“நீ என்ன பெரீய்ய வரலாற்றுப் புடுங்கியா? இல்லை தமிழ்பண்டிட்டா? ஜோதிஷம் தெரிஞ்சவனாடே?”
November 12, 2021
ஐயா,
உங்கள் பெயரைத் தெரிவிக்காமல் இந்த மடலை வரைவதற்கு மன்னிக்கவும்.
இன்னும் என்னென்னமோ சொன்னீர்கள், அதெல்லாம் பரவாயில்லை. இத்தனைக்கும் நான் உங்களைத் தொடர்புகொள்ளவில்லை. நீங்களே இந்த ட்வீட் எழவுகளைப் படித்துத் தொடர்பேயில்லாமல் பொங்கினீர்கள், ‘நீ எப்படி இதைப் பற்றிப் பேசலாம், முகாந்திரமில்லாமல் விமர்சனம் வைக்கலாம், ஜெயமோகன் போல தரவில்லாமல் எழுதவில்லையே அவர், கம்ப்யூட்டர் ஜோதிஷம் செய்திருக்கிறாரே, பிரபலமானவர்களை ஏன் விமர்சனம் செய்கிறாய், பொறாமையா++’ என்கிறீர்கள், பாவம்.
உங்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். மறுபடியும் நான் என்ன எழுதினேன் எனப் பார்த்தேன். மொத்தம் நான்கைந்து ட்வீட்கள்/பதில்கள். கீழே:
…இதில் எந்தவொரு ட்வீட்டிலும் மரியாதையுடன் தான் நான் விஷயங்களை அணுகியிருக்கிறேன், கொஞ்சம் வருத்தம் தொக்கி இருக்கிறது என நினைக்கிறேன் – அவ்வளவுதான்.
இதற்கு அவ்வளவு ஆதங்கம். கோபம். தேவையா?
(என் தொலைபேசி எண்ணை முடக்கவேண்டிய அல்லது மாற்றவேண்டிய தருணமும் வந்துவிட்டதோ? இத்தனைக்கும் ஒத்திசைவுதளம் மூலமாக அறிமுகமாகி என் தொலைபேசி எண்ணும் வைத்திருப்பவர்கள் அதிகபட்சம் 20 பேர் மட்டுமேதான். ஒருவருக்கு 0.33 என வெய்ட்டெஜ் கொடுத்தாலும் ஏழரை எட்டாது)
ஆனால்.
உங்களுடைய முக்கியமான கேள்விகளுக்குச் சுருக்கமான பதில்:
இல்லை.
நான், சிறிய புடிங்கியும் அல்லன்.
மாறாக.
1. எனக்கு இருக்கும் ஆர்வக்கோளாறுகள் பலவற்றில் – இந்த வரலாறு-உளறாறும் ஒன்று, அதிலும் சிலவிஷயங்கள் குறித்து மட்டுமே, அவ்வளவுதான். ஆகவே உங்கள் கோபத்தை லூஸ்லவுடவும். எனக்குத் தமிழில் பாண்டித்தியம் இல்லை. ஒப்புக் கொள்கிறேன். + எனக்கு ஜோதிஷத்தின் பேரில் (அதாவது எதிர்கால நிகழ்வுகளை மிகச்சரியாகக் கணிப்பது) ஆரோக்கியமான அவநம்பிக்கை. இத்தனைக்கும் ஒரிரு விஷயங்கள் ஓரளவுக்கு ஆச்சரியப்படும்படிக்கு இருந்திருக்கின்றன – அவற்றைக் குறித்து முன்னொருமுறை எழுதியிருக்கிறேன்.
“கம்ப்யூட்டர் ஜோதிஷம்” – ஸிர்ப்புஸிர்ப்பா வர்து. ஆனாக்க, லூஸ்லவுட்றேன்.
தமிழ்போன்ற ஒரு மொழியில் நான் எழுதுதல்: இருந்தாலும் – என்னுடைய பலபோதாமை-ஆற்றாமைகளின் அங்கமாக ஒருமாதிரி உள்மனக்கிடக்கையால் உந்தப்படும் காரணத்தால் – ஒருமாதிரியான ப்ராக்ருதத் தமிழில் (மாறாக பைஸாஷி வகையறாவோ?) எழுத முயற்சிப்பவன்; ஆனால், சர்வ நிச்சயமாக, நான் ஒரு தமிழ் ‘எழுத்தாளன்’ அல்லன், நன்றி.
2. சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வரலாறுகள் உட்படப் புத்தகங்களையும், சுமார் 30 ஆண்டுகளாகச் சஞ்சிகைகளில் வரும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் (சிலபல கோணங்களில் புரிதல்கள் தேவை என்பதால்) படித்து வருகிறேன். ஆகவே, நான் பிறபல துறைகளில் இருப்பதுபோலவே இதிலும் ஒரு மாணவன் மட்டுமே.
அதாவது, ஒரு மாணாக்கப் புடுங்கி.
எனக்கு வரலாறு குறித்த மரபுசார் அறிவுசார்ந்த அகடெமிக் தகுதிகள் இல்லை. உண்மை. எனக்குக் கனிமம், கலவை, பிரித்தெடுத்தல், உருக்கல், உருவாக்கல்,சேர்த்தல் சார்ந்த துறையில் மட்டுமே தான் முறையான பயிற்சி இருக்கிறது. அதுவும் வெறும் நான்கு வருட ஏட்டுப் படிப்பு மட்டும்தான். பிறவற்றை நானே முட்டிமோதிக் கற்றுக்கொண்டேன், அவ்வளவுதான். எனக்குத் தொழில் வரலாறல்ல. ஆகவே சரித்திரச் தேர்ச்சி கொள்வது என்பது இப்போதைக்கு ஒரு சிறுகுறிக்கோள் மட்டுமே.
ஆனாலும், எனக்கு வரலாற்றாராய்ச்சிகள் எப்படிச் செய்யப்படுகின்றன, உருவாகின்றன, வளர்த்தெடுக்கப்படுகின்றன – அவை தொடர்பான கருதுகோட்கள், சட்டகங்கள் யாவை, அவற்றின் சாதகபாதங்கள், திரிப்பது எப்படி+++ என்றெல்லாம் ஓரளவு அறிமுகம் இருக்கிறது என்பது என்(!) அபிப்ராயம். மேலும் பல தரம்வாய்ந்த, படுகுப்பை வரலாற்றாளர்களுடன் முறையே அளவளாவிய, பொருதிய அனுபவமும் இருக்கிறது.
3. நான் எந்த மொழியிலும் விற்பன்னன் அல்லன்; மாறாக – ஹிந்தி, தமிழ், ஸம்ஸ்க்ருதம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஓரளவு எழுத்துக்கூட்டிப் படிக்கசெய்ய வரும். அவ்வளவுதான். என் சிடுக்கல் நடைத் தமிழைக் கிண்டல் செய்கிறீர்கள் – ஒரு பிரச்சினையுமில்லை, நானுமேகூட அதனைச் செய்துகொள்கிறேன்.
மேலும், கஷ்டப்பட்டு இந்தச் சிடுக்கல்களைப் படிக்கவேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை என்பதையும் கருத்தில் கொள்ளவும்.
நான் ‘எல்லாம் அறிந்த ஏகாம்பரம்’ அல்லன். ஆனால் சிலபல விஷயங்களில் எனக்கு ஓரளவுக்குச் சரியான புரிதல்கள் உள்ளதாகவே நம்புகிறேன்.
4. நீங்கள் உணர்ச்சிவசப் படாமல், நண்பன்-விரோதி, நம்மாள்-வேற்றாள் எனப் பார்க்காமல் – மாறாகத் தரவுகளுடன் என் புரிதல்களை, முடிபுகளையே விடுங்கள் – என் வாதப்புள்ளிகளை எதிர்கொண்டால் – தாராளமாக என்னைத் திருத்திக் கொள்கிறேன்; எனக்கு இதில் ஒரு மானப் பிரச்சியுமில்லை. என் எல்லைகளை நான் ஓரளவுக்கு அறிவேன். தேவையேயற்ற பிம்பவளர்ப்பு விவகாரம் எனக்குத் தேவையில்லை, ஒத்தும் வராது. மேலும், உங்களிடமிருந்தும் நான் கற்றுக்கொள்ளக்கூடும் காத்திரமான விஷயங்கள் இருக்கலாம். (கிண்டலாகச் சொல்லவில்லை)
5. எனக்குத் தெரியாத விஷயத்தைக் குறித்து, நான் பேசுவதில்லை. அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டுமென்றால், பட்டவர்த்தனமாக ‘எனக்குத் தெரியாது, தெரிந்தால் சொல்லவும், கற்றுக் கொள்கிறேன்’ என விஷயங்களை அணுகுவதும் எனக்குப் பிரச்சினையில்லை.
6. ஒருவர் பெரிய முகாந்திரமோ தரவோ இல்லாமல் பொதுவெளியில் எழுதினால், நாலு விமர்சனம் வரத்தான் வரும். அதற்கெல்லாம் தயாராக இருந்தால்தான் பொதுவெளியில் ஊடாட முடியும். சொல்லப்போனால், தரவுகளுடன் எழுதினாலே பாதிக்கப்படும், புண்ணாகி ஓலமிடும் நிலையில்தான் நம் மக்கள் இருக்கிறார்கள்.
அதே சமயம், நீங்கள் தரவுபூர்வமாக (ஏன், வசைச்சொற்களுடன் இருந்தாலுமேகூட) நான் எழுதுவதை விமர்சனம் செய்தால் – அதனையும் வெளியிடத் தயாராகவே இருக்கிறேன். (இதனை நான் வெறும் வாதத்துக்காகவோ அல்லது வெட்டிப்பேச்சுக்காகச் சொல்லவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்; உங்கள் அரவிந்தன் கண்ணையன் அவர்கள், அவருடைய இயல்பையும்மீறி அப்படிக் காத்திரமாகச் செய்தாலும் வரவேற்பேன் – சாகும்வரை ஏதாவது கற்றுக்கொண்டேதான் இருப்பேன் என நான் முடிவுசெய்து பல மாமாங்கங்கள் ஆகிவிட்டன)
7. சரி.
8. டிஎஸ் கிருஷ்ணன் அவர்களுடைய கட்டுரைகளை நானும் படித்தேன், முடிந்தபோதெல்லாம் அவருடைய ட்வீட்களையும் கட்டுரைகளையும் படிக்கத்தான் படிக்கிறேன் – படிக்காமல் எதிர்கொள்ளவில்லை. அவர் தொடர்ந்து திராவிடர்களையும் தனித்தமிழ்ப் பித்தர்களையும் ஆவணபூர்வமாக விமர்சிப்பது எனக்குப் பிடித்தமானதே.
அதே சமயம், அவருடைய வீச்சும், வாசகர்கள் எண்ணிக்கையும் வேறு (ஒப்பீட்டளவில் அவற்றை ஒத்திசைவுடன் பொருத்திப் பார்க்கும்போது மிக அதிகம்தான்!) என்பதை நான் அறிவேன். வாழ்த்துகள். ஆனால் அதற்கும் பொறுப்புணர்ச்சியுடன் செய்யும் விமர்சனத்துக்கும் தொடர்பில்லை. எனக்கு அவரிடத்தில் ஒரு பொறாமையும் இல்லை. என்னைவிட வயதில் மிக இளையவர்கள் பலப்பல துறைகளில் மஹோன்னதர்களாக இருப்பதைக் கண்டால் எனக்கு, எப்படியும் மகிழ்ச்சிதான். என் ரெவல் எனக்குத் தெரியும். நன்றி.
9. சிலப்பதிகார நிகழ்ச்சிகளின் காலவரையறை குறித்து அவர் எழுதியிருப்பதைப் பற்றி இரண்டுமூன்று நண்பர்களுடன் பேசியபின், இதென்ன பெரியவிஷயம், பொதுவாக நம் சங்ககாலம் காப்பியட்டீ போன்ற கட்டுக்கதைகளில் பொதுப் புத்தியில் இருக்கும் விஷயங்களைத்தானே அவர் எழுதியிருக்கிறார், மற்றபடி பக்தி ஆக்கங்கள், கல்வெட்டுகள் குறித்துப் பொதுவாகவே சரியாகத்தானே எழுதுகிறார், அதுவும் தொடர்ந்து ஆர்வத்துடன் செய்கிறாரே… ஆகவே லூஸ்லவுடலாம் எனத்தான் நினைத்தேன். மேலும் நான் கடவுளல்ல நக்கீரனும் அல்லன் – முக்கியமாக வரலாற்று வல்லுநன் அல்லன், ஒருகால் விழுந்துபிடுங்கும் வள்ளுநனாக இருக்கலாமோ என்ன எழவோ!
+ வேறு பிற வேலைவெட்டிகள் நிறைய இருக்கின்றனவேறு.
ஆனால்.
ஒருவிதத்தில் எனக்குச் சலிப்புத்தான் வருகுதய்யா. ஏனெனில் தமிழர்களின் வரலாற்றறிவானது மிகையாகவும் தொடர்ந்துபலவகைகளிலும் ஜோடிக்கப்பட்டது. அந்தக் கண்ணாமூச்சி விளையாட்டில் இருந்து வெளிவருவது எளிதானவொரு விஷயமேயல்ல. நம் தமிழர்களின் நகைக்கத்தக்க வரலாற்றறிவையும் வரலாற்றுப்புரட்டுகளையும் குறித்துக் காத்திரமாகவும் தரவுகளுடனும் விமர்சனம் வைக்கவேண்டுமானால் அதற்கு அசாத்தியமான உழைப்பு வேண்டும். அது எனக்குக் கைகூடுமா எனச் சந்தேகமாக இருந்தது.
10. ஆனால், என்னைக் கடந்த பத்துவருடங்களாவது அறிந்த நீங்கள் இப்படி அநியாயத்துக்கு உணர்ச்சிவசப்பட்டு, என் மீது ஆதாரமேயற்ற குற்றச்சாட்டுகளை வைக்கும்போது – எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் – இம்மாதிரியான புத்திப்பேதலிப்புடன் நிறைய பேர்கள் இருக்கலாம், ஆனால் உங்களைப்போல அவர்கள் நேரடியாக ஏசாமல் இருக்கலாம். ஆகவே அவை எதிர்கொள்ளப்படவேண்டும்.
… ஆனால் – எனக்கு உங்கள் பேரில் பெரிய அளவில் கோபமோ வருத்தமோ இல்லை. நீங்கள் உரிமை எடுத்துக்கொண்டு திட்டி, எனக்கு நாலு அறிவுரைமூதுரை சொல்வதிலும் பிரச்சினை இல்லை. வெறும் சலிப்புத்தான்.
ஏனெனில், ஹிந்துவாக/ஹிந்துத்துவனாக உணரும் ஒருவனுக்குத் தரம் என்பது முக்கியம் என்பது என் கருத்து. அதேசமயம் ஒரு இடதுசாரியாகவோ லிபரலாகவோ ஒருவன்/ஒருத்தி இருந்தால் அவன்/அவளுடைய அடிப்படை மொண்ணைத்தனத்தையும் கயமையையும் என்னால் புரிந்துகொண்டு லூஸ்லவுட முடியும். நன்றி.
மேலும் – எப்படியும், நானும், முடிந்தபோதெல்லாம் தமிழ் வரலாறுகளின் அபத்தங்கள் குறித்தும், பொய்மைகள் பற்றியும் எழுதுவதாகத் தான் இருக்கிறேன்.
ஆகவே – இந்த விவகாரம் குறித்தும் எழுதினால் என்ன?
அடுத்த சில நாட்களில் அல்லது கூடியவிரைவில் எழுதுகிறேன். நன்றி.
Alea jacta est.
-0-0-0-0-0-
(டிஎஸ் கிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள 3-4 கட்டுரைத்தொடர் – ரௌத்திரக் கண்ணகி, தம் இடப்பக்கப் பாற்சுரப்பியைக் கிழித்துப் பிய்த்து விட்டெறிந்து மதுரையை எரித்ததைக் குறித்த தேதி கண்டுபிடித்தல் (14-7-0130 CE) விஷயம்)
- சிலப்பதிகாரத்தின் காலமும் மதுரை எரிக்கப்பட்ட நாளும் – Oct 12, 2021 – http://www.tskrishnan.in/2021/10/blog-post_12.html
- The Timeline of Silappadhikaram and the date of Madurai burning, Oct 23, 2021 – http://www.tskrishnan.in/2021/10/the-timeline-of-silappadhikaram-and.html
- சிலப்பதிகாரத்தின் காலம் – 2 – Nov 5, 2021 – http://www.tskrishnan.in/2021/11/2.html
- சிலப்பதிகாரத்தின் காலம் – 3 – Nov 5, 2021 http://www.tskrishnan.in/2021/11/3.html
November 12, 2021 at 18:59
alea jacta est கண்டு ஆனந்தப் படுகிறேன்.
சரித்திர அறிவு மிக மிக் கம்மியாவுள்ள நான், தரவுகளோடு கிடைக்கும் தங்களின் கட்டுரைகளை எதிர் பார்த்து ஆனந்தப் படுகிறேன்.
November 12, 2021 at 19:02
டேய்! 🤣😀🙄😩😭
யோவ்! எப்ப சந்தா அனுப்பப்போறீர்?
November 21, 2021 at 20:28
9ம் நூற்றாண்டு கன்ஃபர்மா? 280 எழுத்துகளுக்கு மிகாமல் சொல்லவும். மனுசனுக்கு ஆயிரம் சோலி கெடக்கு.
November 21, 2021 at 20:35
அதிக பட்சம் 9; 12 வரை போகலாம். + தொல்காப்பியமும் கிட்டத்தட்ட திட்டத்திட்ட அதேகதைதான்.
November 22, 2021 at 10:03
எதே! தொல்காப்பியம் பெயரையே ஸமீபகாப்பியம் என்று மாற்றுவீர் பொலும்.
ஃபெட்னா விழவின் வரலாற்று அமர்வு தான் உங்களுக்கு சரியான எதிர்விசை. அதில் பேசும் நால்வர்:
– அமர்நாத் ராமகிருஷ்ணர்
– சு வெங்கடேசர்
– உதயசந்திரர் இன்னாள் இஆப
– பாலகிருஷ்ணர் முன்னாள் இஆப
என்னே ஒரு சங்கமம்!
November 22, 2021 at 10:55
🙏🏿💪🏿
இந்த கருத்துலக முன்னாள் இன்னாள் குண்டர்களுடன் பொருதுவதற்கு ஒரு ‘வருநாள் இஆப’ குண்டர் அல்லது குண்டி தான் சரி.
(சு வெங்கடேசர் இந்த விஷயங்களில் என்ன நிலை எடுத்திருக்கிறார் எனத் தெரியாது – அவர் ஆகிருதி பற்றியும் அவ்வளவு அறிமுகமில்லை; ஆனால் மிச்சம் மூவர் இவ்விஷயங்களில், கோமாளிகள்மட்டுமே – அதில் சந்தேகமேயில்லை)