நாகா சாதுக்கள், ஜூனா அகடா, மஹாமண்டலேஷ்வர் அவ்தேஷானந்த்ஜி, மதுபூர்ணிமா கிஷ்வர் அவர்கள் – சில குறிப்புகள்
May 18, 2021
(எனக்குச்) சந்தேகத்துக்கிடமில்லாமல், பாரதத்தின் தலைசிறந்த ஆன்மிக+காத்திரமாக களத்தில் செயல்படும் ஆசாரியர்களில் ஒருவராக மஹாமஹோ அவ்தேஷானந்த்ஜி அவர்களைப் பார்க்கிறேன்.
+ அச்சான்றோர் மேற்கொண்ட தீவிர சீர்திருத்தங்களை விவரிக்கும் ஒரு சுவாரஸ்யமான, ‘ஆத்ம சுகமளிக்கும்’ நேர்காணலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
(நேர்காணல் செய்தது என் அன்புக்கும் மிகுந்த மரியாதைக்குமுரிய மதுபூர்ணிமா கிஷ்வர் அவர்கள்;
ஹ்ம்ம், ஆனால் இந்த உரையாடல், ஹிந்தியில் இருக்கிறது. அதனால் என்ன, ஒரு பெரிய பிரச்சினையும் இல்லை. ஏனெனில்…
…சகஏழரைகளுக்கு இது நிச்சயமாகத் தெரிந்திருக்கும் என்றாலும், ஒத்திசைவுப் படுகுழியில் தன்னிச்சையாக வீழும் அப்பாவிகளுக்கு, சில முக்கியமான உண்மைகள்: ஹிந்தியில் எக்கச்சக்கமாக ஸம்ஸ்க்ருத வார்த்தைகள் தாம்; திராபை திராவிடத்தையும் மீறி நம் தமிழிலும் நிறைய நம் பேச்சுவார்த்தைகளில் வழக்குகளில் கூட ஏகத்துக்கும் ஸம்ஸ்க்ருத மூலங்கள் 1500-2000 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கின்றன; ஆக, கொஞ்சம் முனைந்து கேட்டால் இந்த நேர்காணல் பிடிபடும். தட்டச்சும் கைப்பழக்கம், செம்ஹிந்தியும் காதுப்பழக்கம்.
அல்லது விசித்திரமும் கைப்பழக்கம், செண்தமிளும் நாப்பலக்கம்; அஷ்டே!)
-00-0-0-0-00-
மது கிஷ்வர் அவர்கள், செப்டம்பர் 8, 2020 அன்று ஹரித்வார் நகரில் செய்த இந்த நேர்காணலில், பஞ்ச தஷ்நாம் ஜூனா அகடா/ராவின் மகாமண்டலேஸ்வர், சுவாமி அவ்தேஷானந்த் கிரிஜி அவர்கள், பாரதத்தின் நாக சாதுக்களின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் பொதுப்புத்தி(யின்மை) சார்ந்த எதிர்மறையான ஸ்டீரியோடைப்பிங்கை, உண்மையேயற்ற பொதுமைப்படுத்தலைத் தகர்க்கிறார்.
இவ்வுரையாடல் குறித்த சில குறிப்புகள் கீழே; முழுமையான விவரங்களுக்கு முப்பது+ நிமிடங்களே ஓடும் இந்த யூட்யூப் விடியோவைப் பார்க்கவும்:
Radical Reforms in Juna Akhada by Mahamandaleshwar Avdheshanand Ji
மகாமண்டலேஷ்வர் அவ்தேஷானந்த் கிரிஜி தலைமையிலான பஞ்ச தஷ்னம் ஜூனா அகாரா எனும் மகத்தான அமைப்பானது – ஜாதி பாலினம் போன்ற சமூகத் திரள்களில் உள்ளார்ந்து இருக்கும் சிடுக்கல்களைக் களைந்து, முன்னேற்றத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் தடையாக இருப்பனவற்றை அகற்றி – பட்டிய திரட்கள், பெண்கள், ஏன் திருநங்கைகளுக்குமே கூட மகாமண்டலேஷ்வர் அந்தஸ்தை வழங்குவதன் மூலம் ஹிந்து சமூக ஒருங்கிணைப்புக்கும் மறுமலர்ச்சிக்கும் உழைக்கிறது.
பாரதத்தில் பெருமை பெற்ற 13 அகடாக்களில், ஜூனா அகடா மிகப் பழமையானது, மேலும் ஒப்பு நோக்க மிகப்பெரியது. எடுத்துக் காட்டாக, ஸ்வாமி அவ்தேஷானந்த் கிரிஜி, தனது பதவிக் காலத்தில் 10 லட்சம் நாக சாதுக்களுக்கு தீட்சை வழங்கியிருக்கிறார்…
சமீபத்திய ஆண்டுகளில் அவர் அறிமுகப்படுத்திய தீவிர சீர்திருத்தங்கள் (இவற்றில் பலப்பல ஆச்சரியம் கொடுக்கக் கூடியவை; ஒரு பெரும்/நெடிய பாரம்பரியம் உடைத்த ஒரு ஆன்மிக/களச்செயல்பாட்டு அமைப்பில், இம்மாதிரித் திருத்தங்களும் பார்வைகளும் சாத்தியம் என்பது – நம் ஹிந்து மதத்தில் மட்டுமே நடைபெறக்கூடிய விஷயம்) குறித்து, ஸ்வாமி அவ்தேஷானந்த்ஜி விவாதிக்கிறார், செய்திகளைத் தருகிறார்.
இவற்றில் சில சீர்திருத்தங்கள் பின்வருமாறு: (அவசர கதியில் மொழிபெயர்ப்பு(!) செய்து எழுதியிருக்கிறேன்; தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்)
- 2019 ஆம் ஆண்டு கும்பமேளாவின் போது 5 ‘தலித்’ பெண்களுக்கு “மகாமண்டலேஸ்வர்” என்ற உயர்ந்த பட்டம் அளிக்கப் பட்டது.
- கும்பம் 2019 ஆம் ஆண்டில் 221 ‘தலித்’ பெண்கள் உட்பட 551 ‘தலித்’துகளை சன்யாஸிகளாகவும் ஸன்யாஸின்களாகவும் ஒருங்கிணைத்துக் கொண்டது
- 2019 ஆம் ஆண்டு கும்பத்தில் 5 கின்னர்கள் (திருநங்கைகள்) மகாமண்டலேஷ்வர் என்ற தகுதி கொடுக்கப் பட்டார்கள்
- மேலும் விருப்பப்படும் கின்னர்களுக்கும், அகடாவில் ஆழ்ந்து ஈடுபட நினைக்கும் பார்வையாளர்களுக்கும் மத, ஆன்மீக மற்றும் சடங்கு போதனைகளை (‘தீக்ஷா’ – தீட்சை) வழங்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
- ஜூனா அகடா பேரமைப்பில், கின்னர் அகடாவின் பிரதிநிதிகள், ஜூனா அகாராவின் பாரம்பரியம், பழக்கவழக்கங்கள், விதிமுறைகள் மற்றும் சடங்குகளை பின்பற்றுவதாக எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றனர்.
- ஒவ்வொரு உயிரினத்திலும் ஒரே தெய்வீகம் குடிகொண்டு எல்லாவற்றிலும் தெய்வாம்ஸம் இருக்கிறது என நம் ஸனாதன தர்மம் கருதுவதால், கின்னர்களும் வெளிப்படையாக வரவேற்கப் பட்டு அகடாவில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று சுவாமி அவ்தேஷானந்த் ஜி விளக்குகிறார்.ஏனெனில், ஹிந்து ஸனாதன் தர்மத்திலிருந்து திருநங்கைகளை ஒதுக்கி வைப்பது அறமற்ற அதர்ம விஷயம் ஆகும்.
- இந்த ஒருங்கிணைப்பின் மூலம், கின்னர் அகடாவானது, கும்பமேளாக்களின் ஒரு இன்றியமையாத அங்கமாக உருவாகும்; மேலும் கும்பத்தின் போது ஷஹி ஸ்நானத்துக்கு (புனித, ஆன்மிகக் குளியல்) ஜூனா அகடா ஸாதுக்களுடன் கின்னர்களும் வருவர்; கும்பமேளா சடங்குகளிலும் கொண்டாட்டங்களிலும் பங்குபெறுவர்.
- இந்த நேர்காணலில், சுவாமி அவ்தேஷானந்த்ஜி, கிறிஸ்தவ ஸ்தாபனத்திற்கு, கத்தோலிக்க போப்புக்கு – ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்குள் இம்மாதிரிச் சீர்திருத்தங்களை முயற்சித்துப் பொருத்தவைக்க ஒரு வெளிப்படையான சவாலை வீசுகிறார். இந்திய பட்டியல் திரளினர் ஒருவர், க்றிஸ்தவத்திற்கு மாறிய பின் – எதிர்காலத்தில் அவரும் ஒரு போப்-ஆக ஏற்றுக்கொள்ளப் படும் ஒரு காலகட்டத்தை, அந்த நாளை யாராவது கற்பனை செய்ய முடியுமா? அல்லது ஒரு திருநங்கை பிஷப்பாக நியமிக்கப்படுவாரா?
- ஒப்பீட்டளவில், கிறிஸ்தவத்தின் சிறிய ப்ரொடெஸ்டன் ட் அமைப்புகள்/சர்ச்சுகள் கூட இத்தகைய தீவிரமான சீர்திருத்தங்களுக்கு தயாராக இல்லை
- வலிமைமிக்க இஸ்லாமிய ஸ்தாபனத்தை விட்டுவிடுங்கள்! இன்னும் அவர்கள் வழக்கம்போலவே எப்போதும், பன்முகத்தன்மையை அடிப்படையாக கொண்ட ஸனாதன தர்மத்தை இழிவுபடுத்துகிறார்கள், அவதூறுகளைப் பரப்புகிறார்கள்!
- …
ஸனாதன தர்மம் குறித்த சுவாமி அவ்தேஷானந்த்ஜி அவர்களின் சொற்பொழிவுகள் பல்வேறு தொலைக்காட்சிச் சேனல்களில் மிகவும் பிரபலமாக உள்ளன.
இதற்கு முக்கியமான காரணம் – வேதங்கள், ஸாஸ்திரங்கள், ஸ்மிருதிகள் + மஹாபாரத ராமாயண இதிஹாஸங்கள், காவியங்கள் ஆகியவற்றில் உள்ள ஆழமான உண்மைகளை எளிமையான அன்றாட மொழியில் லட்சக்கணக்கான சாதாரண பார்வையாளர்களுக்கு வழங்கும் அவரது திறன்.
-0-0-0-0-0-
பலப்பல நல்ல விஷயங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன -ஆனால் நம்மிடம் இவை பிரபலமடைவது இல்லை; இதற்குக் காரணம் தமிழகத்தில் இருக்கும் அர்த்தமற்ற, மடமைமிக்க ஹிந்தி எதிர்ப்பு என்பதாக இருக்கலாம். அல்லது எதிர்மறை விஷயங்களை அறிந்து கொள்வதில் நமக்கு இருக்கும் ஆர்வம், பிற விஷயங்களில் இல்லை என்பதாகவும் இருக்கலாம்.
(எது எப்படியோ… முடிந்தபோதெல்லாம், எனக்கு ஒத்துவந்த / உவப்பான / ஒத்துவராத விஷயங்களைக் குறித்து இப்படிச் சிறு குறிப்புகளை எழுதுகிறேன்)
May 19, 2021 at 10:16
Shared in my FB page,
May 19, 2021 at 11:06
🙏🏿🕉️
May 19, 2021 at 15:39
Nice post. Swamiji, today spoke about kumbh mela
https://in.yahoo.com/news/well-planned-attack-culture-swami-080259877.html
May 19, 2021 at 17:32
🙏🏿🕉️💪🏿
I have nothing but respect for the Acharya.