பெருமாள் ‘மாதொருபாகன்’ முருகன் பிரச்சினையின் மூலகாரணம் யார்? (ஒரு திடுக்கிடும் தகவல்!)

January 30, 2015

பெருமாள்முருகன் அவர்களின் பாதிநரைத்த தாடியையும் (=வெள்ளைத்தாடியொரு பாகன்?) – நெற்றியின் கவலைவரிகளையும், அவரது கையறு நிலையையும் பார்த்தால் கண்றாவியாக இருக்கிறது.

…அசப்பில், என்னை நான் எவ்வளவோமுறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு நெகிழ்ந்துகொண்டிருக்கும்போது என் பிம்பம் எனக்கு அனாதிகாலம் தொட்டு அறிவுரையை மௌனமாக காலத்தின் நீட்டிப்பில் உரக்க வழங்குவது போன்ற ஒரு உணர்ச்சி! ஒருமாதிரி ஜென் பௌத்த நிலைதான்.  எனக்கு நானே தன்னில்தானே அமைதியடைந்து என்னைப் பார்த்து சிரித்துக்கொள்வேன். அந்தச் சிரிப்புகள் என்னைப் பார்த்து அழும், பாவம்! என்னமோ தெரியவில்லை, இப்போது எனக்கு என் நண்பரும், பேராசானும், நகைச்சுவையுணர்ச்சி கொஞ்சம் தேவைக்கு அதிகமாகவேயுள்ளவருமான எஸ்ரா அவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். YesRaw! HeeHaw!!

… அதேசமயம்,  மாதொருபாகனை உண்மையாகவே படித்த, திராவிட Madஒருபாகனாகிய நான் – அந்த நாவலின் அடிப்படைத் தரம் பற்றி (அந்த எழவெடுத்த இலக்கியமா-இல்லையா என்ற கேள்வியையே விடுங்கள்!) ஒரு நண்பரிடம் அண்மையில், வெகு சுருக்கமாகச் சொன்னது:

“I had read this farce of a novel a couple of years back or so. Absolutely banal and pedestrian. PerumalMurugan is highly overrated, IMO; but that does not mean that what is being meted out to him, is to be condoned.”

சரி. தமிழ்ப் படைப்பைப் பற்றி ஆங்கிலத்தில், மணிப்பிரவாள நடையில் எழுதினால் இன்னமும் ஸ்ரேஷ்டம் என்பதை, முனீஸ்வரபுங்கவனாகிய நான் அறியாதவனா என்ன?

என்ன சொல்லவருகிறேன் என்றால் – ஒரு அதிசராசரித்தனமான படையலுக்காக நாம் இவ்வளவு பொங்கியிருக்கவேண்டுமா என்பது ஒரு பெரிய கேள்வி. ஆனால், ஆனால்… கருத்துரிமையா – புண்படுத்தலா, அந்தர்பல்டி சரியா-தவறா, ஜாதியா-மதமா, வாபஸ்வாங்குவதற்குப் பதிலாகத் திமிறித் திருப்பி அடித்திருக்கவேண்டுமா என்றெல்லாம் மற்றவர்கள் கபடி ஆட வேறெங்குதான் சந்தர்ப்பம் வாய்க்கும் சொல்லுங்கள்.

எது எப்படியோ, ‘கேஷ் கவுண்டர்’ என்ற அறிவிப்புப் பலகை மாட்டும் இடங்களிலெல்லாம், மற்றபடி இம்மாதிரி கவுண்டர்கள் இருக்கும் இடமெல்லாம், புண்பட்ட போராளிகள் திரண்டு, அந்தப்பலகைகளில் ‘மதிப்புக்குரிய’ என்பதைச் சேர்க்கவேண்டும் என அறைகூவி, அதற்காக நம் மெத்தப்படித்த அறிவுஜீவி ஜாதியினர், வெகுபாதுகாப்பாக உட்கார்ந்த இடத்திலிருந்தே ‘இது செய்யலாம் –  ஆனாக்க, அது செய்யக்கூடாது‘ எனும் அறவுணர்ச்சி ததும்ப அறிவுரைகள் வெளியிடும், கூட்டங்களில் நரம்பு தெறிக்கக் கத்தும் காலம் வெகுதூரத்தில் இல்லையோ?

ஹிந்துத்துவாபொந்துத்துவா எனப் பொங்கிவழியும் கதையாடல் களேபரங்களை மறுபடியும் அரங்கேற்றும் நாட்கள் வந்துவிடுமோ?

இந்தச் சந்தடிசாக்கில் – ஈபிடபிள்யு பத்திரிகையில் வ. கீதா, ஆஇரா வேங்கடாசலபதி இன்னபிறர் – இன்னொரு கட்டுரையை எழுதி அதையும் நான் படிக்க நேர்ந்து, பேதிக்கு மருந்து தேடும் நிலை ஏற்படுமோ? (எங்கள் பகுதியில் நீர்ப்பிரச்சினை இருப்பது ஒரு ஊக்கபோனஸ்)

-0-0-0-0-0-0-0-

நிலைமை இப்படி இருக்கையிலே, என் பங்கிற்கு நானும் கொஞ்சம் ஆராய்ந்து,பெருமாள்முருகன் அவர்களின் நிலைக்கு யார், எது காரணம் – எதுதான் மூலகாரணம் என மிக ஆழமாக யோசித்துக்கொண்டு புலன் விசாரணை செய்துகொண்டிருந்தேன். அப்போதுதான் எனக்கு ஒரு மிக முக்கியமான தடயம் ஒன்று கிடைத்தது.

சரி – ஆனால் அந்தத்  தடயத்தைக் காண்பிப்பதற்கு முன்னால் – என்னைப் பொறுத்தவரை,

  • பெருமாள்முருகன் அவர்கள், சிரத்தையுடன் தன் நாவலை வடிக்கவில்லை. முழு புத்தகத்தில் – ஒரு சில பத்திகளில் மட்டுமே தெரியும் அவருடைய எழுதும் கலை (craft!) முழு படையலிலும் வெளிப்பட்டிருந்தால் – மாதொருபாகன் ஒரு படைப்பாகியிருக்கும்.
  • ஒரு வட்டாரத்தைப் பற்றி அல்லது வட்டாரமொழியை உள்ளடக்கி மட்டுமிருந்தாலே ஒரு படையல் என்பது படைப்பாகிவிடாது. அதன் ஊடாடும் பொருள், சர்வவியாபிகளான மானுட உட்கிடக்கைகளைப் பற்றிப் பேசினால் அது படைப்பாகலாம்.
  • படையலுக்காக, அவர் என்ன மாதிரி ஆய்வு செய்தார் என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு ஆய்வின் வெளிப்பாடாக இந்தப் படையல் அமையவில்லை. (இவர் இதற்கான வெளியார் நிதி பெற்று, அதன் விளைவாக எந்த விஷயத்தில் என்ன முன்னேற்றம் நடந்திருக்கிறது என்பதெல்லாம் வேறு விஷயங்கள்; நேரடியாகவோ, மறைமுகமாகவோ நாமெல்லாரும் சமூகத்தின் உபரியாக்கங்களை உண்டுகொண்டிருப்பவர்கள் என்பதுதான் உண்மை.)
  • அவதானித்த அல்லது கற்பனை செய்த சில பண்பாட்டுக்கூறுகளை வைத்துக்கொண்டு பொதுமைப் படுத்துவதற்கும் (generalization) முத்திரைக் குத்தல்களுக்கும் (stereotyping) உள்ள வித்தியாசத்தை அவர் உணரவேண்டும். இவற்றை நுட்பமாகச் சித்திரித்திருந்தால் கடைந்தேறியிருக்கலாமோ?
  • கருத்துச் சுதந்திரம் என்பதன் மறுபக்கம் என்னவாக இருக்கவேண்டும் என்பதற்கு அப்பாற்பட்டு – கருத்தொருபாகம் என்பதில் – பொறுப்புணர்ச்சி இன்னொரு பாகம் என்பதையே அவர் உணர்ந்திருக்கிறாரா என்பது தெரியவில்லை. ஆகவே – படையலில், கலையும் இல்லை. ஆகவே படிப்பவர்களுக்கு – அல்லது படித்தாக நினைத்துக்கொண்டு உணர்ச்சிவசப்படுபவர்களுக்கும் இந்த பொறுப்புணர்ச்சி தெரியக்கூடாமல், புணர்ச்சி மட்டும்தான் தெரியும் அல்லவா?

சரி. தடயத்திற்கு வருவோம்.

-0-0-0-0-0-0-0-0-

நம்மில் பலருக்கு – தெளிவான, சமன நிலைமிக்க, வணங்கத்தக்க குருஜிக்கள், பேராசான்கள் வாய்த்தால் – நாம் செல்லக்கூடிய தூரம் அதிகமாக இருக்கும் அல்லவா? (எனக்கு இப்படி வாய்க்காததனால்தான் நான் அதலபாதாளத்தில் நின்றுகொண்டிருக்கிறேன் – ஒப்புக்கொள்கிறேன். என் பேராசான் யாரென்று தெரியவேண்டுமென்றால், இதே காட்டுரையின் இரண்டாம்பத்தியை மறுபடியும் படிக்கவும். எனது சராசரித்தனத்துக்கு நான் காரணமில்லை; ஏனெனில் நான் ஒரு திராவிடன்! என் குறைகளுக்கு, முட்டாள்தனங்களுக்கு எப்போதும் மற்றவர்களே  காரணம் அல்லவா?)

… ஆனால் அல்லது ஆகவே – சிலருக்கு வாய்த்த ஆசான்கள் – அம்மாதிரி ஆசான்களுக்கான தகுதிபடைத்தவர்கள் அல்லர். இந்த பாவப்பட்ட பெருமாள்முருகன் அவர்களுக்கும் இப்படித்தான் ஆகியிருக்கிறது. பரிதாபம்தான். :-(

perumalmurugan-arvஆதாரம்: http://www.newindianexpress.com/states/tamil_nadu/Appalled-Litterateurs-Want-Him-to-Fight-Back/2015/01/14/article2618439.ece

… மேற்கண்ட, முக்கியமான தடயத்தின் படி ஆஇரா வேங்கடாசலபதி அவர்களும் பெருமாள்முருகனின் முழுமுதல் மென்டர் (=’ஆசான்’)களில் ஒருவராக இருந்திருக்கிறாராம்! அய்யய்யோ!!  பெருமாள் முருகன் அவர்கள் வெறும் ஒரு புரட்சிக்கார நக்ஸலைட்டாகத்தான் பூர்வாசிரமத்தில் இருந்தார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்!  எந்த பொந்தில் எந்த திராவிடத்துவாவோ, நினைத்தாலே குலை நடுங்குகிறது. என்ன கொடுமை அய்யா இது!  :-(  எங்கேடா என்  மரீஹ்வானா? (MIDS = mids) கொஞ்சம் புகைத்து ஆசுவாசப் படுத்திக்கொள்ளவேண்டும்போல இருக்கிறது.

… ஆக, பெருமாள்முருகன் அவர்களின்  1) ஆராய்ச்சிக்குறைபாடுகளுக்கும், 2) எழுத்துக்கலைப் பற்றாக்குறைகளுக்கும், 3) நுணுக்கமான பார்வையில்லாமைகளுக்கும், 4) அரைகுறையாகப் புரிந்துகொண்ட வெறும் நிகழ்வுகளை மட்டும் காமாலைக்கண்தனமாக அடுக்கி, ஒரு ஆராய்ச்சிக்கீற்றுகூட வெளிப்படாமல் பார்த்துக்கொண்டு, பொதுப்புத்தியின்மை சார்ந்த  முத்திரைகுத்தல்களை மட்டுமே செய்வதற்கும்… …

யார் காரணம்?  வெள்ளத்தனையது மலர் நீட்டமன்றோ?

ஆக, பெருமாள்முருகன் அவர்களைப் பீடித்திருக்கும் இடியாப்பச் சிக்கல் பிரச்சினையின் மூலகாரணம் யார்??

இந்த திடுக்கிடும் காரணத்தை நான் திடீரென்று புரிந்துகொண்டதினால், எனக்கு மெய்யாலுமே, பெருமாள்முருகன் அவர்கள் மேல் அளவுகடந்த பரிவு ஏற்பட்டுவிட்டது  –  உங்களுக்கும்தானே?

ஆகவே நண்பர்களே, வாசக மாக்களே! உங்கள் ஆசான்களைத் தேர்ந்தெடுக்கும்போது, மிக மிக ஜாக்கிரதையாக இருங்கள். இல்லாவிடில் உங்களுக்கும் நல்கை/கொடை/நிதி ஏதாவது கிடைத்துவிடும். பின் ஏதாவது மண்வெட்டி ஆராய்ச்சியை ரோட்டோர டீக்கடையில் செய்துவிட்டு ஏதாவது ஏடாகூடமாக எழுதவேண்டிவரும்.  பின் வரலாற்றுச் சூழலில் மாட்டிக்கொண்டு கண்டமேனிக்கும் அல்லாட நேரிடும்.

இந்தப் பிரச்சினைகளைவிட, அவற்றுக்கு அப்பாற்பட்டு – ஒரு படுபீதியளிக்கும் பயங்கர நிகழ்வும் நடக்கும்: … … நானும் ஒரு பதிவு போட நேரிடும். டும் டும்.

இப்படிக்கு:

திருச்செங்கோட்டானை வாழ்ந்த வயதில்லை. ஆகவே அவரை வணங்கி மகிழும் அரைக்கிழக்கோட்டான்.

ஆமென்.

தொடர்புள்ள பதிவுகள்:

8 Responses to “பெருமாள் ‘மாதொருபாகன்’ முருகன் பிரச்சினையின் மூலகாரணம் யார்? (ஒரு திடுக்கிடும் தகவல்!)”

  1. கணேஷ்மூர்த்தி Says:

    தெளிவான பார்வை தெறிக்கும் பகடி! “நாம் திராவிடர்களன்றோ”!!! ஹ ஹ ஹா


  2. திரு வெங்கடாசலபதி அவர்கள் மேல் நான் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தேன். ஓ! என்ன ஒரு தவறு செய்துள்ளேன், என வருந்துகிறேன். இவர் “பெருமாள் முருகன்” ஆசான் எனில், சே! சே!!


    • அய்யா பரமசிவன்,

      தாங்கள் திருப்பதி வெங்கடாசலபதியைக் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். என்னுடைய நெடு நாள் நண்பர்தான் இவர். எப்போது அவர் வீட்டுக்குப் போனாலும், அவர் ஆசையாகக் கொடுக்கும் லட்டு எனக்கு மிகவும் பிடித்தமானது. எனக்கும் அவர் பேரில் மரியாதையும்மதிப்பும் உண்டு.

      ஆனால் அய்யா, நான் குறிப்பிடுவது ஆஇரா வேங்கடாசலபதி அவர்களைத்தான்! சிஷ்யனுக்கு ஏற்ற குரு. சிஷ்யன் தயாராக இருக்கும்போது குரு தோன்றுவான். ஜென் கதை ஒன்று இப்படித்தான் சொல்கிறது. ஆனால், சிஷ்யர்கள் தயாராக இல்லாவிட்டாலும் வேனிற்காலத்தில் குருக்கள் நிறையத் தோன்றலாம், வேர் எனக் கேட்காதீர்கள் – அதற்கு பாண்ட்ஸ் டால்கம் பவுடரை அப்பிக் கொண்டாலே போதுமானது.

      மற்றபடி உங்கள் தவறு மன்னிக்கப் பட்டது. :-)

  3. Anonymous Says:

    வரலாற்றில் மதங்களின் மாச்சரியங்கள் பேரோ – பிரமிடுகளின்
    புதைக்கப்பட்ட கதை……ஒரு சமூகத்தையும் புண்படுத்தும் வண்ணமிருப்பது….

  4. Anonymous Says:

    ராமசாமி சார் புத்தாண்டில் முதல் வணக்கம். யார் சார் பேரா. எ ஆர் வெங்கடாசலபதி? கொஞ்சம் அறிமுகம் செய்வீர்களா?


    • அய்யா அனாமதேயம்,

      வணக்கம். நீங்கள் யாரென்று தெரியவில்லை.

      பேராசிரியர் ஆஇரா வேங்கடாசலபதி அவர்களை, வெறும் திராவிடச் சாமானியனான நான் அறிமுகம்நரிமுகம் எனப் படுத்தி எடுக்கும் நிலையில், அவர் நிச்சயமாக இல்லை. அவர் ஒரு புகழ்பெற்ற ஆய்வாளர்.

      அவரைப் பற்றி மேலும் தெரிந்துகொண்டு இன்புற, அவர் தொழில் செய்துகொண்டிருக்கும் இடத்தில் காணக்கிடைக்கும் அவர்தம் விவரம்: http://www.mids.ac.in/chalapathy.htm

      *sigh*

  5. A.Seshagiri Says:

    இப்பொழுதான் முதன்முதலாக தங்கள் புகைப்படத்தை திரு.ஜெமோ.அவர்களின் வலைத்தளத்தில் பார்த்தேன்.நீங்கள் அரைக்கிழக்கோட்டான் அல்ல,நல்ல “இளக்கோட்டான் தான்!”

  6. s. Gopalakrishnan Says:

    ஆகா, பெருமாள் முருகனின் படைப்பே தேவலாம் என்று நினைக்கத்தோன்றுகிறது. அறுபது வயதுக்கிழவி சுடிதார் போட்டுக்கொண்டு அளவுக்கதிகமான மேக்கப்புடன் பஸ் ஸ்டாண்டைச் சுற்றி சுற்றி வருவது போல் இருக்கிறது இவருடைய விமர்சனம் . இந்த அறிவு ஜீவிக்கு பெருமாளையும் தெரியவில்லை முருகனையும் புரிந்து கொள்ள வில்லை . சபாஷ் … ஜோல்னா …. ஆட்டுத்தாடி .. விட்டத்தை வெறிக்கும் வெட்டி வேலையாள் .


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s