மொஹெம்மத் நபி, பன்முக இஸ்லாம், ‘சிங்கப்பூர்’ மொஹெம்மத் சாபம்: சில குறிப்புகள்
August 22, 2015
அதாவது: மொஹெம்மத் நபி அவர்களின் வழி நடத்தலில் ஒரு ‘சிங்கப்பூர்’ மொஹெம்மத் போன்ற மனிதரெல்லாம் உருவாக முடியும் என்றால் ராமசாமியாக நான், வெறும் ஒரு அப்துல்லாவாகப் பதவியிறக்கம் பெறமுடியாதா என்ன? :-)
இது சென்ற பதிவின் (=இஸ்லாம் வரலாற்றுச் சூழல், ஒரு எதிர்வினை: சில விரிவான குறிப்புகள் (6/n) 18/08/2015) தொடர்ச்சி. அதாவது – இஸ்லாம் வரலாற்றுச் சூழல், ஒரு எதிர்வினை: சில விரிவான குறிப்புகள் (7/n)
-0-0-0-0-0-0-
அய்யா ‘சிங்கப்பூர்’ மொஹெம்மத்:
இப்போது உங்கள் பின்னூட்டத்திற்கு வரலாம் – தர்க்கரீதியாக உரையாடலாம்; ஆனால், உங்கள் ஆழமான – பரிசீலிக்கப்படாத நம்பிக்கையுடன் நீங்கள் பதிவிட்டதைச் சொல்லியிருக்கிறீர்கள் என்றால், இதன்மேல் உரையாடல் நடத்த முடியாது. இப்படியே விட்டுவிடலாம்! உங்கள் விருப்பம் எப்படியோ அப்படி! :-)
சரி.
எனக்கு, இது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது!
>> ராமசாமி சார் இஸ்லாத்தை பற்றி நிறைய தெரிஞ்சு வச்சிருக்கீங்க அதே சமயம் கொஞ்சம் பிழையாவும்.
நான் நிறையவெல்லாம் தெரிந்துகொள்ளவில்லை: சிலபல அடிப்படைகளை, ஒரளவு நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறேன், அவ்வளவுதான். (பொய்பொய்யான தன்னடக்கத்துடன் இதனைச் சொல்லவில்லை; என் அளவை நான் அறிவேன்.)
ஆனாலும், தர்க்கபூர்வமாக ஆதாரங்களுடன் – ஆவணங்களை அல்லது நம்பகத் தன்மையுடன் கூடிய வரலாற்றுக் குறிப்புகளை முன்வைத்து – என் தவறுகளைச் சுட்டினால், எப்போதுமே நான் என்னை திருத்திக்கொள்ளத் தயாராக இருக்கிறேன், சரியா?
>> முஹம்மது நபி இஸ்லாத்தின் ஸ்தாபகர் இல்லை.
அய்யா, தகவலுக்கு நன்றி. ஆனால் மொஹெம்மத் அவர்கள்தான் இஸ்லாமை ஆரம்பித்தவர். அவருக்கு முன் இஸ்லாம் எனும் மார்க்கம் சர்வநிச்சயமாக இல்லை.
நான் இன்று ஒரு மார்க்கத்தை ஆரம்பித்துவிட்டு, எனக்கு முன்னால் இவ்வுலகில் பிறந்தவர்கள்/இருந்தவர்கள் (எடுத்துக்காட்டு: காந்தி, அம்பேட்கர், கருணாநிதி) போன்றவர்களையெல்லாம் வித்தியாசம் பார்க்காமல், என் ராமசாமிய மார்க்கத்தைச் சேர்ந்தவராக நான் கருதிக் கொள்ளமுடியாது. ஒரு பொதுப்படையான நோக்கில் நாம் அனைவரும் மானுடப் பண்பாட்டின் வெவ்வேறு அங்கங்கள், முதிர்ச்சியின் வெவ்வேறு பரிமாணங்கள் எனவேண்டுமானால் சொல்லலாமே தவிர, என் தகப்பனாரைக்கூட, என் குழந்தைகளைக் கூட – ராமசாமியம் மார்க்கத்தைச் சார்ந்தவர் என்று என்னால் சொல்லமுடியாது.
ஆனால் – பரிசீலிக்கப்படாத வெறும் நம்பிக்கை என்று வந்துவிட்டால் அது வேறு விஷயம்; நம்மில் ஒவ்வொரு மனிதருக்கும் கற்பனை செய்துகொள்வதற்கு முழு உரிமை இருக்கிறது; ஆனால் அந்த நம்பிக்கை பொதுச் சபைக்கு வந்து, மற்றவர்களின் சுதந்திரத்தைப் பாதிக்கும்படிக்குப் பரிமாணம் கொண்டால், அது சரியல்ல.
இது சரியல்ல; முன்னமே சொன்னதைத் திரும்பப் படிக்கவும்.
ஆனால், இஸ்லாமுக்கு முன்னால் – ‘அல்லா’ எனும் கருத்தாக்கம் சர்வ நிச்சயமாக இருந்தது.
இந்தக் கடவுளைத்தான் மொஹெம்மத் நபி தன் மார்க்கத்தின் கடவுளாகத் தடுத்தாட்கொண்டார்; அவர் பாணியில், அவருடைய கருத்துகள் சார்ந்து மேன்மைப் படுத்தினார்.
மக்காவை, மொஹெம்மத் அவர்கள் வென்றபின் – காபா கற்கோயிலினுள் வைக்கப்பட்டிருந்த பல சிலைகளை (இவற்றில் அல்லாவின் மூன்று பெண்களான மாநத், அல்-உஸா, அல்-லத் போன்றவர்களின் சிலைகளும் அடக்கம்!) மொஹெம்மத் அவர்கள் உடைத்து – அப்பிராந்திய மக்களின் பூர்வீகக் கடவுளர்களை மறுதலித்து, அதற்கு பதிலாகத் தன் மார்க்கத்தைப் பரப்பினாலும் – க்விஸ்ஸெத் அல்-கரனிக் (=கொக்குகளின் கதை) எனும் நிகழ்வு நடைபெற்றது.
வன்முறையில்லாத மக்கள்திரள் ஒருங்கிணைப்புக்கு, சமரசத்துக்கு, மொஹெம்மத் நபி அவர்கள் முயன்றதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் அவர் மார்க்கத்தில் வந்து சேர்ந்திருந்த மக்கள்திரளின் ஏகோபித்த எதிர்ப்பினால், அவர் மீதிருந்த ‘நபி’ பிம்பமேலாண்மை எதிர்பார்ப்புகளினால், அவருக்குத் தன் முயற்சியைக் கைவிட்டுவிடவேண்டி வந்தது. ஆக – அவருக்கு, வன்முறைச் செயல்பாடுகளின் பக்கம் சாயவேண்டிவந்தது.
…இது பலமுறை மொஹெம்மத் அவர்களைப் பற்றிய சமகால/பிற்காலச் சரிதைகளில் வந்திருந்தாலும், அதன் சிக்கல் தன்மை காரணமாக, பரவலாக வெளியே அறியப்படாதது… (ஆனால், இந்த கொக்குகளின் கதையைப் பின்னொரு சமயம் பார்க்கலாம்.)
>> முஹம்மது இஸ்லாத்தின் கடைசி தூதர்.
அல்லர்.
உங்களுக்கு இஸ்லாம் பற்றி, வெறும் ஒரு சடங்கு முஸ்லீமாக இருப்பதற்கு அப்பாற்பட்டு ஓரளவு ஞானம் இருந்தால் (எனக்கு இதில் கொஞ்சம் சந்தேகம்தான், உண்மையை ஒப்புக்கொள்ளவேண்டும்) – நீங்கள் கதம் அல்-நபிய்யின் (= ப்ரொஃபெட்டுகளின்/இறைதூதர்களின் முத்திரை) போன்ற கருத்துகளைக் குறிப்பிட்டிருக்கக் கூடும் என நினைக்கிறேன். மேலும் நீங்கள், இஸ்லாமின் ஐந்து தூண்களாகக் கருதப்படுவதில் முதலாவதான ஷஹாஹ்தஹ் (=shahadah, சாட்சி அளிப்பது) பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம் – அதாவது: 1) அல்லாவைத் தவிர வேறொரு கடவுளும் இல்லை என்பதற்கு நான் சாட்சியளிக்கிறேன்; 2) மேலதிகமாக, மொஹெம்மத் தான் அல்லாவின் தூதர் என்பதற்கும் சாட்சியளிக்கிறேன்.
இவையெல்லாம் வெறும் நம்பிக்கையின் பாற்பட்ட விஷயங்களே! இருந்தாலும்… பெரும்பான்மைவாத இஸ்லாம் அப்படித்தான் சொல்கிறது; ஆனால் சிலபல முஸ்லீம்கள் இதனை ஒப்புக்கொள்வதில்லை.
ஏனெனில் – இதில் பல நுணுக்கமான விஷயங்கள் இருக்கின்றன. வெகுவாக மதிக்கப்படும் பல கொர்-ஆன் ஆராய்ச்சியாளர்களும் சான்றோர்களும், இந்த ‘கதம் அல்-நபிய்யின்’ கருத்தாக்கம் ஒரு பிற்கால இடைச்செருகல் என நினைக்கிறார்கள். இதற்கு முக்கியமான ஒரு சாட்சிய விஷயம் என்னவென்றால் கொர்-ஆன் முழுவதுமே அரபுமூலத்தில் இருந்தாலும் இந்த கதம் என்பது அரபு வார்த்தையேயல்ல. ஆகவே இதன்மேல் கட்டமைக்கப்பட்ட ஷஹாஹ்தஹ் என்பதன் நடைமுறைப் புரிதலும் ஒரு கேள்விக்குறியே! இம்மாதிரி நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. ஏனெனில் மொஹெம்மத் நபி அவர்கள் இறந்தபின் அவரது ராஜ்ஜியத்தில் பலப்பல குடுமிப்பிடிச் சண்டைகளும் சமரசங்களும் அரங்கேறின. ஆக, ஓரளவுக்குச் சுமுகமான ஒரு இஸ்லாமிய சமுதாயம் வளர்த்தெடுக்கப்படுவதற்கு – அரேபிய சமூகம் பல விஷயங்களை எதிர்கொள்ளவேண்டி வந்தது. சிலவற்றை எடுத்தும், அகற்றியும், தொகுத்தும், மேன்மைப்படுத்தியும் கொர்-ஆனையும் ஹடீத்களையும் உருவாக்கவேண்டி வந்தது.
ஆனால் மொழியியல், வரலாறு, சமூகத் தொகுப்பு முயற்சிகள், கடவுள் செய்தி, இறைதூதர் போன்றவை தொடர்பான கருத்தாக்கங்களுக்கு அப்பாற்பட்டு — பெரும்பான்மை இஸ்லாமின் பலப்பல அடக்குமுறைகளை, அக்கிரமங்களை எதிர்கொண்டு – அஹ்மெதியாக்களும், பஹாய்களும், மத்திய ஆஃப்ரிகாவில் உள்ள கறுப்பு முஸ்லீம்களும், வடமேற்கு ஆஃப்ரிகாவில் உள்ள பெண்வழிச் சமூகக் குழுக்களும், ஏன் இஸ்லாமின் முப்பெறும் பிரிவுகளில் ஒன்றான கவாரிஜ்ஜுகளும் (மற்ற இரு தொகைகள்: ஸுன்னி, ஷியா) – நீங்கள் சொல்லும் கருத்தாக்கங்களை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்; இவற்றுக்கு ஒரு எடுத்துக்காட்டாக: நீதிபோதனை செய்யும் (=மொஹெம்மத் நபி) தீர்க்கதரிசிகளையும், அவ்வாறு செய்யாத பிற்கால தீர்க்கதரிசிகளையும் (=குலாம் மொஹெம்மத்) அஹ்மெதியாக்கள் சேர்த்துக்கொள்கிறார்கள்.
இதுதாண்டா பன்முக, அழகான இஸ்லாம்!
இதனை எதற்குச் சொல்கிறீர்கள் என்பது புரியவில்லை. அவர் அரசராக இருந்தார் என்பது சரி. இரண்டாம் விஷயத்தை அப்படியே எடுத்துக்கொள்வது தவறு. நீங்கள் எங்கிருந்து இந்த வதந்தியைப் பிடித்தீர்களோ, தெரியவில்லை.(அதாவது, நீங்கள் தேவைமெனெக்கெட்டு பொய் சொல்லவரவில்லை என நினைக்கிறேன்!)
இதற்கு அப்பாற்பட்டு, உங்களுக்குச் சில விவரங்களைக் கொடுக்கிறேன்:
- முழு இந்தியாவின் விஸ்தீரணம்: 32. 87, 590 சதுர கிலோமீட்டர்கள்.
- முழு அரேபிய தீபகற்பத்தின் விஸ்தீரணம்: 32, 37, 500 சதுர கிலோமீட்டர்கள்.
- மொஹெம்மத் இறந்த சமயம் அவர் ஆதிக்கத்திலிருந்த நிலப்பகுதி: சுமார் 15, 33, 000 சதுர கிலோமீட்டர்கள். (இந்தியாவின் நிலப்பரப்பில் பாதிக்கும் கீழ். அதிலும் பெரும்பான்மை நிலம் வறட்சியும், பொட்டல்காட்டையும் கொண்டதுதான். பாலைத்திணை சார்ந்தது)
- மொஹெம்மத் இறந்த சமயம் (கிபி 744) அவர் நாட்டில் இருந்த மொத்த மக்கள்தொகை (படுகேவலமாக நடத்தப்பட்ட ஆப்பிரிக்க, இஸ்ரேலிய/யூத, க்றிஸ்தவ அடிமைகள் உட்பட): சுமார் 21 லட்சம். பாவப்பட்ட அடிமைகளைச் சேர்க்காமல் இருந்தால், இந்த எண்ணிக்கை சுமார் 13.5 லட்சத்துக்கு இறங்கி விடும். ஒரு பொருத்திப் பார்த்தலுக்காக – சென்னையின் தற்போதைய, 2015 மக்கள்தொகை, சுமார் 50 லட்சம். (அப்போதைய பெரிய நகரமான மக்காவின் மக்கள்தொகையே,
அடிமைகளையும் உள்ளடக்கி, ஒரு லட்சத்துக்கும் குறைவுதான்!) - அச்சமயம் அரேபியாவின் மொத்த மக்கள்தொகை: சுமார் 48 லட்சம்.
- அச்சமயம் உலக மக்கள் தொகை: சுமார் 2000 லட்சம்
- அச்சமயம் இந்தியாவின் மக்கள்தொகை: சுமார் 580 லட்சம்! (உலகத்தின் கால்வாசி மக்கள் இங்குதான் இருந்தார்கள்! இன்னொரு கால்வாசிக்கும் மேல், சீனாவில்)
என்னுடைய செல்லங்களான சிலபல பைபிள்களில் ஒன்றான இந்தப் புத்தகத்திலிருந்துதான் மேற்கண்ட பல விவரங்களை எடுத்திருக்கிறேன்: Colin McEvedy and Richard Jones, Atlas of World Population History (Penguin, 1978)
இருந்தாலும் – மொஹெம்மத் அவர்களுடைய ராஜ்ஜியத்தின் பரப்பளவென்ன, மக்கள் தொகையின் கணக்கென்ன? அவருடைய நிலத்தின் தன்மையென்ன? இந்தியாவின் அப்போதைய விவரங்களுக்கும் அதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?
அட்ச்சுவிடுவது கூடப் பரவாயில்லை, ஆனால் அதனுடனான இளக்காரமும் மேட்டிமைத்தனச் சொல்லாடல்களும்தான் பாவமாக இருக்கிறது. நீங்கள் போக வேண்டிய தூரம் மிகமிக அதிகம் என்றுதான் தோன்றுகிறது, நண்பரே! :-(
>> அவரின் வாழ்க்கையை இப்போதுல்ல முஸ்லிம் மன்னர்கள் படித்து திருந்தினால் இஸ்லாத்திற்கு நல்லது.
எனக்குத் தெரிந்த இம்மாதிரி தங்களை மன்னர்கள் என்றழைத்துக்கொள்கிறவர்கள் – ஸவூதிஅரேபியாவில், எமிரேட்டுகளில்தான் இருக்கிறார்கள். அனைவரும், ஒரு விதிவிலக்குகூட இல்லாமல், அயோக்கியர்கள். ஒருவர் மட்டும் ரக்கா/இராக்கில் இருக்கிறார்; அவர் ஒரு பொறுக்கி – அல்-பக்தாதி; இஸ்லாமிக்ஸ்டேட் கும்பலின் தலைவர். இவர்கள் அனைவரும் அரைகுறைக் கொலைகாரர்களும் காமாந்தகர்களும். இவர்கள் தானாகத் திருந்த மாட்டார்கள்.
மொஹெம்மத் நபி அவர்களின் வாழ்க்கையிலிருந்து, இம்மாதிரி ஜிஹாதிகள் கற்றுக்கொள்ளக்கூடியது வெறும் இருண்மையைத்தான்.
>> அவரின் போதனைகளை தமிழக முஸ்லிம்கள் முறையாக ஆரம்ப காலத்திலிருந்து பின்பற்றியிருந்தால் நீங்கள் இப்போது ராமசாமி யாக இருக்க மாட்டீர்கள்.ஒரு அப்துல்லாவாக இருந்திருப்பீர்கள்.
ஆ! நீங்கள் இதனை நல்ல மனதுடன்தான் சொல்லியிருப்பீர்கள் என நினைக்கிறேன்! :-(
ஆகையால் முதல்வாசித்தலுக்கு இது ஒரு சாபம் போலப் பட்டது. இப்படியெல்லாம் உங்களுக்கு எப்படித்தான் சொல்லத் தோன்றுகிறதோ, எல்லாம் நீங்கள் நம்பும் அந்த அல்லாவுக்குத்தான் வெளிச்சம்! :-)
சரி. ஆனால், உங்கள் கருத்தை, உங்களுடைய ஆத்மார்த்தமான நகைச்சுவை உணர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக, பத்திரமாக வைத்துக்கொள்கிறேன்.
அய்யா ‘சிங்கப்பூர்’ மொஹெம்மத், நான் ஒரு வெறும் காஃபிராக அதுவும் ஒரு கேடுகெட்ட முல்ஹத்தாகவே இருந்துகொள்கிறேன். ஏனெனில் நான் ஒரு சுதந்திரப் பறவை.
நம்முடைய பாரதம் சகிப்புத் தன்மைக்குப் பெயர்போனது. ஆக, உங்களைப் போன்ற ஆசாமிகளையே பொறுத்துக்கொண்டிருக்கும்போது, அது என்னைப் பொறுத்துக்கொள்ளாதா என்ன?
உங்களுக்கு – அல்லாஹ் ஹஃபிஸ் அல்ல, குதாஹ் ஹஃபிஸ் சொல்லிவிட்டு, வாஹ் அலைக்கும் ஸலாம் என்றும் சொல்லிக் கொள்கிறேன்.
எது எப்படியோ, நன்றி.
August 23, 2015 at 06:18
ஐயா! தங்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.
சில போது தங்களுடைய சொற்களின் ‘கொச்சை’த் தன்மையை(எடுத்துக்காட்டு:குஞ்சாமணி, குண்டி, குசு)முகச் சுளிப்போடு கடந்துவிடுவேன்.ஆனாலும் உங்களை வாசிப்பதைத் தவிர்க்க முடியவில்லை.ஏனெனில் தாங்கள் தரும் ஆதாரபூர்வமான தரவுகள்.
தங்களுடய வாசிப்பின் வீச்சு.நான் அறியாத பல செய்திகளையும், புத்தகங்களையும் அறிமுகம் செய்வது.. ஆகியவை என்னை உங்கள் வாசகனாக மாற்றியுள்ளது.
இந்த சிங்கப்பூர் முகமதுக்குத் தாங்கள் அளித்துள்ள பதிலில்தான் எத்தனை உண்மைகள்.எத்தனை செய்திகள்! இஸ்லாத்தில் 72 வகை உள்ளது என்பது
சகோதரர் சிங்கப்பூர் முகமது அறிவாரா? எல்லோருமே தாங்கள் மட்டுமே சரியான நபி வழியினர் என்றும், ஏனையோர் பொய் வழியினர் என்றும் கருதிக் கொள்வதும், தாங்கள் மட்டுமே சொர்க்கம் செல்லப் போவதாகவும்,பொய் வழியினர் அனைவரும் நகரத்தில் தள்ளப்படுவார்கள் என்றும் சொல்லிக் கொண்டு இருப்பதும் அறிவாரா?
August 23, 2015 at 06:48
அய்யா முத்துகிருஷ்ணன், நன்றி.
நான் ஒரு ‘பேக்கேஜ்’ – மற்றவர்களைப் போலவே ஒரு கலவைக்காரன் மட்டுமே; ஏற்பவைகளை ஏற்கலாம் – மற்றவைகளைக் கடாசலாம்.முடிந்தால் உரையாடலாம். இருந்தாலும் எதற்கும் அவசியமில்லை. கண்டுகொள்ளாமல் கடந்தும் செல்லலாம்.
குஞ்சாமணி, குண்டி, குசு பற்றி: :-)
1. நீங்களே எழுதுவது போல நான் இல்லாத ஒன்றை எழுதுவதில்லை; ஆதாரமில்லாமல் அட்ச்சுவுடுவதும் இல்லை. அதனால் தான் இவற்றைப் பற்றியெல்லாம் எழுதுகிறேன்.
2. அய்யா, நம் உடம்பின் பாகங்களை அவற்றின் செயல்பாடுகளைப் பற்றிய என் மேலான குறிப்புகளைத் தானே எழுதுகிறேன்? இதற்கு ஏன் முகம் சுளிக்கவேண்டும்? உங்களிடம் அவை இல்லையா? எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.
3. திராவிட இயக்கத்தில் ‘முப்பெரும்’ ‘ஐம்பெரும்’ போன்ற கருத்தாக்கங்கள் உண்டல்லவா? அதே போல என்னுடைய இம்மாதிரிச் சொல்லாடல்களையும் ‘முப்பெரும் கு-க்கள்’ என எடுத்துக்கொள்ளலாமே! திராவிட இயக்கச் சிந்தனைகளை விட மேலானவை அல்லவா இவை? மேலும், இப்போதைக்கு இருபெரும் ங்-குகள் கைவசம் இருக்கின்றன: ங்கோத்தா, ங்கொம்மாள. தாங்கள் உதவி செய்தால் இன்னொரு ங் சேர்ந்து முப்பெரும் ங்-குகளையும் என் கொள்கைப் பிரகடனமாக்க ஆசை!
4. கோபித்துக் கொள்ளாதீர்கள். ஒத்திசைவைப் படிக்கும் பத்துபேரில் ஒருவரான நீங்களும் இப்படிச் செய்தால் சரியா? ;-)
மற்றபடி, இரவு தூங்குவதற்கு முன் கண்டிப்பாகப் பல் துலக்கவும்.
ஙப்போல் வளை.
அட்ச்சு வுடேல்.
நன்றி.
August 23, 2015 at 11:48
இவ்வளவு விளக்கமான இந்த கட்டுரையையும் கூட வெறும் அவதூறாகவே திரு. மொஹம்மத் கடந்து செல்லும் வாய்ப்புகளே அதிகம்…. சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்?
August 23, 2015 at 19:28
ALLAH WILL PUNISH INFIDEL KAFFIRS
August 24, 2015 at 06:09
ராமசாமி சாருக்கு மிக்க நன்றி.மிக விரிவான சிந்திக்க வைக்க கூடிய பதிவு.நான் நீங்கள் சொல்வது போல் அரைகுறைதான்.போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம் தான்.கேள்விப்பட்ட சில விசயங்களையும் சொல்லிவிட்டேன்.முழுக்க நம்பிக்கை சார்ந்தவன் தான்.ஆனால் இஸ்லாமை அறிந்து கொள்ளவும் முயன்று கொண்டிருக்கிறேன்.
ஆனால் ஒருவன் உண்மையான முஸ்லிமாய் இருந்தால் அவன் பொய் சொல்லமாட்டான்,புறம் பேச மாட்டான்,அநியாயம் செய்யமாட்டான்,பெண்களை மதிப்பான்,ஏழைகளுக்கு உதவுவான்,பிற மதங்களை மதிப்பான்,மொத்தத்தில் அவனால் பிற மனிதர்களுக்கு,பிற உயிர்களுக்கு எந்த தொந்திரவும் இருக்காது என்பதை உறுதியாய் நம்புகிறேன்.ஆனால் நிறைய முஸ்லிம்கள் அப்படி இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.நான் அப்படி இருக்க முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன்.
உங்களுக்கு எந்த காஃபிர் பஃத்வாவும் நான் கொடுத்து விட வில்லை.நீங்கள் ஒரு மிக சிறந்த முஸ்லிமாக இருக்க தகுதியானவர் என்ற அர்த்தத்தில் தான் சொல்லியிருந்தேன்.
தங்களின் மூலம் நான் நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள உதவியமைக்கு மீண்டும் நன்றி.
August 24, 2015 at 11:56
This is an interesting reply.
August 24, 2015 at 12:44
There are fine people everywhere, sir!
So, one has to believe it to see it? :-)
August 26, 2015 at 08:15
தங்களின் பரந்த பெரிய மனதுக்கு நன்றி.தங்களிடம் கற்றுக்கொள்ள எங்களுக்கு நிறைய இருக்கிறது.
திராவிட மணிகளை விட்டு விடுங்கள் சார்.
மதங்கள்,அறிவியல்,கணிதம் சார்பான முக்கியமான உங்களின் நேரடி கட்டுரைகள்,விளக்கங்கள்,முக்கியமான ஆங்கில கட்டுரைகளின் தமிழாக்கங்கள்(வேறு யாரவதாயிருந்தால் தமிழ் “படுத்தி”விடுவார்கள்) எதிர்பார்க்கிறோம்.செய்வீர்களா சார்…
August 25, 2015 at 13:06
“அய்யா, நம் உடம்பின் பாகங்களை அவற்றின் செயல்பாடுகளைப் பற்றிய என் மேலான குறிப்புகளைத் தானே எழுதுகிறேன்? இதற்கு ஏன் முகம் சுளிக்கவேண்டும்? உங்களிடம் அவை இல்லையா? எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.”
என்ன முத்து கிருஷ்ணன் சார்,எப்படி போனாலும் இந்த ஆளு ‘கேட்டை” போடுகிறாரே என நினைக்கத்தோன்றுகிறதா? :-)