அயதொல்லாஹ் நிம்ர் பக்ர் அல்-நிம்ர்: இரான் அரசின் இரட்டைவேடமும், நடைமுறை இஸ்லாமின் பெரும்பாலும் கதிமோட்சம் இல்லாத நிலைமையும்
January 8, 2016
மூன்று நாட்களுக்கு முன் இடப்பட்ட ஒரு பின்னூட்டத்தின் மூலமாகத்தான், அயதொல்லாஹ் நிம்ர் பக்ர் அல்-நிம்ர் அவர்களை, ஸவூதி அரசாங்கம், ஜனவரி 2, 2016 அன்று சிரச்சேதம் செய்த கோரத்தைப் பற்றிய விவரத்தை அறிந்து கொண்டேன். (எனக்குப் பொதுவாக – பப்பரப்பா டீவியோ, தினசரிகளோ, இணையச் செய்திகளோகூட ஒத்துவரமாட்டா)
ஆனால், ஷாரியா படி நீதிபரிபாலனம் செய்யப்படும் நாடுகளில் — அதாவது, வஹ்ஹாபி-ஸலாஃபிய ஸுன்னிவாதிகளால், ஷியாவாதிகளால், ஜஞ்ஜாவிட் கொலைகாரர்களால் ஆளப்படும் பிரதேசங்களில் — இம்மாதிரி வன்முறைகள் சகஜம்தான். பொதுமக்களால் வெகு சாதாரணமாக இவை எதிர்கொள்ளப்பட்டு, கூடியவிரைவில் அவர்களுடைய சொந்த உயிர் தரித்தல்களுக்காக, மறக்கப்படுபவைதான்! Life in these countries is normal, for a given value of ‘normal,’ that is! :-(
நிம்ர் பக்ர் அவர்களின் சிரச்சேதம் எப்போதோ நடந்திருக்கவேண்டிய விஷயம்; அவரையும் அவர் குடும்பத்தினரையும் அவர் வழிநடத்திய மக்கள்திரளையும், இன்னமும் நீண்ட நாட்கள் துக்கத்திலும், அவநம்பிக்கையிலும் வாடவிடாமல், இழுத்தடிக்காமல் இப்போதாவது இது நடந்துமுடிந்ததே என நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்; எப்படியும், இது போன்ற விஷயங்கள், இஸ்லாமை அதன் ஆரம்ப நாட்களின் கோர வீரவிளையாட்டுகளான படுகொலைகளுக்கும், அட்டூழியங்களுக்கும்தான் இட்டுச் செல்லும் என்பது தெளிவாகத் தெரிந்தாலும், இப்படியும் இச்செய்தியைப் புரிந்துகொள்கிறேன். இதுதான் நிதர்சனம் என்றாலும், கொஞ்சம் குரூரம்.
-0-0-0-0-0-0-0-
இந்த அழகில் – அவ்வப்போது அஞ்ஜும் சௌதுரியின் ‘இந்தியாவுக்கு ஷாரியா’ (sharia for india / ‘Sharia for Hind Project’ = இந்தியர் அனைவரும், 8ஆம் நூற்றாண்டு அரேபியாவின் ஷாரியா சட்டவிதிகளின் கீழ் ஆட்கொள்ளப்படவேண்டும்!) போன்ற வாயோர நுரை பொங்கும் இயக்கங்களும், அனைத்திந்திய முஸ்லீம்களுக்கான அவர்களில் உள்ள பிரிவுகளுக்கான பலவிதமான அமைப்புகளும், ஷாரியா தொடர்பான சப்தங்களைத் தொடர்ந்து எழுப்பியவண்ணம் இருக்கின்றன; இந்திய முஸ்லீம்களைத் தனிமைப் படுத்தவும், அச்சமூகப் பெண்களை மேலதிகமாக ஒடுக்கவும், அச்சமூகத்தினரைப் பழமைவாதிகளாக மட்டுமே ஆக்கி அவர்களில் உணர்ச்சி வசப்படுபவர்களை தீவிரவாதத்தை நோக்கித் தள்ளவும் தான் இவை பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் முஸ்லீம்களுக்காக இயங்குவதாகச் சொல்லிக்கொண்டு அரசியல் செய்யும் அனைத்துக் கட்சிகளும் இப்படித்தான்! இவைகளுக்குத் தம் சமூக மக்களை நெறிப்படுத்துதல், அவர்களின் மேன்மையில் கரிசனத்தோடு இருத்தல், தங்கள் மதம் சார்ந்த நம்பிக்கைகளைத் தொடர்ந்து செழுமைப் படுத்திக்கொள்ளுதல் போன்றவையெல்லாம் ஒத்துவரவே மாட்டா!
(கடந்த 30 ஆண்டுகளாவது இவ்வமைப்புகளைக் கூர்ந்து நோக்கிவிட்டுத்தான், நல்ல தலைவர்களாக வந்திருக்கக் கூடியபல இளம் இந்திய முஸ்லீம்கள் தம்மை விட்டால்போதும் என அமெரிக்காவையும், கனடாவையும், இங்கிலாந்தையும் சரணடைவதைப் பார்த்துவிட்டுத்தான் சலித்துப்போய் இப்படிச் சொல்கிறேன். இந்திய முஸ்லீம்களிலிருந்து பரந்த அறிவும் செயலூக்கமும் மிக்க ஒரு குதூகலமான இளைஞர் பட்டாளம் மேலெழும்பி, தம்மையும் தம் சமூகத்தையும் உய்வித்தால்தான் உண்டு. ஆனால் இந்தப் பட்டாளம் எங்கே? :-( அதன் விடிவெள்ளி இளம் தலைவர்கள் எங்கே?)
நம் சொந்தப் பிரச்சினைகள் இப்படியிருக்க இரான்(=ஷியா பெரும்பான்மை தேசம்) அரசு டர் புர்ரென்று சப்தம் போட்டுக்கொண்டிருக்கிறது – ஷியா குருவான, வன்முறையில் ஈடுபடாத நிம்ர் பக்ர் அவர்களை அநியாயத்துக்கு(இது உண்மைதான்!), ஸவுதி அரேபியா கொன்றுவிட்டதாகவும், இதற்கு ஸவுதி அரேபியா ஒரு பெரிய விலை கொடுக்கவேண்டியிருக்கும் என்றும்…
…எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. ஏனெனில், இதே ‘அறச்சீற்ற’ இரான் அரசானது – கண்டமேனிக்கும் அரசியல் கைதிகளை, ஷியாக்கள் அல்லாத பொதுமக்களை, வன்முறையில் ஈடுபடாமல் போராட்டங்களில் அமைதியாக ஈடுபடுபவர்களைக் கூட, அதே ஷாரியா விதிகளைப் பயன்படுத்தி, ஈவிரக்கமின்றிக் கொன்றிருக்கிறது, தொடர்ந்து கொன்று கொண்டிருக்கிறது.
க்ரேன் யந்திரங்களை இப்படியும் ஷாரியா விதிகளின்படி உபயோகிக்கமுடியுமா என்பது எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. ஏனெனில் ஸவுதி அரேபிய சிரச்சேதமுறைதான், சரியான வழி.
மாதாமாதம் இம்மாதிரி அநியாயக் கொலைகள்/தண்டனைகள் தொடர்ந்து, பல இஸ்லாமிய நாடுகளில் நடக்கின்றன. இக்கொலைகளை அரங்கேற்றுபவர்கள் அனைவரும், தாங்கள்தாம் உண்மையான இஸ்லாமியர்கள் என்கிறார்கள்; தங்கள் ஈனச்செயல்களுக்கு தங்களுடைய மதப்புத்தகங்களை மேற்கோள் காட்டுகிறார்கள். இவர்களுக்கு, நம்பவேமுடியாத அளவில், ஒரு பெரிய மக்கள்திரளின் ஆதரவும் இருக்கிறது. இது சோகம்தான். ஆனால் நான் இன்னமும் கல்வியறிவில் அது உருவாக்கக்கூடும் குடிமைப்பண்பிலும், மேன்மையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
-0-0-0-0-0-0-
-0-0-0-0-0-0-0-
நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை; அற்றேபதியின் பிழை அன்று பயந்து நமைப் புரத்தாள்மதியின் பிழை அன்று, மகன் பிழை அன்று மைந்த!விதியின் பிழை! நீ இதற்கு என்னை வெகுண்டது?
நம் கம்பனிடம் நிபந்தனையற்றுச் சரணடைவதைவிட எனக்கு வேறு வழியில்லை. உங்களுக்கு?
- السهل الممتنع21/12/2015
January 8, 2016 at 15:59
excellent, provided me some clarity on this iran iraq issue. Thanks.
January 11, 2016 at 09:05
Sir, i got this link from someone’s twitter timeline.
gives a different perspective on the Shia-Sunni conflict.
https://theintercept.com/2016/01/06/one-map-that-explains-the-dangerous-saudi-iranian-conflict/
January 12, 2016 at 11:10
அய்யா, தாங்கள் கொடுத்த சுட்டிக்குச் சென்று படித்தேன். எண்ணெய் அரசியல், வரலாறு, புவியியல் விஷயங்கள் கடந்த சில பத்து வருடங்களில் முளைத்தவைதான். ஆனால் வெறுப்பியத்தின் வயது 1250 ஆண்டுகள்.
ஆகவே, இக்கட்டுரை ஒரு பதிய பார்வையைக் கொடுப்பதாக நான் நினைக்கவில்லை. பாகிஸ்தானை எடுத்துக்கொள்ளுங்கள், அதன் பெரும்பான்மை ஸுன்னிகள் ஷியாக்களை வெறுப்பதை எப்படி எடுத்துக்கொள்ளலாம்? பங்களாதேஷ்?
உண்மை நிலவரங்கள் மிகவும் சிடுக்கலானவை. ஆனால் கடந்த 1400 வருட அரேபிய வரலாற்றைக் கொஞ்சம் படித்ததால் எனக்குத் தோன்றுவது என்னவென்றால், அப்பகுதியில் எண்ணைய் வளம் கண்டுபிடிக்கப் பட்டிருக்காவிட்டால், அங்கு நிலைமை இன்னமும் மோசமாக இருந்திருக்கும்.
ஆனால் உலகத்தின் வேறு பகுதிகளிலுள்ள இஸ்லாம் – மிகுந்த பொருளாதார/ஆன்மீக/தொழில் நுட்ப வளர்ச்சி பெற்றிருக்கும். பன்முகங்கள் வளர்ந்திருக்கும்.
எல்லாம் ஒரு யூகம்தான். :-(