எழுதாக்கிளிவி: ஒரு பின்நவீனத்துவ பௌராணிக மரபு

April 19, 2018

பாரதத்தின், ஞான-தர்ம மரபுகளின் அழகான விஷயங்களில் ஒன்று என்னவென்றால், இவற்றுக்கு யார் வேண்டுமானாலும் (பாமரனும் பரிசுத்தஆவி அறிவிலியுமான அடியேன் உட்பட) வியாக்கியானம் கொடுக்கலாம். பொழிப்புரையும் பழிப்புரையும் எழுதலாம். யாரும் கழுத்தை அறுக்கவரமாட்டார்கள். புத்துருவாக்கங்களும், புதுப்பார்வைகளும், உரையாடல்களும், சமரசங்களும் – நம் நெடிய மரபுநீட்சிகளின் அடிப்படைகள்.

அதேசமயம் – இதை இன்னொரு பார்வையிலும் பார்க்கலாம்: பொறுப்பில்லாமல் டமாலென்று அட்ச்சுவுடலாம். (இதுவும் என்னைப் போலவேதான்)

-0-0-0-0-0-0-

ஜெயமோகன் அவர்கள் தளத்தில், அண்மைய பதிவு ஒன்று – சோர்பா எனும் கிரேக்கன் – அருண்மொழி நங்கை – இப்படி ஆரம்பிக்கிறது. (இதனை அவர் எழுதவில்லை, அருண்மொழி நங்கை எனும் ஒருவர் எழுதியிருக்கிறார்)

“ஒரு கிளி பழம் தின்கிறது. இன்னொன்று அதை பார்த்திருக்கிறது. இது உபநிஷத வரி. மனதின் இரு நிலைகளுக்கு உவமானமாக சொல்லப்படுவது. இதை இந்நாவலுக்கு பொருத்திப் பார்க்கிறேன்.”

ஆஹா!

பிரச்சினையென்னவென்றால் – எனது எண்ணற்ற அரைகுறைத் தனங்களில், எனக்கு ஒரளவு எழுத்துக்கூட்டி ஸம்ஸ்க்ருதம் படிக்க வரும். ஓரளவு ஒண்ணாங்கிளாஸ் அளவில் படித்திருக்கிறேன். (ஆக, யாராவது சான்றோர்/அறிவாளிகள் பொளேரென்று என் மண்டையில் அடித்து, மடையா, அப்படியில்லை இப்படித்தான் என்று சொன்னால் கேட்டுக்கொள்ள, வாங்கிக்கட்டிக்கொள்ளத் தயார்!)

ஆக, எனக்கு இப்படி கிளி மான் தேன் என்றெல்லாம் படித்ததாக நினைவில்லையே, வெறுமனே பறவைகள் (+அழகான இறக்கைகள் உடையவை) என்று மட்டும்தானே இருந்தது என மறுபடியும், என் நூலகத்திலுள்ள சிலபல பிரதிகளைப் புரட்டினேன்.

இந்தத் தத்துவார்த்த எடுத்துக்காட்டு – நம் மரபுப் புத்தகங்களில் பல இடங்களில் வருகிறது – ரிக்வேத ஸம்ஹிதை (1.164.20-22), ப்ரஸ்னோபநிஷத் (1-4 ஆனால் இது ரயி, ப்ராணா என்று போகிறது), ஸ்வேதாஸ்வதார உபநிஷத்(4.6-7), முண்டக உபநிஷத்(3.1.1-2)  போன்ற பல இடங்களில் வருகிறது. எடுத்துக்காட்டாக ரால்ஃப் க்ரிஃபித் அவர்களின் 1896 ரிக்வேத மொழியாக்க வரிகள் கீழே:

http://www.sacred-texts.com/hin/rigveda/rv01164.htm

பறவைகளெல்லாம் கிளிகளல்ல. ஆனால் கிளி, நிச்சயம் ஒரு பறவைதான். ஒப்புக்கொள்கிறேன்.

ஆனாலும் இப்படியெல்லாம், அடிப்படைகளைச் சரிபார்க்காமல் எழுதுவது சரியில்லை. இம்மாதிரிப் போக்குகளுக்குப் பல காரணங்கள் இருக்கலாம்:

அசிரத்தை.

எவனோ எங்கோ எழுதியதைச் சரிபார்க்காமல் அப்படியே, யார் சரிபார்க்கப்போகிறார்கள் என மனதறிந்து எழுதுதல்.

மானேதேனே அணுகுமுறை.

அட்ச்சுவுட்டு மேதாவித்தனப் புல்லரிப்பைக் காண்பித்துக் கொள்ளல்.

இவற்றில் இந்த அம்மணி, அசிரத்தையாக எழுதிவிட்டார் எனக் கருதிக்கொள்ளவே ஆசை.

-0-0-0-0-

இங்குதான் ப்ரசித்தி பெற்ற எழுதாக்கிளிவி ஞானமரபு வருகிறது.

ஆனால் அதனைப் புரிந்துகொள்ள, அதன் பாட்டியான, எழுதாக் கிளவி பற்றிப் புரிந்துகொள்ளவேண்டும். இது தமிழ் வார்த்தைதான் – எழுதப் படாமல், வாய்-செவி சப்தங்களாகவே வாழ்ந்து, உபதேசமாக மற்றவர்களை அடையும் விஷயங்கள் இவை. மிகவும் மலினப்படுத்தவேண்டுமானால் இவற்றை ‘oral culture’ or ‘oral transmission’ எனலாம்.

ஆனால் – அக்காலக் கிழவிகளில் சிலர் எழுதவே மாட்டேன் என அடம்பிடித்தபோது அவர்களைச் சாடி, ‘எழுதாக் கிளவி’ என அக்காலத் திராவிடர் விளித்தனர் என தொல்காப்பியர் ஸெராக்ஸ் (இவர், அப்போஸ்தலர் தாமஸின் நண்பர், க்றிஸ்தவரானவுடன் தன் பெயரை இப்படி மாற்றிக்கொண்டவர் என்பதை ஒத்திசையும் அந்த ஏழரை பேர் அறிவீர்கள்! அண்மையில் நான் அறிந்துகொண்ட மேலதிகக் கொசுறு விஷயம்: சென்னை அடையாரில் இருக்கும் திரு. ஸ்டூடெண்ட் ஸெராக்ஸ் – நம் செல்ல தொல்காப்பியரின் வழித்தோன்றலாம்! ) எழுதியதாகவும் ஒரு திருச்சபை ஐதீகம்.

எழுதாக் கிளிவி என்பது – கிளி என்பது அக்கால மூலங்களில் எழுதப் படவில்லையென்றாலும், சும்மா கிளி என்று மேலதிகமாகச் சொன்னால் குறைந்தா போய்விடுவோம் என்றும், தமிழர்களுக்குக் கிளி பிடிக்கும் என்றும் ஒரு ஜோசிய அனுமானத்தனத்துடன் அமோகமாக எழுதப்படுவது.

அதனால்தான் சொல்கிறேன்: ‘எழுதாக் கிளிவி ‘ மரபின் தானைத் தலைவிகளில் ஒருவர் – அம்மணியார் அவர்கள். அவர் குற்றம் ஓங்குக.

என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஜெயமோகன் அவர்களும் இப்பாரம்பரியத்தில் வந்தவர்தாம். செவிவழியில் கேட்டதையும் கேட்டதாக நம்புவதையும், சிலபல வாசனைத் திரவியங்களையும் நானாவித அறுசுவைப் பதார்த்தங்களையும் கலந்து, சில சமயங்களில் தேவையேயில்லாமல் சகட்டுமேனிக்கும் அட்ச்சுவுடுபவர்தாம். என்ன சோகம்.

…மேலும், இந்த வேலைவெட்டியற்ற பதிவின் ஆரம்பத்தில் சொன்னதுபோல – பாரதப் பாரம்பரியங்களில் ஒன்று அதன் நெகிழ்வுத் தன்மை. ஆகவே, எஸ்ராமகிருஷ்ணனால் காபந்தும் காப்புரிமையும் செய்யப்பட்டுள்ள நெகிழ்வாலஜி வழியாகப் பார்த்தால் – எழுதாக் கிளிவியும் ஒப்பு நோக்கில் ஒப்புக்கொள்ளக்கூடியதே!

-0-0-0-0-0-

ஆனால் சக தமிழ் முண்டங்களுக்கு எதற்கெடுத்தாலும் தமிழ்த் திரைப்படப் பண்பாட்டு எடுத்துக்காட்டுகளும் குறிப்புகளும் (‘cultural references’) கொடுத்தால்தான் ஒத்துவரும் என்பதை ஒரு முண்டவுபநிஷதக்காரனாக உணர்ந்திருக்கிறேன். ஆகவே.

இதே எழுதாக்கிளிவி ஞான மரபில் – ‘பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ’ எனும் எம்ஜிஆர் பாடல் கூட, ஆத்ம-ஜீவ விசாரத்தை அல்லது விபச்சாரத்தைக் குறிப்பிடுவதாகவே சொல்லலாம்.

புரிந்ததா? ஏனெனில் உபநிஷத வரிகளில் கிளி இருக்கிறதே?

இன்னொன்று: கிளி பற்றி பல படங்கள் வந்திருக்கின்றன: அன்னக்கிளி, பஞ்சவர்ணக்கிளி, கூண்டுக்கிளி….

இவற்றைப் பலமுறை பார்த்து உள்வாங்கிக்கொண்டால்போதும் – வேறு ஞானமார்க்க ஆத்ம தத்துவ விசாரமே தேவையில்லை. ஹ்.

நம் தமிழ்த் திரைப்பட ஞானமரபு என்பது அனாதிகாலம் தொட்டு நம்மைத் தொடர்ந்துவருவது… நம் நெடி வாய்ந்த பாரம்பரியங்களில் ஒன்று.

-0-0-0-0-0-

என் பயம்: நிகோஸ் கஸன்ட்ஸாகிஸ் பற்றித் தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும், மகாமகோ சாருநிவேதிதா கோமகனாரிடம் கண்டிப்பாக முன்னனுமதி பெறவேண்டும். ஏனெனில் அவர், இம்மாதிரி கிரேக்கம் லத்தீனம் அமெரிக்கம் ஃப்ரெஞ்சம் போன்ற விஷயங்களைப் பற்றி கொஞ்சுதமிழில் எழுதுவதற்கு ஏகபோகக் குத்தகை எடுத்திருப்பவர்.

+மகா கோபக்காரர் அவர். விஷயங்கள் எல்லை மீறினால், இன்னொரு விளிம்பு நிலை நாவல் ஒன்றை எழுதி அர்ஜெண்டினாவில் ஸெட்டில் ஆகிவிடுவார். 2019 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் அல்லோலகல்லோலங்களில், தமிழகத்துக்கு இது தேவையா? :-(

பாவம், இதை அறியாமல் இந்த அம்மணி அறியாமையின் காரணமாகவும் வெகுளித்தனமாகவும் எழுதியிருந்தால் – பாபவிமோசனம் பெற்றுக்கொள்ள உடனடியாக அமெத்திஸ்ட் சாப்பாட்டுக்கடைக்குச் சென்று மேற்படி குத்தகைதாரருக்கு மொய் எழுதவேண்டும்.

ஏனென்றால் – பாரதத்தின், நம் மரபுகளில் உள்ள இன்னொரு ஆத்துமசுகமளிக்கும் விஷயம் என்னவென்றால் – எந்தக் குற்றத்துக்கும் இம்மையிலேயே பரிகாரம் உண்டு.

ஆனால் இந்தப் பரிகாரத்தை – ‘நன்றாகக் காரம் கொண்ட குதிரை மாமிசம்’ என்ற எஸ்ராமகிருஷ்ண உபநிஷத பாஷ்யக் கருத்தில்  (©2018, எஸ்ரா) நான் சொல்லவில்லை என்பதும் எழுதாக்கிளிவி.

நன்றி.

21 Responses to “எழுதாக்கிளிவி: ஒரு பின்நவீனத்துவ பௌராணிக மரபு”

  1. Kannan Says:

    ஒரு கிளிக்குபோய் இத்தனை அக்கப்போரா ?

    எனக்கு வேறெங்கும் வேலையில்லை, உமக்கும் அப்படித்தான் போலிருக்கு.


    • :-( ஒரு கிலிதான்.

      மேலும் அவை இரண்டு கிளிகள். மன்னிக்கவும்.

      ஆனால் எழுதாக்கிளிவி எனும் அற்புதப் படிமம் மூலமாக இலக்கியத்தைப் புரிந்துகொண்டால், பரலோக ராஜ்ஜியம் உங்களுடையதும்.

  2. ஆனந்தம் Says:

    கார ராமம், (கொஞ்ச நாளா அதுதானே தூக்கலா இருக்கு) ,
    //அருண்மொழி நங்கை எனும் ஒருவர்// அவர் யாரோ ஒருவர் அல்ல, சாட்சாத் ஆசானின் மனைவி ஆசானி இது தெரியாததால் உங்களுக்கு இந்து ஞானமரபின் தரிசனங்கள் எதிலும் உள்ளொளி பெற்று உள்வாங்கும் அளவு செவ்வியல் மரபு அவதானிப்பின் போதாமை உள்லது என்கிற கோணத்தில் இந்தப் பிரச்சினையை நான் மூன்றாகப் பிரித்து மேய்ந்ததில் நீங்கள் எழுத வேண்டிய கிளிகளே இன்னும் நிறைய இருப்பதால் எழுதாக்கிளவிகளை எழுதாமலே விட்டுவிடுவதே நல்லது என்ற என் கருத்தை முன்னெடுப்பு செய்கிறேன்.
    அல்லது கி(ளி)ளவிகள் தன்னைத்தானே தனக்குத்தானே தந்தானே எழுதிக்கொண்டு ஜென் முறையில் நெகிழ்ந்து தத்துவரீதியாக முக்தி அடைந்துவிடும் என்று எஸ்ராத்தனமாக நம்பி மகிழும்படி வேண்டுகிறேன்.
    ஆனந்தம் ( ரா வாசகர் செவ்வகம்)


    • ஓ! ஞான் அறியில்யா. க்ஷமிக்கண்டே. :-(

      தம்பதிகள் நீடூழி சகல சௌபாக்கியங்களுடனும் அமைதியுடனும் வாழட்டும். அவர்களுடைய பிள்ளைகளும் அப்படியே ஆகட்டும்.

      அவசரமாக இறங்கிய வேதாளம் திரும்பவும் மேலேறுகிறதே, ஐயகோ!

      ஆனாலும். நெஞ்சில் யூரியாவுமின்றி, ஒர்மைத் திறமுமின்றி பஞ்சத்தில் வீழ்ந்தாரடி – பொய்ச்சொல்லில் காரரடி.

      கிளிக்கண் பாடாவிட்டாலும் குர்ரம் ஷாஜஹானே!

      ரொம்ப கிளிஷேவா ஆய்டிச்சி போல…

      ரா.

  3. ஆனந்தம் Says:

    //ஆனால் சக தமிழ் முண்டங்களுக்கு எதற்கெடுத்தாலும் தமிழ்த் திரைப்படப் பண்பாட்டு எடுத்துக்காட்டுகளும் குறிப்புகளும் (‘cultural references’) கொடுத்தால்தான் ஒத்துவரும் என்பதை ஒரு முண்டவுபநிஷதக்காரனாக உணர்ந்திருக்கிறேன். ஆகவே.//
    ஆனால் நீங்கள் கொடுத்துள்ள எடுத்துக்காட்டுகள் எழுத்து வடிவமாகவே உள்ளன. https://www.youtube.com/watch?v=UajvMpm6xYE இது தமிழ்த் திரைஞான மரபில் வருவதால் எழுதாக்கிளிவியேதான். கண்டு ‘உய்’யவும். :)))
    (அதாவது விசிலடிக்கவும்)


    • நன்றி, ஆனந்தமே வைபோகமே.

      நான் இந்தப் பாட்டைப் பலமுறை கேட்டிருக்கிறேன் – ஆனால் இப்போதுதான் தொடர்புடைய நகர்சித்திரங்களைப் பார்க்கிறேன். நன்றி, ஒரு மாதிரி.

      இதுதான் ஒரிஜினல் ஃபேக் விஷயமா? அல்லது ஒருஜினல் பாட்டுக்கு ஃபேக் சித்திரங்களா? புரியவில்லை.

      ஆனால் பாட்டு கொஞ்சம் அவசரகதியென்றாலும் – ஆக, படப்பின்புலங்களின் அமைதியுடன் ஒத்திசைவில்லையென்றாலும் கொஞ்சம் பரவாயில்லை வகைதான்.

      முகச்சுளிப்பு: சிறுகுழந்தைகளை வாயில் முத்தம் கொடுக்கவைத்து அவர்களையும் அசிங்கப்படுத்தியதைப் பார்க்கக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

  4. Singarayan Says:

    தங்களின் நிலைபாட்டிர்கு எதிராக இருப்வர்களை ஏதேனும் தவறு கண்டுபிடித்து விமர்சிப்பது மனநோய். நன்றி


    • அய்யா சிங்கராயன்,

      உண்மைதான். அட்சரத்துக்கு லட்சம் பொன்.

      நன்றி.

    • Anonymous Says:

      எனில் ஜெ அவர்களுக்கும் இது பொருந்துமே அவருக்கும் மனநோயா. அவரும் விமர்சனங்களை வைக்கிறார்


      • அய்யா, நீங்கள் என்னைப் பழித்தாலும் பழிக்கலாமே தவிர, என் ஆசானை, தயைசெய்து பழிக்கலாகாது.

        இல்லையேல் சிங்கம் விழுந்து பிடுங்கிவிடும். ஆக, சமர்த்தாக அவர் போடும் சோற்றைச் சாப்பிடவேண்டும். வாயைத் திறந்துகொண்டே வெண்ணிலாவைப் பார்க்கவும்.

        உமக்கு காக்கா கதை வேண்டுமா, கிளி கதை வேண்டுமா?

        நன்றி.

      • Singarayan Says:

        நான் jayamohan விமர்சனத்திற்கு அப்பார்பட்டவர் என்று சொல்லவில்லை. தன்னுடைய அரசியல் நிலைபாட்டிற்கு எதிராக இருப்பதால் ராமசாமி அவர்கள் அவரிடம் குறை காண ஆரம்பித்தார். அதை தான் சுட்டி காட்டினேன். தவிர எல்லா பறவையும் பழம் உண்பதில்லை. நன்றி


      • அய்யா சிங்கராயன், அவருடைய அரசியல் நிலை எனக்குப் புரிவதில்லை. அவருக்குமே கூட அது புரியவில்லை எனப் புரிந்துகொள்கிறேன்.

        அவர் மீதான என் தாபத்துக்குக் காரணங்கள்: அ) அட்ச்சுவுடல். ஆ) ஆதாரம் இல்லாமல் எழுதுதல் இ) இலக்கியம் என்பது தன் பலம் என்று நன்றாகவே புரிந்துகொண்டதால் பிற விஷயங்களும் ஆட்டொமெடிக்காகப் புரிந்துவிட்டன எனக் கருதுவது ஈ)… ஈப்போதைக்கு இவ்வளவு போதும். ஏற்கனவே கள் குடித்ததுபோலுள்ளது.

        நன்றி.

      • Kannan Says:

        add to the list

        poor attribution or no attribution.ex. Alexander Frater title ‘Chasing the Monsoon’ was used as மழையைப் பின் தொடர்தல். It could be coincidence :).

        அற்பத்தனத்தை அகங்காரத்தால் எதிர்கொள்கிறேன் phrase initially appeared as JK’s quote but later came as his own.

        or am I confused :(


      • அய்யா, you are not.

        உங்கள் அகங்காரத்தை என் அற்பத்தனத்தால் எதிர்கொள்வதை (=opposite horsegram torture) விட்டால் எனக்கு வேறு வழியேயில்லை. :-P

  5. ஆனந்தம் Says:

    ஒரிஜினல் ஃபேக்கே இதுதான்.ஆனால் என்ன செய்வது, தமிழ் விசிலடிச்சானியல் மரபுப்படி. விளையும் குளுவான் முளையிலேயே தெரிந்தால்தானே திராவிடத் தமிழ்க் குளுவானாக முடியும் அல்லவா?

  6. ஹரீ்ஷ் Says:

    எழுதாக்கிளவியா? இன்னா கத. அவுரே எழ்திக்கிறாரு. “தந்தையே, அங்கே நேற்று ஒரு ஆலமரம் கண்டேன். அதில் இரண்டு கிளிகள். ஒருகிளிபோன்றே இன்னொன்று. ஒன்று பழம் தின்றுகொண்டிருந்தது. ஒன்று வெறுமே நோக்கி அமர்ந்திருந்தது” என்றான். ‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 19 https://www.jeyamohan.in/61236#.WtjWKX_9mUk


    • :-)
      அய்யா ஹரீஷ், நன்றி.

      இதற்கு நம் நற்றமிழ் இலக்கணத்தில் ‘இரட்டைக் கிளிவி’ எனப் பெயர். இது தெரியாமல் உங்கள் கண்களைக் கட்டிப்போடும் திரை ‘தடுப்புத் தொகை’ என அரிவீறாக.

      முதலில் உங்கள் அலக்கணப் புத்தகத்தைப் படித்துவிட்டு பின்னர் சாவகாசமாக, ஆசானைக் கிண்டல் செய்யலாம் சரியா?

      ஜெயமோகன் எது செய்தாலும் அது சரியாகத் தான் இருக்கும் என்பது என் சொந்த எழுதாக் கிளவன். நன்றி.

  7. Sivaa Says:

    சமஸ்கிருதத்திற்கு நாங்கள் தான் முழு அத்தாரிட்டி என்கிற பூனுல் மனப்பான்மையிலிருந்து எழுந்தது தான் இந்தப் பதிவு… இல்லையென்றால் இது ஒரு பெரிய விஷயமே அல்ல


  8. […] அதனால்தானோ என்னவோ, எனக்குப் பலர் அறிவுரை கொடுப்பார்கள். ஆஹா, கேட்டுக்கொண்டால் என்ன […]


  9. […] எழுதாக்கிளிவி: ஒரு பின்நவீனத்துவ பௌர… 19/04/2018 […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s