப்பியிருக்கிறார்’ என்று ஒரு மாதம் சொல்லிக்கொண்டே இருந்தால், நோயாளி குணமாகிவிட மாட்டார். குறையை கண்டுபிடிப்பதோடு, சிகிச்சையும் தொடங்க வேண்டும் அல்லவா?

அவகாசம் கேட்பவர்களும் முன்னேற்றத்தின் அறிகுறிகளைக் காட்ட வேண்டும்

புதிய வீட்டை வாங்கியவர், ‘முந்தைய உரிமையாளர் வீடு மோசமாக வைத்திருந்தார்’ என்று சொல்லலாம். ஆனால் ஒரு மாதம் கழித்தும் தூசி துடைக்கப் படவில்லை, ஒட்டடை அடிக்கப்படவில்லை, பெருச்சாளிகள் அகற்றப்படவில்லை என்றால், ‘சுத்தம் செய்யத் தொடங்கவே இல்லையா?’ என்ற கேள்வி வருவது இயல்புதானே?

நிர்வாகம் ஒரேஒரு ‘அதி’மனிதரின் அனுபவத்தால் மட்டும் இயங்காது

முதல்வருக்கு அனுபவம் இல்லாவிட்டாலும், அதிகாரிகள், ஆலோசகர்கள், அமைச்சர்கள், நிர்வாக அமைப்புகள் எல்லாம் இருக்கின்றன. அப்படியிருக்க, எல்லா குறைகளுக்கும் ‘அனுபவமின்மை’யை மட்டும் காரணமாகச் சொல்வது எளிமைப்படுத்தப்பட்ட தேய்வழக்கு விளக்கமல்லவா? (அவர் அனுபவஸ்த வெளியாட்களிடம் அறிவுரை கூடக் கேட்டுப் பெறலாமே?

அவகாசம் கொடுப்பதும், கண்காணிப்பதும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல

ஒரு மாணவருக்கு ஆண்டு முழுவதும் படிக்க நேரம் கொடுக்கலாம். ஆனால் முதல் தேர்விலேயே 0 மதிப்பெண் எடுத்தால், ‘என்ன மசுத்துக்குப் படித்தாய்?’ என்று கேட்பது தவறல்லவே?

“முந்தைய ஆட்சி மோசம்” என்பது நிரூபிக்கப்பட வேண்டிய முன்னூகம் (இது 100% உண்மையென்றாலும், இதற்கான எதிர்வினையை, குறைந்த பட்சம் சட்ட-நிர்வாக ரீதியிலாவது செயலில் காட்டவேண்டாமா?)

திராவிட ஆட்சி நிர்வாகத்தை முழுவதும் ஒழித்துவிட்டது என்று முதலில் நிரூபிக்க வேண்டும். நிரூபிக்கப்படாத ஒரு முன்னூகத்தின் மீது முழு வாதத்தையும் கட்டுவது தர்க்கப் பிழை. அரசுப் பதவிகளுக்கு, விசிலடிச்சான் குஞ்சப்ப வெறியர்களும் பிறகட்சிகளிலிருந்து வந்த ஓடுகாலிகளும் வந்தேறி ஒருமாதம்+ ஆகிவிட்டது.

ஆக, குறைந்த பட்சம் – இந்த சமயத்தில் ஒவ்வொரு துறைக்கும், மிக விலாவாரியான ஒரு ‘வெள்ளை அறிக்கை’ வந்திருக்க வேண்டுமா இல்லையா?

வாக்குறுதிகள் உடனடி மதிப்பீட்டுக்கு உட்பட்டவையே

5 ஆண்டுகளில் செய்யும் திட்டங்களுக்கு அவகாசம் தேவை. ஆனால் முதல் நாளிலிருந்தே செய்யலாம் என்று கூறிய நடவடிக்கைகள் தொடங்கியுள்ளனவா என்று கேட்பது, சர்வ நிச்சயமாக நியாயமானது.

தொடரும் ஊழல்கள், நியமனங்கள், ரீல்ஸ்முதல்வாதம், போலீஸ் சொதப்பல்கள், லஞ்ச ஒழிப்பு ஒழிப்புத் துறை

கடந்த வாரம் நடந்த, எனக்குத் தெரிந்த மூன்று ரியல் எஸ்டேட் நிலப் பரிவர்த்தனைகளில் (வேலூர், மதுரை, மதுராந்தகம் வட்டாரங்கள்) – லஞ்சம் பெற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. மேலிடத்துக்கும் அவர்களுக்குப் பாத்தியதைப் பட்டதைக் கொடுக்கவேண்டும் என்கிற முனகலோடு.

வருவாய்த்துறை/பத்திரப்பதிவுசார் அதிகார வட்டங்களில் தொடர்ந்து லஞ்சவூழல்கள் நடந்த மணியம் தான். டாஸ்மாக் ஊழலும் தொடர்கிறது. நிலவளத்துறை சார் பாறை, மணல் கடத்தல்கள்+அதிசுரண்டல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எம்எம்டிஏவிலும் அப்படியே.

லஞ்ச ஒழிப்பு ஒழிப்புத் துறையின் தலைவராக அருண் எனும் ஒரு ஐபிஎஸ் நபர் நியமிக்கப் பட்டிருக்கிறார். வெளங்கிடும். மேலும் வெளங்க வாழ்த்து.

சந்தேகாஸ்பதமான பல அதிகாரி நியமனங்கள்… ஒரு சிலர் பழுதுபார்த்து டிங்கரிங் செய்யப்பட்டாலும் அதிகாரப்ரோக்கர்கள் சிலர் ஓரங்கட்டப் பட்டாலும், பெரும்பாலோர் பழைய கதைகளின் தொடர்ச்சியே. திராவிடமயமாக்கப்பட்ட தமிழகத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்: எண்ணிக்கைகள், நிதர்சன உண்மைகள், ஆகவே கவலைகள் May 17, 2026

முதலையமைச்ச நடிகரின் அமைச்சர்கள் – இவர்களில் பலரைப் பற்றிக் கேள்விப்பட்டால் பாவமாக இருக்கிறது. இவர்களில் சிலபலர் பாவம் செய்பவர்களாக மாறினாலும் ஆச்சரியப் படுவதிற்கில்லை. சர்வம் அதிகாரிமயம் தமிழகஜகத்.

நடிகரின் உள்வட்டத்தில் இருக்கும் ஆசாமிகள் சந்தேகாஸ்பதம். ஆனால் – இன்னமும் சபரீசன் போன்ற ஈசல்கள் உள்வட்டத்துக்கு வரவில்லை என்பதுதான் ஊசலாடிக்கொண்டிருக்கும் எனக்கு ஆச்சரியம்.

ரீல்ஸ் அவ்ளோ பார்ப்பதில்லை, சக்தியில்லை; ஆனால் சிலபல செய்திகளாகவாவது தெரிந்துகொள்வதற்கு – பத்ரி சேஷாத்ரியின் கருணைதான் காரணம் – அவருடைய கிழக்கு நியூஸ் செய்தியலசல்கள் தரம் வாய்ந்தவையாக இருக்கின்றன. அவருக்கு என் நன்றி.

…ஆனால், இப்படியே இன்னும் எவ்ளோ நாட்களுக்குத் தொடரும்? சலிப்பாக இருக்கிறது…

வீட்டு-தொழில் நிர்வாகத்துக்கு ஒரு விதி, அரசுக்கு ஒரு விதி என இருக்க முடியுமா

நமது வீட்டிலோ தொழில்முறையாகவோ, புத்தம்புதிதாக ஒரு பணியாளரை நியமனம் செய்கிறோம் என வைத்துக் கொள்ளுங்கள். அவர் வீட்டில் கூடமாட ஓடியாடி உதவி செய்பவராகவோ, அல்லது ஒரு தொழில்முறை எஞ்ஜினீயர்-கஞ்சிநீராகவோ இருக்கலாம் – இவர்களுக்கு அதிகபட்சம் எவ்வளவு நாட்கள் ‘வேலை கற்றுக் கொள்ள’ அப்படியிப்படி எனப் பொறுமை காத்திருப்போம்? 

“தம்பி, நீ எலக்ட்ரானிக் ஸ் படித்திருக்கிறாய் அல்லவா? உன் முதல் வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதங்களாகிவிட்டன – நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”

“சார், நான் என் மேனேஜரை ஆய்வு செய்து இன்ஸ்டா ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறேன்!”

“அம்மா, நீங்கள் எங்கள் வீட்டில் சமையல் வேலை செய்ய வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது, அடுத்த மாதமாவது ஒரு வாய் டீ போடக் கற்றுக் கொள்வீர்களா?”

“மாட்டேன். உங்கள் வீட்டில் ஆகும் டீ செலவைப் பற்றி மிக விரிவான ஒரு பழுப்பு அறிக்கையை அடுத்த மாதம் கொடுக்கப் போகிறேன்; பிறகு ஆவன செய்கிறேன்…”

…இந்த நிலைமையை நாம் ஒப்புக் கொள்வோமா? மாட்டோமல்லவா?

இந்த விஜய்குஜய் ரீல்ஸ் கதிகலக்கல் வாதிகளுக்கு மட்டும் நாம் ஒருமாதிரி விதிவிலக்கம் கொடுக்கவேண்டும், சொல்லுங்கள்?

நம்மைப் போன்ற சாமானியர்களில் பெரும்பான்மையினர் (அதாவது நம் தேர்தல் ஜனநாயகத்தின் first past the post முறைமைப் படி) பலரால் நமக்கும் நம் தேசத்துக்கும் பணிவிடை செய்வதற்காக, ஒருமாதிரியாகத் தெரிவு செய்யப் பட்ட கட்சிதானே இந்த தமிழக வெறிக் கழகம்?

-0-0-0-0-0-

சுருக்கமாகச் சொன்னால், நண்பர்களின் வாதத்தில் உள்ள முக்கியமான தர்க்கப் பிழை: “புதிய அரசு என்பதால் விமர்சிக்கக் கூடாது” என்கிற முட்டாள்தனமான முடிவுக்கு செல்வது.

சரி. அப்படியானால் – சரியான நிலைப்பாடு எப்படி இருக்கவேண்டும்?

“புதிய அரசுக்கு நியாயமான அவகாசம் கொடுக்கலாம் – அதாவது நாம் கருணைமுதல்வாதிகளாக இருந்தால்; அதே நேரத்தில் அல்லது ஆனால், அவர்கள் எடுத்த/எடுக்கும் நடவடிக்கைகள், நியமனங்கள், முடிவுகள், முன்னேற்றங்கள், ஊழல்-தொடர்கதைகள் ஆகியவற்றை ஆரம்பத்திலிருந்தே கேள்வி கேட்கவும் மதிப்பிடவும் முடியும்.”

இதுதான், அரசியல் சார்பற்ற, நிர்வாகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்ட எதிர்வாதமாக இருக்கும்.

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *