நான் மடையன்தான்! நன்றி!! (ஒரு தொபயியல் பிரகடனம்)

April 25, 2016

பேராசிரியர் தொ. பரமசிவம் அவர்களைப் பற்றிய நேற்றைய காட்டுரை தொடர்பாக – ஒரு அனாமதேயம், கோபத்துடனும் வருத்தத்துடனும் இப்படியொரு பின்னூட்டத்தை இட்டிருக்கிறார்;

he has evidence, how can u assume he has no evidence

yaar madayan? neeya? thope aa

… …இதற்குக் கொஞ்சம் விரிவாகவே பதில் எழுதவேண்டும் என…

அன்புள்ள அய்யா, தயவுசெய்து அனாவசியமாகக் கோபித்துக்கொள்ளாதீர்கள். பொறுமை பொன்னானது. ஆவேசப்படாமல், அனைத்து இந்திரியங்களையும் கொஞ்சமேனும் அடக்கிக்கொண்டு மெதுவாகப் படிக்கவும்.

0. எனக்கும் தொப அவர்களின் மீது பிரமிப்பு உண்டு. ஆனால் – நான் தொப அவர்களின் உழைப்பை மதிக்கும் அளவுக்கு, அவருடைய பல்துறை கேள்வி ஞானத்தை மதிக்கும் அளவுக்கு – அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சர்வ நிச்சயமாக மதிக்கவில்லை. ஆனால், அவை சாதுர்யமாகப் புனையப்பட்ட இலக்கியம் என்றால் – பின்னவற்றைப் பற்றிய  என் புரிதலை விரித்துக்கொள்ளவே ஆசை. தொப ஒரு புனைவிலக்கியக்காரர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. அதேபோல அவர் நெடுநாள்நோக்கில் பொருட்படுத்தத்தக்க ஒரு வரலாற்றியலாளர் / மானுடச்சமூகவியலாளர் அல்லர் என்பதிலும்.

ஆனால் அவர், ஒரு தேர்ந்த, மதிக்கத்தக்க முன்னோடி தொபவியல்காரர் (தொபவியல்: இது ஒரு புத்தம்புது சமூகஅறிவியற்புலம்; ஆனால் இதற்குமே சங்ககாலத்தில் எழுதப்படாத வரலாறு இருந்திருக்கிறதாமே, ஐயகோ!) எனும் கருத்தாக்கத்தை மட்டுமே மாற்றாக முன்வைக்கிறேன். நன்றி.

1. நான் மடையன் என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் அளவுக்கு நான் ஒரு மடையன்.  சர்வ நிச்சயமாக இது உண்மையே. சரியா?

2. ஆனால் தொப அவர்களை ‘மடையன்’ என்று கீழ்த்தரமாகக் குறிப்பிட்டு நான் எங்குமே எழுதவில்லை. பொறுக்கமுடியாமல் பொதுவாகக் கிண்டல் செய்தேன் என்றாலும், அவருடைய அடிமடியில் கைவைக்கவில்லை, அடிக்கவில்லை. ஆகவே நீங்கள் ‘யார் மடையன்’ என ஆவேசத்துடன் கேள்விகேட்கவேண்டிய அவசியமேயில்லை.

3. எப்படியும் தொப அவர்களே – அவருடைய மடையர்களை – தமிழ் வீரத்தியாகிகளாகவும் மேலும் மடையர்களின் வாழ்வு நம் குழந்தைகளுக்கு ‘ஒரு ஊக்கத்தையும் தியாகத்தையும் ஊட்டும்‘ எனவும் குறிப்பிட்டிருக்கிறார் அல்லவா?

4. ஆகவேயும் நான் ஒரு  ‘தமிழ் மடைய வீரத்தியாகி’ என்பதில் எனக்கு ஐயமேயில்லை! நன்றி. எனக்கு ஆரம்பித்துள்ள புல்லரிப்பும் எழும்பும் தினவும், சனியன் அடங்கவேமாட்டேனென்கிறது. *ப்ச*

5. ‘மடையன்’ என்றால் மடைதிறப்பவன் எனும் பொருளே வரக்கூடாது என்று நான் சொல்லவரவில்லை; அதுவும் பாவம், சாத்தியக்கூறுகள் பலவற்றில் ஒன்றாக இருக்கலாம். இப்போதைக்கு எனக்குத் தோன்றும் மற்ற சாத்தியக் கூறுகள்:

அ: மடத்து + ஐயன் – மடத்தின் தலைமை அதிகாரிகளுள் ஒருவன்
ஆ: மட + ஐயன் – முட்டாளானாலும் மதிக்கப்படவேண்டியவன்
இ: ம + டையன் – மாம்பழ நிறத்தில் தலைமுடிக்குச் சாயமேற்றியிருப்பவன்
ஈ: ம் + அடை + யன் – அடை (+அவியல்)களை ம்ம்ம் என்று சொல்லி சப்புக்கொட்டிக்கொண்டு விரும்பிச் சாப்பிடுபவன்

-0-0-0-0-0-0-0-0-

சரி. இப்போது ‘எவிடென்ஸ்‘ பற்றிப் பார்க்கலாமா? காத்திரமான ஆதாரங்களை வைத்துக்கொண்டு மட்டுமே தொப அவர்கள், அதிஅற்புத ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதும் பாங்கைப் பேசலாமா?

அனாமதேய அய்யா!

தொப அவர்களே மடையர்களைப் பற்றி இப்படித்தானே எழுதியிருக்கிறார்:

வரலாற்றின் பக்கங்களில் இந்த தியாகிகளைப் பற்றிய குறிப்புகள், கல்வெட்டுக்கள், பதிவுகள் எதுவும் இல்லை.

இந்த மடையர்களைப் பற்றி தொப அவர்களிடம் ஒரு சான்றுமில்லை என்றுதானே அவர் திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறார்? அங்கலாய்த்திருக்கிறார்?? காற்றுப்போக்கில் கேட்ட கதைகளையும், கற்பனை வளத்தையும் கலந்தடித்துக் கதம்பமாகப் பரிமாறியதுதானே அவர் செய்தது? சுவாரசியப் படுத்தலையும் கதை கட்டலையும் கறாரான ஆராய்ச்சியின் கூறுகள் எனக் கூறத்தானே விழைகிறார்?

ஆனால், நீங்கள் எப்படி அவரிடம் சான்றுகள் உள்ளதாகச் சொல்கிறீர்கள்? எனக்குத் தோன்றுகிறது:  நீங்கள் மனோவசியம் தெரிந்தவராகவும். தொலை தூரத்திலிருந்து கண்ணுக்குப் புலப்படாத விஷயங்களையும் அவதானிக்கும் அமானுஷ்யத் திறன் வாய்ந்தவராகத்தான் இருக்கவேண்டும்.
வரலாறு எழுதுபவர்கள் இதைக் கருத்தில் கொள்ளலாம் அல்லவா?
ஆக, தொபவியல் நோக்கில் வரலாறு எழுதுபவர்கள் என்றால், அவர்கள் – கல்வெட்டுகளிலோ, சமகாலக் குறிப்புகளிலோ, இலக்கியங்களிலோ, அகழ்வாராய்ச்சிப் பதிவுகளிலோ உள்ள அறிவியல் பூர்வமான சான்றுகள் எதையும் –  அவை சரியாகவே இருந்தாலும் பொருட்படுத்தாமல், அப்படி இல்லாவிட்டாலும் கவலைப்படாமல் – கண்டமேனிக்கும் அட்ச்சுவுடவேண்டும், சரியா?

திருப்பித் திருப்பி இம்மாதிரி தொபவியல் புருடாக்களை விட்டுக்கொண்டேயிருந்தால், ஒருகாலத்தில் அவை கண்டமேனிக்கும் மேற்கோள் மட்டுமே காட்டப்பட்டு, அடிப்படை உண்மைகளாக உணரப்பட்டு ஆதாரபூர்வமான சரித்திரத் துணுக்குகளாகப் பவனிவரமுடியும் அல்லவா?

ஹ்ம்ம்ம்… பிரச்சினை என்னவென்றால் என் மரியாதைக்குரிய தொப அவர்கள் —  மார்க்ஸ் ஈயத்தையும், பெரியார் ஈயத்தையும் கலந்தடித்து உருக்கி, ஒருமாதிரி பின்நவீனத்துவ ஷ்டைலில் சுடச்சுட நம் காதுகளில் விட்டுக் கொண்டேயிருக்கிறார். தாங்கவே முடியவில்லை.

ஆகவே, பரிதாபத்துக்குரிய மடையனாகிய நான் இறைஞ்சுவது என்னவென்றால்:

அய்யா அனாமதேயம், என் மண்டைக்குள் இருப்பது பித்தளை. அது, மேற்படி உருக்கி ஊற்றப்படும் ஈய வகையறாக்களைப் பார்த்து இளிக்க முகாந்திரம் கொடுப்பது, தொப போன்றவர்களுக்கு அவசியமா?

மாளா வருத்தத்துடனும், பித்தளைத்தனமான* இளிப்புடனும்,

வெ. ராமசாமி.
* இந்த பித்தளைத்தனமானம் என்பது, திராவிட இனமானத்தின் ஒன்றுவிட்ட அக்காள் மகன், பயப்படாதீர்கள்! நன்றி.

-0-0-0-0-0-0-

6 Responses to “நான் மடையன்தான்! நன்றி!! (ஒரு தொபயியல் பிரகடனம்)”

  1. க்ருஷ்ணகுமார் Says:

    ஆயிரம் பொன் இல்லையென்றாலும் கொஞ்சம் கூட்டியோ குறைத்தோ கொடுக்க வேண்டியது தானே.

    சொக்கா!!!!!!!!! பாட்டெழுதிப்பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்.

    இதில் நீங்கள் எந்த வகை என்று ………… என்று …………..

    போதாத்துக்கு தீராவிடம், ஈனமானம், பெரியார் ஈயம் பித்தாள…………. என்ன தெகிரியம்………….

    ம்……………. மேஜராய ஸ்வாஹா………… பூவண்ணனாய ஹும்பட்…………..

  2. Venkatesan Says:

    எனக்கு எல்லா வரலாற்று, சமூகவியல் ஆய்வுகள் மீதும் சிறிய சந்தேகப் பார்வை இருந்துகொண்டே இருக்கிறது. சொல்லப்போனால் அறிவியல் ஆய்வுகள் மீது கூட.

    கிராவிடெஷனல் கான்ஸ்டன்ட் இன்று, இங்கு ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்கிறது. நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இதே அளவாக இருந்தது என்பதற்கு என்ன ஆதாரம்? இங்கே இருக்கும் அதே அளவில் தான் பின்வீல் காலக்ஸியில் இருக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம்? ஒளியின் வேகம் பில்லியன் கணக்கான ஆண்டுகளாக மாறாமல் தான் இருக்கிறதா?

    பரிணாம வளர்ச்சி கோட்பாடு எல்லாம் கேட்க நன்றாக இருக்கிறது. உண்மையாக இருக்க வெகு அதிக சாத்தியம் உண்டு. ஆனால், சந்தேகம் எழத்தான் செய்கிறது. எல்லா இனமும் வேறொரு இனத்தில் இருந்து வந்தது என்ற blanket statement இருக்கட்டும். முதலில் A, B என இரண்டு இனங்களை மட்டும் எடுத்துக் கொண்டு A வில் இருந்து B வந்தது என நிரூபிக்க வேண்டும் அல்லவா. Homo sapiens எந்த இனத்தில் இருந்து வந்தது? Homo erectus தொடங்கி பல பதில்கள் சொல்கிறார்கள். கில்லி அடிச்சு ஒரு நிலையாக நிற்பதில்லை. Orycteropus afer என்ற aardvark எந்த இனத்தில் இருந்து வந்தது? எதற்கும் commit செய்வதில்லை. செய்தால்தானே அதை சரி பார்க்க முடியும். இவர்களின் கோட்பாட்டுப்படி A வில் இருந்து B வந்தது என்பதை நிரூபிக்க நிறைய வேலை செய்ய வேண்டும். முதலில் A, B இரண்டின் genome தேவை. அடுத்து இரண்டும் எங்கெங்கு மாறுபடுகின்றன என்பது தெரிய வேண்டும். இந்த mutations எப்போது, எந்த வரிசையில் நடந்தன எனச் சொல்ல வேண்டும். அடுத்து இந்த மாறுபாடுகள் physical உருவில் எவ்வாறு வெளிப்படுகின்றன என தெரிய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக speciation எவ்வாறு நடந்தது என சான்றோடு விளக்க வேண்டும். எதையும் செய்யாமல் A வில் இருந்து B வந்தது என எப்படி ஏற்பது. ஒன்று நடந்திருக்க சாத்தியம் உள்ளதாலேயே அவ்வாறுதான் நடந்தது என ஆகிவிடுமா?

    இந்த கூத்துக்களை எல்லாம் பார்க்கும் போது கணிதம் மட்டுமே ஏற்கும்படி உள்ளது. சத்யம் என்ற நெருப்பிற்கு முன் செய்யும் தவம் அது. கடைசி சொட்டு சந்தேகமும் இன்றி நிரூபணம் ஆகும்வரை அதை உண்மை என்று உரைப்பது இல்லை. Riemann hypothesis சரி என்றுதான் ஆகப் பெரும்பான்மையோர் நம்புகிறார்கள். இதற்கு ஆதரவாக பல ஆதாரங்கள் உள்ளன. இருந்தாலும், இதை நிரூபிக்கப் பட்ட உண்மை என யாரும் சொல்வதில்லை. இப்போதும் இது உண்மை என வைத்துக்கொண்டு ஏதாவது புதிதாக ஒன்றை நிரூபித்தால், மறக்காமல் “Assuming that Reimann hypothesis is true …” என முதலில் சொல்லாமல் பேச மாட்டார்கள்.

    அறிவியல், சமூக அறிவியல், வரலாற்று துறையில் அரைகுறை ஆதாரங்கள் அடிப்பைடயில் உண்மையை நிலை நாட்டி விட்டதாக் சிறிதும் அடக்கம் இன்றி அவுத்துபோட்டு ஆடுகிறார்கள். Disgusting.

  3. tyaguu Says:

    என்னமோ போங்க சார், உபரி நீரை அடிவழியாக வெளியேற்றும் கலை திராவிடத்தமிழனின் கண்டுபிடிப்பு.

    புள்காங்கிதம் அடைந்தேன்.

  4. ganeshmurthi Says:

    ஐயோஓஓஓ, சிரிச்சு சிரிச்சு வயிரு வலிக்குது…………:-)

  5. Venkatesan Says:

    ஹா! சைடுல நீங்க போட்டிருக்குற கணிதம் பற்றிய பழம் பாடலை இப்பத்தான் பார்த்தேன். சூப்பர். மொழிபெயர்ப்பு தேவைப்படாமயே புரிஞ்சுது. ‘கணிதம்’ ன்ற வார்த்தைக்கு அடுத்து வர வார்த்தை மட்டும் புரியல – “மூர்தின்”?

    ஆனா, கொஞ்சம் உன்னிப்பா கவனிச்சா உதைக்குது. பாடல்ல “வேதாங்கஷாஸ்த்ரானாம்” அப்படின்னு வருது. எனக்கு புரிஞ்சது, “ஆறு வேதாங்க சாஸ்திரங்களுக்குள் கணிதம் சிறந்தது” அப்படின்னு. ஆனா, மொழிபெயர்ப்புல “of all knowledge” அப்படின்னும் “ஞானம்” அப்படின்னும் பொதுப்படுத்தி இருக்கு. அதுவும் தவிர, இந்த ஆறு சாஸ்திரங்கள்ள ஒன்னு ஜோதிஷம். அதைத்தான் ‘கணிதம்’ னு பாடல் சொல்லுதுன்னு நெனைக்கிறேன். அதுக்கு ஏத்தா மாதிரி இந்த பாடல் இருக்குற புத்தகத்தின் பேரும் “வேதாங்க ஜோதிஷா” அப்படின்னு இருக்கு. அதனால, இந்த பாடல் நாம நெனைக்கிற கணிதம் பத்தி இல்லன்னு நெனைக்கிறேன்.

    எனக்கு புடிச்ச கணிதம் மகா மகா மகானுபாவன் யூக்ளிட் தேவனின் “Elements” இல் இருந்து ஆரம்பிக்குது. “Mathematics is the queen of the sciences” – Carl Friedrich Gauss. காஸ் சொன்னப்புறம் மறுப்பேது. QED.

    :-)


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s