ந்யூட்ரினொ ஆராய்ச்சி, (தமிழ்) பொறியியல் மாணவர்கள், பத்ரி சேஷாத்ரி – சில குறிப்புகள்…

April 7, 2018

சோகம்.

ஏப்ரல் 4. சென்னைக்கு அவசரவேலையாக வந்தவன், சுமார் எட்டு மணி நேரம் குப்பை கொட்டிவிட்டு பெங்களூர் திரும்பிக்கொண்டிருந்தேன்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தேவுடு காத்தல் – சுமார் இரண்டு மணிநேரம். கொசு. கர்நாடகக் காவேரி சார்பு கண்டக்டர்கள் கூவிக்கூவி பயணச்சீட்டு விற்பனை.

பக்கத்தில் சுமார் 22-23 வயது மதிக்கத்தக்க எலக்ட்ரானிக்ஸ் (எம்டெக் மாணவன்) + அவனுடைய தோழி  + இருவரும் அதே சென்னைப் புறநகர் கல்லூரி. மன்னிக்கவும், பல்கலைக் கழகம். வளவளா. பன்னாட்டுச் சதித் திட்டங்கள். நாசவலைகள். சுற்றுச்சூழல் சூறையாடப்படல். அம்பானி டாடா அடானி சாப்பட்றான், தமிழகம் வஞ்சிக்கப் படுகிறது வகை இன்னபிற உதிரித்தனங்கள். Completely content& logic free communication. எனக்கு அலுப்பு. கொஞ்சம் தள்ளிப்போய் உட்கார்ந்துகொண்டு மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருக்கலாம் என்றால்…

அடுத்த ஐந்து நிமிடங்களில் மறுபடியும் என் பக்கத்தில், அவர்கள்! ‘அங்க கொஸ்ஸூ நெறய்ய இர்க்கு ஸார்!’ ஐயகோ! :-(

‘சீமைக்’ கருவேலமரம் பற்றிய உளறல்கள். ஒரு மசுத்தையும் புரிந்துகொள்ளாமல், பாவப்பட்ட அச்செடிகளைப் பிடுங்கிப் போட்டது குறித்த வீரதீரப் பிரதாபங்கள்!  ‘அப்டியே காத்துல இருக்கற தண்ணியையும் நெலத்தடி நீரையும் உற்ஞ்சிக் குட்ச்சிடும் அரக்கன் ஸார் அது!’

அரைகுறைகள் உளறிக்கொட்டிருந்தார்கள் – நானும் பகீரதப் பிரயத்தனப்பட்டு வாயை மூடிக்கொண்டிருக்க முயற்சி செய்துகொண்டிருந்தேன்.
-0-0-0-0-0-

ஆச்சரியம். (உண்மையில் ஆச்சரியப் படவில்லை, ஒரே ஆயாசம்தான்!)

எந்தவித அடிப்படையுமில்லாமல், ஹோம்வர்க்கில்லாமல் எல்லாவற்றைப் பற்றியும் மேலோட்டமான நிராகரிப்புகள். எள்ளல்கள். வெறி. கையில் ஸ்மார்ட் ஃபோன் எழவை வைத்துத் தேய்த்துக்கொண்டு, தொழில் நுட்பங்களின் ஒரு எழவையும் புரிந்துகொள்ளாமல், இன்ஸ்டன்ட் நூட்ல்ஸ் போல இன்ஸ்டன்ட் அறிவுசார் காமாலைக்கண் பார்வை.

…பெங்களூருக்கு ஒரு கணிநி பொட்டிதட்டல் நேர்காணலுக்காகப் பயணம், கடைசிநேர டப்பா அடித்தல்கள். ஆனால் இடிப்பது  ந்யூட்ரினொ ஆராய்ச்சியகம். அப்பழுக்கற்ற அரைகுறைகள்! (என்னைக் கண்ணாடியில் பார்த்துக்கொள்வது போலவே இருந்ததால், எனக்கு அப்படியொரு இறும்பூது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!)

இளம்பெண் உணர்ச்சிகரம் – நியூட்றிணோ ணியூட்றிணோ என வல்லினம் இடையினம் பொய்யினம் எனக் கலந்தடித்துக் கதம்பம்.

பிரபலஸ்த அரைகுறைகளான அந்தப் ‘பூவுலகின் பொய்யர்கள்’ சுந்தரராஜன், வைகோபால்சாமி பற்றிச் சிலாகிப்பு.

பாவப்பட்ட ந்யூட்ரினொ ஒரு குட்டி அணுகுண்டு என்கிற அளவுக்கு ஒரே சுற்றுச்சூழல் பிரச்சாரம் – அதுவும் லே’ஸ் வறுவலைத் தின்றுகொண்டு ப்லாஸ்டிக் குப்பை போட்டுக்கொண்டு…

இதெல்லாம் பரவாயில்லை, திராவிடக் குழந்தைகள் பாவம் என்னதான் செய்வார்கள், படிப்பறிவோ சுயசிந்தனையோ இல்லவேயில்லை ஆகவேதான் பாவம், அயோக்கியர்கள் பக்கமும் அறிவிலிகளிடமும் ஈர்ப்பு என விட்டுவிடலாமென நான் என் புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தால்…

‘நீங்க என்ன ஸார் நெனக்கிறீங்க?’ ஒரே அவர்களுடைய அறிவிலித்தன மதத்துக்கு என்னை மாற்றினால்தான் சரி என்கிற ஆர்வம். விடலைகள்.

‘பசங்களா, நீங்கள் ஏதோ சொல்கிறீர்கள், நான் கேட்டுக்கொள்கிறேன்! அவ்ளோதான்!’

‘இல்ல ஸார், லேப்டாப்ல வேல பண்ணிட்டிருக்கீங்க, படிச்சவங்கமாரி இருக்குது, அதான் ஒங்க ஒபீனியன் என்னன்னு கேக்கறோம்.’

ஆ.

‘நெஜம்மாவா? ‘

ந்யூட்ரினொ அணுகுண்டு முட்டாள்தனம், ‘யோசிக்கவே மாட்டீர்களா’ என்றெல்லாம் பாலபாடம் எடுத்தேன்.  வைகோ சுந்தரராஜன் போன்ற கருத்துலக வேசைகள் கூறிவரும் பொய்களைப் பற்றி ஏசினேன்.

ஆனால் அவர்கள் மரமண்டையில் இதெல்லாம் புகுந்ததா எனத் தெரியவில்லை. அவர்களுடைய படிப்பெல்லாம் அதிகபட்சம் ஆனந்தவிகடன், ‘புதிய தலைவலி’ டீவி சேன்னல், அவ்வளவுதான்.

அந்த இளம்பெண் விடாமல் சொன்னாள் (நான் தமிழ்ப்புத்தகம் (இந்திய அறிதல் முறைகள் – அரவிந்தன் நீலகண்டன்+சாந்தினிதேவி ராமசாமி எழுதியது) ஒன்றைப் படித்துக்கொண்டிருந்ததைப் பார்த்திருப்பாள் என நினைக்கிறேன்) – இப்ப நீங்க இலக்கியம்(!) படிக்கிறீங்க இல்லியா? வைகோ இலக்கியத்துக்கு அவார்ட் எல்லாம் தர்ராறு தெரியுமா? அவரு முட்டாள் இல்லை. விஷயம் தெரிஞ்சவரு.

எனக்கு இந்த விஷயம் பற்றி ஒரு எழவும் தெரியாதாகையால், ஙே. (ஜுஜாதாவுக்கு நன்றியுடன்)

தொடர்ந்து சொன்னாள் – ‘எஸ்ராமகிருஷ்ணனுக்கு அவார்ட் லேட்டஸ்ட்டா கொடுத்திருக்காரு.’

ஆ!

சுதாரித்துக்கொண்டு சொன்னேன் – இருக்கலாம், ஆனால் எஸ்ராவும் வைகோவும் அவரவர் தளத்து அதிசராசரிகள் – ஆகவே பரவாயில்லை.

(பின்னர் மனம் படபடக்க உள்ளம் ஆனந்தக் கூத்தாட, என்னருமை எஸ்ரா தளத்தில் தேடினால்… இது! – எழுத்துச் செம்மல் எஸ்ராவுக்கு இயற்றமிழ் வித்தகப் பொற்கிழிக்கப்படல் மகோன்னதம் – புர்ச்சிப் புயல் வைகோ கைங்கரியம். நன்றி!

நானும் அடுத்தமாதம் அவருக்குக் ‘கழுத்துக் கம்மல்’ என ஒரு கற்கிழி கொடுக்கலாம் எனவொரு எண்ணம். பார்க்கலாம், என்னுடைய நியாயமான ஆசைகள் நிறைவேறுமா என்று…)

-0-0-0-0-0-

…பின்னர் சொன்னார்களே பார்க்கலாம் – பதிரி சேஷாதிரின்னுட்டு ஒருவர் ஐஐடியில பெரிய படிப்பு படிச்சிட்டு வெளிநாடெல்லாம் போனவர், இப்ப சமூகசேவைலயும் ஈடுபட்டுட்டு இருக்கார். அவர் இந்த ணியூட்றிணோ பட்றி சொன்ன கருத்து தெரியுமா? எம்எஸ் உதயமூர்த்திகூட இதைப் பத்தி சொன்னதை க்வோட் பண்ணி சிலாகிச்சு என்ன சொன்னார் தெரியுமா? இதெல்லாம் தெரிஞ்சா நீங்களும் எங்களை மாதிரியே ணியூட்றிணோவுக்கு எதிரா போராட ஆரம்பிச்சுடுவீங்க!

எனக்கு விக்கித்து விட்டது. மாரடைப்பு. வெறி. வெறுத்துவிட்டது!

நீங்களுமா பத்ரீ! :-(

… உடனடியாக இரவு பத்துமணியானாலும் பரவாயில்லை என்று அவருக்குச் செய்தி அனுப்பிக் கேட்டேன் – கீழே அதன் விவரத்தை, அவர் அனுமதியுடன் பதித்திருக்கிறேன்.

இந்த அரைகுறைகள் – அவர் கருத்தையும் (ஃபேஸ்புக் எழவில் என அனுமானிக்கிறேன், ஏதாவது டீவி சேனலிலும் இருந்திருக்கலாம்) புரிந்துகொள்ளவில்லை!

அவர் இந்த எம்எஸ் உதயமூர்த்தி அரைகுறைத்தனத்தைப் பற்றி எதிர்மறையாக எழுதியிருக்கிறார் – ஆனால் இவர்கள், தொழில்முறை அறிவிலிகளானதால், ஆகவே போராளிகளானதால் – அதையும் புரிந்துகொள்ள வக்கில்லை.

இந்த அழகில் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு வேறு போடுகிறார்கள்!

என்ன முட்டாள் இளைஞர்கள்! இவர்கள் அடுத்த தேர்தலில் வாக்களிக்கப் போகிறார்கள் என்பது எனக்கு அடிவயிற்றுக் கலக்கத்தை அளிக்கிறது.

இவர்கள் தரத்தில் இருக்கும் இசுடாலிருக்கு ஓட்டுப் போட்டுவிடுவார்களோ! :-(

தொடர்புள்ள அங்கலாய்ப்புப் பதிவுகள்…

தேனி ந்யூட்ரினோ ஆய்வு மையமும் தேவரடியார் புதல்வர்களும்
29/10/2016
ந்யூட்ரினோ: ஒரு பாவப்பட்ட அடிப்படைத் துகளின் கதறல் (+இலவச இணைப்பு: நடிப்புச் சுதேசிகள்)
11/05/2015
அழு தமிழகமே, அழு…
15/06/2017
‘கூடங்குள எதிர்ப்பு மேதை’ மேதகு உதயகுமார், மேலதிகமாக ஞானம் பெற்று, ‘ந்யூட்ரினோ எதிர்ப்பு நிபுணர்’ உளறல்குமாரான கதை08/05/2015
போங்கடா/போங்கடீ அரெகொறெங்களா, நீங்களும் ஒங்களோட ந்யூட்ரினோ எதிர்ப்பும்…02/03/2015

தமிழகக் கடலோரத்தில் ஸோடியம் குளோரைட் டைஹைட்ரஜன் மோனாக்ஸைட்+++ அரக்கன்!02/03/2017

 

26 Responses to “ந்யூட்ரினொ ஆராய்ச்சி, (தமிழ்) பொறியியல் மாணவர்கள், பத்ரி சேஷாத்ரி – சில குறிப்புகள்…”

  1. Anonymous Says:

    எங்கு திரும்பினாலும் இதே பிளாக்கணம் தான், “தமிழகம் வஞ்சிக்கப்பட்டு விட்டது, உலகம் முழுவதுமே தமிழ்நாட்டுக்கு எதிராக சூழ்ச்சி செய்கின்றது” என்பன போன்று. இளைஞர்களும் மாணவர்களும் இதை கண்மூடித்தனமாக நம்புவது சோகத்திலும் சுகம். Indeed, Tamilnadu is going to fall to new depths, not because of the alleged anti-tamils, but because of the half-baked idiot generation of this.

  2. nparamasivam1951 Says:

    சார், எனது பயணங்களிலும் (ஆனால் லேப்டாப் ஏதும் கிடையாது) இது போல் இளம் அறிஞர் அறிஞிகள் பேசிக்கொண்டு (நியூட்ரினோ, வஞ்சிக்கப்பட்டது, காவிரி வாரியம்) வருவதில் அலுத்துப் போய்விட்டேன். ஆகவே பாட்டு கேட்பது போல் இரண்டு காதிலும் மாட்டிக்கொண்டு, கண்ணை மூடிக் கொண்டு பயணிக்கிறேன். ஹா. தூக்கம் வந்துவிடும். உண்மையாகவே. அடுத்த தடவை முயற்சி செய்யுங்கள்.


    • அய்யா பரமசிவம், உங்கள் கழுத்திலிருந்து பாம்பு கேட்கவில்லையா, புருடா சௌக்கியமா என்று?

      புருடாக்களாகவே வளர்ந்துகொண்டிருக்கும் அவதார புருடர்கள், நம்முடைய இளைஞர்களில் பலர் (விதிவிலக்குகளும் விடிவெள்ளிகளும் இருக்கிறார்கள், ஆனால்…) என் (மற்றபடி) சந்தோஷமான வாழ்க்கையை வெறுக்கும்படிக்குச் செய்துவிடுகிறார்கள், பாவிகள்!

      சரி அய்யா. உங்களுக்கிருக்கும் விவேகமும், ‘தாமரை இலைத் தண்ணீர் போல’ இருக்கும் பாங்கும் என்னிடம் இல்லை. தயவுசெய்து இவற்றை ஒரு மெய்ல்- அட்டாச்மென ட் ஆக அனுப்பமுடியுமா?

      கடும் விரக்தியிலும் கடுப்பிலும் இருக்கும் எனக்கு விமோசனம் உண்டா? :-(

      • RC Says:

        அன்பு அய்யா,
        உங்க பதிவு படித்தால் நீங்க ரொம்ப அதிர்ச்சியாயிட்ட மாதிரி தெரியுது.ட்ரெண்ட்ல இல்ல சார் நீங்க.
        இப்போது எங்கள் அறிஞர் பாரிசாலன் அவர்கள் ந்யூட்ரினொ பற்றி சொன்ன செய்தியை (https://www.youtube.com/watch?v=mSzytbWAmbQ&feature=share) நேரம் இருப்பின் பார்த்து பகிருங்கள். :-(
        மேலும் அறிஞர் கரச – தமிழர் திராவிடர் பற்றிய வரலாற்று உண்மைகளுக்கும்(https://twitter.com/panuval/status/982662390398382080),
        அறிஞர் ஹீலர் பாஸ்கர் – மெய்யியல் (இயல்!!) தொடர்பான சந்தேகங்களுக்கும் (http://www.anatomictherapy.org/boss-gallery.php),
        அறிஞர் பிரஷாந்த் – அனைத்து திரைப்பட சந்தேகங்களுக்கும், செய்திகளுக்கும் படியுங்கள் இன்பம்ஸ் நிச்சயம் (https://twitter.com/itisprashanth?lang=en)
        இவர்கள் போக திரைப்பாடல்களுக்கு வாயசைப்பு செய்து காணொளி ஏற்றுபவர்கள், சுடச்சுட மீம்ஸ் போடுபவர்கள், கோவில் தலபுராண ஆராய்ச்சிக் கட்டுரை அனுப்புபவர்கள்,கொரிய ஹாஸ்ய (!)காணொளி பகிர்பவர்கள்,சீமான் /திருமுருகன் காந்தி/ மத்திய அரசு – மோடி வெறுப்பு காணொளி பகிர்பவர்கள் என்று அறிஞர் கூட்டம் பல உண்டு எங்களிடம்.
        நீங்கள் வேறு ‘தாமரை இலைத் தண்ணீர் போல’ என்று வேறு எழுதி விட்டீர்கள். பாஜக, அதிமுக என்று
        உள்குத்து எதுமில்லையே அடிக்க வராதீர்கள் :-) உலகத் தரம் என்பது இப்படி கோர்த்து யோசிப்பது தான் என்று நம்புகிறவர்கள் நாங்கள்
        ஆராய்ச்சிகள் அனைத்தும் எங்கள் 5.5 அங்குல தொடுதிரை கைபேசியில் தான் என்றால் எங்கள் டமில்/திராவிடர் பற்றி புரிந்திருக்கும் தற்போது உங்களுக்கு.

      • nparamasivam1951 Says:

        🙏🙏

  3. ஆனந்தம் Says:

    பத்ரியின் பதிவிலிருந்த புத்தகப் படங்களை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன்


    • பெற்றேன். அவற்றில் நம் செல்லத் துகள் அல்லது தினமணிக் கதிர் பற்றி ஒன்றில் மட்டும்தான் இருக்கிறது. இருந்தாலும், எம் எஸ் உதயமூர்த்தியின் பராக்கிரம அக்கிரமம் கொஞ்சம் அதிகம்தான்! :-(

      • ஆனந்தம் Says:

        பத்ரி MSஉதயமூர்த்தியின் புத்தகப் பக்கங்களை JPEG வடிவில் முகநூலில் பகிர்ந்திருந்தார். அதன் சுட்டிகள்

      • ஆனந்தம் Says:

        மேலே கண்டவற்றிலிருந்து நியூட்ரினோ தொடர்பான பதிவை மட்டும் தனியாக மீண்டும் சுட்டி தந்திருக்கிறேன். மொத்தமாக நிறையச் சுட்டிகள் கொடுத்தால் ஒவ்வொன்றிலும் சென்று தேடத் தமிழனின் சோம்பல் இடம் தராது. இந்தப் பதிவில் பத்ரியின் ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நியூட்ரினோ பற்றி MSUவின் புத்தகத்திலிருந்து எடுத்தாளப்பட்டிருந்த ஒரு பக்கத்தின் இமேஜ், அதுபற்றி பத்ரியின் கேலி. நியூட்ரினோ போராளிகள் தவறாகப் புரிந்துகொண்ட அந்தப் பதிவுக்கான சுட்டி: https://www.facebook.com/photo.php?fbid=2124222724261786&set=a.182235828460495.53898.100000222371061&type=3


  4. நிலைமை கவலைக்கிடம் தான். மனவருத்தமே மிஞ்சுகிறது. நமது பிள்ளைகள் இப்படி வீழ்ந்துவிட்டனரே என்று பயமாகவும் இருக்கிறது.

  5. A.Seshagiri Says:

    இதில் என்னவொரு சோகமென்றால் இந்த தறுதலை தலைவனின் உசுப்பேத்தலை கர்ம சிரத்தையாக தலைமேல் கொண்டு அவர் கட்சியை சேர்ந்த ஒருவர் தீக்குளித்து அவன் குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிட்டான்.இதே ஆள்தான் இருபதுவருடங்களுக்கு முன் ஸ்டெர்லைட் ஆலை என்பிணத்தின் மீதுதான் துவங்கும் என்று சவால்விட்டு ஊரை ஏமாற்றினார்! ஐயகோ! எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த தமிழ்நாட்டிலே!!

  6. girievs Says:

    These youngsters do not have the basic awareness that for matters related to science you have to get clarifications from SCIENTISTS. I was appalled to come across an article against Neutrino Project in Dinamani written by a lawyer!


    • Sir, if a business journalist like Tony Joseph – who has ABSOLUTELY no credentials in science or anything real can write ‘scholarly’ essays about DNA, archaeology and stuff – why can’t a lawyer? :-(

  7. bseshadri Says:

    சில சமயங்களில் கேலி, கிண்டல் கலந்த பதிவுகள் இடுவதற்கு எனக்கும் பயமாகத்தான் இருக்கிறது. பதிவின் தொனியைப் புரிந்துகொள்ள முடியாத அன்பர்கள் படுபயங்கரமான எதிர்க்கேள்விகளை அல்லது திட்டுகளை அள்ளிவீசும்போது என்ன செய்வது என்று தெரியாமல்தான் திகைக்கிறேன். உதயமூர்த்தியின் புத்தகத்திலிருந்து நான் எடுத்துப்போட்ட மேற்கோளையும் நான் எழுதிய ஒற்றை வரியையும் பார்த்துவிட்டு நான் நியூட்ரினோ ஆராய்ச்சி மையத்தை எதிர்க்கிறேன் என்று முடிவெடுத்தவர்களை நினைத்து அதிர்ச்சிதான் படவேண்டியிருக்கிறது.


    • பத்ரி, அர்த்தஜாமத்தில் தொந்திரவு கொடுத்ததற்கு முதற்கண் மன்னிக்கவும்.

      ஒண்ணரைக்கண்: ஃபேஸ்புக் எழவில் இருக்கும் அபாயங்களை உணர்ந்தேன். ஆனால், உங்கள் நகைச்சுவையுணர்வு உங்களைக் காப்பாற்றுவதாக!

      இக்கதையின் நீதி என்னவென்றால்: தமிழ் இளைஞர்கள் யோசிக்காதவர்கள் அல்ல – ஆனால் அவர்கள் மண்டையில் என்ன மசுறு யோசனை ஓடிக்கொண்டிருக்கிறது என்பதுதான் பிடிபட மாட்டேனென்கிறது, என்ன செய்ய.

      கதையின் போதனை என்னவென்றால்: அன்று நான் பட்ட (+படும்) கடும் அதிர்ச்சியை விடவா, உங்களுடைய அதிர்ச்சிஅளவு அதிகமாகி விட்டது? ;-)

      • ஆனந்தம் Says:

        கேலி, கிண்டல், பகடி எழுத ஆரம்பிக்குமுன் முதல் நாளே எச்சரிப்பது நலம். ஸ்மைலி போடாவிட்டால் சில சமயம் போட்டாலும்கூட நகைச்சுவையைப் புரிந்துகொள்ளாமலிருப்பது தமிளர்களின் வால்வுரிமைகளில் ஒன்று

  8. prabhu deva Says:

    உங்களை எங்குமே நிம்மதியாக விடமாட்டாங்களா? தற்போது பேஸ்புக், யுடுப், வாட்சப் முதலியவற்றில் பெரும்பாலும் அரைகுறைகள் நிரம்பி வழிகின்றன. ஃபார்வேட் மெசேஜ்களைப் படித்து சமூக, அறிவியல் பிரச்சனைகளைத் தெரிந்துகொள்கிறார்கள்.

  9. Anonymous Says:

    திரு பத்ரி அவர்களின் ஒத்திசைந்த கருத்து
    http://www.badriseshadri.in/2018/04/blog-post_7.html

  10. Anonymous Says:

    https://www.vikatan.com/news/tamilnadu/121189-tamilisais-explanation-about-neutrino.html
    திராவிடர்களுக்கு நாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கிறார் தமிழிசை. ஒரு மருத்துவரின் நியூட்ரினோ அறிவே இவ்வளவுதான் என்றால் அரைகுறைகளை பொறுத்து கொள்ளத்தான் வேண்டுமோ


  11. […] வைகோவால்சாமியே அவார்ட் (அந்தக் குளுவான்கள் சொன்னது போல!) கொடுத்துட்டார்! வஸிஷ்டர் வாயால் […]

  12. பொன்.முத்துக்குமார் Says:

    இப்படித்தான் ஏதோ ஒரு வாட்ஸப் குழுமத்தில் வந்ததாக என் தம்பி ஒருவன் பின்வரும் செய்தியை பகிர்ந்துகொண்டு உண்மையா என்றுவேறு கேட்டான்.


    – சென்னை பனங்கள் (!) பார்க்கில் முகம் முழுக்க தாடி மண்டிய ஒருவர் தனக்குத்தானே ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறார் ;
    – அவருடைய கண்களைக்கண்ட “நமக்கு” (இவ்விஷயத்தை பரப்பிய மூலவர்களுக்கு) அதில் நெருப்பிலும் தீவிரமான ஒரு ஆளுமையைக் காணமுடிகிறது. ஆகவே தம்மை அறியாமலேயே அவரை கண்காணிக்கிறார்கள் ;
    – அவர் “பொக்கிஷத்தை களவாடப்போகிறார்கள், பொக்கிஷத்தை களவாடப்போகிறார்கள்” என்று திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார் ;
    – பசியில் இருந்த அவருக்கு “நாம்” இட்லிகள் வாங்கிக்கொடுக்கிறோம். அவர் மெல்லப் பேசத்தொடங்குகிறார் ;
    – அவர் மெய்யாகவே பைத்தியமல்ல. இந்தியாவின் மிகரகசிய ஒரு ஆராய்ச்சி அமைப்பின் முதன்மை விஞ்சாணியாக (நிஜமாகத்தான் :))) பணியாற்றியவர் ;
    – தமிழகத்தை ஒற்றை வல்லரசாக்கும் வலிமை கொண்ட தமிழகத்தின் வளங்களைக் காக்க கார்ப்பரேட் நிறுவனங்களோடு போராடி தோற்ற ஒரு அறிவுஜீவி அவர் ;
    – அந்த வளத்தின் பெயர் ஸ்தோத்திரியம். இது மிக அரிதான, விலை மிக அதிகமான, எடைக்குறைவான தனிமம் ;
    – இதில் இருந்துதான் அணுகுண்டுகளை குறிதவறாமல் சுடும் வல்லமை படைத்த துப்பாக்கிகளை செய்கிறார்கள்.
    – அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஃப்ரான்ஸ் போன்ற தேசங்கள் இத்தகைய துப்பாக்கிகள் வைத்திருக்கிறார்கள் ;
    – அரபு நாடுகளும் இந்தியாவும் இவற்றை வைத்திருப்பதாக பாகிஸ்தானின் உளவு அமைப்புகள் தெரிவிக்கின்றன ;
    – பா.ஜ.காவின் தயவால் அம்பானி, அதானி குழுமங்கள் அவற்றை எல்லாம் மொத்தமாக சுரண்டி கோடுகளில் குவித்துவிடுகிறார்கள் ;
    – இந்திபேசும் மாநிலங்களில் குண்டுமணி அளவுக்குக்கூட தனிமங்கள், உலோகங்கள் இல்லை, எனவே அவற்றை வேறு இடங்களில் தேட இந்தியாவுக்கு கட்டாயம் ஏற்படுகிறது ;
    – பெரும்பாலும் இத்தகைய உலோகங்கள் மண்ணுக்குள்ளேதான் இருக்கின்றன ;
    – வெறும் கண்களால் காண இயலாது, மிகச்சக்தி வாய்ந்த உணர்விகள் பொருத்தப்பட்ட புகைப்படக்கருவிகளைக்கொண்டே இவற்றை அறிய முடியும் ;
    – உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாத கோடிக்கணக்கான மக்கள் இருக்கையில் மோடி அரசு வாரம் ஒரு செயற்கைக்கோளை ஏவிக்கொண்டிருக்கிறது, அதற்கு இதுதான் காரணம் ;
    – இந்தக்கோள்கள் இந்தியாவின் மண்ணை தொலைவிலிருந்து உற்றுநோக்கி தரவுகளை அனுப்பி வருகின்றன ;
    – அமாவாசை இரவில் வானத்தை உற்றுப்பார்த்தால் இந்த செயற்கைக்கோள்களில் உள்ள கேமராக்களின் பிளாஷ் வெளிச்சம் மின்னிக்கொண்டே இருப்பதை நாம் காணலாம் ;
    – ஒருநாள் தமிழகத்தின் மேலே நிறுத்தப்பட்டிருந்த செயற்கைக்கோளிலிருந்து வந்த செய்திதான் ரகசிய இந்திய ஆராய்ச்சிமையத்தை துள்ளிக்குதிக்கச்செய்கிறது ;
    – ஆயிரக்கணக்கான டன் ஸ்தோத்திரியம் தமிழ்நாடு முழுக்க மண்ணுக்குள்ளே மறைந்துகிடந்த விஷயத்தை அந்த செயற்கைக்கோள் அறிவிக்கிறது ;
    – தலைமை பருப்பில் (ஆமாம் :)) இருந்த அந்த விஞ்சாணியும் தமிழ்நாட்டில் ஸ்தோத்ரியம் கிடைக்கும் விஷயத்தை இந்திய அரசுக்குத் தெரிவிக்கிறார் ;
    – ஆனால் அதே சமயத்தில் ஒருவேளை உணவின்றி உலன்று திரியும் தமிழினத்தின் பட்டினி முகம் அவர் நினைவில் தோன்றி மறைகிறது ;
    – உடனே ஸ்தோத்ரியம் கிடைக்கும் இடங்களை காட்டும் குறியீட்டு வரைபடத்தை அழித்துவிடுகிறார் ;
    – இந்திய அரசின் இந்தி பேசும் அதிகாரிகள் அந்த மேப்பைக்கேட்டு விஞ்சாணியை கொடூரமாக சித்திரவதை செய்கின்றனர் ;
    – தனது உயிர் தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு அவசியம் என்று கருதிய அவர் பைத்தியமாக நடிக்கிறார் ; அதிகாரிகளும் அவரை துரத்திவிடுகிறார்கள் ;
    – ஸ்தோத்ரியம் கிடைக்கும் இடத்தை வெளிப்படையாகச்செய்தால் மாட்டிக்கொள்வோம் என்பதால் கார்ப்பரேட்காரர்கள் மறைமுகமாக செய்கிறார்கள் ;
    – சமீபத்தில் மத்திய அரசின் திட்டங்கள் யாவும் பூமியைத்தோண்டுவதாகவோ பூமியின் மேற்பகுதியை உராய்ந்தபடியே செல்வதாகவோ பூமியை மேலே 1000 / 2000 அடி உயரத்தில் செல்வதாகவோ இருப்பதை நாம் காண முடியும் ;
    – உதாரணமாக சென்னை முதலான பெரு நகரங்களில் மெட்ரோ ரயில் போர்வையில் சுரங்கம் அமைத்து பூமியை அங்குலம் அங்குலமாக தோண்டிவருகிறார்கள். நோக்கம் ரயிலல்ல, ஸ்தோத்ரியம் தேடுவதே ;
    – சேலத்திலிருந்து சென்னைக்கு விமானம் விடுகிறார்கள். நோக்கம் விமானச்சேவை அல்ல. ஸ்தோத்ரியம் தேடுவதே. விமானத்தின் சக்கரங்களுக்கருகில் மிக சக்கி (ஆமாமய்யா) வாய்ந்த உணர்விகள் உள்ளன. மலைகளின் மேல் விமானம் பறக்கும்போது அந்த மலைகளில் ஸ்தோத்ரியம் உள்ளதா என இவை ஆய்கின்றன ;
    – தமிழ்நாட்டின் பெரு நகரங்களை – குறிப்பாக கடலோர மாவட்டங்களை இணைத்து ரோடு போடுகிறார்கள். நோக்கம் ரோடு அல்ல, உழைக்கும் ஏழை மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு ஸ்தோத்ரியம் தேடுவதே ;
    – இந்த ரோடுகளில் ஓடும் மத்திய அரசு வாகனங்களில் கார்ப்பரெட் கம்பெனிகளின் கேமராக்கள் பொறுத்தப்பட்டிருக்கும். அவை யாரும் அறியாவண்ணம் சாலைகளின் அகல நீளங்களை கணக்கெடுத்து கார்பெரேட் கம்பெனிகளுக்கு அனுப்புகின்றன ;
    – வீடுதோறும் கழிவறை அமைக்கிறார்கள். நோக்கம் கழிவறை அல்ல, ஸ்தோத்ரியம் தேடுவதே ;
    – டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், கார்பன் டை ஆக்ஸைடு, பெட்ரோல் எடுக்க கிணறு தோண்டுகிறார்கள். நோக்கம் கிணறு வெட்டி விவசாயம் செய்வதல்ல, ஸ்தோத்ரியம் தேடுவதே ;
    – அத்திக்கடவு மலையைத்தோண்டி நியூட்டன் துகளை எடுக்கிறார்கள்; நோக்கம் நியூட்டன் துகள் அல்ல, ஸ்தோத்ரியம் தேடுவதே ;
    – தமிழகத்தின் குறுக்கும் மறுக்காக ஓடும் சாலைகளில் பாலம் கட்டுகிறார்கள். பாலம் கட்ட தோண்டும் குழிகளை கவனியுங்கள், நோக்கம் அஸ்திவாரம் தோண்டுவதல்ல, ஸ்தோத்ரியம் தேடுவதே ;
    – வீடுகட்ட மானியம் தருகிறேன் என்று அப்பாவி தமிழர்களை ஏமாற்றி மண்பரிசோதனை செய்யச்சொகிறார்கள். சோதனை முடிவுகள் மத்திய அரசின்மூலமாக கார்ப்பரேட் கம்பெனிகளை அடைகின்றன ;
    – காவிரி ஆற்றின் கீழே ஸ்தோத்ரியம் இருப்பதை குறிப்பாக உணர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தண்ணீர் வந்தால் ஸ்தோத்ரியத்தை தேட முடியாது என்று கருதி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க, தமிழகத்திற்கு தண்ணீர் தரத்தயார் என்று கர்நாடகா கூறியும் அதை மறைத்து வாரியம் அமைப்பதை தள்ளி வைத்துக்கொண்டிருக்கிறார்கள் ;
    – தமிழகத்தின் எல்லா வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் தொகுப்புகளை மத்திய அரசின் உதய் திட்டத்துடன் இணைத்துள்ளார்கள். நோக்கம், தடையற்ற மின்சாரம் வழங்குவதல்ல, உங்கள் வீட்டுக்கு மின்சுற்றுகளை அமைக்கும்போது எர்த் செய்யவேண்டும் என்று ஒரு ஒரு ஒயரியை பூமிக்குள் இறக்குவார்கள். இது ஒரு மிக நுண்ணிய தரவு சேகரிப்பாகும்.
    – தமிழகத்தின் கோடிக்கணக்கான வீடுகளில் இந்த ஒயரிகள் உள்ளன. இதுவே மண் சாம்பிளிங் எடுக்க கார்ப்பரேட்டுகள் கையாலும் தந்திரமாகும் ;
    ….
    ….
    20 கோடி தமிழர்கள் இருக்கிறோம்..இந்த செய்தியை 20 கோடி முறை “சேரு” செய்யவேண்டும். உலக அமைதிச்சட்டம் 1935-ன்படி ஒரு கோடி சேரு செய்தால் அந்த செய்தியை ஐ.நா சபை உலக நாடுகளுக்கு சேர் செய்யவேண்டும். மாறிவரும் இந்த காலக்கட்டத்தில் கனடா, மெக்சிகோ, சவூதி, பாகிஸ்தான், சீனா, செலினா போன்ற நாடுகள் நிச்சயமாக இந்தியாவை தட்டிக்கேட்கும். மேலும் 150 நாடுகளில் இருசக்கர மூவுருளி மற்றும் நாற்சக்கர வாகனங்களுக்கான எரிபொருள் விற்பனை செய்யும் – பெயர் குறிப்பிட விரும்பாத – தமிழர்கள்மேல் அக்கறை பெருவணிகர் ஒருவர் ஒரு சேருக்கு ஒரு ரூபா தருவதாக கூறியுள்ளார். அந்தத்தொகையில் இந்த விஞ்சாணியை குணப்படுத்தி அவரிடம் உள்ள தகவல்களைக்கொண்டு ஸ்தோத்ரியம் தோண்டி எடுத்து விற்று தமிழகத்தையே வல்லரசாக்கிவிடலாம்.

    மேற்படி வாட்ஸப் குழுக்களிலிருந்து வெளியே வந்துவிடும்படி என் தம்பிக்கு அறிவுறுத்தினேன். இல்லாவிட்டால் பாயைப்பிராண்ட வேண்டியதிருக்கும் என்/று சொன்னேன். கேட்பான் என்று நினைக்கிறேன்.

    பி.கு : மன்னிக்கவும் !!


    • யோவ் முத்து!

      கொமட்ல குத்தட்டா? போயி உடனடியாக அந்த நாசகார் கும்பல்கிட்டேர்ந்து தம்பிய காப்பாத்துவியா, நக்கல் பின்னூட்டம் போட்வியா?

      சேர்மிடம் அரிந்து சேர் ன்னிட்டு அண்றே சொன்னார் அண்ணா ஹஸாரே; அத்தொட்டு மொதல்ல ஒன் சேர்லேர்ந்து எந்திரிச்சி உர்ப்படியா எத்தாவது வேல பண்ணுய்யா! ஸும்மா சேர் பண்ண வந்த்ட்டான்.

      சரி. என் தல சுத்துதுபா! பட்ச்சி பாத்தேன். ஸும்மா பொட்லம் அட்ச்சாமாரீ ஒரு ஃபீலிங்!

      நண்றி. வனக்கம்.


  13. […] – இப்படியே போனால், ந்யூட்ரினோ எதிர்ப்புப் போராட்ட ஜோதியிலும் அவர் ஐக்கியமாகிவிடுவாரோ […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s