ஒருதலைக் காதல் – கடிதம்

October 15, 2018

இனிய பயம்,

இது உங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம். பலமுறை முடிக்கமுயன்று கடைசியில்தான் ஆரம்பித்தேன்.

பயமாக இருக்கிறது. கண்ணீர் கனன்று வருகிறது. இதிலுள்ள தவறுகளை மன்னிக்கவும்; தவறு என்றாலே களை என நான் லிஃப்கோ டிக் ஷனரியில் படித்திருக்கிறேன். களைப்பாக இருந்தாலும் குருவருள் கிடைத்தது. மனஇருள் அகன்றது.

உங்களைப் படிக்க ஆரம்பித்ததிலிருந்து எனக்கு வேறு வேலையே செய்யமுடியவில்லை. மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் படித்து என்னை முன்னேற்றிக்கொள்வதற்கு இன்னமும் ஒருலட்சத்திற்கும் மேலாக, தங்களுடைய மேலான பதிவுகள், அனைத்துத் துறைகள் தொடர்பாகவும் இருக்கின்றன.

நான் ஒரு துறைமுகத்தில்தான் பணி செய்கிறேன் – இருந்தாலும், இந்தத் துறையிலேயே என் வாழ்நாள் கழிந்துவிடும் என்றிருக்கையில், தங்களுடைய பல்வேறு (tooth different) முகங்கள், பலப்பல விதம்விதமான துறைகளைத் தொடர்ந்து அவதானித்துத் தான் எனும் அகந்தையை மீறிப் பயணித்து வருவதைக்கண்டு திகைத்துப்போகிறேன். நான் பாக்கியசாலி!

உங்கள் ஆக்கங்களைத் தொடர்ந்து செயலூக்கத்துடன் படிக்கும் என்னைப் போன்றவர்களுக்குத் தங்கள் குழுமம் குழுடாட்டி போன்றோர், கட்டணம் ஏதேனும் கொடுக்கமுடிந்தால் நான் இன்னமும் அதிபாக்கியசாலியாகி விடுவேன். என் வேலையை விட்டுவிட்டு, உங்களுடைய முழு நேரத் தொழில்முறை வாசகனாகிவிட அது உதவும்.

ஐயா, நான் சென்ற பத்து வருடங்களாக ஒருதலைக்காதலில், மிகத் தீவிரமாகக் களப்பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

ஒருதலைக் காதல் என்பது ஒருதலையுள்ள தனி நபர்களுக்குள் இடையே ஆன சங்கதி என்றாலும்,

  1. சமூகத்தில்  வரம்பு மீறிய ஒருதலைக்காதல் மற்றும் சுணக்க உறவு திருமணத்துக்கு முன்னும் பின்னும்  எந்த அளவில் உள்ளன?
  2. ஒரு எழுத்தாளராக இது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
  3. ஒருதலைக் காதல் எப்போது  அறமீறல் ஆகும்?
  4. ஒருதலைக்காதலுக்கும் ஒருதலைப் பாலுறவுக்கும் உள்ள வித்தியாசங்கள் யாவை?

சுருக்கமாகச் சொல்வதானால் – ஒருதலைக் காதல் நல்லதா? கெட்டதா?

இனிப்புடனும் பிரமிப்புடனும்:

ரோமாபுரி ராமு
-0-0-0-0-0-

அன்புள்ள ராமு,

நீங்கள் ரோமாபுரி என்று சொன்னவுடனேயே சென்றவருடம் தெற்கு ஐரோப்பா பயணம் சென்றது நினைவில் அறைகிறது. அங்குதான் யேசு, மரியாமக்தலேனாவை மணமுடித்து தாலியைக் கட்டினார் – மரியா ஈதென்ன வெனக் கேட்டதற்கு இதுதான் தாலி என்றார். அதனால்தான் அந்த நாட்டுக்குப் பெயர் இத்தாலி எனவாகியது என நான்தான் போப் ஃப்ரான்ஸிஸ்ஸுக்குச் சொன்னேன். அவருக்குப் பெருமை தாங்கவில்லை. இதென்ன பெரிய்ய விஷயம்.

இந்த நிகழ்வினை என் குரு எனக்கு அண்மையில் நினைவுறுத்தியதை நினைவுகூர்கிறேன். என் குருவுக்கு நான் சிஷ்யன் என்பதில், அவரன்றி வேறெவர்க்குப் பெருமை, சொல்லுங்கள்?

எனக்கு, களப்பணியாளர்கள் என்றாலே காதல்தான். மேலும் ரோமாபுரி செல்லவும் ஆசையாக இருக்கிறது. சென்றமுறை ஃபிளாரென்ஸ் தான் போகமுடிந்தது.

முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். ஒழுக்கம் பற்றி ஒரு இலக்கிய ஆசிரியனுக்குக் கவலையில்லை. அவனுக்கு ஏற்றம் மட்டுமே முக்கியம். ஏனெனில் அவன் மண்ணின் மைந்தன். சொற்களின் உழவன். கவலை ஏற்றம் விவசாயம் சாயம்போதல் என்பவைகளில் தான் அவனுடைய குவியம் குமிழ்ந்திருக்கும்.

மேலும், கேட்பாரற்றுக் கிடக்கும் தமிழ் அலக்கியச் சூழலில், அவன் அறம் விழுமியம் எனப் பேசிக்கொண்டே காலட்சேபம் செய்யலாம். அவனுடைய இந்த அறவிழுமிய ஆகாத்தியத்தை மீறி, அவனுக்குப் பிறிதொன்றையும் செய்யலாகாது. ஆகச் சிறந்ததாக மற்றொன்றும் கிடையாது.

நான், என் வழக்கம்போலவே, என் அனுபவங்களை வைத்துக்கொண்டு, என் பார்வைகளை வைக்கிறேன். ஆனால் என் அனுபவங்கள் மிகச் செறிவானவை. அனைத்துத் துறைகளையும் தீண்டுபவை, சீண்டுபவை என்பதை என் வாசகர்கள் அறிவீர்கள். மேலதிகமாக இவற்றை நான், தொழில்முறையிலன்றி வேறெந்த முறையில் தயாரிக்கக்கூடும் எனும் கேள்வியே கேட்கப்படக்கூடாத ஒன்று அல்லவா?

உங்கள் கேள்விகளுக்கு நேரடியாக வருகிறேன்.

1. சமூகத்தில் வரம்பு எனவொன்றில்லை. வம்பு மட்டும்தான். ஒருதலையுடைய ஒருவனுக்கு வரும் காதல் ஒருதலைக்காதல் எனப்படலாம்.

இதற்குக் குறுந்தொகையிலும் தாஸ்தயேவ்ஸ்கியின் காராசேவு சகோதரர்களிலும் சான்று இருக்கிறது. ஆனால் கம்பராமாயணத்தில் உள்ள இராவணன் பத்துதலையுடையவன். ஆகவே அவனுக்கு, என்னுடைய சொந்த ஞானமரபு வழியான பார்வையில் பார்க்கும்போது, பத்துதலைக்காதல் செய்தால்தான் சரியாகவரும். இல்லையேல் அது அவனுக்கு அறப் பிரச்சினை. இந்தப் பிரச்சினை – அரத்தால் ஒன்பது தலைகளை அறுத்து  ஒறுத்தால் மட்டுமே தீரும்.

அறமற்றவற்றை அரத்தால் அறுப்பது என்பது தான் தர்மத்தின் நீட்சி. இதனைப் புரிந்துகொண்டால் மேலதிகமாகப் புரிந்துகொள்ள வேண்டியதொன்றே இவ்வுலகில் இல்லை.

சீதை ஒருதலையுடைத்த அணங்கு. அவளை இன்னொரு ஒருதலையுடைத்த தலைவனே கரம்பிடிக்கவேண்டும் என்பதே நம் ஆன்மிக மரபு. இத்தகைய இயற்கைப் பிரபஞ்சவிதிக்கு மாறாக இராவணன் முயன்றதால்தான், ங்கொய்யால, அவன் தலை கொய்யப்பட்டது அன்றிப் பிறிதொன்றுமில்லை.

திருமணம் எனும் சமூகக் கோட்பாட்டுக்கு, மோனியர்-வில்லியம்ஸ் அகராதியில் திருட்டு மணம் எனப் பொருள் விரியும். அதாவது கடையில் மல்லிகைப் புஷ்பத்தை வாங்கும்போது, நாம் வாங்காவிட்டாலும் பக்கத்திலிருக்கும் ரோஜாவின் மணமும் சாமந்தியின் சுகந்தமும் கனகாம்பரத்தின் ஏகாம்பரத்தையும் நாம் ஏகோபித்து முகர்வதில்லையா? களிப்பதில்லையா? இந்த அறமற்ற முகர்வதின் நுண்நுகர்தல்தான் – தொல்காப்பியரால் குறுந்தொகையில் திருமணம் எனக் குறிப்பிடப்படுகிறது.

‘பூவோடு சேர்ந்தால் மணமும் நாறும்’ என்பதை, நாம் இப்படியும் புரிந்துகொள்ளலாம். சில பூக்கள் நாறுமன்றோ. நான் அண்மையில் இந்தோனேஷியா போயிருந்தேன் – அங்கு இந்த நாறும் நறுமணம் கொண்ட நற்பூவைப் பார்த்தேன். அது இறைச்சி மணம் கொண்டிருக்கிறது.

 

https://en.wikipedia.org/wiki/Rafflesia_arnoldii

தற்காலத்தில் திருமணம் எனும் சமூக்க அமைப்பின் சிதைவுக்கு ஒரு படிமமாக, உருவகமாக இதனைக் கொண்டாடலாம்.

உங்களுக்குச் சுருக்கமான பதில் வேண்டுமென்றால்: சமூகத்தில்  வரம்பு மீறிய ஒருதலைக்காதல் மற்றும் சுணக்க உறவு என்பது திருமணத்துக்கு முன் 49%; பின் 51% என்கிற அளவில் இருக்கிறது; இதற்கு ஆதாரம் எங்கள் குழுமத்தில் நான் அளித்திருக்கும் பதிலில் இருக்கிறது.

2. ஒரு எழுத்தாளராக இது குறித்து என்னுடைய நிலைப்பாடு என்ன எனக் கேட்கிறீர்கள். அவரவருக்கு அவரவர் பாடு. கொடும்பாடு.

கேரளத்தின் பிரபல மலையாளக் கவிஞர் விளக்குத்திரிபாடு பட்டத்ரி,  இது குறித்து என் அறிவுரையைக் கேட்கும்போது நான் எப்போதுமே சொல்வது என்னவென்றால் – எழுத்தாளனாகிய என்னுடைய குரல் தான் சமூகத்தின் ஆன்மா. சில சமயம் அது ஆஃப்மாவாகத் திரிபடையலாம். ஆனால் அதனை, இந்தியாவின் முப்படை எனத் திரித்துப் பொருள்கொள்ளலாகாது என்பதே.

ஆகவே, என் கருத்தே என் நிலைப்பாடு; அது மட்டுமல்ல, அதுவே ஒட்டுமொத்த சமூகத்தின் நிலைப்பாடும். அப்படித்தான் என்னைப் போன்ற சான்றோர் கருதுகின்றனர். மேலும், சமூகத்தின் அங்கமான எதைப் பற்றியும், அங்கமில்லாத எதனைப் பற்றியும் காத்திரமாக விமர்சனம் வைக்க,  காப்பியங்களைப் படைக்கும் என்னைப்போன்ற செவ்வியல் எழுத்தாளர்களால் மட்டுமே முடியும்.

3. ஒருதலைக் காதல் எப்போது  அறமீறல் ஆகும் எனக் கேட்கிறீர்கள்; வழக்கம்போல நான், என் அனுபவத்தைக் கொண்டுதான், ஒரு சாதாரணக் குடிமகனுடைய பார்வையில்தான் இதனை அணுக முடியும்.

1980களில் கொடிகட்டி (ஆனால் உடை ரொம்பக் கட்டாமல்) பறந்த ஹாலிவுட் நடிகைகளில் ஒருவர் ப்ரூக் ஷீல்ட்ஸ். ப்ளூ லேகூன் என்கிற படத்தில் சிக்கனவுடையுடன் நடித்து கிளுகிளுப்புப் பெயர் பெற்றவர். இவர் என்மேல் காதலுடன் இருந்தார் – அதுவும் ஒருதலைக்காதல். அவருடைய உள்மனக் கிடக்கையைப் பற்றி நான் அப்போது என் படைப்பூக்கத்தின் உச்சி நுனியில் இருந்ததால் அறிந்திருக்கவில்லை. பாவம், அவர் கொடுப்பினை அவ்வளவுதான். தாங்கொணா ஏமாற்றம்.

ப்ரூக் ஷீல்ட்ஸ் அவர்கள் – என்னுடைய உதாசீனத்தால், அவர் அடைந்த இந்த ஏமாற்றம், தம் வாழ்க்கையின் மகத்தான சோகங்களில் ஒன்று என அய்ன் ரேண்டிடம் சொன்னதை, பின்னவர் மூலம் அரவிந்தன் கண்ணையன் அறிந்து எனக்குச் சொல்லித்தான் எனக்கே தெரியும்.

இதைப் பற்றி நான் மறந்துவிட்டிருந்தேன். நல்லவேளை, நீங்கள் கேட்ட கேள்வியால் இதன் நினைவுவந்தது.  எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் தரவுகளுடன் பேசுவதன்றிப் பிறிதொரு வகையில் பேசுவது தகாது எனும் அறவுணர்ச்சியுடன் நான் செயல்படுவதால் கீழ்கண்ட சான்றினைக் கொடுக்கிறேன்.

ஆதாரம்: https://www.imdb.com/title/tt0080453/

சரி. ப்ரூக் ஷீல்ட்ஸ் அவர்கள் – தன்னை மணந்துகொள்ள என்னை வற்புறுத்தியிருந்தால் அது அறமீறல் ஆகியிருக்கும். அதேபோல, அறிவிய நேருவிய அய்ன்ரேண்டிய இலக்கிய சூட்சுமங்களை அமெரிக்காவில் இருப்பதினாலேயே அறிந்துகொண்டிருக்கும் அரவிந்தன் கண்ணையன் அவர்கள், ஒருக்கால் ஆள்மாறாட்டம் செய்து,  ப்ரூக் ஷீல்ட்ஸ் அவர்களை ஒருதலைபட்சமாக மணம் புரிந்துகொண்டிருந்தால் அதுவும் அவ்வகையே.

புரிந்ததா?

4. ஒருதலை காதலுக்கும் ஒருதலை பாலுறவுக்கும் உள்ள வித்தியாசங்கள் யாவை எனக் கேட்கிறீர்கள். உடனடியாக எனக்குத் தோன்றுவது இரண்டு: 1) காத 2) பாறவு – மற்றவைகளில் ஒற்றுமைதான்!

மேலும் நுணுக்கமாக நுனிவரை நுண்ணறிவோடு இதனைப் பார்த்தோமானால், ‘காத’ என்பதை ஒரு தூர அளவாகக் கருதலாம்; அல்லது நம்முடைய செவியுடன் தொடர்புடையதாகக் கருதலாம். இதுகுறித்து, மோனியர்-வில்லியம்ஸ் அகராதியைப் புரட்டினோமானால், ஒன்றும் கிடைக்காது. ஆனால் கிடைக்காது என்பதிலேயே காது என்பது இருக்கிறது என்பதை, அப்படி இருக்காது என யாரால்தான் சொல்லமுடியும்?

பாறவு என்றவுடன் எனக்குத் தெரிந்த குஞ்சப்பன் ‘குஞ்சாலி’ பாறவு எனும் மலையாளக் கவிஞன் நினைவைத் தவிர்க்க முடியவில்லை. அவனைக் கடைசியாகப் பார்த்தது, என் குருவின் சிதைக்கு நான் எரியூட்டிய சமயம் என நினைவு. நெஞ்சு கனக்கிறது.

ஆக, வித்தியாசங்கள் எனப் பார்த்தால் – ஒருதலைக்காதல் என்பது தூரத்திலிருந்து கேட்பது போன்றது எனவும் ஒருதலைப் பாலுறவு என்பதை கவித்துவத்துடன் முஷ்டிமைதுனம் செய்துகொண்டு சுய இன்பம் காண்பது எனவும் பகுத்துப் புரிந்துகொள்ளலாம்.

ஒருதலைக்காதல் என்பது சிலசமயம் நல்லது, சிலசமயம் கெட்டது (ப்ரூக் ஷீல்ட்ஸ் அவர்களை நினைவிலிருத்தவும்); எல்லாம் அவரவர் நல்லூழ் அல்லது தீயூழ்.

எல்லாம் அவரவர் ஒருதலைவிதிப்படிதான் நடக்கும் என யட்சனிடம் பதில் சொல்லும்போது – தருமன், செவ்வியல் சொல்லின் செல்வன், அறவோன் – தம் மண்டையைக் குளத்தாங்கரையில் அறைந்து அறவுணர்ச்சியுடன், செவிகிழிய உரக்கச் சொன்னானல்லவா, என் டமாரபாரதத்தில்?

அதற்குள் மறந்தேவிட்டீர்களா? :-(

-0-0-0-0-0-

இவைதான் என் முடிவான முடிவுகள், கருத்துகள். இவற்றைப் பற்றி இனிமேல் விவாதிக்கப் போவதில்லை.

தேர்ந்த வாசகர்கள்,மேற்கண்ட விளக்கங்களைப் புரிந்துகொள்வார்கள். மேற்கொண்டு சங்கடப்படுத்தும் கேள்விகளைக் கேட்கமாட்டார்கள்.

எனக்கும் வேறுவேலைகள் இருக்கின்றன.

ஏற்கனவே குழுமத்துத் தறுதலைகள் இரு கட்சிகளாகப் பிரிந்து ஒருதலைக்காதலுக்கும் ஒருதலைப்பாலுறவுக்கும் பின்னே அணிதிரண்டிருக்கிறார்கள். ஒரு அணிக்குச் சாதகமாக இருந்தால் ஒருதலைப்பட்சமென்பார்கள். நான் இறுதலைக் கொள்ளி எறும்பாக உணர்கிறேன்.

இனிமேல் இச்சச்சரவைத் தொடர்வதாக இல்லை. எனக்கு மேற்கண்டவற்றைத் தவிரச் சொல்வதற்குப் பிறிதொன்று வேறொன்றும் இல்லை. இதைப்பற்றி மேற்கொண்டு யாராவது கேள்விகேட்டால் அவர்களை களையெடுத்துவிடக் கண்டிப்பாக உத்தரவிட்டிருக்கிறேன்.

இதனை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

நன்றி.

__ரா.

21 Responses to “ஒருதலைக் காதல் – கடிதம்”

  1. K Muthuramakrishnan Says:

    எப்படி அதே பாணியைக் கைப்பற்றினீர்கள்?காப்பி ரைட் கேஸ் போடும் அபாயம் உள்ளது

  2. Sridhar Tiruchendurai Says:

    இந்த உன்மத்த சன்னத நிலையிலிருந்து கீழறங்க உங்களுக்கு கமலகாசனாரின் நேர்
    காணல் காணொலியைப் பரிந்துைக்கின்றேன்.

    பார்த்து துன்புறுக.

  3. Sridhar Tiruchendurai Says:

    முதல் பகுதி : https://youtu.be/MyE-eucPj8U

    முடிந்தால் இரண்டாம் பகுதி : https://youtu.be/9cCuLxPI8W4


    • ஐயோ ஐயா! என்னால் முடியவில்லை. ;-)

      – பிரச்சினை என்னவென்றால், அந்த ரங்கராஜ் பாண்டே பையனுக்கு ஒரு குழு பின்னணியில் இருந்து விஷயங்களின் பின்புலங்களைக் கொடுக்கிறது.

      ஆனால் கமலகாசனுக்கு அப்படியிருந்திருக்காது என நினக்கிறேன். ஆகவே சொதப்பல். இருந்தாலுமேகூட, கமலகாசன் இயல்பாகவே அமோகமாகச் சொதப்பக்கூடியவர், பாவம். (முதலாவதையே அதிக பட்சம் 15 நிமிடங்கள் தள்ளித் தள்ளிப் பார்ப்பதற்கும் நாக்கு தள்ளிவிட்டது. மன்னிக்கவும்) :-(

  4. Kay Kay Says:

    Ohhhh just coulidnt control my laugh at my office workstation, people were giving nasty looks, but wow your language skills and the style, sure on behalf of othisaivu fans, may be we cann bring a collection of essays.. that reflects the style of all contemporary tamil writers..

    • Kannan Says:

      Very good idea !!!

      உழக்கு பதிப்பகம்

      முன்பதிவுத்திட்டன் : நாலணா
      அப்புறம் வாங்குனா : எட்டணா

      கெட்டி அட்டை, சப்பாத்தி மாவில் செய்தது.

      :)

  5. A.Seshagiri Says:

    அய்யகோ! எங்கள் ஆசானை விட்டு விடுங்கள் என்று என் ஒரு மனம் கதறும்போது ,போடா புண்ணாக்கு!இதைப்போல்…….

    {தங்கள் குழுமம் குழுடாட்டி போன்றோர், கட்டணம் ஏதேனும் கொடுக்கமுடிந்தால் நான் இன்னமும் அதிபாக்கியசாலியாகி விடுவேன். என் வேலையை விட்டுவிட்டு, உங்களுடைய முழு நேரத் தொழில்முறை வாசகனாகிவிட அது உதவும்……
    சீதை ஒருதலையுடைத்த அணங்கு. அவளை இன்னொரு ஒருதலையுடைத்த தலைவனே கரம்பிடிக்கவேண்டும் என்பதே நம் ஆன்மிக மரபு. இத்தகைய இயற்கைப் பிரபஞ்சவிதிக்கு மாறாக இராவணன் முயன்றதால்தான், ங்கொய்யால, அவன் தலை கொய்யப்பட்டது அன்றிப் பிறிதொன்றுமில்லை…}

    மண்டையை பிராய்ந்து,பிராய்ந்து ஆசானுக்கு சரிசமமாக(?) எழுத நமக்கு யார் இருக்கிறார் என்று ஒரு மனம் அலற்றுகிறது!!.உம்மைப்போல் இருதலைக்கிள்ளி(கொள்ளி) -ஒரு தலை எஸ்ரா மற்றொரு தலை?- எறும்பின் நிலைதான் எமக்கும்!!!.

  6. Raj Chandra Says:

    வெண்முரசு பித்தம் தெளிய :) : http://www.sramakrishnan.com/?p=7758


    • ஐயய்யோ!

      என்னது! நம்ம மானம் கத்திக்கப்பல்ல ஏறப்போவ்தா! :-(


      • Product description (https://www.amazon.in/FINAL-SOLITUDE-S-RAMAKRISHNAN/dp/9387707199/)

        “With new possibilities in storytelling. The Final Solitude exposes the injustice that prevailed during Emperor Aurangazeb’s rule in a fictional small kingdom in eastern India, called satgargh. Interspersed with fantastical tales, this allegorical novel brings to light the torment and the trouble people faced during the lunatic king Pishada’s fascist regime.”

        FASCIST? :-(

        And, if Fantastical can be used instead of Fantastic, can we use Historical instead of Historic.

        The stupid description itself uses archaic and obtuse english – and so one shudders to think what the content will be.

        VODRA DEI!

      • Raj Chandra Says:

        >>VODRA DEI!
        – அதே…
        அன்னாரின் தாயமொழி தமிழிலேயே வரிக்கு 10 தவறுகள் இருக்கும். அது அப்படியே (ஈயடிக்கப்பட்டு) ஆங்கிலத்தில் வருகிறது. செத்தான் இங்கிலீஷ்காரன் :).

  7. gopalasamy Says:

    sir, I am ardent fan of Baguleya pillai Jeyamohan. Regarding Venmurasu;; More than lakhs of people, lakhs of elephants, horses and chariots participated in the war. If one chapter is attributed to one participant, it will take more than million chapters. Moreover there may be so many scientific facts to be presented. (like, when the chariot, horses, warrior and the arrow synchronise, the chariot will get critical speed and thereafter the chariot by itself will decide what to do). Now two options. His family members should continue it for more than 1000 years. Or B.J should write more than 100 chapters per day. We, the ardent fans, are ready to read 100 chapters per day. B.J is also having the capability. If you do not want to read get away.

  8. SB Says:

    Sir,
    For JMo’s readers, ‘ghost writing’ possibility exists in case of exigencies and who would be taking the role of Kadalur Seenu among 7.5 readers (requires a recount as numbers may have gone up) is to be decided.

    https://www.kamadenu.in/news/cinema/7767-ilayaraaja-75-2.html

    More than Charu/JMo/SR, we got IR well positioned to give us daily laughs and this 3-minute-thing is a constant ( like eleven minutes of Paulo Coelho’s). Look forward to your moorings on same.

    Regards
    SB


    • ஐயா, ஐஆர் என்றால் எனக்கு இன்ஃப்ராரெட் எனத்தான் உடனடியாக மண்டையில் ஓட்டமாய் ஓடுகிறது.

      இளையராஜா அவர்கள் சிலபல நல்லபாடல்களுக்கு அழகாக இசையமைத்திருக்கிறார் – இதனை அறிவிலியான நானுமே ஒப்புக்கொள்வேன். அதேசமயம் சிலபல மெட்டுகளை நேரடியாகச் சுட்டும், சுடாமலும் பட்டும்படாமலும் அமைத்திருக்கிறார். இதில் டூமினிட் நூட்ல்ஸ் வகைகளும் இருக்கலாம்.

      அவர் குரல் என்று பார்த்தால், என் குரலை வைத்துகொண்டு நானே டான் மக்லீன் ஆகிவிடுவேன், பாவம். (யார் பாவம் -என நீங்களே முடிவு செய்து வாழ்க்கையை முடித்துக்கொள்ளவும்)

      இந்த அழகில், நேற்றிரவு பெருந்தேவி எனும் கவிஞ்ஜரின், தூக்கிவாரிப்போடும் வரிகள் எனக்கு வந்தன. அதனால் பயத்தில் இருக்கிறேன்.

      ஆளைவிடும்.

      ரா.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s