ஞானத்தங்க நடிகர் சிவகுமார், கௌரவஎன்ஆர்ஐ, கங்கைகாவிரி இணைப்பு, இஸ்ரோ மங்கள்யான் – சில புரிதல்கள்

March 15, 2017

ஒரு செல்லமான எடுத்துக்காட்டாக – அண்ணன் அரவிந்தன் கண்ணையன் அவர்கள், அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டிருக்கிறார். ஒரு மகாமகோ என்ஆர்ஐ.  அதனால்தான் அவருக்கு, தொலைதூரத்திலிருந்து விஷயங்களை வெகுநுணுக்கமாக அறிந்துகொண்டு ஐயம் திரிபற அலசமுடிகிறது. அதாவது – செய்திகளை  தொலைக்காட்சியில் பார்த்தும் டைம்லைனில் வம்புகளைக்கேட்டும் திட்டவட்டமாக – பொதுவாகவே இந்தியாவைக் கரிசனத்துடன் கரித்துக்கொட்ட, திட்டும்வட்டமாக முழு உரிமை இருக்கிறது.

ஆனால், என்னுடைய பிரச்சினை என்னவென்றால், இவருக்கு இயல்பான ஐடிகுமாஸ்தாவியத்தையும் மீறி ஓரளவுக்கு அழகாக வேலை செய்யும் மூளை இருக்கிறது. தொடர்ந்து சுழன்றுசுழன்று அடிக்கும் ரஜினித்தனம் இருக்கிறது. நானும் அவரும் பரஸ்பரம் படுமோசமாகத்திட்டிக்கொண்டாலும், கிண்டல் செய்தாலும் – என்னுடைய அனுமானத்தில், இவருடைய சிலபல கட்டுரைகள் சரியான கோணத்திலேயே எழுதப்பட்டிருக்கின்றன, இவருடைய பல அங்கலாய்ப்புகளை (யூதர்கள் பற்றிய கருத்தாக்கங்கள் உட்பட) நானும் பெருமூச்சுடன் ஒப்புக்கொள்கிறேன் என்பதையும் சொல்லிவிடுகிறேன் – பாவிகளே, இது சாம்பல் உலகமடா! 100% வெறுப்புக்கும் 100% விருப்புக்குமிடையே அல்லாடும் ஸைன்வளைகோட்டுலகமடா! ஹ்ம்ம்… இதே ரீதியில் இந்த ஒத்திசைவெழவையும் அவர் வேண்டாவெறுப்பாகச் சில விஷயங்களில் (மட்டுமே!) ஒப்புக்கொள்ளக்கூடும்; எது எப்படியோ, ஒருவருக்கொருவர் கோபதாபத்துடன் பரஸ்பரம் சொறிந்து கொள்வதில் முதுகுகள் ரணகளமாக ஆகாமலிருந்தால் சரி!

-0-0-0-0-0-0-

ஆனால் பாருங்கள், நடிகர் சிவகுமார் ஒரு என்ஆர்ஐ அல்லர். ஆகவே ஆட்டோமேடிக்காக, இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் மேட்டிமைத்தனத்துடன் அறிவுரை தரும் உரிமையை இழக்கிறார்.

அவர் ஐடி குமாஸ்தாவும் அல்லர்; ஆகவே கங்கை-காவிரி இணைப்பு, இஸ்ரோ ராக்கெட் போன்ற ஜுஜூபி சமாச்சாரங்களில் – தன்னுடைய மேலான, அதிமுக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளைப் பொதுச்சபையில் கொட்டி வைக்கமுடியாது. தொழில் நுட்பரீதியாக விமர்சனங்களை அள்ளிக்குவிக்கமுடியாது.

வெளி நாடுகளில் – குறிப்பாக அமெரிக்காவில் – சமர்த்தாக உட்கார்ந்துகொண்டு தமிழர் பண்பாட்டை — அதாவது, ஆரியத்தை வீரியத்துடன் எதிர்ப்பது, ஜாதிவெறியில் ஈடுபடுவது, திராவிடர்களைத் தூக்கிப் பிடிப்பது, சமூகவளைத்தலங்களில் வியர்வை சொட்டச்சொட்டப் பாடுபடுவது – முக்கியமாக கண்டமேனிக்கும் கதைகளையும் நாவல்களையும் கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதி, போயும்போயும் தமிழக அங்கீகரிப்புக்காகப் போய் ஞமலிகள்போல அலைவது, உதிரிகளைத் தூக்கிப் பிடிப்பது, தொழில் நுட்பங்களை அலசுவது, போராட்டங்களையும் வெறுப்புகளையும் ஊக்குவிப்பது — போன்றவற்றை, பொழுதன்னிக்கும் செய்யும் அடிப்படை உரிமைக்கு அவர் சொந்தம் கொண்டாடமுடியாது.

எனக்குத் தெரிந்து, அவர் சமூகவளைத்தலப் போராளிஎலியுமல்லர். தானுண்டு கந்தன் கருணையுண்டு தன் காந்தி கம்பன் காலட்சேபமுண்டு என்று ஆனந்தமாகக் காலத்தைக் கழித்திருக்கலாம். ஏனெனில், கலைச் சேவையோதி சேவை, நாட்டுக்குத் தேவை.

அவர் ஒரு தொழில்முறை அறிவுஜீவியோ அல்லது டமிள் எள்த்தாலரோ அல்லர்; ஆகவே கண்டமேனிக்கும் அட்ச்சுவுட முகாந்திரமென்பது இல்லை.

எனக்குத் தெரிந்து சிவகுமார் அவர்கள் – சர்வநிச்சயமாக,  எம்டிஎம் அவர்களோ அவருடைய செல்லமான altered_ego ஸில்வியாவோ அல்லர்; பண்பாட்டை அதுபடும் பாட்டை உய் உய் என உய்விக்க நிதிக்குவை பெற்றவரும் அல்லர்; ஆக கர்நாடக சங்கீதம், நாட்டார் கலை  என்றெல்லாம் கலந்துகட்டி விக்கீபீடியாவைக் கரைத்துக்குடித்து, நதிநீர் இணைப்புக் கருத்துக் கதம்பங்களைத் தொங்கவிடவும் அவருக்கு ஏலாது.

…ஆகவே, சிவகுமார் அவர்கள் எனக்குத் தெரிந்து — இந்த உலகம் சுற்றும் வாலிப ஸெமினார், கான்ஃபரன்ஸ், வெட்டிக் கமிட்டி வகையறா காக்கைக்கூட்டங்களிலுமில்லை…

கொஞ்சம் உணர்ச்சிவசப்படும் வகை என்றாலும், தனக்குச் சுத்தமாகத் தெரியாத விஷயங்களைப் பற்றி மேடையில் உளறிக்கொட்டாத – கைத்தட்டல்களுக்கு ஏங்காதவராகத்தான் இவரை அறிவேன்! இருந்தாலும் இப்படி. :-( தேவையா?

ஆனாலும் ட்விட்டர்ஃபேஸ்புக்வாட்ஸப் விஞ்ஞானி கணக்கில் அபரிமிதமான ஞானத்துடன் பேசியிருக்கிறார்.

-0-0-0-0-0-0-

நிற்க. நகைச்சுவைக்காகவும், பரப்புரை கோமாளித்தனங்களுக்காகவும், அப்பட்டமான வதந்தி பரப்புதல்களுக்காகவும் – முக்கியமாக – கமுக்கமான இந்திய எதிர்ப்புகளின் ஊற்றுக்கண்களில் ஒன்றானதைப் புரிந்துகொள்வதற்காகவும் நான் அவ்வப்போது போவது – வாடிகன் ரேடியோ வளைத்தலம்  – தமிழ் பகுதி. http://ta.radiovaticana.va – இதில் ஒரு பகுதி வாட்ஸப் வகையறா வம்புகளை வைத்து பத்திகளைத் ‘தேத்தும்’ வகை.

இந்த வாடிகன் என்பதை, இவர்கள் வத்திக்கான் என எஸ்ராத்தனமாகக் குறிப்பிடுவதால் எனக்குக் கொஞ்சம் பிரச்சினை. ஆனால் இதனை நான் புரிந்துகொள்வது ‘வத்தி வைத்தல்’ + ‘காதும் காதும் வைத்தாற்போல’ என்கிற ரீதியில் –ஹிந்தியில் கான் என்றால் காது. அது சல்மானுடையதாகவும் இருக்கலாம். ஷாரூக்குடையதாகவும் இருக்கலாம். குடையாததாகவும்கூட இருக்கலாம்; எது எப்படியோ, QED.

…என்னையும் பிற பாவிகளையும் மன்னியும், என்னுடைய மலைப்பிரசங்க ஏசுவே! உங்கள் பெயரால் மற்ற சமூகங்கள் ஏசப்படுவதையும் விஞ்ஞானம் ஒழிக்கப்படுவதையும் மன்னிக்கவும்!

சரி. இந்தத் திருவளைத்தலப் பத்தியில் ஒரு குறிப்பு வந்திருக்கிறது. (இந்த ‘வாரம் ஒரு உளறலில்‘  ஏகப்பட்ட நகைச்சுவை – நெடுவாசல், சீமைக்கருவேலம் என விரியும் அபத்தங்கள் – அறிவியலுக்கும் நிறுவனமயமாக்கி மையப்படுத்தப்பட்ட மத அபத்தங்களுக்கும் ஒரு எழவு தொடர்புமில்லை என்ற அடிப்படை உண்மையை மறுபடியும், மறுபடியும் நிலை நாட்டுபவை!)

…பலகோடிகள் செலவழித்து, செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பியிருக்கும் மத்திய அரசு, நதிநீர் இணைப்புக்கும் செலவழிக்கலாமே? (நடிகர் சிவகுமார்).

எனக்கு ஆச்சரியமாகி விட்டது. என்னதான் அப்படிச் சொன்னார் இந்த நடிகர் கோமான் எனக் கொஞ்சம் ஹோம்வர்க் செய்ததில், என் சென்னை ‘மீடியா’ நண்பர் ஒருவருடன் (வேலை வெட்டியற்றுப்) பேசியதில் – எனக்குச் சில விஷயங்கள் பிடிபட்டன.

 ஆகவே சிவகுமாரும் ட்விட்டர்ஃபேஸ்புக்வாட்ஸப் விஞ்ஞானிகளின் ஜோதியில் கலந்து ஐக்கியமாகிவிட்டார் என்பதை பயபீதியுடன் உணர்ந்தேன்! :-(

ஊக்கபோனஸாக –  சிவகுமார் அவர்களுக்கு ‘கௌரவ என்ஆர்ஐ’ பட்டம் ஒன்றையும் கொடுக்கலாமெனப் பரிந்துரை செய்கிறேன். நன்றி.

And as usual, I saw dark! :-(

-0-0-0-0-

எம்மான் நடிகர் கோமான் சிவகுமார் அவர்கள்,  இப்படிப்பேசியிருக்கிறார் – செப்டெம்பர் 2016 வாக்கில் (எந்த மேடையில் இப்படிப் பேசினார் என்பது என் நண்பருக்கும் தெரியவில்லை – ஆனால் அவர் நிச்சயமாக இப்படிப்பேசினார் என்கிறார் – எது எப்படியோ,  சிவகுமார் அவர்கள் இப்படிப் பேசவில்லை என்றால் அவரிடம் பகீரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அவருக்கு நான் கொடுத்திருக்கும் கௌரவ என்ஆர்ஐ பட்டத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்!):

….இதற்கெல்லாம் ஒரேயொரு வழிதான் இருக்கிறது. கங்கை காவிரி இணைப்பு தான் அது. கங்கையாற்றிலும், யமுனையாற்றிலும் இருந்து 60 சதவீதம் தண்ணீர் வீணாக போகிறது. அந்த தண்ணீரை தெற்கு நோக்கி திருப்பினால் கண்டிப்பாக சுபிட்சமான வாழ்க்கை கிடைக்கும். அதற்கு பலகோடி செலவாகும் என்று சொல்கிறார்கள்.

செவ்வாய் கிரகத்துக்கு பலகோடிகள் செலவழித்து ராக்கெட் அனுப்பியிருக்கிறார்கள். செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்புவது இப்போது நாட்டுக்கு முக்கியமா? மக்களுக்கு அடிப்படை தேவை தண்ணீர். அந்த தண்ணீருக்கு வசதி செய்துவிட்டு 10 வருடத்திற்கு பிறகு செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டை அனுப்பலாம்.

:-((((((((

 வீரவேலு வெற்றிவேலு வடிவேலு புகழ் ‘கந்தன் கருணை’ சிவகுமார்! தெனாவட்டுடைய சிவகுமாரனே போற்றி!!

-0-0-0-0-0-0-

#வோத்தாடாய் :-( எனத்தான் ஆரம்பித்திருப்பேன். ஆனால் — சிவகுமார் அவர்களின் கண்களில் உள்ள மினுமினுப்பின் ரசிகன் நான், அவருடைய உணர்ச்சிசொட்டும் உச்சாடனங்களுக்கும் வெள்ளைவேட்டிக்கும் தலைமுடிஷ்டைலுக்கும் அடிமையானவன் நான்; ஆகவே மேற்கண்ட மேலான சிவகுமாரிய கருத்துகளின் பின்னுள்ள அவருடைய மானுடக் கரிசனத்தை நான் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். பிரம்மப் பிரயத்தனப்படுகிறேன். ஆகவே, நடிகர் பெருமகனாரைத் திட்டாமல், அவருடைய கருத்துகளின் பின்னுள்ள சிலபல அபத்தங்களையும், கயமைகளையும் மட்டுமே சுட்டிக்காட்ட முயல்கிறேன்.

கங்கை-காவிரி இணைப்பு:

கங்கை-யமுனை நதிகளிலிருந்து 60% நீர் வீணாகப் போகிறது? :-) ஆ! :-( எப்படி இம்மாதிரி புள்ளிவிவரங்களைப் பிடிக்கிறீர்கள்?

உங்கள் பார்வையில் பலகோடி என்பது இன்றைய நிலவரத்தில் – சுமார் ரூ 12, 00, 000 கோடிகள் மட்டுமே! ஏதோ சிறிய விஷயம் போல இதனைப் பேசுகிறீர்களே!

‘அதை, தென் திசை நோக்கித் திருப்பலாம்.’ கந்தனின் கருணையே கருணை! ஔவையாரை விட்டு ஒரு வெண்பா பாடச்சொன்னால் போதுமல்லவா?

ஆனால் நம்முடைய செல்லங்களான சுற்றுச்சூழல்வாதிகள் சும்மாவா இருப்பார்கள்? ஏதோ குண்டியாட்டிப் பட்சிகள் சரணாலயம் பாதிக்கப்படும் என்று (கிடைத்தால் வக்கணையாக அதே பறவையின் மாமிசத்தைச் சாப்பிட்டுக்கொண்டு)  அவர்களும் – ஏழைபாழைகளின் நிலங்கள் பாதிக்கின்றன என இடதுசாரி மனிதவுரிமை முதலாளிகளும் (நன்றாகப் புளிச்சேப்பம் விட்டுக்கொண்டே) போராட ஆரம்பித்துவிடுவார்கள் அல்லவா? – இவர்களை எப்படி அந்த கங்கையாற்றிலேயே மூழ்கடிப்பது, சொல்லுங்கள்? வலுக்கட்டாயமாக அவர்களை தினம் ஒருமுறை ‘கந்தன் கருணை’ பார்க்க வலியுறுத்தினால் அவர்களே தூக்குப் போட்டுக்கொண்டு செத்துவிடுவார்களோ?  (ஆனால்… பழையன கழிதலும் புதியனவும் காலாகாலத்தில் கழிதலும் வாழ்க்கையின் நியதியல்லவா?)

வேறு வழியே இல்லை என்று சொல்கிறீர்களே!  வருடத்துக்கு அதிகபட்சம் வெறும் 120மிமீ மழையளவு மட்டுமே கிடைக்கும் ராஜஸ்தானில் சிலபகுதிகளில் எப்படி நீரைச் சேகரம் செய்கிறார்கள், அதுவும் ‘உங்களுக்கு வேண்டுமானால் கொடுக்கிறோம்’ என்று சொல்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீரா? (தமிழகத்தில் வருட சராசரி மழையளவு எவ்வளவு தெரியுமா? அது 945மிமீ!! – இதைக்கூடச் சரியாக மேலாண்மை செய்யத்தெரியாமல் சோம்பேறிகளாக இருக்கும், தொடர்ந்து திராவிடங்களுக்கு பலியாகிக்கொண்டிருக்கும் தன்மைக்கெதிராகப் போராடமாட்டீர்களா?)

தமிழகத்தில் விவசாய பம்ப்செட்டுகளுக்கு மின்சாரம் இலவசம் என்கிற காரணத்தாலும் அபரிமிதமாக, அமோகமாக வீணடிக்கப்படும் தண்ணீரின் அளவு பற்றித் தெரியுமா உங்களுக்கு. தேவையோ இல்லையோ வயற்காடு முழுவதும் நீரில் மூழ்கடிப்பதற்கு பலப்பல வருடங்களாகப் பழக்கப்பட்டுள்ள நம்முடைய விவசாயிகள் பற்றி நீங்கள் குரலெழுப்ப முடியுமா?

உங்களிடம் கார் இருக்கிறதென்றால் – அதனை உங்களுடைய பணியாட்களை வைத்து அனுதினமும் கழுவுகிறீர்களா? இது வியர்த்தமில்லையா?

எவ்வளவு ஏரிகளில் நீங்கள் தூர் வாரியிருக்கிறீர்கள்? பெரிதாகக் கவலைப் பட வந்துவிட்டீர்கள்! அதுவும் தொழில் நுட்பத்தைக் கரித்துக் கொட்டிக்கொண்டு. அதுவும் ஒரு எழவையும் புரிந்துகொள்ளாமல். தொழில் நுட்பமின்றேல் உங்கள் கேமராவோட்டம் எப்படி அய்யா நடக்கும்?

நடிகராகச் சமர்த்தாக உங்கள் தொழிலைச் செய்யுங்கள். நம் தமிழச் சமூகத்துக்கு அந்த அளவு உழைத்தாலே(!) அது போதுமானது!

வரிவடி வேலோய்!  அரிதரிது நடிகர் ஆதல் அரிது! நடிகர்  ஆயினும் கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிதற்றாமலிருத்தல் அரிதரிது!  போங்கடா மேதாவிங்களா! நீங்களும் உங்களுடைய சமூகக் கரிசனமும்….

மங்கள்யான்:

செவ்வாய்கிரகத்துக்கு அனுப்பியது வெறும் ராக்கெட் அல்ல சிவகுமார் அவர்களே!  நீங்கள் சிவகாசி சரவெடி பக்கத்திலிருந்து மெதுவாக ஊர்ந்தால் சுமார் 100000வது ஜென்மத்தில் நியூட்டன் தலைவிதிகளைப் பற்றி அறிந்துகொண்டு பின்னர் விசும்புச் சாகசங்கள் பக்கம் போகக்கூடுமோ?

இதையும் பலகோடிகள் என்கிறீர்கள்! ஆனால் இதற்குச் செலவான தொகை வெறும் ரூ 450 கோடிகள் மட்டுமே!

கபாலி எனும் திரைக்காவியம் சுமார் (நான் கேள்விப்பட்ட அளவில்) ரூ 75 கோடிக்கு தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் நம் தமிழகத்துக்கு ஏற்பட்ட சுபிட்சம் அளவற்றது என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ? இதனைப் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்தவர்களால் குறைந்த பட்சம் ரூ 75கோடியாவது வந்துசேர்ந்திருக்கவேண்டும் – ஏனெனில்டா கபாலிடா ஒருடா வெற்றிப்படம்டா.

2017 புதுவருட வாரயிறுதியில் டாஸ்மேக் விற்ற சாராயத்தின் அளவு – சுமார் ரூ 210 கோடி. தமிழகத்தில் ‘தண்ணீர்’ பாய்வதற்குக் கேட்கவா வேண்டும்? இதற்கெதிராக நடிகர் சங்கம் போராட்டம் நடத்தலாமே!

ஆற்றுப்படுகைசார் மணற் கொள்ளைகளுக்கு வருவோம். இதனால் – சராசரியாக தமிழக அரசுக்கு வரும் ஆண்டு வருமானம் – சுமார் 250கோடி. ஆனால் இதன் உண்மையான மதிப்பு சுமார் ரூ 18000 கோடி. இதில் 20-30% (கிட்டத்தட்ட ரூ 4500கோடி – மாதாமாதம் சுமார் ரூ 375கோடி) நேரடியாக திராவிடக் கட்சிகளுக்கும் அவற்றின் அல்லக்கைகளுக்கும் போகிறது. திமுகவும் அஇஅதிமுகவும் தமிழ்க்கொள்ளையின் இரண்டு கண்கள்.  இதற்கு எதிராகக் கொடி பிடிக்கலாமே!

மக்களுக்கு அடிப்படைத் தேவை தண்ணீர். ஆக, சிவகுமார் அவர்கள் மேடைகளில் தோன்றாமல், அடுத்த பத்துவருடத்துக்கு ஏரிகளில் இறங்கி தூர்வாரப்போகிறார்!

மக்களுக்கு அடிப்படைத் தேவை தண்ணீர். ஆகவே, அவருடைய நடிகப்பெருமானார் மகர் (பெயர் நினைவிலில்லை) அடுத்த பத்து வருடத்துக்கு நடிக்காமல் கிணறுகளாக வெட்டி, பூதங்களைக் கிளப்பப்போகிறார்.

மக்களுக்கு அடிப்படைத் தேவை தண்ணீர். ஆக கம்பன் கழகங்கள் (திராவிட இயக்கங்களின் உதவியுடன்) முடக்கப்பட்டு – அதில் இருப்பவர்கள் கட்டாயக் கால்வாய்ப் பணிகளுக்கு அனுப்பப் படப்போகின்றனர்.

மக்களுக்கு அடிப்படைத் தேவை தண்ணீர். ஆகவே, தமிழ்த் திரைவேலைக்காரர்கள் – அத்தனை ‘அதிஅற்புத சினிமாடா’ விஷயங்களையும் பத்து வருடங்களுக்காவது மூட்டைகட்டிவிட்டு, வறண்ட நதிப்படுகைகளில் குத்தாட்டம் போட்டே அவற்றில் நீரூற்றுகளைப் பெருக்கிடச் செய்து குளம்தொட்டு வளம்பெருக்குவர்.

பிறகென்ன, சுபிட்சமோதி சுபிட்சம்தான்! தமிழ்த் திரையுலகத்துக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

-0-0-0-0-0-0-

அய்யா சிவகுமார் அவர்களே, நீங்கள் திரைப்படத்தில் நடிக்கலாம், பிறமேடைகளில் நடிக்கலாம். அரசு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட சாதா குடிமகன்போலக்கூட மிக அழகாக நடிக்கலாம். நாங்கள் விசிலடிச்சான் குஞ்சப்ப திராவிடர்கள். ஜொள்ளொழுக உங்களை ரசிப்போம்.

ஆனால், தயவுசெய்து – கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், ஒரு விஞ்ஞானி போல நடிக்கவேண்டாமே!

ஏனெனில் நாங்கள் தமிழர்கள்; கந்தன் கருணையில் உங்களை முருகனாகப் பார்த்தவர்கள்; அப்படியே, அதேரீதியில் உங்களை நிஜம் விஞ்ஞானியாகவும், எஞ்சினீயராகவும் பார்த்துவிடப் போகிறோம் என எனக்கு மெய்யாலுமே பயமாக இருக்கிறது. :-(

பாவம் இஸ்ரோ. அதனையும் மன்னித்து விட்டுவிடவும். வேண்டுமானால் கேபி சுந்தராம்பாளாக கமுக்கமாக நடித்துக்கொண்டிருந்த ஔவையாரை விட்டு உங்களிடம் பிரத்தியேகமாக விண்ணப்பிக்கிறோம்…

நன்றி.

 

 

 

9 Responses to “ஞானத்தங்க நடிகர் சிவகுமார், கௌரவஎன்ஆர்ஐ, கங்கைகாவிரி இணைப்பு, இஸ்ரோ மங்கள்யான் – சில புரிதல்கள்”

  1. vijay Says:

    பாவம் சிவகுமார்,இந்த எறிகணைகளை தாங்கும் சக்தி அவருக்கில்லை.


    • அய்யா,

      தாங்கள், என்னைக் கிண்டல் செய்வதற்காக இதனை எழுதினீர்களா என்ன? அப்படியிருந்தால் – இந்தக் கிண்டல் தேவைதான்! :-)

      மாறாக, அவர் இதையெல்லாம் படிக்கப்போகிறாரா, படித்தாலும் அதில் சத்து இருந்தால் அதனை எடுத்துக்கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளப் போகிறாரா என்பதெல்லாம் கேள்விக்குறிகளே!

      வரவர இந்த அறிவிலித்தனமான உளறல்கள் – அதுவும் அவை, படிப்பறிவு பெற்ற பண்பாளர்களிடமிருந்துகூட வெளிவரும் சோகம் – எனக்கு மிகுந்த கோபத்தைக் கொடுக்கிறது… வேறென்ன செய்யலாம் சொல்லுங்கள்.

      நன்றி.

  2. A.SESHAGIRI Says:

    தேவையான சவுக்கடிதான்!.இதேபோல் கமல் ஹாசன் அவர்களுக்கும் கொடுக்கும்படி விடுகிறேன்.சமீப காலமாக அவர் உளறல்களின் உச்சத்தை தொட்டுவருகிறார்.பலகாலமாக வாய்மூடி மௌனியாக இருந்துவிட்டு இப்பொழுது பொங்குவது இதற்கென்று தெரியவில்லை!


    • அய்யா, சவுக்கடி கொசுக்கடி என்றெல்லாம் இல்லை. அனாவசியமாக பொங்குவதும் எனக்கு ஒத்துவராது.

      இம்மாதிரி மனிதர்கள், சமுகத்தில் மரியாதைக்குரியவர்களாக வளைய வருபவர்கள் – இப்படிப் படுமோசமாக உளறிக்கொட்டினால் வலிக்கிறது. ஆ என்று கத்துகிறேன், அவ்வளவுதான். :-(

      கமல்ஹாஸன் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார் எனத் தெரியாது; தெரிந்துகொள்ளும் ஆவலும் இல்லை, புரிந்துகொண்டு பொழிப்புரைக்கவும் சக்தியில்லை, மன்னிக்கவும்.

  3. ஆனந்தம் Says:

    முக நூலில் பரபரப்பான அதற்கு வெளியே வராத கர்நாடக இசை அறிஞ்சர் MDM விஷயம் உங்களுக்குத் தெரிந்தது எப்படி? இதில் ஏதோ அந்நிய ஏகாதிபத்திய பார்ப்பன பனியா சதி இருக்கிறதா என்று ஐயமாகவும் ஒரு வேளை முகநூலில் நீங்கள் ஃபேக் ஐடியில் உலவுகிறீர்களோ என்று பயங்கர பீதியாகவும் உள்ளது. தெளிவுபடுத்தினால் நிம்மதியாக என் வேலையைப் பார்ப்பேன்.


    • ஆனந்தம்,

      என் ஐடியே ஃபேக்தான். அதற்கு ஒரு ஃபேக் ஐடி ஒரு கேடா? ;-)

      நான் ஃபேஸ்புக் எழவில் நிச்சயமாக உலாவுவதில்லை; ஆனால் ஒரிரு நண்பர்கள் தேவை மெனெக்கெட்டு சில சுட்டிகளை அனுப்புவார்கள் – அவற்றையும் மண்டையில் அடித்துக்கொண்டு படிப்பேன், முடிந்தவரை… அதில் ஒன்று லலிதாராம் அவர்கள் மிகுந்த விசனத்துடன் எழுதிய குறிப்பொன்று – அவ்வளவுதான்.

      https://carnaticmusicreview.wordpress.com/2017/03/12/tns-mdm-clarification/

      எம்டிஎம் ஸில்வியா ;-) போன்றவர்களைக் கடந்த சிலபல மாமாங்கங்களாவது அவ்வப்போது படித்துக்கொண்டிருக்கிறேன். மண்டையில் அடித்துக்கொண்டுதான். ஆகவே!

      உங்கள் வேலை(!)யைத் தொடர்ந்து பார்க்கவும். ஒத்திசைவை விட அதிக பயபீதி அளிக்கும் சங்கதி நமக்கு வேறேதாவது இருக்கிறதா? ;-)

  4. Anonymous Says:

    Please read Maamallan’s update http://www.maamallan.com/2017/03/blog-post_19.html about MDM


    • Sir Anonymouse,

      Thanks, I read it. As always, this lionman (or is it manlion?) is meticulous. I have known some of the works of this MDM gent in angrezi too. In fact, about 20-25 years back or so, I even wrote a loooooooooong article about his plagiarism for a little journal called ‘Puthiya Nambikkai’ in my staccato tamil – pub’d by one of my friends, who sadly has passed away. Dunno whether he even printed it, as it was very rabble rousing…

      …Such is the condition of our frail, thieving and boneless Intellectuals. So, after so many years of frustration of dealing with multiple standards of these folks, now I have kinda learnt (=reconciled, with a sigh) to take what I can take and toss what I should – from them. Like the mythical swan. Even MDM (via Sylvia and otherwise) has written some good stuff – or may be they were also lifted from somewhere. Dunno. But on face-value they have been good.

      The thing is that – there is ABSOLUTELY NO exception to this rule in the Tamil world. We don’t have permanent, stellar standards.

      So, it helps that I have a good sense of humour and I am proud(!) of it. It is a sad state of affairs, but otherwise one feels very bitter.

      But sir, when are you going to become a normal person instead of being a mousy anonymouse? ;-)

      __r.

  5. venkatesh Says:

    கூத்தாடி பயல்களெல்லாம் ‘கொள்கை’விளக்கம் பேசினால்,குடி கெடும் என்பதற்கு இந்த கூமுட்டை கூவலே போதும்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s