மேதகு தொல் திருமாவளவன் அவர்கள், ஒரு திடீரெக்ஸ் பொருளாதார நிபுணர் மட்டுமல்லர்…
December 5, 2016
நேர்கோணல் மூலமாகப் பெறப்பட்ட அய்யா திருமாவளவன் அவர்களுடைய கருத்துகள் சிலவற்றை ‘கழித்துக்கட்டப்பட்ட ரூபாய் நோட்டுகள் காட்டுவது போகாத ஊருக்கு வழி’ (=‘Demonetisation is a road to nowhere’) என்ற தலைப்பில், என்னுடைய பிரத்தியேகச் செல்லமான ‘த மண்டு’ பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது.
இம்மாதிரி உளறச் செய்திகளை ‘த மண்டு’ சப்புக் கொட்டிக்கொண்டு பிரசுரிக்கிறதிலோ – இம்மாதிரி, மட்டரகமாகவும் அபத்தமாகவும் பேசுவது நம் செல்லமான ‘திருப்பி அடி’ தொல்.திருமாவளவன் அவர்கள் என்பதிலோ எனக்கு ஆச்சரியமேயில்லை. ஏனெனில் அவரவர்களுக்கு அவரவர்களுடைய செல்லமான தொழில்கள். அவரவர் செல்லத் தொழில்களில் அவரவர் விற்பன்னர்கள்கூட.
பொதுவாகவே அபத்தக் களஞ்சியமாக இருக்கும் இக்கட்டுரையில் (திருமா, கோலப்பனுக்கு இதற்குப் பப்பாதி பொறுப்பு) இருக்கும் பல முக்கியமான சிரிப்புகளில் ஒன்று, ஒருமாதிரி மாதிரிக்கு…
“Today, the situation has come to such a pass that political parties cannot function without black money” என, திருமாவளவன் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்….அதாவது: தற்கால அரசியல் நிலவரம் எப்படி இருக்கிறதென்றால், அரசியல் கட்சிகள் கருப்புப் பணமில்லையென்றால் ஒன்றுமே செய்ய முடியாது.
சரி.
திருமாவளவன் அவர்களுடைய தன்னிலை விளக்கமாக இதனை எடுத்துக்கொண்டு, கோலப்பன் இதனை மேலே விவாதம் செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
‘உங்களுடைய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கட்சிதானே! உங்கள் கட்சிக்கு எப்படியெல்லாம் கருப்புப்பணம் வருகிறது? அதனை எப்படியெல்லாம் செலவழிக்கிறீர்கள்? அல்லது உங்கள் கட்சி ஜொலிக்கும் நேர்மையுடன் நடக்கும் கட்சியா??’ எனவெல்லாம் பணிவுடனேகூடக் கேட்டிருக்கலாமே?
-0-0-0-0-0-0-0-0-
சரி.
மலையாளிகளுக்குச் சொந்தமான பல நகைக்கடைகள் தமிழகத்திலும் தொடர்ந்து சக்கைப்போடு போட்டுக்கொண்டிருப்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான், ஜாய் ஆலுக்காஸ், ஜோஸ் ஆலுக்காஸ் போன்ற பலப்பல பெயர்களில் அவை ஜெகஜ்ஜோதியாக உலா வருவதைப் பார்த்தால் – தமிழகத்தில் இருக்கும் ‘நேர்மையான’ பணப்புழக்கத்தைப் பற்றி எண்ணினால்…
எண்ணித் துணிக கருமாந்திரம்.
சரி.
முள்ளுப் பெரியாறு விவகாரம் நடந்துகொண்டிருந்த சமயம். சிலபல வருடங்களாகி விட்டன – ஆகவே நம் சமூகவலைத்தளப் போராளிகள் இதையெல்லாம் மறந்திருக்கலாம். ‘த மண்டு’வுக்கும் அடுத்த பப்பரப்பாதான் முக்கியம், ஆகவே எப்படித்தான் இந்தப் பழைய விஷயங்களைத் தொடர்ந்து நோண்டிக்கொண்டிருக்க முடியும், சொல்லுங்கள்?
திராவிடத் தமிழ்த் தேசிய அபேமானிகளால், ஏதோ தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையே ‘புறநானூற்றுப் போர் ஏற்படப்போகிறது’ ரேஞ்சுக்கு பீதி கிளப்பப்பட்டது.
மலையாளிகள் நடத்தும் நிறுவனங்களில் பிரபலமானவை, பாவம், திராவிடபிஸினெஸ் (=பகற்கொள்ளை) செய்யும் உதிரி அரசியல் வாதிகளிடம் மாட்டிக்கொண்டன.
இப்படியாகத்தானே மலையாளிகள் நடத்திக்கொண்டிருந்த லாபம் கொழிக்கும் தொழில்கள் அரசியல்குண்டர்களின் பார்வையில் பட்டு, மகத்தான அளவில் தண்டப் பணம் (‘protection money’) அழப்பட்டது. இப்படியாகத்தானே உதிரிக்கட்சிகளில் இருந்தாலுமே, சிலபலர் திடீரெக்ஸ் பணக்காரர்கள் ஆயினர்.
சரி.
கடந்த சில வருடங்களில் விசிக பிரமுகர்கள் சிலர் வழி மறிக்கப்பட்டு அடிஉதை வாங்கினர். ஒருசிலர் கொலையும் செய்யப்பட்டனர். உடனடியாக, இந்த விஷயங்களுக்குக் காரணமாக ‘ஆதிக்க’ ஜாதிக் கட்சிகள் (=பாமக) காண்பிக்கப்பட்டன. மேலும் தமிழகத்தில் ஜாதிக்கொலைகள் நிறைய நடந்துகொண்டிருப்பதாகவும், அரசியல்கொலைகளில் அதன் விகிதம் ஏறிக்கொண்டிருப்பதாகவும் கதைகள் கட்டப்பட்டன.
ஆனால், இவற்றுக்கெல்லாம் பணரீதியான தகராறுகள் மட்டுமே காரணம் என விசாரணைகள் விரிந்தன, விரிந்துகொண்டிருக்கின்றன; அல்லது பூசி மெழுகப்பட்டன; அல்லது மறைக்கப்பட்டன.
முந்தைய பதிவுகளிலிருந்து சில (தொடர்புள்ள) குறிப்புகள்:
…திராவிடக் கட்சிகளும் அவற்றின் அரைகுறைக் கருத்தாக்கங்களும் – மிக முக்கியமாக, அவற்றின் தொடர் தீவட்டிக் கொள்ளைகளும், கலாச்சாரச் சுரண்டல்களும் ஒழிக்கப்பட்டால்தான், அறவே அகற்றப் பட்டால்தான், தமிழகத்துக்கு விமோசனம். இந்த அயோக்கியக் கட்சிகளில் நான் திமுக, அஇஅதிமுக போன்றவற்றுடன், பாமக, தேதிமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்றவற்றையும் இணைக்கிறேன். இப்பாதையில் சேரத் துடிக்கும் கயமைச்சந்தர்ப்பவாதக் கட்சிகளான கொங்கு கட்சிகள், பச்சமுத்து கட்சி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக, தவ்ஹீத் ஜமாத் வகையறாக்களையும் இணைக்கிறேன்.
இவற்றின் பின்புலங்களையும், நிதர்சன நிலவரங்களையும் ஓரளவுக்கு அறிந்துள்ள என்னைப் பொறுத்தவரை – இவைகளுக்குள் அடிப்படையில் ஒரு வித்தியாசமும் இல்லை. பெருங் கொள்ளையடிப்பவர்கள், சிறிய கொள்ளைக்காரர்கள், பிக்பாக்கெட் காரர்கள் என்ற அளவில் தான் இவர்களுக்குள் வித்தியாசங்கள். பொதுவாகவே – இவைகளுக்கும் கொள்கைகள் என்பவற்றுக்கும் வெகு தூரம்; இவற்றின் நெடுநாள் அங்கத்தினர்களிடமே கூட ‘அவர்களுடைய கொள்கை என்றால் என்ன?” கேட்டாலும் அவர்களுக்கும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அயோக்கியமாகப் பணத்தைச் சுருட்டுதல் மட்டுமே. இக்கட்சிகளுக்குள் இருக்கும் பிற வித்தியாசங்கள் – பதவியில் இருந்தால் அதிகாரத்துடனும் சுருட்டுதல் – பதவியில் இல்லாவிட்டால் அடாவடிகளில் சுருட்டுதல் – என்கிற ரீதியில் இருக்கும், அவ்வளவுதான்.
…விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்பது வெறும் திருமாவளவன் கட்சிதான். அவர், சில தலித் உட்பிரிவுகளை அமைப்பு ரீதியாகத் தொகுத்து திராவிடத்தன அரசியல் செய்துகொண்டிருப்பவர் மட்டுமே. கொள்கை என்றால் என்ன, சொந்த சமூக மேன்மைக்காக என்ன செய்யவேண்டும், படிப்பறிவின் முக்கியத்துவம், ஆக்கபூர்வமான செயலூக்கத்தின் மூலம் நெடுங்கால ரீதியான முன்னேற்றங்களுக்கு எப்படி வித்திடுவது, தமிழகத் திராவிட நடைமுறைச் சூழலில், எப்படிப்பட்ட தலைமை தலித்களின் ஒரு சில உட்பிரிவினரையாவது கடந்தேற்றக்கூடும் – என்பவை போன்ற சிந்தனைகள் – இவர் தொகுத்திருக்கும் பெரும்பாலான இளைஞர்களுக்கு இல்லவேயில்லை; அவர்கள் தேவையற்ற அடாவடிக்கும், குடிவெறிக்கும், குண்டர்தனத்துக்கும், முறைகேடான வழிகளில் பொருளாதாயம் தேடுவதற்கும் மட்டுமே பயிற்சி தரப் பட்டுள்ளனர். மேலும், இவ்விளைஞர்களில் சிலர், பிற, மேலதிகமாக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள ஜாதிகளை (=அருந்ததியர்கள், ஒட்டர்கள்) எப்படி அணுகுகிறார்கள் என்பதையும் நேரடியாகப் பார்த்திருக்கிறேன் – இதுவும் அமைதி தருவதாக இல்லை. (இது தொடர்பான 2011 தேர்தல் காலத்திய பதிவு: தேர்தல் ‘சுற்றுப்பயணம்’ – 3 23/04/2011)
திருமாவளவன் அவர்களின் பல பேச்சுக் கச்சேரிகளுக்குப் போயிருக்கிறேன். அவர் பேச்சுகளில் பொதுவாகவே, தொலை நோக்கோ திட்டமிடுதலோ இல்லை. முட்டியடி எதிர்வினைகளிலும், நம் தமிழகத்திலிருந்து ஒன்றையும் செய்யமுடியாத ‘தமிழ்’ ஈழப் பிரச்சினையிலும் மூழ்கி, உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதிலும், விசிலடித்தல்+கைதட்டல் பரிசில்கள் வாங்குவதிலும் – பொதுவாகவே கதாகாலட்சேபம் செய்து கொண்டிருப்பதிலுமே அவருடைய நேரம் போய்விடுகிறது. இதற்கு ஒரு படி மேலேபோய் தேவையேயற்ற (வரலாறு+அறிவியல் ரீதியாக) காலாவதியான ‘இனம்’ ‘இனமானம்’ பற்றியெல்லாம் ஒரு சுக்குக்கும் பயனில்லாமல் முழக்கங்கள் + ஜாதிவெறி திராவிட அமைப்புகள், ‘விடுதலை’ வீரமணி போன்றவர்களுடன் சல்லாபித்து நேரவிரயங்கள்…
மேலதிகமாக, கடந்த 4-5 ஆண்டுகளில் அவருடைய பேச்சின் தரம் – திராவிடக் கட்சிப் பேச்சாளர்களின் வக்கிரத் தனத்துடன் போட்டி போடுகிறது; குறைந்த பட்சம் ஒருமுறையாவது ‘எங்களோடது பெருசு’ ரீதியில் பேசியதை நானே கேட்டிருக்கிறேன். வன்னியர் சார்பில் பேசுவதாகக் கருதிக்கொண்டு காடுவெட்டி குரு போன்றவர்கள் அரைகுறைத்தனமாக வெறுப்பை உமிழ்ந்தால், திருமாவளவன் அதற்கு மேல் பேசுகிறார். இப்படிப் படு கேவலமாகப் பேசினால், அவருடைய தொண்டர்கள் எப்படி மதிக்கத்தக்க செயல்களை – பிறருக்காக என்பதையே விடுங்கள் – தங்களுக்காகவாவது செய்து கொள்ள முடியும்?
விசிக-வின் தலைமையும் பரந்துபட்டதாக இல்லை. திமுக அஇஅதிமுக போலவே, இக்கட்சியிலும் இரண்டாம் அடுக்குத் தலைவர்களே இல்லை; தலைவர் – அவருக்குப் பின் மூன்றாம் அடுக்குத் தலைவர்கள்தாம்! இதற்கு – பதவியைத் தக்கவைத்துக்கொள்வதுதான் காரணம் என்பது மட்டுமல்ல, பிற சோகமான பொருளாதாரக் காரணங்களும் இருக்கின்றன.
மேலும் – இவ்வளவு சிறிய கட்சியாக இருந்தாலும் கூட, நம்பகத் தன்மை இல்லாமல், பல விஷயங்கள் நடக்கின்றன; உட்கட்சியில் உள்ள – பொருளாதாயம் குறித்த பொறாமையால், பங்கிடல் பிரச்சினைகளால் ஏற்படும் நிகழ்வுகளுக்கும் தேவையற்று ஜாதிவெறி முலாம் பூசப்படுகிறது. இதனால், இக்கட்சிக்கு, தலித்களுக்கு அப்பாற்பட்ட பரந்துபட்ட மக்கள் வந்துசேருவதும் முடியாது. மேலும், இக்கட்சியானது, முட்டியடி எதிர்வினைகள் மட்டுமே கட்சியின் நடைமுறைக் கொள்கைகள் என்ற அளவில் மட்டும் தான் இயங்குவதால், ஒரு தொலை நோக்கே இல்லாமல் அலைபாய்வது என்பது மட்டுமே சாஸ்வதமாகியிருக்கிறது. இது ஒரு சோகமான, நிதர்சன உண்மை. சமூக(!) வலைத் தளங்களில், கருத்துலக அரைகுறைகள் நடந்துகொள்வது போல பிரச்சினைக்குப் பிரச்சினை தாவிக்கொண்டே கருத்துதிர்த்துக் கொண்டிருந்தால் – ஆக்கபூர்வமான கட்டமைப்புகளைச் சமைப்பதற்கு ஏது நேரம்!
இப்படிப்பட்ட அடிப்படைப் பிறழ்வு விஷயங்கள் சிறிதாவது சரி செய்யப்பட்டால் அது நன்றாகவே இருக்கும்.ஆனால், திராவிடக் கட்சியாக இருக்கும் விசிகே – இப்படியேதான் தொடரும் என்றுதான் நினைக்கிறேன்; ஆகவே, இதுவும் கடாசப்படவேண்டிய கட்சிதான்.
இச்சிறு கட்சிக்கு இவ்வளவு நீளமாக எழுதியிருக்கவேண்டுமா என்று தோன்றுகிறது, ஆனால் விசிக ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து + பாமக அமைக்கப்பட்டதிலிருந்து அவற்றை ஆர்வத்துடன் கவனித்துக்கொண்டிருக்கிறேன் – இவற்றின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கோ, நடைமுறைப் பிறழ்வுகளுக்கோ அந்தந்த ஜாதித்திரள்கள் காரணமல்லர்; ஏனெனில், எனக்குப் பட்டவர்த்தனமாகத் தெரியவருவது என்னவென்றால் இவையனைத்தும் திராவிடக் கந்தறகோளத்தில் முக்குளித்து முகிழ்த்தவை. ஆக, இவை – அலங்கோலமல்லாமல் வேறெப்படி இருக்கக்கூடும்? இப்போதைக்கு இவற்றுக்கும் (நமக்கும்) விமோசனமேயில்லை.
திருமாவளவன் அவர்களுடைய கட்சியின் தேங்கல் நிலை வருத்தம் தருவது – ஆனால் நிச்சயம் புரிந்துகொள்ளக்கூடியதுதான்.
-0-0-0-0-0-0-
December 6, 2016 at 06:41
சில வருடங்களுக்கு முன், குத்தம்பாக்கத்தில், இளங்கோ என்ற தலைவரை சந்தித்தேன். காந்தியவாதி, ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள மனிதர். குடிப்பழக்கத்திலிருந்தும், அடிதடியிலிருந்தும் தலித் இளைஞர்களை காப்பாற்ற முயன்று கொண்டிருந்தார். நிதானமாக, ஆனால் நிச்சயமாக முன்னேற்றத்தை கொண்டுவருகிறார் (http://siragu.com/?p=19984). ஆனால், இளங்கோவைவிட அந்தப்பகுதியில் உள்ள அடாவடிக்கு பெயர்போன இன்னொருவர் தலித் தலைவராக அறியப் படுகிறார். காரணம் “பொறுளாதாரம்”!
December 6, 2016 at 13:27
ஆ! பூவை மூர்த்தியார –>> அவருடைய மகனார் –>> :-(
March 6, 2021 at 09:58
[…] […]