இசுடாலிர் மற்றவர்களை அறைவதில்லை, மாறாக அவர் தொடர்ந்து ஈவிரக்கமற்றுத் தாக்கப்படுகிறார் என்பதுதான் உண்மை!

October 10, 2015

முதலில் ஒரு விளம்பரம்!

நாளை சென்னை கலாக்ஷேத்ராவில், இளம் கற்றுக்குட்டி நாட்டியக் காரர்களுடன் இசுடாலிர் பரதநாட்டியம் ஆடப் போகிறார்!

அனைவரும் அலைகடலென ஆர்பரித்துச் செல்லவும். (ஆனால் ஸெல்ஃபி வேண்டாமே!)

-0-0-0-0-0-0-

…பிரச்சினை என்னவென்றால்,  தளபதி இசுடாலிர் மெட்ரோ சகபயணியை சில மாதங்கள் முன்பும், ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை நேற்றும்  கன்னத்தில் அறைந்ததாகச் சொல்லப்படும் வதந்திகள் – வதந்திகள் மட்டுமே!

இவ்வதந்திகளுக்கு நடுவே,  இசுடாலிர் அவர்கள், தனக்கே உரித்தான மகத்தான ராஜதந்திரத்துடன்,  காந்தித்தனமாக – ராட்டை ஒன்றைச் சுற்றி மட்டுமே திமுகவின் வாரிசுப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்ததைப் பற்றி,  எந்த எழவெடுத்த ஊடகப்பேடியும் கண்டுகொள்ளாமல் கமுக்கமாக இருந்தாலும் – நான் ஒரு ‘ஸ்டிங் ஆப்பரேஷன்‘ மூலம்  அதனைப் பதிவு செய்ததும் வரலாறே! (வரலாறு: திமுக வாரிசுப் பிரச்சினை தீர்ந்தது: முக அழகிரியின் மனைவியாகிவிட்டார் ஸ்டாலின்! 30/09/2015)

-0-0-0-0-0-0-0-0-0-

கொழுப்பெடுத்த அரைகுறைகளால் பரப்பப்படும் ‘க்ராஃபிக்ஸ் ‘ சமாச்சாரங்களான இவைகளை நம்பி மோசம் போகாதீர்கள். இசுடாலிர் அறை (=’ரூம்பு’) போட்டுக்கொண்டு  நமக்குநாமே என,  ‘ஆடறமாட்ட எப்டீரா ஆடிக்கறப்பது பாட்ற மாட்ட எப்டீடா பாடிக் கறக்றதுன்னிட்டு’  தனக்குத் தானே மனோவசியம் செய்துகொள்ளும் மனமகிழ் வசீகரர்தாமே தவிர, அறை விடும் அறைவிலியல்லர்.

stalin_baduga

கருத்துப் பட ஆதாம்: ஆட்ற மாட்ட ஆடிக்கறப்பது எப்படி?

-0-0-0-0-0-

இசுடாலிர் அரைகுறையல்லர், அவர் அறைகுறைதான். அதாவது அவர் அறைவது குறைவு. அப்படியே அறைந்தாலும் அது குறையுடன்தான் இருப்பதால் அது வலிக்காது. காதண்டீ! வலிக்காது என்றால் வலிமையுள்ள காது, வலிக்கும் காதல்ல.  கவனிக்கவும்.

சரி.  ஏன் இப்படி இசுடாலிர் அவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று நீங்கள் கேட்காமல் இருக்கலாம்; அதற்காக நான் வக்காலத்து வாங்காமல் இருக்கமுடியுமா, சொல்லுங்கள்?

மேலும் மலைவாழ் ஜனங்களுடன் ஆனந்தமாகக் கை கோர்த்துக்கொண்டு ஸ்னீக்கரும் பேண்டும் போட்டுக்கொண்டு,  நடனமாடுவதைக் கண்டால், இக்கையுமா அறை விடும் எனத் தோன்றவில்லையா? போங்கடா, போக்கத்தவனுங்களா! வலக்கை இடக்கை வழுக்கை பொக்கை…

அறைவிட்ட கை, நம்மை ஆளப்போகும் கையல்லவா?

தற்குறிப்பு: ஹ்ம்ம்ம்… நான் இன்னமும் இவர்களிடமிருந்து ‘பொட்டி’ வாங்கவில்லை; ஆனால், அது கிடைக்கலாமோ என்கிற நப்பாசையில்தான் இப்படியெல்லாம் எழுதுகிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்!  என்ன இருந்தாலும் நான் ஒரு திராவிடன் அல்லவா?

-0-0-0-0-0-0-

மெட்ரோ ரயில் பெட்டியில் நடந்தது என்ன?

கீழ்கண்ட விடியோவை ஊன்றிக் கவனிக்கவும்:

www.youtube.com/watch?v=JZzwUVZDqa0

அந்த இளைஞர் படு ஆவேசத்துடன் இசுடாலிருடன் பொருதி, தன் கன்னத்தால் இசுடாலிரின் கையை அடிப்பது காமாலைக் கண்ணரான உங்களுக்குத் தெரியவில்லையா?

-0-0-0-0-0-

ஆட்டோ ஓட்டுநர் விவகாரம் என்ன?
கீழ்கண்ட விடியோவை தொழுவுரம் இட்டு, களையெடுத்து, நீர்பாய்ச்சி  கவனிக்கவும்; எனக்குத் தெரியும், முன்னரே நீங்கள் நாற்று ஊன்றி விட்டீர்களென்று!

இதில் அந்த ஆட்டோ ஓட்டுநர்  விவகாரமாக, ஸெல்ஃபி எடுக்கிறேன் எனக் கமுக்கமாக அவர் அருகில் சென்று, ஆனால் ஆவேசத்துடன் தன் கன்னத்தால் இசுடாலிரை அடிப்பது தெரிகிறதா? அதற்குப் பிறகு தன்னைத்தானே இசுடாலிர் கையை வைத்துக்கொண்டு தள்ளிக்கொண்டதும் புரிகிறதா?

வதந்திகளை நம்பாதீர்! :-)

முக்கியமான குறிப்பு: இந்த ஆட்டோ ஓட்டுநர், அரவிந்தன் கண்ணையன் போல, ஒரு அய்ன் ரேன்ட் ரசிகர் மன்ற ஆள் என நினைக்கிறேன். ஏனெனில் அம்மணி அய்ன் ரேன்ட் அவர்களின் ‘The Virtue of Selfieshnessபுத்தகத்தை அவர்  அவசியம் படித்திருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது.

-0-0-0-0-0-0-

ஊக்கபோனஸ்: இசுடாலிரின் புதுயுகச் சிற்பிகள் – மகாமகோ குண்டோதிகுண்டு மாணவர் மன்றம்: சில குறிப்புகள் 16/09/2015

திராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை!)

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *