ஜெயமோகனைப் புரிந்துகொள்வது எப்படி? (க்றீச்சிடுதல் (2/n))

September 8, 2018

[ஜெயமோகன், அவர் வழமையேபோல, மனம்போன போக்கில் அறச்சீற்றத்துடன் அட்ச்சிவுட்ட பதிவு ஒன்றைக் குறித்து – சிலபல அப்பாவிகள், அதிமேதாவியான எனக்குப்போய் எழுதி ‘இது சரியா’ எனக் கேட்டிருக்கிறார்கள்; அவர்களுடைய கருத்துகளை, முடிந்தவரை அவர்கள் வரிகளிலேயே தொகுத்து, முடிந்தவரை அவர்களுடைய முன்னனுமதியுடன், தனிப்பட்ட குறிப்புகளை நீக்கி, மேலதிகமாக – உங்களுக்கு என் பராக்கிரமம் மிக்க வியாக்கியானத்தை அளிப்பதில் உள்ளபடியே எருமையடைகிறேன். நன்றி!]

ஹ்ம்ம்ம் – இது ஒரு மிகநீண்ட பதிவாகத்தான் ஆகப்போகிறது. பாவம், நீங்கள்…

-0-0-0-0-0-0-

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில், கருத்துரிமைக்கார அறிவுஜீவிகள் எந்த எழவையும் கடாசுவதற்கான சுதந்திரம் என்பது, + அவ்வகைக் கருத்துதிர்த்தலுக்குப் பின் கம்பீரமாக மனிதவுரிமையுடன் ராஜநடை போட்டுக்கொண்டு உலாவுவது, நம் நாட்டில் அமோகமாக இருக்கிறது. ஏனெனில், நானுந்தாண்டே கருத்துச்சுதந்திரவாலா.

இதற்கு முக்கியமான காரணம் – பாரதம் என்பது இக்காலங்களில் – ஃபாஸ்ஷிஸ்டுகளின், ஹிந்துத்துவ வெறியாட்டக்காரர்களின், வலதுசாரி குண்டர்களின், சங்கிகளின் அருவருப்புதரும் கூடாரம் – என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இங்கு கருத்துரிமை என்பதே சுத்தமாக இல்லை. காவிகளிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்வதிலேயே நேரம் போய்விடுகிறது. இம்மென்றால் கோலிகுண்டு, ஏனென்றால் குடமுருட்டி குண்டு.

ஆகவே கீழ்கண்ட காத்திரமான கருத்துகளை – அவரவர் விருப்பப்படி எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, ஒரு பிரச்சினையுமில்லாமல் பரப்பிக்கொண்டே இருக்கலாம், நானும் என் பங்குக்கு இவற்றைப் பரப்புவதாகத்தான் இருக்கிறேன்!

…ஏனெனில் எனக்கும் மோதிஆட்சி ஒத்துவரவில்லை; எனக்கு இந்தக் காவிகளால் ஒருபைசா பிரயோஜனம் கிடையாது, நான் கல்லா கட்டும் வரியெல்லாம் என்ன ஆகிறது என்றுகூடத் தெரியவில்லை; ஆக, இப்படியாப்பட்ட அநியாய அநீதிக் காலங்களில், எனக்கும் – கும்பல்களோடு சேர்ந்து கோவிந்தா அல்லது லும்பன்களுடன் சேர்ந்து அல்லேலும்பன்யா அல்லது மண்டுக்களுடன் சேர்ந்து மாஷால்லாஹ் போட்டுத் தையாதக்கா எனச் சுயமரியாதை மதச்சார்பின்மைச் சுதந்திரத்துடன் குத்தாட்டம் போடுவதைத் தவிர வேறு வழியேயில்லை. :-(

சுருக்கமாகச் சொல்லப்போனால் – மோதி வீழ்த்தப்படவேண்டியவர், அவர் ஆட்சி ஒழிக்கப்படவேண்டியது.

ஏனெனில்…

எங்கும் ஒரே ஊழல்! (ஆனால் நான் பரிசுத்த ஆவி; மேலும், வெளியே பரவலாகத் தெரியாவிட்டாலும், ஊழலான அது உள்ளே இருக்கத்தானே வேண்டும்? ஒரு சாமானியனாக, இந்தியப் பெருவெளியில் ஒரு துளியாக, என்னிலிருந்து உலகை வளர்த்தெடுப்பவனுக்கு, இதுகூடத் தெரியாதா என்ன? பிரஜை எப்படி அரசனப்படியல்லவா? யாரை ‘இந்த அரசில் ஊழலில்லை’ என நம்பச் சொல்கிறீர்கள்?)

அனைவரும் நசுக்கப் படுகிறார்கள்! (ஹஹ்ஹா, என்னை நசுக்கமுடியாது, என் உள்ளீடு அப்படி!)

சிறுபான்மையினரோ, கேட்கவே வேண்டாம்! – அவர்கள் பொசுக்கப் படுகிறார்கள் (ஆகவே, சமையல் எரிவாயு விலை ஏறுகிறது!)

அடக்குமுறைக்குட்படுத்தப்பட்டவர்கள் அழிக்கப்படுகிறார்கள்! (ரப்பர் படித்தீர்களா?)

பிடித்த உணவு உண்ண, உரிமை இல்லை! (பாருங்கள், எவ்வளவு மெலிந்துவிட்டேன்!)

எங்கெங்கு காணினும் கார்ப்பரேட் கலாச்சாரம்! (சத்தியமாக, எந்த கார்ப்பரேட்டிடமிருந்தும் நான் பணம் பெறுவதில்லை – என் சம்பாதிப்பு தனிமனிதர்களிடமிருந்து மட்டுமே, ஏதோ அவர்களாக மனமுவந்து கொடுக்கும் தட்சிணையை மட்டும் மிகுந்த மனக்கிலேசத்துடன் பெற்றுக்கொள்வேன் – அதுவும் பண்டைய பண்டமாற்று முறைதான்!)

கார்ப்பரேட் தொழில்நுட்பம் என்கிற பெயரில் தனிமனிதத்துவம் பாதிக்கப்பட்டு, மானுடத்துக்கும் இயற்கைக்கும் இடையே ஏற்படும் கொடும் விரிசல்! (அதனால்தான் நான் காதிகிராமோத்யோக்கில் வாங்கிய லேப்டாப்களை மட்டுமே உபயோகிக்கிறேன். குடிசைத் தொழில்கள் மூலம் உருவாக்கப்பட்ட விமானங்களில் மட்டுமே பயணிக்கிறேன். ஏன், என் பிள்ளைகளைக் கூட கிராமங்களில் மட்டுமே பணிசெய்ய அனுப்பியிருக்கிறேன், நானே ஒரு தன்னிறைவு பெற்ற கிராமவாசிதேன்!

என்னுடைய ஸாம்ஸங் கைபேசி, கைவினைஞர்களால் நெய்யப்பட்டு மார்த்தாண்டம் நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கப்பட்டதொன்று. என் கைபேசியின் ஃபோன்-கேஸ்/உறை, திருச்செந்தூர் பக்க பனைமரவோலைகளை முடைந்து செய்யப்பட்டது.)

இங்கு அரசு என்று ஒன்று நடப்பதாகவே தெரியவில்லை! (இம்மாதிரி பேசும் எனக்கு – இந்த விஷயத்திலும் ஒரு அனுபவ அறிவும் இல்லை என்றிருக்கலாம். இது தொடர்புள்ள ஒரு சிறு விஷயத்தில்கூட – அதாவது ஒரு சிறு அமைப்பை ஒரு நிறுவனத்தைக் கட்டியெழுப்புவதைக் குறித்து, பலருக்கு வேலை கொடுத்து, நுகர்வாளர்களை அனுசரித்து, வருடாவருட வளர்ச்சிக்கு வித்திடுவதில் துக்குணியூண்டளவுகூட அனுபவமில்லாமல்கூட இருக்கலாம். அதிலுள்ள சவால்களும், கஷ்டங்களும், முதுகொடிக்கும் வேலைப்பளுவும் அறவே தெரியாதிருக்கலாம். ஏன், என் வீட்டின் மேலாண்மையைக்கூட நான் சொதப்பலாம். இருந்தாலும் அரசின் மேலாண்மைத் திறம் பற்றி என்னால் ஸீரியஸாகக் கருத்துதிர்க்க முடியும். ஏனெனில், என் கருத்தைத் தூக்கிக்கொண்டு ரிலே ரேஸ் ஓடிச்சுற்றித் தட்டாமாலையாட என் வாசகர் குழுமம் தயார்!)

இங்கு எல்லாமே அதிகார வர்க்கம்தான்! (…ஆனால் நான் அதிகாரியாக (அல்லது குமாஸ்தாவாக) இருந்தபோது எப்படியாப்பட்ட சுய அர்ப்பணிப்புடன் பாடுபட்டேன் தெரியுமா? எவ்வளவோ விஷயங்களைப் புதிதுபுதிதாகச் செய்தேன் – ஆனால் ஒன்றும் இப்போது நினைவிலில்லை. ஆனால் ஒருவருக்கும் என்னுடன் வேலை செய்யப்பிடிக்காது என்பதையும், என்னை எவருமே மதிக்கவில்லை என்பதையும் அறிந்துள்ளேன் – ஏனெனில் நான் ஒரு சாய்வு நாற்காலி அறிவுஜீவி, ஓயாமல் பிறருக்கு அறிவுரை கொடுத்தே பழக்கம்; ஆகவே –  வேலை வாங்குவது, தனியாக/குழுவுடன் உழைப்பது குறித்த உளவியல் சிக்கல்கள், நடைமுறைப் பிரச்சினைகள், சாமதானபேததண்ட வகை முறைமைகளை உபயோகிப்பது போன்ற அனைவற்றுக்கும் என்னிடம் விலாவாரியாக திடீரெக்ஸ் சிந்தனைகள் உள்ளன! அவற்றை எழுதி பிறருக்கு உதவவும் செய்கிறேன்!)

இங்கு எல்லாமே காகிதத் திட்டங்கள்தாம்! (ஆனால், என்னளவு திட்டம் தீட்டுதலும், திட்டித் தள்ளுதலும் யாருக்காவது முடியுமா? எவ்வளவு திட்டங்களை திட்டவட்டமாகத் தீட்டி, பலன்களைப் பெற்றிருக்கிறேன் என்பது தெரியுமா? (எனக்கும் தெரியாது, சும்மனாச்சிக்கும் சொன்னேன்!))

சமையற்கூட அதிகாரமையம்! (எங்கள் வீட்டில் நடப்பதுதானே வெளியில் நடக்கவேண்டிய முறை?).

மார்வாடிகளுடைய, மார்வாடிகளால், மார்வாடிகளுக்காக கூலிக்கு மாரடிக்கும் அரசு! (எனக்குச் சத்தியமாக, சாதிமதக் காழ்ப்பே இல்லை!)

எங்கும் தறிகெட்ட வன்முறை! (நான், எழுத்தில் மட்டும்தான் வன்முறையைக் காண்பிப்பேன்!

மதச்சார்பின்மை நொறுங்கிக்கொண்டிருக்கிறது! (ஆகவே நான், என் வழக்கம்போலவே ஹிந்து மதங்களை கண்டமேனிக்கும் வசை பாடலாம்! நீங்களும்தான், கவலைவேண்டேல்! ஊக்கபோனஸாக, இஸ்லாம்+க்றிஸ்தவ மதங்கள் சார்பாக நடக்கும் அட்டூழியங்களைக் கண்டுகொள்ளாமல் விடலாம்!)

சகிப்புத் தன்மை சந்தி சிரிக்கிறது! (ஆனால், தயவு செய்து என் மானாவாரிப் பதிவுகளையும், சிந்துபாத் வகை தொடர் குண்டுகளையும் தொடர்ந்து பொறுத்துச் சகித்துக் கொள்ளவும்!)

ஜாதிவெறி அதிகமாகி விட்டது! (ஏனெனில், பிற மதங்களில் ஏற்றத்தாழ்வுகளே இல்லை; எல்லாம் சர்வமார்க்க சமரசம் மட்டுமே. ஆகவே மார்வாடிகளைக் கண்டமேனிக்கும் ஜாதிவெறியேயில்லாமல் திட்டுவோம், நன்றி!)

லஞ்ச லாவண்யம்! (இதன் பொருளே எனக்குப் புரியவில்லை; நான் ஊழலே செய்ததில்லை என்பதால்தான் இப்படியோ? நான் என்றுமே ‘நாம் பரஸ்பர உதவி செய்துகொண்டு ஒருவரை மற்றொருவர் முன்னேற்றுவோம்!’ எனத் தொண்டாற்றியதேயில்லை. எனக்கு ஏற்பட்ட மேன்மைகள் அனைத்தும், ஒன்றுவிடாமல், எல்லாம் அவையாகவே நடந்தன. என் நேர்மைக்கும் தரத்துக்கும் சான்றாகத் திகழ்கின்றன)

பொய்மை! (நான் சத்தியசந்தன், ஹரிஷ்சந்திர வம்சம் அன்றோ? நான் எங்காவது எதற்காவது மனமறிந்து பொய் சொல்லியிருக்கிறேனா? நான் பொய் சொன்னேன் என நிரூபித்தால் என் கழுத்தை நானே அறுத்துக்கொள்ளத் தயார், சரியான கழுத்தறுப்பு கேஸ்களே…)

ஏழ்மை! (பாருங்கள், என்னிடம் அடியில் கண்டசொத்தைத் தவிர வேறொன்றுமில்லை.)

ரயில்வண்டிக் குப்பை! (மன்னிக்கவும். நான், என் வரிசைக்கிரமமான தொடர்ரயில்வண்டி எழுத்துகளைக் குறிப்பிடவில்லை.)

சுற்றுச்சூழல் நாசம்! (என்னுடைய ஊர்சுற்றல்களெல்லாம் நடைப்பயணங்கள் மட்டுமே! ஏனெனில் வாகனங்கள் புகை விடுமே! நான் போட்டுக்கொள்ளும் சட்டை, ஜீன்ஸ் எல்லாம் கதறக் கதறக் கதர் மட்டுமே!)

கிராம மக்களுக்கு உபயோகமில்லாத நாற்கரச் சாலைகள்! (ஆகவே நான் இவற்றை பகிஷ்கரித்து கிராம நடைபாதைகளினூடே மட்டுமே – பாரம்பரிய மரங்களை வைத்துக்கொண்டு, ஆனால் அவற்றை வெட்டவேவெட்டாமல் உருவாக்கப்பட்டு ஆர்கனிக் வர்ணங்கள் மென்மையாகப் பூசப்பட்ட, நம் குழந்தைகள் விளையாடக்கூடிய சின்னஞ்சிறு மரக்கட்டை விமானங்களில்தான்- ஐரோப்பா அமெரிக்கா அன்டார்ட்டிகாவெல்லாம் போகிறேன் என்பதெல்லாம் நீங்கள் அறியாததல்ல.

இப்படித்தான் புனைவின் சகல சாத்தியங்களையும் நான் தொடர்ந்து தாண்டி வரலாறு படைக்கிறேன்!)

கல்வி களேபரம்! (நான் பயங்கரமான மேற்படிப்பு படித்திருக்கிறேன், ஆனால் இக்காலங்களில்… எல்லாம் சராசரிதான்).

வெட்டி விளம்பரம்! (நான் சுத்தமாகவே சுயவிளம்பரத்தில்  ஈடுபடுவனல்லன்; அம்மாதிரி அற்பத்தனங்களில் நான், என் மழலைப் பருவத்திலிருந்தே ஈடுபட்டதில்லை. அவற்றில் ஈர்ப்பே இல்லை.

சொல்லப்போனால் என்னை முதன்மைப் படுத்தி எந்தவொரு விஷயத்தையுமே நான் செய்ததேயில்லை, ஊடக நேர்காணல்களில் ஈடுபட்டதேயில்லை; மிகக் கவனமாக, என் பெயர் குறிப்பிடப்படுவதையும் புகைப்படம் வருவதையும் விருதுகளையும் வாய்ப்புகளையும் திரைப்பட வசூல்களையும் தவிர்த்தே வந்திருக்கிறேன்.)

தனிமனித ஆராதனை! (எனக்கு இது அறவே ஒத்துவராது. என் காலில் வீழ எவனையும் அனுமதியேன்; என்னை – குருவே ஆசானே என்றழைப்பவர்களை நான் புரிந்துகொள்ள முடிந்ததேயில்லை.

ஆகவே, அப்படிப்பட்டவர்களுக்கு உடனடி தண்டனையாக, அருள்பாலிப்பதற்கு அப்பாற்பட்டு, அவர்களை என் வீட்டில் தங்க அனுமதித்ததில்லை; ஆனால் அதேசமயம், அவர்கள் கருத்துச் சுதந்திரத்துக்கு மதிப்புக் கொடுத்து அவர்கள் வீட்டில் எழுந்தருளத் தயங்கியதும் இல்லை, ஆம்!)

எல்லா திட்டங்களும் திட்டமிட்டமாதிரியே தோல்வி! (ஆனால் என் திட்டங்கள் அனைத்தும் வெற்றி மட்டுமே பெற்றிருக்கின்றன! திட்டமிட்டுப் பணியாற்றுவதில் எனக்கு இணை நானே. விக்கிபீடிய பக்கங்களைத் திருத்துவதானாலும் சரி. விருதுகளானாலும் சரி. அறச்சீற்றமானாலும் சரி. அரசியல்சரித்தனமானாலும் சரி. ஏதோ உங்களுக்குப் புரிந்தால் சரி.)

எங்கும் வரி, எதற்கும் வரி! (இதை, இந்திய மொழிகளுக்கான பொதுவான வரிவடிவம் என நினைத்து ஏமாந்துவிட்டோம்! விலாவாரியான பிரச்சாரத்தை நம்பிவிட்டோம். இப்போக்குக்கு எதிரான என் போராளித்தனத்தைப் பதிவு செய்வதற்காக, நான் இனிமேற்கொண்டு, என் பதிவுகளில் வரிகளைக் குறைத்துக்கொள்ளப் போகிறேன்!)

எங்கும் பிரச்சாரம்! (நான் என்றுமே எதற்காகவுமே பிரச்சாரம் செய்ததில்லை. ஏனெனில், என் புத்தங்களை வாங்கி, என் எழுத்துகளைப் படித்து, நான் திரைக்கதை எழுதிய திரைப்படங்களைப் பார்த்து – என்னை அமோகமாகக் கவனித்துக் கொண்டாடி நீங்கள் ஆதரவு கொடுத்தால் – எளிமையுடனும் ஆத்மசுத்தியுடன் பரமதிருப்தி அடைபவனே நான்தான்!

என் குருவுக்கு அப்படித்தான் நான் சொல்லிக்கொடுத்திருக்கிறேன், நன்றி.)

இந்தியா இருள்கிறது! (இரவு வந்தால் இருட்டிவிடுகிறதே, இது காவிச்சதிதானே?)

பாரதம் பரிதவிக்கிறது! (அந்த ரதத்தில் பிணைக்கப்பட்டுத் தவித்துக்கொண்டிருக்கும் அனைத்துப் பரிகளையும் விற்றுப் பெற்ற உபரியின் மூலம் கூலாக குதிரைவாணிகம் செய்வதே என்னைப் போன்ற சீத்தலைச் சாத்தான்களின் குறிக்கோள்!)

வாழ்க!

என்ன செய்வது சொல்லுங்கள். :-( ஆனால் என்னுடைய கல்லா கட்டுவது என்பது நன்றாகவே ஒடிக்கொண்டிருக்கிறது. அது முக்கியமல்லா?

போதாக்குறைக்கு, பள்ளிக்காக என்று சதிகாரத்தனத்துடன் கேட்டவுடன் நிதியை வாரிவழங்கத் தயாராக இருக்கிறார்கள். And, I am laughing all the way to the bank… அதாவது, மற்றும் சிரிக்கிறேன் நான், வங்கிக்கான அனைத்துப் பாதையிலும் .

(எஸ்ரா அழைக்கிறார்! பாவிகளே! மனம் திருந்துங்கள்!!)

(நானே முழியும் பைத்தியமும் மூடனுமாக இருக்கிறேன்!)

(சாரு ‘கோவைக்காய்’ நிவேதிதாவைச் சரணடையுங்கள்!)

(பரமண்டல ராஜ்ஜியம் உங்களுடையதேதான்!)

(ஆஃபர் வேலிட் டில் ஸ்டாக்ஸ் லாஸ்ட்)

-0-0-0-0-0-0-

அடுத்த பதிவிலும் தொடரும்… (பாவம், நீங்கள்!)

6 Responses to “ஜெயமோகனைப் புரிந்துகொள்வது எப்படி? (க்றீச்சிடுதல் (2/n))”


  1. செய்தி கேட்டோ செய்தி கேட்டோ சேட்டன் பற்றிய செய்தி கேட்டோஓஓ..

  2. Ramanathan Navaneethakrishnan Says:

    One among the 7.5 for the past 5 years. I was anxiously waiting for a rejoinder in your blog. God saved me. The most fitting reply in satirical form. Please post the other part asap as I can’t wait longer.

  3. Anonymous Says:

    Sir,
    Filibusters are of little use when we have some serious negatives about the Govt (such as demonetization/ one-upmanship)…Your turning a nelson’s eye on these aspects is not surprising though.

    Over-dramatization is JMo’s forte . An ironist like you need not brush under the carpet some of core issues which had gone wrong on the part of ruler .
    Appreciating JMO’s calling spade a spade and getting the required nakedness of some of issues . If not Jmo- who would ?

    Thank you.
    Regards

  4. Swami Says:

    Yenga!, Padma Bhushan tharennu asai kattivittu apparam tharavillai endram kovam varuma, varadha?!

    On a serious note, Jemo is a classic case of what haplens when there is an attempt to convert a man into an institution (by his hangers on and no doubt encouraged by Jemo)

  5. Swami Says:

    And it is quite tragic to see one of Tamil’s finest writers spread himself thin attempting to potray himself as a ‘know all’

  6. suresh Says:

    ஞானதிருஷ்டி ஆசானுக்கே அது ஞானம் இல்லை மாயை என்று இடித்துரைத்த பெருமானே……தில்லு துரைக்கே கட்டம் கட்டிய பெருமானே…….. தொடரட்டும்


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s