ஆர் மகாதேவன் – சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அண்மையில் நியமிக்கப்பட்ட 7 புதிய நீதிபதிகளில் ஒருவன்!
October 25, 2013
மிகவும் சந்தோஷமாகவும், திருப்தியாகவும் இருக்கிறது.
காலையில் என் அப்பா தொலைபேசியில் கூப்பிட்டார்: “டேய், உன் நண்பன் ஹைகோர்ட் ஜட்ஜாயிட்டான்; பேப்பர் படிச்சியா?”
எனக்குத்தான் நாளிதழ் கிட்டே போகும் பழக்கமே இல்லையே – ஆக, பறந்தோடி வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பவரிடம், முந்தா நாள் செய்தித்தாளை யாசித்துப் படித்தேன்.
… கொஞ்சம் தலையில் அடித்துக் கொண்டு, மகாதேவன் பற்றி, அந்தக் கேடுகெட்ட ‘த ஹிந்து’ வெளியிட்ட செய்தியில் ஒரு பாகத்தை இங்கு கொடுக்கிறேன்:
“R.Mahadevan was born to Ma.Ranganathan, renowned Tamil writer and Krishnammal in 1963 in Chennai. He graduated from A.M.Jain College, Meenambakkam. After obtaining his law degree from Madras Law College, he enrolled in 1989. Mr. Mahadevan practised in civil, criminal and writ sides with specialisation in Indirect Taxes, Customs and Central Excise matters. He served as an Additional Government Pleader (Taxes) for the Tamil Nadu Government and as Central Government Standing Counsel and Senior Panel Counsel for the Government of India at Madras High Court.”
ஆஹா!
‘முன்றில்’ மகாதேவனை, மாமாங்கங்களாக நான் அறிவேன். இவனுடைய மூளையும், நுண்மான் நுழைபுலம் அறியும் மனப்பான்மையும், விசாலமான படிப்பறிவும், இளகிய நெஞ்சும், புடம் போட்ட நேர்மையும் – சுமார் முப்பது வருடக் கடின, ராக்ஷசத்தனமான உழைப்பும் கூடி வந்திருக்கின்றன… அதுவும், ஜாதி-வாரியாக – அயோக்கியர்களை மட்டுமே தெரிவு செய்யவேண்டுமெனத் திரண்டிருக்கும் அற்ப வழக்குரைஞர் சங்கத்தினர்களின் அழுத்தங்களையும் அடாவடிகளையும் மீறி! வேறென்ன சொல்ல…
இவன் விற்பனை / வணிக வரி / கலால் தொடர்பான முன்னோடிச் சட்ட விற்பன்னர்களில் ஒருவன். பல வருடங்களாக, தனிப்பட்ட முறையில் வழக்கறிஞராக சுபிட்ச நிலையில் இருக்காமல், அரசுவக்கீலாக இருந்து மாரடித்து தமிழ் நாட்டரசின் சார்பாக வாதாடி, இவன் பெற்றுத்தந்த வரிபாக்கிகள், பிடித்த வரி ஏய்ப்புகள் கணக்கிலடங்கா. இவை நிச்சயம் பல்லாயிரம் கோடிகள் கிட்டே இருக்கும் என்பது என் அனுமானம். பல ஆண்டுகள் தினசரித்தூக்கம் என்பதே 3-4 மணிநேரம்தான்! என் மதிப்பில், இந்த மகாதேவனும் பிட்டுக்கு மண்ணை, ராக்ஷத லாரி ராக்ஷத லாரியாகச் சுமந்திருக்கிறான். (இவன் ஒரு தமிழ் இலக்கிய ஆர்வலனும், நல்ல இசை/சினிமா ரசிகனும் கூட!)
மகாதேவன், — வீடுபேறு, பறளியாற்று மாந்தர் போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும் நாவல்களையும் – மிக முக்கியமாக ‘பொருளின் பொருள் கவிதை’ எனும் கவிதை பற்றிய தெள்ளிய நீரோட்டம் போன்ற ஆய்வுக் கட்டுரையையும் எழுதியிருக்கும் நம்முடைய மா. அரங்கநாதன் அவர்களின் மகன்.
-0-0-0-0-0-
இப்படிப்பட்ட மனிதர்கள், இவ்வுயர்ந்த, மிக முக்கியமான பணிகளில் அமர்வது என்பது, என்னைப் பொறுத்தவரையில், மிக நம்பிக்கையளிக்கும் விஷயம்.மெல்ல நீதி பரிபாலனம், இனிச் சாகும் சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. ஏனென்றால், எனக்கு – ஒரு பானை நீதிபதிகளுக்கு ஒரு மகாதேவன் பதம் என்றே வைத்துக் கொள்ள விருப்பம்.
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. :-)
பின்குறிப்பு: இவனைப் பற்றி எழுதும்போது அவர், இவர் என்று மரியாதையுடன் எழுதியிருக்க வேண்டுமோ? மகாதேவர் மன்னிப்பாரா?
மகாதேவன் பற்றிக் கோடிட்டுக் காண்பிக்கும் பதிவுகள்:
-
சென்னை புத்தகச் சந்தை நினைவுகள்… 20/01/2013
-
காந்தியை முன்வைத்துச் சில எண்ணங்கள்… (தொடர்ச்சி-2) 30/12/2011
October 25, 2013 at 12:40
அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை
October 26, 2013 at 06:40
தினமணி செய்தி: (http://dinamani.com/india/2013/10/23/தலைமை-நீதிபதியானார்-ஆர்.கே.-அ/article1850428.ece)
தலைமை நீதிபதியானார் ஆர்.கே. அகர்வால்; 2 மாவட்ட நீதிபதிகள், 5 வழக்குரைஞர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்
“… ஆர்.மகாதேவன்: 1963-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10-ஆம் தேதி ஆர்.மகாதேவன் சென்னையில் பிறந்தார். நங்கநல்லூரில் உள்ள நேரு அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் பட்டப்படிப்பையும் இவர் முடித்தார். சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பயின்றார். 1989-ஆம் ஆண்டு வழக்குரைஞராக பதிவு செய்தார். சிவில் மற்றும் குற்றவியல் பிரிவில் வழக்குரைஞராக பயிற்சியை மேற்கொண்டார். மறைமுக வரி, சுங்கம் மற்றும் கலால் வரியில் பிரசித்தி பெற்றவர். தமிழக அரசின் கூடுதல் அரசு வழக்குரைஞராகவும், மத்திய அரசின் கூடுதல் அரசு வழக்குரைஞராகவும் பணியாற்றியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மத்திய அரசின் மூத்த வழக்குரைஞர்கள் குழுவில் இடம்பெற்றிருந்தார்.”
:-)
October 27, 2013 at 10:19
மகாதேவனுக்கு இவ்வளவு நெருக்கமான நண்பரென்றால்… நீங்கள் யாரென்று எனக்குத் தெரியுமோ என்று நான் யோசிக்கிறேன்… முன்றிலின் எண்பதுகளில் இலக்கியம் கருத்தரங்கு ஞாபகத்தில் வந்து அற்புதமான மலரும் நினைவுகளின் தூண்டலால் இதைப் பதிவிடுகிறேன்…. கூடவே ரங்கநாதன் தெருவில் மாம்பலம் ரயில் நிலையத்திற்குக் கிட்டவாக மாடியில் இருந்த அந்தப் புத்தகக் கடையும் அங்கு எப்போதும் அமர்ந்திருக்கும் பெரியவர் அரங்கநாதனின் வாத்சல்ய பேச்சும் நினைவுக்கு வந்து இதை நெகிழ்வுத் தருணமாக்குகின்றன… இன்று என் சொந்த நாட்டிலிருந்து நண்பர் மகாதேவனுக்கு வாழ்த்துக்களும் உங்களுக்கு நன்றியும்…
October 7, 2020 at 22:22
[…] தாடி வேறு ஏகத்துக்கும், நண்பன் மஹாதேவன் என்னை ‘பைராகி’ எனக் […]