தேசிய மொழிபெயர்ப்பு மிஷன் (பாஜக அரசின் மோதிக்கு, முன்னும் பின்னும்): பாஜக-மோதி குறிப்புகள் 3/n
March 26, 2019
இந்த நேஷனல் ட்ரேன்ஸ்லேஷன் மிஷன் 2008-9 வாக்கில் மன்மோகன் சிங்கார் ஆட்சியில் (இப்போது சீரழிந்துகொண்டிருக்கும்) ஸாம் பிட்ரோதாவார் அவர்களின் பலப்பல பரிந்துரைகளின் படி ஆரம்பிக்கப்பட்டு நொண்டி நொண்டி நடைபயின்று கொண்டிருந்தது. (எப்படிப்பட்ட ஸாம், இப்படியொரு அற்பராகிவிட்டாரே என்பதை நினைத்தால்…)
இரண்டு பிரச்சினைகள் – எதையும் கோலாகலத்துடன் ஆரம்பிப்பது சுலபம் (இந்த எழவெடுத்த ஒத்திசைவு தளம் உட்பட), ரொம்ப லேசு; ஆனால் எடுத்த விஷயத்தில் தொடர்ந்து கவனம் செலுத்துவதும் செயல்படுவதும் அப்படியல்ல. ஆகவே ஜாம்ஜாமென்று ஆரம்பித்த மிஷன், டாஸ்மாக் தள்ளாட்டத்தில்.
-0-0-0-0-
இந்த தேசிய மொழிபெயர்ப்பு மிஷன் அமைப்பின், நல்லெண்ணம் கொண்ட அழகான உந்துகோல்களும் இலக்குகளும் பயனாளிகளும் கீழே.
அதாவது – பாரதத்தில் பலப்பல செம்மொழிகள் உள்ள நிலையில் அவற்றின் வழியாகவும் அவற்றிலும் – ஞானப் புலங்களைக் கொணர்ந்திங்குச் சேர்த்தலும், பாடப் புத்தகத் திட்டங்களும், கலைச்சொல் அகராதிகளை உருவாக்குவதும், மொழிபெயர்ப்பு முயற்சிகளைக் காத்திரமாகப் போஷகம் செய்தலும் அதனை நம் பாரம்பரியத்தின் வாழும் அங்கமாக மாற்றுவதும்… மிக முக்கியமான விஷயங்கள், பாரதத்தின் ஊற்றுக்கண்களை வைத்தே நம்மை மேம்படுத்திக்கொள்வது.
ஆனால் – நடப்பென்னவோ தள்ளாட்டம்.
2013-14
இதில் ஒரு சிறிய பிரச்சினை என்றால், என் நண்பர் ஆ இரா வேங்கடாசலபதியும் கைவண்ணமும் இதில் முதலில் இருந்து இருக்கிறது. ஆகவே குப்பைத்தனமான இலக்கியப் பணியும்! ஏற்கனவே நமக்கு, இந்த மனிதரின் முழிபெயர்ப்பு தரம் பற்றி நன்றாகவே தெரியும்.
அக்டோபர் 7-9, 2013 சென்னை மிட்ஸ் நிறுவனத்தில் நடந்த என்டிஎம் கலைச்சொல் பணிமனையில் ஆஇராவேங்கடாசலபதி, கே ஏ மணிகுமார் (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம்), பக்தவத்ஸல பாரதி (புதுச்சேரி) போன்றவர்கள் துறை வல்லுநர்களாகக் கலந்துகொள்கின்றனர். வரலாற்றுச் சொற்களின் மீதுதான் குவியம்.
இவர்கள் குழு செய்த வேலையின் தரம் பற்றிய சில விவரங்கள். இத்தனைக்கும் பல இடங்களிலிருந்து யுவகிருஷ்ணா/எஸ்ரா செய்யப்பட்ட கலைச்சொல் ஜாபிதாதான் அது!
(எல்லாம், நம் வரிப்பணமய்யா, நம் வரிப்பணம்!)
-0-0-0-0-0-
மோதியின் பாஜக அரசு 2014ல் ஆட்சிக்கு வருகிறது; பலப்பல விஷயங்கள் முடுக்கி விடப் படுகின்றன. பட்ஜெட் அதிகமாக்கப்படுகிறது. அதே சமயம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கெடுபிடிகள், பணித் திறன் குறித்த மேலாண்மை விஷயங்கள், ஆடிட்கள்… பஜனை செய்யப்படுவது பெருமளவில் குறைந்திருக்கது. நல்ல விஷயம்தான்.
மேலும் தமிழ் மொழிபெயர்ப்புகள் குறித்தும் முன்னெடுப்புகள், மிக அதிகமான அளவில் – ஸோனியா-கருணா நிதி ஆட்சியை விட அதிகமாக எடுக்கப்படுகின்றன. ஆனால்… இன்னொரு சுவாரசியமான விஷயம்!
2015-16
அதே இடத்தில் செப்டெம்பர் 4-9, 2015 அன்று இரண்டாவது அமர்வு – அதே வரலாறு வேலை. 2009 வாக்கில் ஆரம்பித்தாலும் இந்தப் பரிதாபமான நிலை.
எடுத்ததை இரண்டுமூன்று ஆண்டுகளில், மன்மோகன் (மன்னிக்கவும் ஸோனியா/கருணா நிதி) ஆட்சியிலேயே முடித்திருக்கவேண்டாமா? அதுவும் கருணாநிதிகளின் படுசெல்லமாக தமிழ்மொழி செம்மொழி இருக்கும்போது!
சரி. கீழே அதன் விவரணைகள்.
மணிவண்ணன் ஏதோ ஊழல் வழக்கில் மாட்டிக்கொண்டு(!) சென்னைப் பல்கலைக்கழகம் அவர் மேல் நடவடிக்கை எடுத்ததனால் அமர்வுகளுக்குப் போகவில்லை. நல்லவேளை ஆஇராவேங்கடாசலபதி இதில் பங்குபெறவில்லை. ஏதோ உடல் உபாதை. வேறு பல திராவிடப் பரப்புரைகளில் அவர் பிஸியாக இருந்திருக்கவேண்டும். என்ன இருந்தாலும் – அவர் நிறுவனத்திலேயே அவருக்குப் பிடித்தமான(!) வரலாற்றுத் துறையிலேயே, அவருக்கு துறை வல்லுநத்தனம் இருக்கும் முழிபெயர்ப்பிலேயே – அந்த முக்கியமான அமர்வு இருந்தாலும் – பாவம் நமக்குத் தான் கொடுப்பினை இல்லை!
ஆனால், அவர் இல்லாமல் இருந்ததினால் இது கொஞ்சம் நன்றாகவே, திட்டமிடப்பட்ட முடிவுகளை/இலக்குகளை எட்டியுள்ளது. அநேகமாக இன்னும் சில மாதங்களில் இந்த வரைவுப்பணி முடியலாம்.
ஒரு சோகமான விஷயம் என்னவென்றால் – தமிழில் மொழிபெயர்ப்பு துறை சார் வல்லுநர்களாகப் பதிவு செய்துகொண்டிருக்கும் பேராசிரியர்கள் இருவர் மட்டுமே! அதுவும் மணிப்பூரிலிருந்தும் ஷில்லாங்கிலிருந்தும்!
நம்மூர் பேராசிரியர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? ஏற்கனவே இந்த என்டிஎம் நிறுவனத்தில் ஆழக்கால் பதித்திருக்கும் ஆக்டபஸ்களான ஆஇராவேங்கடாசலபதிகள் இதற்குக் கூட இயங்காமல், நம் தமிழை மேம்படுத்தாமல் என்ன செய்கிறார்கள். சலிப்புத்தான் வருகுதய்யா!
என்டிஎம்மில் எனக்குத் தெரிந்தவர்கள் மூலமாகக் கேள்விப்பட்டதில்…
…இவர்களிடம் நானுமே அங்கலாய்த்துக்கொண்டு கேட்டேன்: ஏனய்யா, எங்களுடைய தமிழ் நாட்டில் தரமுள்ள, விட்டேற்றித்தனமில்லாத ஆசாமிகளே உங்களுக்குக் கிடைக்கவில்லையா?
அவர்கள்: இம்மாதிரி விவரங்களெல்லாம் தமிழக அரசு, பல்கலைக்கழக பரஸ்பர முதுகுசொறி வட்டங்கள் சார்ந்த விஷயங்கள், நாங்களென்ன செய்வது?
நான்: அப்போது எப்படியய்யா குஜராத் கர்நாடகாவில் இருந்தெல்லாம், ஏன் மணிப்பூர் டோக்ரி வட்டாரங்களிலிருந்துகூட ஏகப்பட்ட முன்தாவல்கள் அதுவும் காத்திரமாக இருக்கின்றனவே, ஏன் எங்களுக்கு மட்டும் இந்த ஒரவஞ்சனை? அவர்களுக்கு இல்லாத பிரச்சினைகளா? முதுகு சொறியல்களா? ஏன் தமிழர்களெளென்றால் ஓரவஞ்சனை?
அவர்கள்: நாங்கள் முயற்சி செய்யாமலில்லை; தரம் என்று பேசினாலே, வடக்கு-தெற்கு என பேச்சுக்கிளம்பி விடுகிறது; இத்தனைக்கும் நிறுவனம் மைஸூரில்தான் இருக்கிறது, தெற்கத்தி மொழிகளை மேலெழுப்பத்தான் முனைகிறோம்; தெலுங்கு கன்னட மொழிகள் எங்களுடைய வசதிவாய்ப்புகளை நன்றாகவே உபயோகித்துக்கொள்கின்றனவே! உங்கள் திராவிட அரசியல், பல்கலைக் கழகங்களியும் பிற கல்வி நிறுவனங்களையும் ஆக்ரமித்துள்ளதால் உங்களுக்கு விடிவே இல்லை!
என் மண்டையில் அடித்துக்கொள்ளல்: (மனதிற்குள்) இந்தத் தீராவிடம் ஒழிந்தால் தான் தமிழகம் உருப்படும்போல!
எதற்கு இதனைக் குறிப்பிடுகிறேனென்றால் – தமிழுக்குத் தொடர்ந்து (என்டிம் வழியாலும்) ஆதரவு கொடுக்கப்பட்டு வருகிறது, அது காத்திரமாகவும் இருக்கிறது, அதற்கான நிதி ஒதுக்கீடும் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது; அதற்குப் பெரும்பாலும் துறைத் தகுதியற்ற ஆனால் அரசியல் தகுதியுடைய நபர்கள் தமிழகத்திலிருந்து பரிந்துரைக்கப் பட்டிருப்பதால் உள்ள பிரச்சினைகள் தாம் நமக்கு. என்ன செய்வது! இதனால்தான் தரமின்மையும், தாமதங்களும்… வேறென்ன சொல்ல…
சென்ற வருடம் (2018) கூட இந்த அமைப்பு சிலபல முக்கியமான ஒருங்கிணைப்புகளை நிகழ்த்தியிருக்கிறது.
(மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் குறித்த, தஹிந்து தினசொறியின் குறிப்புகளைக் கொடுத்திருப்பதற்கு மன்னிக்கவும்)
நம் தமிழகம் மட்டும் தரத்தை மதிக்கக் கற்றுக்கொண்டால், ஊழலை ஒழியுங்கள் என்றுகூடச் சொல்லவில்லை – அதனைக் குறைத்தால் – ஒருங்கிணைக்கப்பட்ட பாரதத்தின் பெருமைக்குரிய இடத்தில் நாம் தொடர்ந்து இருப்போம்! ஏனெனில் திராவிடர்களற்ற சாதா பாரதத் தமிழர்களின் தகுதியும், உழைப்பும் அப்படி!
தொடர்ந்து நல்லபடியாக மொழிபெயர்ப்புகளுக்கான சட்டக முனைவுகள் மேம்பட, நம் பாரம்பரியம் மதிக்கப்பட, கலாச்சாரம் தழைத்தோங்க…
…ஆகவே, பாஜக-மோதி மறுபடியும்!
March 26, 2019 at 16:42
Apologies, link for NTM is fixed now.
March 27, 2019 at 13:16
[…] […]