க்றீச்சிடுதல் (1/n)

September 6, 2018

எனக்கு இந்த பேராசிரியர் ராஜகோபாலன் அவர்களை மிக நன்றாகத் தெரியும் – பல மாமாங்கங்களாக இவரை அறிவேன். சர்வ நிச்சயமாக, என் செல்லம்தான். இந்தக் குறிப்பைப் படித்துவிட்டு என்னைக் கூப்பிட்டுத் திட்டாவிட்டால், என் பெயரை மாற்றிக்கொள்வேன்கூட!

அடிப்படையில் நல்லவர், பண்பாளர், படித்தவர், படிப்பவர் (கேடுகெட்ட தற்காலத் தமிழ் அலக்கியத்தையும் கூட!) … இன்னபிற. சுற்றுப்புறச் சூழல் தொடர்பாகப் பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். பெரியபெரிய இடங்களில் எல்லாம் பேச்சுக்கச்சேரிகளை நிகழ்த்துபவர், கடல்களுக்கான பன்னாட்டு நிறுவனத்தை (இதனை ஆரம்பித்தவர் மகாமகோ எலிஸபெத் – மாயமலை/மேஜிக்மௌன்டென் எழுதிய தாமஸ் மான் (இவர் ராமாயண மாயமானுக்கு தூரத்துச் சொந்தம் என அறிகிறேன்) அவர்களின் பெண்) ஒருகாலத்தில் நிர்வகித்திருக்கிறார், ஐஐடி காரர் – எல்லாஞ்சரிதேன்.

ஆனாலும்.

Interview with Prof. R Rajagopalan

முதல் வரியிலேயே எனக்குப் பிரச்சினை! ஆரம்பித்து சுமார் 58 நொடிகள் வாக்கில் இது வருகிறது. உடனேயே க்றீச்சிட்டுவிட்டது.

ஏன், மெகானிகல் இஞ்சினீயரிங்கில் ஒழுங்காக, ஆழத்துடன், அறத்துடன் பணிபுரிந்தால் போதாதா? சுற்றுப்புறச் சூழல் அதுயிது என உயரப்பறந்துகொண்டே போராளியிஸத்தனமாக எச்சில் தெறிக்கப் பேசினால்தான் ‘ஆழம்’ + ‘அறம்’ கைப்படுமா?

ஒரு அறிவியல் – தொழில் நுட்பம் வகையறா விஷயம் என்றாலே என்னவோ இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் படுகோரமான எதிரி என்கிறமாதிரித்தானே வர்ணனை விரிகிறது? இத்தனைக்கும் மானுடப் பண்பாடு என்பதில் எந்தவொரு விஷயமுமே – வேளாண்மை உட்பட – எதுவுமே செயற்கைதானே!

இந்த மாதிரி தொழில்நுட்ப வர்ணனையாளர்களால், தொழில்நுட்பம் எனவொன்று இல்லாமல் பேசியும் எழுதியும் உலகமெலாம் பயணம் செய்தும் பவனி வரமுடியுமா? செயல்படமுடியுமா? குறைந்தபட்சம் – அன்றாடவாழ்வில், உயிர்தரிப்பதற்காக மட்டுமேகூட??

வரவர இம்மாதிரி ‘தொழில்நுட்பம் Vs இயற்கை’ வகைப் பகுப்புகளும் புரிதல்(!)களும், எனக்குச் சுத்தமாகப் புரிபடுவதேயில்லை. ஆனால் போராளித்தனம் எனும் கல்யாணகுணமானது – நேரடியாகவோ மறைமுகமாகவோ – ஒரு லாபகரமான தொழில் என்பது மட்டும் நன்றாகவே புரிகிறது.

-0-0-0-0-0-

இதுதான் இந்த ஏட்டுச்சுரைக்காய் ஓயாதபேச்சுமுதல்வாதப் பேராசிரியர்களுடன் என் ஒத்துவராமைக்கான காரணம்.

எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் ஒருவர் நடித்த ஒரு அழகான திரைப்படத்தில் வரும் வசனத்தைப் போல –  நான் நம்முடைய செயல்பாடுகளினால் வரையறுக்கப்படுகிறோம், வெறும் வெட்டிப் பேச்சினால் அல்ல. (“We are defined by our actions, not by our words.” )

ஆனால் – தொடர்ந்து பேச்சோதிபேச்சாகப் பேசுவதற்கும், மானாவாரியாக எழுதித் தள்ளுவதற்கும் ஆட்கள் தேவைதான். ஒப்புக்கொள்கிறேன்.

சரி. இருந்தாலும் – இவர் கூடங்குள உதயகுமார், பூவுலகின் நண்ப சுந்தரராஜன் போலல்லாமல், அடிப்படையில் ஒரு அயோக்கியர் அல்லர். நேர்மையாளர்தாம். நல்லெண்ணம் கொண்டவர்தாம்.

ஆனாலும்.

அப்படியும் இப்படியும்.

அக்கப்போர் முடிந்தது.

நான் ‘ஆவுற வேல’ தொழிலைப் பார்க்கக் கிளம்பவேண்டும், நன்றி.

One Response to “க்றீச்சிடுதல் (1/n)”

  1. nparamasivam1951 Says:

    போராளித்தனம் ஒரு லாபகரமான தொழில்-அஷ்டே!
    🙏


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s