இன்றைய சோகம்
December 12, 2018
:-(
என் கன்னடக்கார நண்பர்களில் ஒருவர் இலக்கிய ஆர்வலர், பாவம். எஸ்எல்பைரப்பா* விசிறி.
(என்னைப்போலல்லாமல் இவர் மெத்தப் படித்தவர், ஜெர்மானிய காட்டிங்கென், அமெரிக்க மஸ்ஸாசூஸெட்ஸ் பல்கலைக்கழகம் (‘யூமாஸ்’), கான்பூர் ஐஐடி போன்றவற்றில் பலவருடம் குப்பை கொட்டியிருப்பவர், பேர்பெற்ற நிறுவனங்களிலும்கூட – கணிநித்துறையில் ‘ஸெக்யூரிடி’ நிபுணர் – பெங்களூரில், நானும் இவரும் சேர்ந்து சில தனியார் பொறியியல் கல்லூரிகளில் அடைகாத்துக் குஞ்சாமணிகளைப் பொறிக்கலாம் என ஒரு திட்டம் கைவசம் இருக்கிறது!)
அவர் இன்றுகாலை என்னுடன் பேசும்போது – “உங்கள் ஊரின் எஸ்ராமகிருஷ்ணன் எனும் ஒருவருக்கு இந்த வருட ஸாஹித்ய விருது கிடைத்திருக்கிறதே, அவர் எழுத்துகளை நீ படித்திருக்கிறாயா? அவருடைய புத்தகங்கள் ஏதாவது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுக் கிடைக்கின்றனவா?”
தூக்கிவாரிப்போட்டது! விக்கித்துப் போனேன்.
இருந்தாலும் — என் தமிழை, காவேரி நீரைக் கொடுக்க மறுக்கும் கன்னடவெறியர்களுக்கு, நான் எப்படி விட்டுக்கொடுக்க முடியும்? :-(
ஆகவே, உடனடியாகச் சுதாரித்துக்கொண்டு: “ஓ அப்படியா? எப்போது செய்தி வந்தது? யார் அவர்? ஹி ஹி… எனக்குத் தெரியாது, எனக்கு தற்காலத் தமிழ் இலக்கியத்துடன் அவ்வளவு பரிச்சயமில்லை; கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது, ஆனால் ஸாஹித்ய விருது வாங்கியிருப்பதால் அவரைப் படிக்க முயற்சிக்கிறேன்.”
அவர் – “நீ தமிழ், பாரதம் பாரம்பரியம் என்று பேசுகிறாய், ஆனால் இதுகூடத் தெரியவில்லை; ஆங்கிலத்தில் பேசி ஆங்கிலத்திலேயே சிந்தனை செய்யும் உன்னைப் போன்றவர்களை வைத்துக்கொண்டு இந்த தேசம் எப்படி உருப்படும்? தாய்மொழிப் பற்று வேண்டாமா?”
நான் – “சரி ஐயா, வெட்கமாகத்தான் இருக்கிறது; இனிமேல் தாய்மொழிப்பற்றுடன் இருக்க முயற்சிக்கிறேன்; எஸ் ராமகிருஷ்ணன் எழுதியவற்றையும் அவசியம் படிக்கிறேன்!”
…
…
* பைரப்பாவின் ஆவரணா குறித்து ஸிலிக்கன்ஷெல்ஃப் பதிவு.
இதில் முக்கியமான விஷயம் – ஆவரணா குறித்த, பேராசான் ஜெயமோகனின் மேலான முட்டியடி எதிர்வினை(!)யும் அதனைச் சிரமேற்கொண்ட ‘ஆர்வி’ என்பவரின் உடனடி ஜகாவாங்கலும்.8-)
இது சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் – ஜெயமோகனின் வசீகரமும் அவர் சொல்வதெல்லாம் வேதவாக்கென்று கருதப்படுவதும் எனக்கு ஆச்சரியமாகவே இல்லை.
நம் அறிவுஜீவிகளின் பிழைப்புவாதத்தையாவது புரிந்துகொள்ளலாம்; ஆனால், அடிப்பொடிகளின் ஆராதனைகள்தாம் தாங்கமுடியாத அளவில் இருக்கின்றன…
ஆனால், இன்னொரு தெளிவான பிரிவினையாக – மசுத்தான எழுத்தாளர்கள் எழுதுவதெல்லாம் மசுத்தானவை அல்ல என்பதும் உண்மை. அவ்வப்போது ஜெயமோகனும் நன்றாகவே எழுதிவிடுகிறார், என்ன செய்ய! ;-)
தொடர்புள்ள சோகம்:
December 12, 2018 at 10:03
அன்றாடங்களை எழுத்திப்பிழைக்கும், ஒரு நாலைந்து வருட தொழில் அனுபவமுள்ள தாசில்தார் அலுவலக குமாஸ்தாவுக்கும் ,போலீஸ் ஸ்டேஷன் ‘எழுதருக்கும் ‘கூட ஒரு மொழி அமைதி கைகூடிவிடும்! எல்லாம் கை பழக்கமே!ஜெயமோகனைப்போல். எழுத்தருக்கும் எழுத்தாளருக்கும் உள்ள வித்தியாசம் தன்னையறியாமல்’தெய்வ சித்தாய்’எழுத்தில் தன்னிச்சைகளை விளையாட விட்டு ஆள்வது!இலக்கியத்தில் உச்சம் என்பது அதுவே[ஜெயகாந்தன்,ஜானகிராமன் மௌனி கவிதையில் கண்ணதாசன் போன்றோரிடம் புழங்குவது!],ஜெயமோகனிடம் தன்னிச்சை என்பது எழுத்துப்பிழையும் வாக்கியப்பிழையும் தான்!இவர் கட்டுரை எழுத்தர்,படைப்பெழுத்தாளர் அல்ல !
December 12, 2018 at 11:53
அவரை (உங்கள் நண்பரை) விடுங்கள். தமிழருவி மணியன் எனும் மேடைப் பேச்சாளர் திரு எஸ்ராவை ஆஹா ஓஹோ என புகழ்ந்தும், எஸ்ராவின் கம்பராமாயணப் பேச்சுகள் அருமையான பேஷ் பேஷ் ரகம் என்றும் கூறியிருக்கிறார்.
உங்கள் நண்பர் உங்களின் தமிழ் மொழி பற்று குறித்து சொன்னது ஒரு வேளை……🤔
யோசிக்கிறேன் சார்.
December 12, 2018 at 12:10
அவரா சொன்னார்?
டட்டடய்ங்
இருக்காது!
டட்டடொய்ங்
அது இருக்கவும் கூடாதுஊ…
நம்ப முடிய வில்லை
வில்லை வில்லை வில்லை…
தமிழருவி மணியன் குடிக்கு மட்டும்தான் எதிரி என்றில்லை – தமிழ்க்குடிக்குமேகூட.
ஐயா, மற்றபடி – நண்பருக்கு நான் தமிழில்(!) எழுதுவதெல்லாம் தெரியாது. அதை அறிந்திருந்தால் நான் தமிழின் எதிரி என்பதையும் புரிந்துகொண்டிருப்பார்!
பாவம், நாம்… :-(
December 12, 2018 at 12:12
ஐயோ! என்னருமை எஸ்ரா, கம்பராமாயணம் பற்றியெல்லாம் பேசியிருக்கிறாரா?
ஐயகோ!
:-(
December 12, 2018 at 12:32
🙏🙏
December 13, 2018 at 11:42
ஆவரணா வாசித்துள்ளீர்களா?
December 13, 2018 at 12:29
ஐயா, ஆம். (ஆங்கில மொழிபெயர்ப்பில்).
ஜெயமோகன் சொல்வது போல அல்ல அந்த நாவல். பிரச்சாரமும் இல்லை கிரச்சாரமும் இல்லை. ஜெயமோகனின் நாவல்களை விட (கொற்றவை உட்பட) அதனை நான் உயரத்தில் வைப்பேன்.
ஜெயமோகனின் முக்கியமான புத்தகமாக நான் மதிக்கும் ‘சிலுவையின் பெயரால்’ என்பதை விட ஆவரணா க்ளிப்தமாக செய்திகளையும் முன்வைக்கிறது எனவும் சொல்வேன்.
ஆனால் அதில் அரசியல்சரி நிலைமை இல்லை. ஜெயமோகனாதிகளுக்கு அது ஒத்துவரவில்லையோ என்ன எழவோ.
படித்துப் பாருங்கள். (இதுவரை படிக்கவில்லை என்றால்)
December 13, 2018 at 16:10
மிகச் சரி. அடியேனின் அனுபவமும் அதுவே. அவரது ‘சார்த்தா’ நாவலும் முக்கியமான ஒன்று.
December 13, 2018 at 16:12
‘திரை’ என்று தமிழில் வந்துள்ளது. அடியேனின் வாசிப்பனுபவம் இதோ: https://amaruvi.in/2017/11/21/thirai/
December 13, 2018 at 16:24
இதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், நன்றி. (ஆனால் இதுவரை வாங்கவில்லை/படிக்கவில்லை)
உங்கள் கருத்துகளை அவசியம் படிக்கிறேன். சில அக்கப்போர்களில் ஆவலுடன் ஈடுபட்டுக்கொண்டிருப்பதனால் கொஞ்சம் பிஸி. ;-)