அலக்கிய ஜல்லியடித்தலும், அவைய்லபிலிட்டி பயாஸும் – குறிப்புகள்

August 3, 2019

மனித விசித்திரங்களில், அதுவும், நம்மைப் போன்ற எல்லாம்வல்ல அறிஞச்சான்றோர்கள் (“அறிந்தது அறியாதது, புரிந்தது புரியாதது, தெரிந்தது தெரியாதது, பிறந்தது, பிறவாதது — இவை அனைத்தையும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும்!“) ரூம்பு போட்டுச் சிந்திக்கும் விதங்களில்… …

… … ‘அவைய்லபிலிடி பயாஸ்’ – ‘Availability bias‘ எழவு என்பது ஒன்று. அதை ஒருமாதிரி…

கைக்குக் கிடைத்த விட்டேற்றித் ‘தரவு’களின் மேல் சுகமாகச் சாய்ந்து, அவற்றை அரைவேக்காட்டுப் புரித(!)லுடன் நீட்டி, மேலான பகீர் கருத்துகளை டமாலென்று சுளுவாகச் சமைத்து ஒப்பேற்றி, வாய்க்கு வந்தபடி ஜல்லியடிக்கும் மனப்பான்மை

…என ரத்தினச் சுருக்கமாக முழிபெயர்த்துக்கொள்ளலாம். … ஸ்ஸ்ஸ்… அப்பாடா!

அன்றே ‘கிரேக்கத்தின் அறிஞர் அண்ணா’ அரிஸ்டாட்டில்லார் ஆணித்தரமாகச் சொன்ன ‘ஆண்களைவிடப் பெண்களுக்குப் பற்களின் எண்ணிக்கை குறைவு’ எனும் ஒரு புல்லரிப்பை, இந்தச் ‘சுளுவான கருத்துருவாக்கத்துக்கு’ எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

Males have more teeth than females in the case of men, sheep, goats, and swine; in the case of other animals observations have not yet been made.”

— Aristotle, On the Parts of Animals: Book III.

ஆனானப்பட்ட அந்த ஆசாமியே அப்படியென்றால், நம் அலக்கிய ஜாம்பவான்களிடமோ, இந்த வியாதியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். கைவசப்பட்டதாக, அபரிமிதமாகப் புரிந்துகொண்டுவிட்டதாக அவர்கள் நினைத்துக்கொண்டிருப்பவை மேல், அவர்கள் மானேதேனே கலந்து, மேலான கருத்துவெள்ள சமூகவிமர்சனப் போராளித்தன அறிவுஜீவியமாக அட்ச்சிவுடுவதெல்லாம் தான், தற்கால முற்செவ்வியல் பின்நவீனத்துவ இலக்கியம்.

அதாவது

அதிகாலையில் ஐந்துமணிக்கு நடைபயிலச் செல்லும்போது ஒரு டீக்கடை திறந்திருந்தால்…

“நம் தமிழகத்து மக்கள் சுறுசுறுப்பு மிக்கவர்கள்!

அதிகாலையில் எழுந்து கண்ணதாசன் கர்ணபரம்பரைத் தத்துவப்பாடல்களைப் போட்டு, ‘உள்ளத்தில் நல்லவுள்ளம் உறங்காதென்பதை’ அறிந்து, வேலை செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள்; அவர்கள் வல்லவர்கள். வருவதை எதிர்கொள்பவர்கள்.

ஆனால் பாருங்கள், பிஹார் சென்றிருந்தபோது காலை ஏழு மணிக்குக் கூட அவர்கள் கடைகளைத் திறக்கவில்லை. சோம்பேறிகள். அதனால் தான் அவர்களுக்கு அங்கு வேலைவாய்ப்பு இல்லாமல் தமிழகத்துக்கு வந்து நம் வேலைகளையும் எடுத்துக்கொண்டுவிடுகிறார்கள். ஏடிஎம்மில் திருடுகிறார்கள்!!”

பின், காலையில் பன் வாங்கிக்கொண்டுவர (இனிமேல், ங்கொம்மாள, தோசைமாவு பக்கமே போகப்போவதில்லை!) பேக்கரிக்குச் செல்லும்போது, பன் ப்ரெட் எல்லாம் ஒரு ரூபாய் விலை ஏறியிருந்தால்…

“ஐயகோ, விஷம்போல ஏறுகிறதே விலைவாசீ!

பன்னாட்டு நிறுவங்களின் மோசடி! மோசடி மோடியோடு சேர்ந்து மக்களை ஹிந்துத்துவா வெறியில் ஆழ்த்துகிறார்கள்!

ப்ரெட் விலையேற்றமும் ப்ரெக்ஸிட் குழப்பங்களால் விளைந்ததே! இதுதான் ஹிந்துத்துவர்களின் பொருளாதார அறிவின் லட்சணம்!”

…என்று ஒரு மதச்சார்பின்மை, பன்னுரிமை, ஐரோப்பா ப்ரெக்ஸிட்டுரிமை என ஒரு ஸூப்பர் மெகாமுடிச்சுப் போட்டு, இன்னொரு அக்கப்போரை ஆரம்பித்து வைக்கலாம்.

சரி. மதியம் இட்லி சாப்பிட ஹோட்டலுக்குச் சென்றால் அது ஏகத்துக்கும் உப்பி, அந்தக் காலத் தமிழ்த் திரைப்படக் கதாநாயகிகள் போல புஸ்புஸ்ஸென்று இருக்கிறது. சாம்பாரும் சரியில்லை.

ஆகவே, உடனே ஒரு போடு போட்றா!

“அனைத்து உணவகங்களிலும் இட்லி மாவில் யூரியா ஸ்டார்ச் பேகான்ஸ்ப்ரே பாக்டம்பாஸ் டைஅம்மோனியம் பாஸ்பேட் பெனட்ரில் பாண்ட்ஸ்பௌடர் கலந்து மாவை ஏகத்துக்கும் உப்ப வைக்கிறார்கள். நானே, என் இளம்வயதில் இம்மாதிரி கலந்து கொடுத்திருக்கிறேன். அம்பானிகள் நடத்தும் ஃபேக் தோசைமாவு ஃபேக்டரியில் எட்டு மணி நேரம் செலவழித்திருக்கிறேன்.

அது ஒருபுறமிருக்க, அதே உணவகத்தில் நம்மைத் திரும்பித்திரும்பிப் போய்ச் சாப்பிடவைக்க, மேலதிகமாக ஹெராயின் போன்ற போதைமருந்துகளைக் கலக்கிறார்கள்! சாம்பாரில் பருப்பேயில்லை – அனைத்து பருப்புவகைகளையும் மோடி அரசு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தால் இப்படித்தானே நடக்கும்? மத்திய அமைச்சர் ஒருவர் (இவர் என் நெடுநாள் வாசகர்) என்னிடம் இதனைச் சங்கட வேதனையுடன் குறிப்பிட்டார்”

மாலை அருகிலிருக்கும் A2B சென்று ஆகச் சிறந்த டிகாக் ஷன் காப்பி. சுடச்சுட. அலக்கிய எழுத்தாளர் சுற்றிப் பார்க்கிறார். போர்ட் விளம்பரங்களில், கண்ணாடி அலமாரிகளில், பக்கத்து மேஜைகளில்… எங்குபார்த்தாலும் எதை எடுத்தாலும் சர்க்கரையோ வெண்ணையோ நெய்யோ கலந்திருக்கிறது. அவருக்கு நாக்கில் நீர் ஊறுகிறது.

இருந்தாலும், பிறருக்கு ஆரோக்கிய போதனை கொடுக்கவேண்டுமே!

ஆக சூடாக ஜிலேபி உண்டுகொண்டே…

“…பிரச்சினை என்னவென்றால், இம்மாதிரிச் பெருஞ்சங்கிலிவணிகங்கள், உள்ளூர் சிறு வியாபாரங்களைப் படுக்கவைக்கின்றன. இதுவா அறக்கிழவன் காந்தி கண்ட சுதேசியம்?

அது மட்டுமல்ல. இவற்றில் கிடைப்பதை உண்டால் C2D க்யாரண்டி.

கொலஸ்ட்ராலில் இருந்து டயாபட்டீஸ் வரை அனைத்தும் இலவச இணைப்பாகத்தான் இங்கே கிடைக்கின்றன. மைசூர்பாக்கா நம் பாரம்பரிய உணவு??

ஆகவே சொல்கிறேன், ஏ-2-பி என்றால் ஸி-2-டி!”

இரவு உணவு, பக்கத்துத் தொணதொணபவன். வெண்டைக்காய்க் கறி. காரக்குழம்பு. வெண்சோறு. தயிர்.

“வெண்டைக்காய் ஆர்கானிக் அல்ல, அது ஜெனடிக்கல்லி மாடிஃபைட் என்று பார்த்தமாத்திரத்தில் தெரிந்துவிட்டது,!

எவ்வளவு வெண்டைய்க்காய்முரசுகளை நான் பார்த்திருக்கிறேன், எவ்வளவு இயற்கை விவசாய நம்மாழ்வாரிய வெண்டைக்காய்கள் என்னெழுத்துகளை அவதானித்திருக்கும்! ஹ்!

மரபணு மாற்றும் மொன்ஸாண்டோ ஒழிக. வெண்சோறு போட்டே நமக்கு டயாபட்டீஸ் வரவழைத்து விட்டார்கள், இந்தப் பன்னாட்டு அயோக்கிய பெரும் முதலாளிய நிறுவனங்கள். நம் பாரம்பரிய சிறுகுறு மைக்ரோ நேனோ தானியங்கள் எங்கே? இந்த அழகில், காரவேலர்கள்தான் காரக்குழம்பைக் கண்டுபிடித்தனர் என, தமிழனின் காரம்பரியத்தை அவனிடமிருந்து பிடுங்குகிறார்கள் ஹிந்துத்துவர்கள்!

வீரக் காரவேலர்கள் திமிங்கலங்களைப் பிடித்துக் காரத்தைத் தடவியுண்ட பராக்கிரமிக்கவர்கள் என மோனியர்வில்லியம்ஸ் அகராதி சொல்கிறது என்பதே நம்மில் எவ்ளோ பேருக்குத் தெரியும்?”

:-( …இதுதான் நம் அலப்பரை அலக்கியக்காரர்களின் அதிகபட்ச பங்களிப்பு. கருத்துலகம். இயக்கம். மண்ணாங்கட்டி. தெருப்புழுதி.

எது எப்படியோ — நம் வாழ்க்கை இப்படி இருக்கையிலே… ஆனந்தக் கேளிக்கையுடன் தொடர்கையிலே… … ‘தமிழ் அலக்கியம்’ என்றால் முடிந்தபோதெல்லாம், அகப்பட்ட சந்துகளில் புகுந்து சிந்துபாடி ஆனந்தக்கும்மியடித்து அமோகமாக அட்ச்சிவுடுவது எனவும் அறியலாம்.

இதற்கு, நம் சராசரி சக அலக்கிய வாசகனின் பிரமிக்க வைக்கும் அதிசராசரித்தனமும் ஏதுவாக இருக்கிறது என்பதை உணர்ந்து, இறும்பூதும் அடையலாம். :-(

-0-0-0-0-0-

ஆம்.

ஆயிரம்முறை ஆடித்தள்ளுபடியில் எல்லாரையும் வெறுப்பேற்றி உசுப்பேற்றிவிட்டதால் தான் அவர் பெயர் அன்னாய் ஹஸாரே. அன்னாய் = Annoy; ஹஸார் = 1000 (ஹிந்தியில்). Annoy Hazare. நன்றி. இதையெல்லாம் நான் விலாவாரியாக விசையுடன் விவரிக்கவேண்டிருப்பது காலத்தின் ஆகச்சிறந்த கொடுமையன்றிப் பிறிதொன்றும் இல்லை.

…வெளியே செல்லவேண்டியிருந்ததால், எனக்குப் பிடித்தமான நீல ஜீன்ஸ் போட்டுக்கொண்டு கிளம்பலாமென்றால், அது பின்பக்கத்தில் கிழிந்துவிட்டிருக்கிறது; இத்தனைக்கும் வாங்கி ரெண்டுமாசமாகவில்லை. துணிந்து துணியிலும் இறங்கிவிட்டார்களே பாவிகள்! இந்த ஜீன்ஸ்களுக்கும், கார்ப்பரேட்டுகள் மரபணுமாற்றம் செய்திருக்கவேண்டும் என்பதன்றிப் பிறிதொரு விளக்கமில்லை இதற்கு!

…சரிதான்! எதற்கெடுத்தாலும் நான் ஏன் இப்படிச் சூடாகின்றேன் எனக் கேட்கிறீர்களா? என்ன இது, இத்தினி நாளா ஒத்திசைவ பட்ச்சிக்கினு கீறீங்கோ, இவ்ளோதானா புரிதல்?

அதற்கும் ‘க்ளோபல் வார்மிங்’ எழவுதானய்யா காரணம்!

அறிவியல் கார்ப்பரேட் தொழில்நுட்பப் பாவிகள், எதைத்தான் இயற்கையாக விட்டுவைத்திருக்கிறார்கள்! எங்கள் வீட்டில் சமைக்க கேஸ் ஸ்டவ் மண்ணெண்ணெய் எல்லாம் உபயோகப்படுத்துவதில்லை. எல்லாம் ‘க்ளோபல் வார்மிங்’கிடமிருந்து சூட்டைக் கடன்வாங்கியே காலம் தள்ளிக்கொண்டிருக்கிறோம்.

நன்றி. பிற பின். அவ ஸ்தை. :-(

:-(

 

3 Responses to “அலக்கிய ஜல்லியடித்தலும், அவைய்லபிலிட்டி பயாஸும் – குறிப்புகள்”

  1. Ramesh Narayanan Says:

    உம்ம கிட்ட எனக்குப் புடிக்காதது இதுதான், எதிர்த் தரப்புக்கு வழியே இல்லாதபடி
    ‘அறை’யறது, i.e. All exits shut or preempted


  2. […] அவைய்லபிலிட்டி பயாஸால் உத்வேகம் கொடுக்கப்பட்ட ‘சுளுவான […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s