நாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (2/3)
April 17, 2019
இந்தவரிசையின் முதல்பாகத்தைப் படித்துவிட்டு இதனைப் படிக்க முயன்றால் – நான் சொல்லவருவது புரிபடலாம்.
அதனைப் படித்தீர்களா?
சரி. நான் இக்காலங்களில் – வருடத்தில் சுமார் 40-50%நேரம் வசிப்பது – பெங்களூரின் ஒரு மூலை ஒதுக்குப்புற கிராமாந்திரப் பகுதியில். சுமார் 15 வருடங்களுக்கு முன்னால்வரை கூட, பெரிய மாந்தோப்பின் நடுவில் தன்னந்தனியாக இருந்த வீடு. நானுண்டு என் புத்தகங்களுண்டு படிப்புண்டு இஞ்ஜினீயரிங் வகை நோண்டல்களுண்டு என இருந்தேன். இப்போது எதுவும் அப்படியல்ல. எல்லாம் விதம்விதமாக மாறிக்கொண்டே இருக்கின்றன.
…நானும் எங்கோ சென்றுகொண்டிருக்கிறேன், சுற்றுப்புறமும் அப்படியே. இதற்கு சுற்றுவட்டாரத்தின் பொருளாதார வளர்ச்சியும் ஒரு காரணம். ஆயிரக்கணக்கில் வேலையும் புகலிடமும் தேடிவந்திருக்கும் ரோஹிங்க்யா, பங்க்ளாதேஷ் இஸ்லாமியர்களும் ஒரு காரணம். இதைத்தவிர நேபாள், அஸ்ஸாம் பகுதி மக்களும்; ஏன், நானே பெங்களூருக்கு வேலை நிமித்தம் 1996-7 வாக்கில் குடிபெயர்ந்தவன்தான். (பின்னர் பல ஆண்டுகள் இங்கில்லாமல் வெளியில் குப்பை கொட்டிக்கொண்டிருந்தேன்/இருக்கிறேன் என்பது வேறு விஷயம்!). வாக்குரிமை இந்தத் தடவை பெங்களூரில்தான்.
…ஆகவே என்னுடைய வாக்குச்சேகரவேலை வெட்டியெல்லாம் என் சுற்றுப் புறத்தில்; அதுவும் விட்டுவிட்டுத்தான். ‘நாயகன்’ ஜனகராஜுக்கு நன்றியுடன் – Only locallu, not Internationallu.
என் காரியங்களுக்கு விளைவுகள் இணைய ஒத்திசைவு வழியாக ஏகோபித்துப் பெருகும் என்றெல்லாம் நான் நம்பவில்லை. ஏனெனில் வாக்காளர்கள் தங்கள் செயல்பாடுகளையும் அரசியல்சாய்வுகளையும் என்னைப் போன்றவொருவன் சொல்லியவுடனே, கடும் அதிர்ச்சியளிக்கும் வகையில் மாற்றிக் கொள்வார்கள் என நான் கருதவில்லை.
அதிகபட்சம் – நான் பிரச்சாரம் செய்வதினால், பிறருக்கும் ஒரு மாற்றுப்பார்வையைக் கோடிகாண்பிப்பதற்கு அப்பாற்பட்டு வேறொரு சுக்கையும் சாதிக்கக் கூடிவரப்போவதில்லை எனத் தெரிந்தாலும் ஏதோ ஒரு பித்துக்குளித்தனம் என வைத்துக்கொள்ளுங்கள். குற்றமனப்பான்மை கொஞ்சமாகக் குறைகிறது எனவும். மேலும், கலாச்சார/ பொருளாதார/ சமூக ரீதியாக அவ்வளவு விலைமதிப்பற்ற பொக்கிஷங்களைப் பாரதத்திலிருந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பெற்றுக்கொண்டிருக்கும் நான், நம் நாட்டுக்கு இந்தச் சிறிய விஷயத்தைக் கூடவா செய்யமுடியாது எனும் சுயநலம் சார்ந்தும்.
-0-0-0-0-0-
ஒரு முன்குறிப்பு: ஒத்திசைவைத் தொடர்ந்து படிக்கும் சகஏழரைகளுக்கு நான் அரசியல்சரி ஆசாமி கிடையாது என்பது தெரியும். நான் ஒரு நடுநிலைக்கார நாடகப் பேடியல்லன் என்பதும். உண்மை என என்னால் அறியப்பட்டவற்றைப் பட்டவர்த்தனமாக போட்டுடைப்பதில் எனக்குப் பிரச்சினை ஒன்றும் இல்லை என்பதும்.
தப்பித்தவறி யாராவது புதிய ஏழரை இங்கே வந்து இதுவரை படித்திருந்தால் – குறித்துக்கொள்ளவும்: I HATE political correctness from the bottom of my heart.
இதற்குப் பிறகு படிப்பது உங்கள் இஷ்டம்.
சரி. இப்போது எங்கள் பகுதியைக் குறித்த, கொஞ்சம் சோகவரலாறு:
A people without the knowledge of their past history, origin and culture is like a tree without roots.
— Marcus Garvey
இது பாரதக் குடிகளின் அங்கங்களாக இருக்கும் சிறுபான்மையினர் குறித்த சமகால, பிராந்திய வரலாறு. ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துவிட்டுத்தான் இதனை நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
‘ஸ்பான்ஸர்ட்’ மதமாற்றங்களும், வெளிநாட்டுப் பணத்துக்கும் பொருளுக்கும் அலைதலும், மதவெறிகளும், துவேஷங்களும், குண்டர்தனங்களும், பிரிவினைப் பித்தலாட்டங்களும், பொதுச்சொத்து நாசங்களும் அநியாயத்துக்கு ஒலிபெருக்கப்பட்ட ஓலங்களும் எனக்குப் பொதுவாகவே ஒத்துவர மாட்டா என்பதற்கு அப்பாற்பட்டு, நான் ஒரு தொழில்முறை சிறுபான்மை வெறுப்பாளன் அல்லன். மேலும் எனக்கு ஆத்மார்த்தமான நண்பர்கள் என அதிகம்பேர் இல்லாவிட்டாலும் (இந்த உண்மை உங்களுக்கு ஆச்சரியம் தருகிறதா என்ன? ;-)) அவற்றில் சிறுபான்மையினரும் இருக்கிறார்கள். அவர்கள் சாதா பாரதீய பொதுஜன க்றிஸ்தவர்களும் முஸ்லீம்களும் யூதர்களும். அவ்வளவுதான்.
என்னுடைய தொகுதியில் (மத்திய பெங்களூர்) + பக்கத்திலுள்ள இருதொகுதிகளில் – கணிசமான ‘சிறுபான்மை’ மக்கள்திரட்கள் வசிக்கிறார்கள். இதற்கு, ஆங்கிலேய ஆக்கிரமிப்பு/ஆட்சியிலிருந்து நிர்வாகமுறை/போர்த் தந்திரோபாயரீதிக் காரணங்கள், + 1700களின் கடைசியில் இருந்து உந்துதல்கள் இருந்தன.
தற்போதைய கப்பன்பார்க் அதற்குமேல் இருந்த இடங்கள் கன்டோன்மென்ட் பகுதி உட்பட வெள்ளைக்கார ‘வைட் டவுன்‘ (white town) எனவும், இப்போது எம்ஜி ரோட், சர்ச் ஸ்ட்ரீட், ப்ரிகேட் ரோட் என அறியப்படுபவைகளும் அதற்குத் தெற்கேயுள்ள பகுதிகளும் ப்ளாக்பள்ளி (blackpalle – கறுப்பர்கள், அதாவது நம் மூதாதையர்கள் வாழுமிடம்) எனவும் பகுக்கப்பட்டு – பிரித்தாள்வது நடந்தது. இதற்கும் மேலாக ஆங்கிலேயர்கள் – தாங்கள் ஆக்கிரமித்த பகுதிகளுக்கும் கறுப்பர்களுக்கும் நடுவே ஒரு ‘பஃபர்’அல்லது இடைப்பட்ட தாங்கல் பகுதியை உருவாக்கினார்கள்; இதில் வெளிப் பிரதேசங்களிலிருந்து இஸ்லாமியர்களைக் கொணர்ந்து அவர்களைச் செயற்கையாகக் குடியமர்த்தினார்கள். பின்னவர்களும் இந்தக் காரணத்தால் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக இருந்தார்கள்; தற்போது ஷிவாஜி நகர் என அறியப்படும் பகுதியும் அதன் சுற்றுப்புறங்களிலும் அதிகம் முஸ்லீம்கள் வசிக்கும் காரணம் இதுதான்.
அதே சமயம், நம் செல்ல ஆங்கிலேயர்கள் இந்த வெள்ளைக்கார டவுனிலும் அதற்கு வடக்கிலும் ஏகத்துக்கும் க்றிஸ்தவ மதமாற்ற சக்திகளுக்கு ஊக்கம் கொடுத்தனர். Bible in one hand, sword in the other. ஆக இந்தப் பகுதிகளில் நிறைய க்றிஸ்தவர்களும் ஏகப்பட்ட சர்ச்களும் வளர்ந்தன, தொடர்ந்து வளர்கின்றன.
இந்த ‘ஸோஷியல் இஞ்ஜினீயரிங்’ வரலாறுகளின் தற்போதைய நிலவரம் என்னவென்றால் – மத்திய பெங்களூர் நாடாளுமன்றத் தொகுதியில், அதிகாரபூர்வமாக சுமார் 5.5 லட்சம் பேர் ஹிந்துக்கள், 4.5 லட்சம் முஸ்லீம்கள், 2.5 லட்சம் க்றிஸ்தவர்கள்.- ஆனால் இந்தக் கணக்கு முஸ்லீம்கள்+க்றிஸ்தவர்கள் எண்ணிக்கையைக் குறைவாகக் காண்பிக்கிறது; ஏனெனில் மதம்மாற்றப்பட்ட ஹிந்துக்கள் எண்ணிக்கை மிக அதிகம் – இவர்கள் க்ரிப்டொ-க்றிஸ்தவர்கள் எனக் குறிப்பிடப்படுபவர்கள், சர்ச்களுக்கு இவர்களைப் பற்றித் தெரியும் – அவைகள் இவர்களைத் தட்டிக்கொடுக்கின்றனகூட; இந்தக் க்ரிப்டொ-க்றிஸ்தவர்கள், அரச சலுகைகளுக்காக தாங்கள் ஹிந்துக்கள் இன்னஜாதி என ஒப்புக்குச் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் அப்படியில்லை.
அதேசமயம் மதம்மாறியதற்குக் காரணம் ஹிந்துமதங்களில் உள்ள ஜாதிப்பிரிவினை என்பார்கள். எது எப்படியோ. இம்மாதிரி மோசடிகள், தொடரும் சோகக்கதைகள்.
முஸ்லீம்கள் விஷயமும் ஏறக்குறைய இதேபோலத்தான் – ஆனால் இவர்களில், எனக்குத் தெரிந்தவரை க்ரிப்டோ-இஸ்லாமியர்கள் இல்லை.. ஆனால் இவர்கள் எண்ணிக்கை, ஹிந்துக்கள் எனப் புளுகிக்கொள்ளும், ஆனால் பலவருடங்களாக இங்கிருக்கும் வேற்று நாட்டு மக்களால், அதிகரிக்கிறது.
-0-0-0-0-
காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ச்சியாக நடந்த/நடந்துகொண்டிருக்கும் விஷயம் — மதமாற்ற நிறுவனங்களின் தேவைகளுக்கும் அதிகமாக, அவற்றுக்கு வேண்டியதைக் கொடுத்து அவற்றின் மூலமாக க்றிஸ்தவ/இஸ்லாமிய வாக்கு வங்கிகளை உருவாக்கிக் கொள்ளல். (இது பின்னர் வேதாளமாக வளர்ந்து, ‘எங்களைக் கண்டு கொள்ளவில்லையென்றால்… நடப்பதே… வேறு…’ வகை ‘ஃப்ரேன்கன்ஸ்டைனின் மான்ஸ்டர்’ அசுரர்களாக மாறியுள்ள விஷயங்கள் வேறு!)
இந்தக் கட்சிவளர்ப்புக் கொள்கையின் படி க்றிஸ்தவ வாக்கு வங்கியை உருவாக்கி போஷகம் செய்வற்காக – தேவராஜ் அர்ஸ், கர்நாடகாவின் முதலையமைச்சராக இருந்த காலத்தில் (1972~80) – மேலிட காங்கிரஸின் உத்தரவின்படி க்றிஸ்தவ மதமாற்ற நிறுவனங்களுக்கு – இந்தப் பகுதியில், ஏக்கரா கணக்கில் விளை நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்பட்டு அரசு/மேய்ச்சல் நிலங்களுடன் தொகுக்கப்பட்டு நிலவுபயோக ஆர்டிஸி ரெஜிஸ்டர் மாற்றங்கள் செய்யப்பட்டன.
பின்னர் இவற்றில் பெரும்பகுதிகள் க்றிஸ்தவ அமைப்புகளுக்கு மொய் எழுதப்பட்டன; ஒரு சிறிய பகுதி சுமார் ~7% நிலம், பட்டியல் திரளுக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டது. (க்ராண்ட் லேண்ட்); பின்னர் இந்த இரண்டாம்வகை நிலத்தையும் குறிப்பிடத்தக்க அளவு அபகரித்தனர் மதமாற்ற நிறுவனத்தினர்… (இவர்களைப் போய்த்தான் பட்டியல் திரளினர் நம்புகிறார்கள், பாவம்!)
பல பகுதிகளில் இப்படி நடந்தன. பெங்களூர் வைட்ஃபீல்ட் பகுதி, பன்னேருகட்டா சாலைப்பகுதி, துமகூரு சாலைப்பகுதி, ஹெண்ணூரு-பாகலூரு சாலைப் பகுதி, தணிஸந்த்ரா சாலை பகுதி போன்றவைகள் இவற்றில் பிரதானம். இதில் கடைசிக்கு முந்தைய பிரிவில் என் வீடும் இருக்கிறது.
என் வீட்டைச் சுற்றிய ஐந்து கிலோமீட்டர் ஆரவட்டத்தில், சுமார் 3400-3500 ஏக்கர்கணக்கில் காளான்கள் போல இருக்கின்றன க்றிஸ்தவ மதமாற்ற நிறுவனங்கள் – நன்னரி/’கன்னி’மாடங்கள், கான்வென்ட்கள், மதக்கல்லூரிகள்… …+ அவை பின்னின்று நடத்தும் தன்னார்வ, மனிதவுரிமைக் கடைகள். இவற்றுக்கு மசாலாவாக – எக்கச்சக்க வெள்ளைப்பாதிரிகள் – 100% சுற்றுலாப்பயணிகளுக்கான விசாவில் வந்து க்ரிமினல்தனமாக மதமாற்ற, சர்ச்மேலாண்மை விஷயங்களில் ஈடுபடுபவர்கள்; என் கணக்கில் சுமார் 200-300 பேராவது இவர்கள் இப்படி இருக்கவேண்டும் (அதுவும் இந்தப் பகுதியிலேயே!).
இந்தப் புளுகுணி மாங்கொட்டை வெள்ளைப் பாதிரிகளில் பெரும்பாலும் வடஅமெரிக்கர்களும் ஆங்கிலேயர்களும். கேட்டால் ஸாஃப்ட்வேர் வைட்ஃபீல்ட் என்பார்கள். ஆனால் அவர்கள் தயக்கத்துடன் கொடுத்த முகவரிக்குச் சென்றால், அங்கு ஏதாவது சர்ச் இருக்கும் அல்லது முகவரியே பொய்யாக இருக்கும். (இவர்களில் சிலரைப் பற்றி நேரடியாகப் புகார் அளிப்பதற்காகக் காவல் நிலையத்தில் பேசியிருக்கிறேன் – ஆனால் சுற்றியதுதான் மிச்சம், எஃப்ஐஆர் கூடப் பதிவு ஆகவில்லை! ஆக, அலுப்புடன் விட்டுவிட்டேன்.)
இன்னொரு பக்கம் தோன்றுகிறது: அமெரிக்காவில் நம் ஐடி குமாஸ்தாக் குளுவான்களில் மிகப்பெரும்பான்மையோர் – ‘நானே உங்களுடைய ஐடி வழியும், கம்ப்யூட்டர் சத்தியமும், பிச்சைஜீவனுமாக இருக்கிறேன்’ எனப் பொய்பொய்யான ஜோடிப்புகளால் ஹெச்-ஒன்பி, க்ரீன்கார்ட், குடியுரிமை எல்லாம் வாங்கிக்கொண்டிருக்கும்போது – நம்மிடையே அமெரிக்கர்கள் செய்யும் மதமாற்றப் பேடித்தனங்கள், ஒருவிதமான கர்மா வகை ஊழ்வினையோ என்ன எழவோ!
…ஆக, சுற்றுவட்டாரத்தில் கடந்த 12-15 வருடங்களிலேயே சர்ச்களின் எண்ணிக்கை சுமார் 800% ஏறிவிட்டது. இவற்றில் பயிற்சி கொடுக்கப்பட்ட பாதிரிகளில் பலர் நேபாளத்துக்கும் சத்தீஸ்கட் ஒடிஷா பகுதிகளுக்கு ‘சர்ச் ப்ளேண்டிங்’ க்றிஸ்தவ ஊடுருவலுக்காக அனுப்பப்பட்ட வண்ணம் இருக்கிறார்கள். பிறர் தங்கள் மாமாவேலையை உள்ளூரிலேயே நடத்துகிறார்கள். க்வார்ட்டர் ஓவர் க்வார்ட்டர் வளர்ச்சி காண்பிக்க அல்லாடும் பாவப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள், இவர்களிடம் பிச்சை வாங்கவேண்டும். (இப்போது இந்த நில/நிதி ஒதுக்கீடு-ப்ரச்சினைகளைக் கவனித்துக் கொள்வது, ஒட்டுவங்கி ஆடுகளின் மேய்ப்பன் – கேஜே ஜார்ஜ் எனும் காங்கிரஸ் எம்எல்ஏ, பெரும் ஊழல் ஆசாமி. ஆயிரம் கோடிக்கணக்கில் ஊரெல்லாமும் அதற்கு வெளியேயும் சொத்து. வடபெங்களூரில் இருக்கும் ஹெப்பாள் பக்கத்துப் பிரம்மாண்ட ‘மான்யதா டெக்பார்க்’ இவருடைய பினாமிச் சொத்துதான் – ஊக்கபோனஸாக, இவர் தற்போது ஒரு மாநிலமந்திரி எனவும் நினைக்கிறேன். கைதேர்ந்த கலெக் ஷன் ஏஜென்ட்!)
இன்னொரு பக்கம், இஸ்லாமிய ட்ரஸ்ட்களுக்கும் அளவிலா நில/நிதி ஒதுக்கீடுகள். இதெல்லாம், பெரும் ஊழல் பெருச்சாளி ஜாஃபர் ஷெரிஃப் உபயம். (இவர் தேவராஜ்அர்ஸ் அவர்களின் கார் ஓட்டுநராக இருந்து, அவ்வேலை மூலமாக அவர் அறியவந்த சிலபல நிஜலிங்கப்பா குறித்த ரகசியங்களை (நிஜலிங்கப்பா போன்றவர்கள், இந்திராவுக்கு எதிராக, அப்போது காங்க்ரெஸ் கட்சி உடைப்பில் மும்முரமாக இருந்தார்கள்!) இந்திராகாந்திக்கு 1969ல் போட்டுக்கொடுத்ததால் மெச்சப்பட்டு , இந்தத் தகுதியின் காரணமாகவே – பின்னர் ஆறேழுமுறை (8?) லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதும் அவர் ரயில்துறை மந்திரியாகவும் இருந்தார் (திருப்தியாகச் சாப்பிட்டார் – அவர் குடும்பச் சொத்துகள்/வளைத்துப் போட்டவை இப்போது குறைந்தபட்சம் 11, 000 கோடி ரூபாய் மதிப்புகொண்டவை என்று ஒரு கணக்கு இருக்கிறது) என்பவை முக்கியம் – இப்போது, அவர் போய்ச் சேர்ந்ததும், இந்தவகைச் சிறுபான்மைஆடுகளின் மேய்ப்பர்கள் அவர் பேரர்கள்!)
…இந்த ஜாஃபர் ஷெரிஃப் அயோக்கியருடன் என் தந்தையார் நேரடியாகப் பொருதிய காலமும், ஊழல்களுக்கெதிராகப் போராடியதும் நடந்தது என்பது வேறுவிஷயம்.
சாமிநாதன்: சில நினைவுகள், குறிப்புகள் (07/02/2014), முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி? (10/02/2014), சாமினாதன்: மறுசுழற்சி (13/02/2014)
–0-0-0-0-0–
மதமாற்ற/சர்ச்/மசூதி நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு இந்த இலவசங்களில் பல தொழில்முறை நிறுவனங்கள், ஷாப்பிங் காம்ப்ளெக் ஸ்கள், கான்ஃப்ரன்ஸ் ஹால்கள், ஹாஸ்டல்கள், கல்லூரிகள், பள்ளிகள் எல்லாம் இருக்கின்றன, லாபகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன; ஆனல் – இவைகள் இப்படி இருக்கக்கூடாது; ஏனெனில். இலவசமாகக் கொடுத்த கண்டிஷன்களுக்கு/நிபந்தனைகளுக்கு மாறானவை இச்செயல்பாடுகள்- ஆகவே விதிகளுக்கு 100% முரணானவை.
இருந்தாலும் அரசமைப்புகள், இவர்களை இந்த நிலப்பயன்பாட்டு அத்துமீறல்கள் குறித்து ஒரு சிறிய கேள்விகூட கேட்கமாட்டா. எடியூரப்பா அரசின்போது வரியைச் சிறிதளவு அதிகரிக்க முயன்றபோது இந்த அமைப்புகள் ஒருங்கிணைந்து அதற்கு முட்டுக்கட்டை போட்டன – காங்கிரஸும் அவர்களை, இந்தக் கூட்டுக் கொள்ளையை ஆதரித்தது.
என்னவானாலும், மதச்சார்பின்மை முக்கியமில்லையா, சொல்லுங்கள்?
அதைவிட வாக்கு வங்கி முக்கியமில்லையா? ஏசுவின் அல்லாஹ்வின் பெயரால் – நம் பொதுமக்களின் வரிப்பணத்தையும், பாரதத்தின் வளங்களையும் கூறுபோட்டுக் கூவிக்கூவி இலவசப் பிச்சைகளாக விட்டெறிவதுதானே காங்க்ரெஸ் கலாச்சாரம்?
அவர்களுடைய வழிமுறைகள், ஆங்கிலேயர்களால் வளர்த்தெடுக்கப்பட்டவைதானே?
பிச்சை பெற்றவர்கள் நன்றிக்கடனாக – ‘சகிப்பின்மைக் கூவல்களில்’ ஈடுபட்டால், ‘ஹிந்துத்துவா தாக்குதல்கள்’ என வுடான்ஸ் வுட்டால், அதாவது பெற்ற காசுக்கு விசுவாசமாக இருந்தால் ஞமலிபோல் குரைத்தால் – நமக்கென்ன போயிற்று, பாரதக் குடிகளுக்கு எங்கே எரிகிறது, சொல்லுங்கள்?
…இப்படிப்பட்ட கல்யாண குணங்களும், வரலாறுகளும் மிக்க தொகுதியில்தான் நானும் வாக்குச் சேகரம் செய்ய முயன்றேன்…
-0-0-0-0-
அடுத்த/மூன்றாம் பாகம் — இந்த வரிசையில் கடைசியாக இருக்கலாமோ? எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.
April 18, 2019 at 13:09
[…] நாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், ந… 17/04/2019 […]