பாவப்பட்ட தமிழகத்தின் அயோக்கிய திராவிடக் கொள்ளைக்காரர்கள் பற்றிய பழங்கதையாடல்களின் தேவை

July 1, 2015

கடந்த சில பதிவுகளில் அநியாயத்துக்குப் பாடுபடும்பொருட்கள் – திராவிடர்களின் அடிப்படைக் குணாம்சங்களான அகொதீகழக நினைவுகள்; வெளிவந்துள்ள சில அமெரிக்க தூதரகச் செய்திப் பரிமாற்றங்களின் வாசத்தால் கிண்டப்பட்டவை.  (திமுக = அகொதீக – நாம் உதிர்க்கப்போவது எதனை? 09/04/2011)
இம்மாதிரி விக்கிலீக்ஸ் சங்கதிகள் மீதான என்னுடைய வேலைவெட்டியற்ற *பதிவுகளுக்கு நான்கு விதம்விதமான எதிர்வினைகள் – பல, வேலைவெட்டியற்ற மின்னஞ்சல்களாகவும் ஒன்றிரண்டு பின்னூட்டங்களாகவும், ஒன்றேயொன்று தொலைபேசலாகவும் வந்திருக்கின்றன; அவற்றின் சாராம்சம்:

#1. இவையெல்லாம் வதந்திகள் – இவற்றுக்கு ஏன் முக்கியத்துவம்?

#2. இவையெல்லாம் நடந்தபோதே எல்லோருக்கும் தெரியும். ஆக, ஏன் இவற்றை மறுபடியும் கிளறவேண்டிய அவசியம்? (இப்படியும் சிலர் கருதும்போது #1 அடிபட்டுப் போய்விடுவது ஒரு சுவாரசியமான விஷயம்!)

#3. இவையெல்லாம் பழங்காலத்தில் நடந்தவை – இவற்றை இப்போது கிளறுவதில் என்ன பயன்?

#4. உனக்கு ஏன் இந்தவேலை? கல்வியைப் பற்றி எவ்வளவோ எழுத/சொல்ல இருக்கையிலே – ஏன் இப்படி?
இவற்றுக்கு என் (பெருமூச்சுடன் கூடிய) பதில்கள்:

-0-0-0-0-0-

#1. இவையெல்லாம் வதந்திகள் – இவற்றுக்கு ஏன் முக்கியத்துவம்?

~1. இவை வதந்திகள் அல்ல. இவை (மூளையை உபயோகிக்கும்) தூதரக அதிகாரிகளின் கருத்துகள்; அவர்கள் தங்கள் வேலை/பணி தொடர்பாக தங்களுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளைகளை செவ்வனே நிறைவேற்றுவதின் ஒரு அங்கம். வெளியுலகத்திற்கு இவை தெரியவரமாட்டா என்பதன் காரணத்தால், மேலும் இவற்றை எழுதினால் எழுதியவர்களுக்கு உடனடியாக கொலைமாமணி/ஞானபீடைப் பரிசு என்றெல்லாம் நிச்சயம் கிடைக்காது என்ற காரணத்தால் – இவற்றின் வெளிப்படைத்தன்மை என்பது ஒரு முக்கியமான அங்கம்.

இவற்றில் பூசி மெழுகல்கள் இல்லை. கொலைகார அயோக்கியர்களை மாவீரன் பிரபாகரன் எனச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. பொறுக்கிகளை திராவிட இனமானத் தலைவர்கள் என அழைக்கவேண்டியது இல்லை. இசுடாலிரின் இளமைக்கால நடவடிக்கைகளை பொறுக்கித்தனமானவை (‘thuggish’) எனக் குறிப்பிடாமல், திராவிடத் தியாகங்களைச் செய்தவர் எனச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

-0-0-0-0-0-0-

#2. இவையெல்லாம் நடந்தபோதே எல்லோருக்கும் தெரியும். ஆக, ஏன் இவற்றை மறுபடியும் கிளறவேண்டிய அவசியம்?

~2. அய்யாமார்களே! மனிதனின் – குறிப்பாக, நம் சராசரித் தமிழனின், திராவிடத்தால் காயடிக்கப்பட்டவனின் ஞாபகசக்தியும் மிகக் குறைவு. திராவிட மறதி நோயால் பீடிக்கப்பட்டு அவன் பாவம், ஒரு பப்பரப்பாவிலிருந்து அடுத்த பப்பரப்பாவுக்குக் கருத்துதிர்த்துக்கொண்டே சென்றவாறிருப்பான். ஆகவே, அவனுக்கு அவ்வப்போது திராவிடத்தின் பவிஷை எடுத்துச் சொல்வது முக்கியமானது.

ஒரு எடுத்துக்காட்டாக – நீதிபதி பால் கமிஷன் என்று ஒன்றிருந்ததா, அதன் குறிக்கோள் என்ன, கருணாநிதி அரசின்போது  அதன் ரிப்போர்ட் எப்படி மாயமாகக் ‘காணாமல்’ போனது என்பதெல்லாம் யாருக்குத் தெரியும்?

ஆகவே – எனக்குத் தெரிந்த விஷயங்களை (தரவுகளுடன், நம்பகத்தன்மை மிகுந்தவர்களின் கருத்துகளுடன், வெறுமனே கடன்வாங்காமல் – என் மூளையையும் உபயோகித்து) பழையதானாலும் சரி – புதிதானாலும் சரி, எனக்கு முக்கியம் எனத் தோன்றுபவைகளைத்தான் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு விஷயம்: நான் முழ நீளமாக எந்த எழவைப் பற்றி எழுதினாலும் (இதுவரை 500 பதிவுகள்) – ஒத்திசைவில் மிக அதிகமாகப் படிக்கப்படுபவை நடு1970களில் நடந்த சர்க்காரியா கமிஷன் பற்றிய விஷயங்கள்தான். இன்னமும் வாரத்திற்கு ஒருமுறையாவது ஒரு மின்னஞ்சல்வரும் – இதன் மேலதிக விவரங்களைக்கேட்டு, அதாவது – இதனைப் பற்றி முதன்முறையாகக் கேள்விப்படுபவர்களிடமிருந்து.

-0-0-0-0-0-0-

#3. இவையெல்லாம் பழங்காலத்தில் நடந்தவை – இவற்றை இப்போது கிளறுவதில் என்ன பயன்?

~3. என்னைப் பொறுத்தவரை – வரலாறு என்பது, வரலாற்றறிவு என்பது மிக முக்கியம். சொல்லப் போனால், நாம் கற்றுக்கொண்டிருக்கும் அனைத்துத் துறைகளும் கணிதம், இயற்பியல், கணிநியியல் என அனைத்து சமாச்சாரங்களிலும் நாம் அதனதன் வரலாறுகளைத்தான் கற்றுக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் – குறிப்பாக, நம் தமிழகச் சூழலில் – வரலாற்றறிவு என்பது மிகமிகக் குறைவு. அதானால்தான் திராவிடம் என்கிற கருத்தாக்கத்தையே, ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டையே, ஆரிய-திராவிடப் பிரிவுனைக் கற்பிதங்களையே தூக்கி எறிந்த அம்பேட்கர் போன்றவர்களின் கருத்தாக்கங்களை மறந்து – அம்பேட்கரும் பெரியாரும் ஒரேமாதிரி சிந்தித்தார்கள் எனச் சொல்லமுடிகிறது. ஆனால், பலப்பல விஷயங்களில் அம்பேட்கரும் பெரியாரும் கொண்டிருந்த கருத்துகள், செயல்பாடுகள் – மாமலைக்கும் கிடுகிடுபள்ளத்திற்கும் உள்ள ‘ஒற்றுமை’ அளவில் தான் இருந்தன/இருக்கின்றன. ஆனாலும் இவர்கள் இருவரையும் ஒரே தராசில் தான் வைப்போம். ஏனெனில் திராவிட முட்டாள்தனம் என்பதன் ஆழமும் வீச்சும் அப்படி.

இந்த கூறுகெட்ட சமகாலச் சூழலில் – பழைய உண்மைகளை மறுபடியும் மறுபடியும் சொல்வது, கிடைத்த புதிய தரவுகள்/செய்திகள் மூலம் திராவிடப் பொய்மைகளை, புனைசுருட்டுகளைப் பார்ப்பது என்பது – நம் தமிழகத்தின் மேன்மைக்கு, சிந்தனைச் சூழல் விரிவாக்கத்துக்கு மிக மிக இன்றியமையாதது.

எப்படியும் நாம் நம்முடைய வரலாறுகளிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது, மிக அதிகம்தானே? அவற்றைத் தொடர்ந்து மறுபரிசீலனை செய்துகொண்டிருப்பதும் சரியான அணுகுமுறைதானே? இப்படிச் சரியான – நம்மைச் செம்மை செய்துகொள்ளும், மேம்படுத்திக்கொள்ளும் முயற்சிகள் நம்மிடம் இல்லையென்றால் – நாம் நம் வரலாற்றுத் தவறுகளை மட்டுமேதானே (எடுத்துக்காட்டாக – திராவிடக் கருத்தாக்கப் பொய்மைகள் பஜனை, திராவிட விடத்தை ஆட்சியில் அமர்த்தியமை) செய்துகொண்டிருப்போம்?
வரலாற்றை, முற்காலங்களை [சரியாக] அறியாதோர், அதன் [எதிர்மறை] கூறுகளை/ நிகழ்வுகளை மறுபடியும் நடைபெறச் செய்வர்.
ஜார்ஜ் சந்தயன (1863-1952) (மூலம்: Those who cannot remember the past are condemned to repeat it; என் மொழி’பெயர்ப்பு’ இவ்வரியின் பின்புலத்தைக் கருத்தில்கொண்டு செய்யப்பட்டதொன்று)
-0-0-0-0-0-

#4. உனக்கு ஏன் இந்தவேலை? கல்வியைப் பற்றி எவ்வளவோ எழுத/சொல்ல இருக்கையிலே – ஏன் இப்படி?

~4. நான் முன்பு ஒரு பின்னூட்டத்தில் எழுதியது போல் – தங்கள் உள்மனக் கிடக்கைகளை, ஏக்கங்களை, ஏன் தங்களுடைய அயோக்கியச் செயல்பாடுகளையுமே கூட ஒளிவு மறைவு இல்லாமல்  மனிதர்கள், சில சமயம் தங்கள் தற்காப்பு எத்தனங்களையும் மீறி வெளியே சொல்லிவிடுகிறார்கள். இவற்றில் பல உண்மைக் கீற்றுகள் இருக்கின்றன. இப்படிப்பட்ட பளிச்சிடும் உண்மைகள் வெளிவரும்போது அவற்றைப் பற்றி எழுதுவதையும் என்னைப் பொறுத்தவரை முக்கியமாகக் கருதுகிறேன்.

கனிமொழி, தயாநிதி போன்றவர்கள் சிலசமயம் – விரக்தியடைந்த கணங்களில், எக்களிப்புக் காலங்களில் – உண்மைகளையும் பேசுகிறார்கள், அவர்களும் மனிதர்கள்தாம் என்று அறியும்போது, உங்களுக்கு மானுடத்தின் மீது மதிப்பு ஏற்படவில்லையா?

அதே சமயம், இந்த விஷயமும் நினைவுக்கு வருகிறது – ஒருமுறை (20 வருடங்களுக்கு முன்) பெங்களூர்-தில்லி விமானப் பயணத்தில் எனக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்தவர் ஒரு மிக அழகான முகவெட்டுடைய நடுவயதுப் பெண்மணி. அவர் ஒரு தமிழ் சினிமா நடிகை (பெயர் மறந்துவிட்டது) என அறிமுகப்படுத்திக் கொண்டார். என் கையில் ராஜம்கிருஷ்ணன் எழுதிய ‘காலம் தோறும் பெண்’ புத்தகத்தைப் பார்த்துவிட்டுப் பேச ஆரம்பித்தவர் நிறுத்தவேயில்லை – சுமார் 2 மணி நேரம் போனது 2000 மணி நேரம் போலத் தோன்றியது. தமிழ் சினிமா உலகின் உதிரித்தனம், பொறுக்கித் தனம், பேராசை, கொச்சைத்தனம் அனைத்தும் – தொடர்புள்ள நடிகர், இயக்குனர் பெயர்களுடன் விசும்பல்களுக்கிடையில் வெளிவந்தவண்ணம் இருந்தன. நான் ஒன்றுமே பேசாமல் பிரமை பிடித்தவன் போலக் கேட்டுக்கொண்டிருந்தேன். என்மேல் என்ன நம்பிக்கை வைத்து இதனையெல்லாம் சொன்னார் என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை. அவருடைய ஒரு மிகத் தளர்ந்த, விரக்தி நிரம்பிய தருணமாக அச்சமயம் இருந்திருக்கலாம், பாவம். ஆனால் – இவையெல்லாம் பற்றி எக்காலத்திலும் நேரடியாக எழுதவே மாட்டேன். தனிமனிதத் துயரங்களை நிறுவனங்கள்+அமைப்புகளின் மீது கவிழ்த்தல் சரியானதொன்றல்ல என்பதென் எண்ணம்.

என்ன சொல்கிறேன் என்றால் – உடனடி பப்பரப்பாவுக்காக நீங்கள் வேறு தளங்களுக்குச் செல்லலாம். உங்களுக்கு என்ன பிடிக்குமோ அப்படி எழுத, உங்கள் கடிதத்தைப் பிரசுரிக்க – வேண்டிய அளவு இணைய இளைஞர்கள் இருக்கிறார்கள், கவலை வேண்டேல். அவர்கள் தங்கள் இணையஉலாவியின் இன்னொரு பக்கத்தில் விக்கிபீடியா தளத்தைத் திறந்து தயாராகவே வைத்திருக்கிறார்கள். 2 நிமிட நூட்ல்ஸ் போய் 2 கண ஞானம் வரும் காலம் இது.

எப்போதுமே, நான் இக்கால நடந்துகொண்டேயிருக்கும் பப்பரப்பாக்களுக்கு மதிப்புக் கொடுப்பவன் அல்லன். எனக்கு ஆர்வம் உள்ள விஷயங்களை/செய்திகளை – என் படிப்பறிவுடன், சுயானுபவங்களுடன், என் மகத்தான-அழகான நண்பர்கள் சிலரின் ஞானத்துடனும் தொடர்ந்து பொருத்திப் பார்த்த வண்ணம் இருப்பவன். அவற்றிலும்கூட எவற்றில் செயலூக்கம் காண்பித்து எதனை எப்போது எழுதுவது என்பதிலேயே ஆயிரம் சிடுக்கல்கள்; ஆக – சுமார் 130 பதிவுகள் பாதியும் கால்வாசியுமாக கிறுக்கப்பட்டு மோட்சத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன.

எனக்குக் கல்வி முதல் கலவி வரை பலவற்றைப் பற்றி எழுதும் ஆசை இருந்தாலும் – நான் அடிப்படையில் ஒரு தமிழ் எழுத்தாளன் அல்லன். பத்தி எழுத்தாளனுமில்லை. எனக்கு வீண் பிரமைகள் இல்லை என நினைக்கிறேன். எனக்கு எழுதவேண்டும் என்று தோன்றுபவைகளைப் பற்றி எழுதுகிறேன். அதுவும் – ஒரு குறுகிய வட்டத்திற்காக, பெரும்பாலும் நான் நேரடியாக அறிந்துள்ள நபர்களுக்காக, ஒரு நாட்குறிப்பு போல – அவ்வளவுதான். நான் எழுதுவதைப்(!) படிக்க தினம் ஆயிரம் பேரையே விடுங்கள், வெறும் ஐம்பதுபேர் வந்து படித்தாலே அதுவே மிக அதிகம்.  சரியா? எனக்கு மந்தைகள் முக்கியமல்ல. இயங்கிக்கொண்டிருக்கும் மூளைகளுடைய சில மண்டைகள் போதும்.  (ராமசாமி – யாரில்லை?)

திராவிடத்தைப் பற்றியே ஏன் பெரும்பாலும் எதிர்மறையாக எழுதுகிறேன் என்றால் – அதுவும் அது சார்ந்த தளமும்தான் தமிழகத்தைத் தொடர்ந்து குட்டிச் சுவராக்கிக்கொண்டிருக்கிறது என்று நான் – தரவுகளை முன்வைத்து – உறுதியாகக் கருதுகிறேன். உங்களுக்கு அப்படிப்பட்ட கருத்தில்லை என்றால் தாராளமாக, வாயில் விரலை வைத்துச் சூப்பிக்கொண்டு – இலவசங்களை நக்கிக்கொண்டு ஆனந்தமாக இருக்கலாம். நன்றி.

நான் பலமுறை முன்னமே எழுதியிருப்பதுபோல – நான் எழுதும் அனைத்தையும் நீங்கள் படிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஏன், நீங்கள் ஒத்திசைவை முழுவதுமே புறக்கணிக்கலாம் – ஒரு சுக்குப் பிரச்சினையுமில்லை. உலகம் சுழல்வது இதனால் நின்றுவிடாது.

மேலும் முக்கியமாக – நீங்கள் உங்களுக்குப் பிடித்தவற்றை/பிடிக்காதவற்றைப் பற்றி எழுதிக்கொள்வதில், இணையத்தில் தரவேற்றுவதில் எனக்கு ஆட்சேபணையே இல்லை.  அவற்றைப் படித்து, மேலதிகமாக அவற்றைப் பற்றிய கருத்துகள் இருந்தால் நான் என் தளத்தில் எழுதிக் கொள்வேன். அதேபோல… நீங்களும்…

திராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/04/2015 வரை!)

6 Responses to “பாவப்பட்ட தமிழகத்தின் அயோக்கிய திராவிடக் கொள்ளைக்காரர்கள் பற்றிய பழங்கதையாடல்களின் தேவை”

  1. A.Seshagiri Says:

    {இந்த கூறுகெட்ட சமகாலச் சூழலில் – பழைய உண்மைகளை மறுபடியும் மறுபடியும் சொல்வது, கிடைத்த புதிய தரவுகள்/செய்திகள் மூலம் திராவிடப் பொய்மைகளை, புனைசுருட்டுகளைப் பார்ப்பது என்பது – நம் தமிழகத்தின் மேன்மைக்கு, சிந்தனைச் சூழல் விரிவாக்கத்துக்கு மிக மிக இன்றியமையாதது.}

    உங்களின் கருத்துக்களுடன் முழுக்க முழுக்க உடன் படுகிறேன்.
    “போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே”.

  2. sundar Says:

    The first ever corruption in tamilnadu after independence is
    Chennai corporation muster roll case during DMK ruling the coorporation.
    There was a case in court. Kannappan was one accused
    That I remember
    You please write about that first case !!!!

    Write more about these Dravidanadu cheaters
    Believing these fellows so many youngsters wasted life
    Continue to write
    Thank you

  3. vijayaraghavan Says:

    அய்யா,
    நெருக்கடி நிலை பிரகடன காலத்தில் இந்த “கலக” நச்சுப் பாம்புகளின் பற்கள் பிடுங்கப் பட்டிருந்ததாக அறிகிறேன். இந்தக் கும்பலின் கொட்டத்தை அடக்க அது தான் ஒரே வழியா? வினோபா, அன்னை தெரசா , பால்தாக்கரே , (எம்.ஜி.ஆர் -அது அரசியல் சுயலாபத்திற்கு ) ஆகியோர் எமர்ஜென்ஸியை ஆதரித்ததாக சொல்கிறார்களே?
    மேலும் இசுடாலிர் இதில் மிகவும் கவனிக்கப்பட்டாராமே?
    ஒரு சில வருட நெருக்கடி நிலை நம் நாட்டை சீர்படுத்துமா?

  4. vijayaraghavan Says:

    அய்யா,
    நெருக்கடி நிலை காலத்தில் இந்த “கலக” பாம்புகளின் பற்கள் பிடுங்கப் பட்டிருந்ததாமே?.மேலும் நெருக்கடி நிலையை வினோபா, அன்னை தெரசா, பால்தாக்கரே மற்றும் எம்.ஜி.ஆர்(இது அரசியல் சுயலாபத்திற்கு ) ஆதரித்தார்
    களாமே? மேலும் நம் இளவல் இசுடாலிர் நன்கு கவனிக்கப்பட்டாராமே?
    ஒரு சில வருட எமர்ஜென்ஸி நமது சமூகச் சீர்கேடுகளை சரி செய்யுமா?’

  5. ravi Says:

    … இணையத்தில் எழுத தயங்கும் பல விஷயங்களை உண்மையாக நீங்கள் எழுதுகிறீர்கள் …ஆகவே தொடர்ந்து எழுதுங்கள்

  6. hema Says:

    எதிர்வினையாற்றா விட்டாலும் நிச்சியம் நாங்கள் விரும்பி படிக்கும் தளம் இது , தயங்காமல் தொடரட்டும் உமது பணி (பாணி )


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s