“அராஜக திமுக-வ ஒழிச்சுட்டோம்ல நாம…”
May 1, 2021
நாளைய தேர்தல் முடிவுகள் இதனை எதிரொலிக்குமா எனத் தெரியவில்லை. ஆனால்…
பொதுவாகவே எனக்கு, இந்த ‘எக்ஸிட் போல்’ போன்ற திடீரெக்ஸ் ஆரூடங்கள் நகைப்புக்குரியவை என்ற எண்ணம்தான். ஏனெனில் பிரணய் ராய் யோகேந்திரயாதவ் போன்ற படு தன்னம்பிக்கை நிரம்பிய குப்பைமேனியர்களின் ஃப்ஸெஃபாலஜி உளறல்களை அந்தக் காலத்திலிருந்தே கேட்டு நகைத்திருக்கும் அனுபவம் இருக்கிறது. இவை சிலபல தலைவர்களைத் திருப்திப் படுத்த சோரம்போன நாய்களால் உளறிக்கொட்டப்படுபவை என்பது என் அனுமானம். இந்த எழவுகளுக்கு விதிவிலக்குகள் ஒன்றிரண்டு இருக்கலாம் – அவை மங்கோலிய தேர்தல்களிலும் வடகொரிய தேர்தல்முடிவுகளிலும் உண்மையாக இருந்திருக்கலாம் – எனக்குத் தெரியாது; ஆனால், இவை சுவையான பொழுதுபோக்குகள்; இவற்றையும் வைத்துக்கொண்டு தொண்டை நரம்பு புடைக்க விவாதிப்பவர்களும் இருக்கிறார்கள் என்பது, ஹ்ம்ம்ம், பாவம்.
ஒன்றிரண்டு நண்பர்களுக்கு (இவர்களில் ஒருவர் அச்சு ஊடகக் காரர், இன்னொருவர் இடதுசொறி) திமுக கூட்டணிதான் வரும் – ஆனால் கூட்டணி ஆட்சி மலரும் என்று ஒரு கணிப்பு. இதற்காக அவர்கள் என்னென்னமோ கணக்குகளைச் சுட்டுகிறார்கள். பல விஷயங்கள் எனக்குப் புரிபடவில்லை – ஆனால் புரிந்துகொள்ள பெரிதாக முயற்சியும் செய்யவில்லை. அசிரத்தை. (முன்னர் இதே இவர்கள் கிளிசோசியம் சொன்ன ஒவ்வொரு முறையும், பாவம்…)
இவர்கள் நமது திராவிட-இடதுசாரி அறிவு(!)ஜீவிகள்(!!) – ஆனால் கொஞ்சம் மேல்மாடி-காலி பிரச்சினை: இவர்களில் சிலர் அடிப்படையில் முட்டாட்கள் அல்லர், இருந்தாலும் பலப்பல பிரத்யட்சமாகத் தெரியும் விஷயங்களைப் புரிந்துகொள்ளமாட்டேன் என்கிறார்கள் என்பது என் அங்கலாய்ப்பு.
இதனை நான் எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதை – என்னருமை அண்ணன் அப்டன் சின்க்ளேர் எப்போதோ கூறிவிட்டார்,
“ஒருசில விஷயங்களைக் குறித்து ஒரு மனிதனைச் புரிந்துகொள்ளச் செய்வது மிகக் கடினம்தான் – குறிப்பாக, அந்தச் சில விஷயங்களைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதற்குத்தான் அவனுக்குச் சம்பளம் கிடைக்கிறது என்கிற பட்சத்தில்… ”
(“It is difficult to get a man to understand something, when his salary depends on his not understanding it.”)
சிலபல பிற நண்பர்கள், சர்வ நிச்சயமாக அஇஅதிமக அணிதான் மறுபடியும் வரும் என்கிறார்கள்; இவர்களும் பல கணிப்புகளையும் தகவல்களையும் வைத்துத்தான் சொல்கிறார்கள்.
இவற்றில் சில புரிகிற மாதிரி இருக்கின்றன; ஆனால் நூறு ஆயிரம் வாக்கு வித்தியாசங்களில் வெற்றிதோல்விகள் அமைவதையும் நான் பார்த்திருக்கிறேன் – ஆகவே. (இவர்களில் சிலர் புதிய அறிமுகங்கள், எண்ணிக்கையில், என் சிறுவட்டத்தில் இவர்கள்தாம் அதிகம் – இந்தக் காரணத்தாலும், என்னால் அவர்களைச் சரியாக அனுமானிக்க முடியவில்லை)
என்னைப் பொறுத்தவரை திமுக பொறுக்கிகள் + அவர்களுடைய கூட்டாளிக் கூட்டணிக் கொள்ளையர்கள் மண்ணைக் கவ்வவேண்டும் எனத்தான் ஆசை.
-0-0-0-0-
ஆனால். சிலபல பழம்பெருச்சாளி ஆப்த நண்பர்களுடனும் (இவர்களை நான் பலப்பல காரணங்களுக்காக மிகமிக மதிக்கிறேன்) இந்தத் தேர்தல் குறித்து கொஞ்சம் அளவளாவியிருக்கிறேன். இவர்களைப் பற்றிய சில குறிப்புகள் என்னுடைய மார்ச்2021 பதிவு ஒன்றில்: தமிழகத் தேர்தல்கள் குறித்த நம் புரிதல்கள் – குறிப்புகள் 27/03/2021
அந்த உரையாடல்களின் சாராம்சத்தை எழுதுவதாக இருந்தேன். செய்யவில்லை. ஆனால், பாதகமும் இல்லை.
(பிரச்சினை என்னவென்றால் – நான் இம்மாதிரி எழுதும்போது, உடனடியாக “நீ பாப்பான் தானே, உங்களுக்குள்ளேயே பேசிக்கொள்வதையெல்லாம் எந்த மசுத்துக்கும் ஒப்புக்கொள்ளமாட்டேன்” எனச் சிலர் சொல்வார்கள்; இவர்கள் தங்களை ஜாதிக்கு எதிரானவர்கள் என்பார்கள், ஆனால், எதனையுமே ஜாதி வழியாகப் பார்க்காமல் இவர்களால் இருக்கவே முடியாது; ஆகவே… இவர்களுக்காக…)
அ. மன்னிக்கவும். இவர்களிருவரும் ப்ராஹ்மணர்கள் அல்லர்; ஒருவர் செங்குந்த முதலியார்; இன்னொருவர் திருநெல்வேலிப் பிள்ளைமார். (பலபிற சமூகங்களில் இருந்தும் சில நண்பர்கள் இருக்கிறார்கள், நான் ஜாதி பார்த்து சகவாசம் வைத்துக்கொள்பவன் அல்லன் என்றாலும் இப்படி – ஆனால் இவர்கள்தாம் தன்னிச்சையாக வந்து வசமாக மாட்டினார்கள், பாவம்!)
…அவரவருக்கு அவரவர் உலக அனுபவம் சார்ந்து தனிப்பட்ட பார்வைகள் இருந்தாலும், பொதுவாகவே எங்கள் மூவருக்கும் ஏறத்தாழ ஒருமித்த கருத்துகள்தாம்; ஆனால், கொஞ்சம் மாற்றுக் கருத்துகள் + பார்வைகள் என இல்லாமலும் இல்லை – ஆனால் அவை, அணுக்கருசக்தி, தமிழா ஸம்ஸ்க்ருதமா, வைணவமா சைவமா போன்ற மசுர்-பிளப்புகள் மட்டுமே. (இந்த ஆசாமிகள் இருவரும் தமிழகத்தின், பாரதத்தின் மேன்மையையும் இறையாண்மையையும் விரும்புபவர்கள் என்பதும் எனக்குப் பிடித்தமான விஷயம் என்பதைப் பதிவு செய்யவேண்டும்)
ஆ. எங்கள் மூவருக்கும் யார் வெற்றிபெறப் போகிறார்கள் என ஆரூடம் சொல்லும்படிக்குத் திறனில்லை – ஆனால் யார், எந்தக் கூட்டணி வெற்றிபெறக்கூடாது (=திமுக, காங்க்ரெஸ்++) என்பதில் திடமான எண்ணமும் ஆழமான விருப்பமும் இருக்கிறது. ஆகவே கவலையும் இருக்கிறது.
இ. திமுக தோற்றால் – இந்த சீனாக்கார கோவிட் பீதிகள் ஒருமாதிரி அடங்கியபின் – முதலியார்வாளுடன் நான் திருப்பதி போயும், பின்னர் பிள்ளைவாளுடன் பழநி போயும் மொட்டை போட்டுக்கொள்வதாக வேண்டிக் கொண்டிருக்கிறேன். (அவர்கள் செலவில்தான்!)
ஈ. திமுக+ வென்றால் – அடுத்த தேர்தல்களிலும் அதன் வீழ்ச்சிக்காகப் பாடுபடுவேன். (இம்முறை மாதிரியல்லாமல், தீவிரமாகக் களத்தில், என்னளவில் இறங்குவேன்; பாரதீய ஜனதா கட்சியின் கடைநிலை அங்கத்தினராகும் கட்சித்திட்டமும் கைவசம் இருக்கிறது; பார்க்கலாம்.)
-0-0-0-0-0-
2011ல் திமுக தோற்றவுடன் தமிழக டொக்கு ஒன்றில் நடந்த சிலவிஷயங்கள் குறித்த பதிவு: “அராஜக ஆட்சியை ஒழிச்சுட்டோம்ல நாம!” 14/05/2011
-0-0-0-0-
நாளை மற்றுமொரு நாளே!
இன்றில்லாவிட்டால் நாளை, நாளை இல்லாவிட்டால் நாளை மறுநாள், நமக்கும் நம் தமிழகத்துக்கும் விடிந்தே தீரும்.
நன்றி!
ஜெய்ஹிந்த்!
பாரத் மாதா கீ ஜெய்!!