நீங்களுமா பிஏகிருஷ்ணன்?

January 12, 2019

ஏமாற்றம். :-(

(இதனை 228 பேர் விரும்பியிருக்கிறார்கள், 20 பேர் பகிர்ந்திருக்கிறார்கள். இதனை நான் எப்படிப் புரிந்துகொள்கிறேன் என்றால், நான் ஃபேஸ்புக் ஜோதியெழவில் ஒருவேளை ஐக்கியமானால் – என்னையும் 228 பேர் விரும்புவார்கள். 20 பேர் பகிர்வார்கள். அவர்களெல்லாம் எழுதியிருப்பதைப் புரிந்துகொண்டா இப்படிச் செய்கிறார்கள், சொல்லுங்கள்? ஏதோ கொசு கடித்தால் கை ஆட்டோமெடிக்காக டபால் என்று அதனை அடிப்பதில்லையா. அதைப்போலத்தான் இந்த ஸோஷியல்மீடியா பகிரல்கள், லைக்குகள் பகீரென்று நடந்தேறுகின்றன போலும்! “டேய் அண்ணாத்தை இன்னொரு ஸ்டேட்டஸ் போட்றுக்கார்டா! ஐயய்யோ, கண் படிக்றத்துக்கு முன்னாடியே கை லைக் பண்ணிட்ச்சே!”)

…இப்படியாகத்தானே வெறுமனே ரெண்டு வரிகளை அனுப்பி, அன்பர் பிஏகே அவர்கள், அண்மையில் ஃபேஸ்புக்கில் இப்படி அருளியிருக்கிறார் என ஒரு அனுகூலசத்ரு நண்பர் தெரிவித்தார்; வரலாறு உளறாறுகளில் கொஞ்சம் பித்துப் பிடித்த நானும்மேற்கண்ட ஸ்க்ரீன்ஷாட்டினை இன்னொரு நண்பர் மூலமாகப் பெற்று பிரமித்துப்போனேன்.

பிஏகே அவர்களை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு “தேங்க் யூ அங்கிள்” என விலகிவிடுவதைத் தவிர இந்த ராமசாமி அங்கிளுக்கு வேறுவழியேயில்லை. என்ன செய்வது சொல்லுங்கள்.

இருந்தாலும்…

இதனை, அவருக்கு ஒரு சிறிய தற்காலிகச் சறுக்கல் என ஒரு சால்ஜாப்பைக் கூறிக்கொண்டு, ஆனாலும் amicus PAK, sed magis arnica veritas எனவும் நினைத்துக்கொண்டு.. பெருமூச்சுடன்… ஈஸ்வரா….

…உண்மையில் இவர் நண்பர், அறிமுகமுள்ளவர் என்றெல்லாம் பெரிதாக இல்லை; நான் சில சமயங்களில் படிக்க நேரும் தமிழக அறிவுஜீவியச் சூழலில், அவருடைய படிப்பறிவுக்காக, தொடர்ந்து தீராவிடர்களைத் தரவுகளுடன் எதிர்க்கும் – ஆகவே அவற்றுக்காக அவரை மதிக்கும் ஒரு சிலரில் ஒருவன்; மேலும், நான் இவருடைய ஒரு புத்தகம் ஒன்றை – புலிநகக் கொன்றை – படித்திருக்கிறேன் அவ்வளவுதான்; சிலமாதங்கள்முன் இவர் மோதி எதிர்ப்பு என்ற பெயரில் ஏதோ ஃபேஸ்புக்கில் எழுதியிருந்ததை அதே அனுகூலசத்ரு நண்பர் அனுப்பிக் கொடுத்திருந்தார்; அது கொஞ்சம் சரியில்லாமல், ஆதாரமேயில்லாமல் இருந்தது; எப்படியும் – மோதியையும் பாஜகவையும் முகாந்திரமேயில்லாமல் கரித்துக்கொட்டுவது நம் அறிவுஜீவிகளின் குடிசைத்தொழில். ஆகவே ஏதோ அலுப்பில் அதனைப் புறம்தள்ளிவிட்டேன் என்பதும் நினைவில் இருக்கிறது. அவ்வளவேதான்!

-0-0-0-0-0-

அற்ப திராவிடர்களைத் தீவிரமாக விமர்சித்தால், அந்த லும்பன்களுடன் சதா மல்லுக்கட்டிக் கொண்டிருந்தால் – சில சமயங்களில் சகதுர்வாச தோஷத்தால், அவர்களுடைய சொந்த அமோகத் திறமையான அக்மார்க் அறியாமைத் தீட்டு பட்டுவிடும்போல – என நினைத்துக் கொண்டுவிடவேண்டியதுதான் போல.

அல்லது அறியாத/அப்பாவி இளைஞர்கள் அடிப்படை அறிவற்று உளறிக்கொட்டினால் – ‘அவர்களை அவர்கள் இடத்தில் வைக்க‘ ஒர்ரேயடியாக அட்ச்சிவுட்டால்தான் சரி – அவர்கள் வாயை நம் ஏகோபித்த பாண்டித்தியத்தால் அடைத்தால்தான் சரி என்று அலுப்பில் இப்படி சொல்லியிருப்பாரோ? (ஆனால் அந்த நிகழ்ச்சிக்குப் பின் இதை எழுதியிருப்பதால், கொஞ்சமாவது சமனம் வந்திருக்கவேண்டாமோ?)

அல்லது ‘யார் இதையெல்லாம் சரிபார்க்கப் போகிறார்கள், நம் சராசரித் தமிழனின் அதிசராசரி அறிவுக்கு இது போதும்!‘ – எனும் ஜெயமோக மனப்பான்மையா?

அல்லது ‘அட்ச்சிவுடுவது என்பது அறிவுஜீவியத்துக்கு அழகு‘ என்றறிந்து கொண்டால் எனக்கு 108கனவுக்கன்னிகளுடனான ஹிந்து-இஸ்லாமிய மதச்சார்பின்மை சல்லாப மோட்சம் லபிக்குமோ? எங்கேடா என் அதிஃபிர்தௌஸும் ஜன்னத்தும்??

அல்லது… …

பிரச்சினை என்னவென்றால் – நமக்கெல்லாம் (எனக்கும்தான்! mea culpa!) படிப்பறிவு ஏதோ கொஞ்சம் இருப்பதாக பாவனை இருப்பதால் – புதுபம்பரம் டொட் டொட் டொட்டெனத் ‘தொகுருவது’ போல, அனைத்துத் துறைகளிலும் சிலம்பமாடும் தன்னம்பிக்கை ஏகத்துக்கும் அதிகமாகிவிடும். நம் சர்வக்ஞ நிலையால், அதனை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என முழிமுழியென முழித்துக்கொண்டிருப்பதால் கைவேறு எத்தையடா தட்டச்சு செய்து புரட்ச்சிக்கலாம் எனத் துருதுருவென்றிருக்கும்.

எவனாவது சுத்தமாகப் போக்கற்றுப் போய், எதற்காவதாவது அறிவுரை அறவுரை பதவுரை பொழிப்புரை கேட்க வரமாட்டானா – தப்பித் தவறி வந்தால் அப்படியே பிடித்து அமுக்கி நம்முடைய அறிவைப் பிழிந்து சாற்றை அவன் மண்டையில் 5ஜி படுவேகரீதியில் அப்லோட் செய்து இன்புறலாமா என்றெல்லாம் நப்பாசையாகவும் ஏக்கமாகவும் இருக்கும். அல்லது ங்கொம்மாள, மஹாபாரதத்தை ஒருகை பார்க்கலாமா எனக்கூடத் தோன்றும்…

தலைமுடி மார்முடி அடிமுடி எல்லாம் நரைத்துவிட்டதால் நம்மை அறிவாளி என ஆட்டோமெடிக்காக நம்பிவிடுவார்கள், இந்தப் போக்கற்ற பொதுஜனங்கள் — எனும் உண்மை வேறு நமக்குப் படு தெகிர்யம் கொடுக்கும்.

நமக்கு தற்போதைக்கு வேறுவேலைவெட்டி இல்லாத காரணத்தால், பணம் ஒரு பெரிய பிரச்சினையாக இல்லாததால், பிரச்சினைகளைத் தேடி மண்வெட்டிகளைத் தரித்துக்கொண்டு கிளம்பிவிடுவோம் – ஆலையில்லா ஊரில் நாமில்லாவிட்டால் எவர்தான் இலுப்பைப் பூக்களாவதாம், சொல்லுங்கள்? அறிவார்ந்த தமிழச்சூழல் என்பது ஒரு பெரும்பாலைவனம். அதுவும் ஆங்கிலத்தில் வேறு நமக்கு பாண்டித்தியம் இருக்கிறது எனும் சுயபிரமிப்பு; கர்வச் சீரழிவுக்கு வேறென்ன வேண்டுமாம்!

கூட ரெண்டு புத்தகக் குறிப்புகளை அளித்தால் (இப்பதிவின் கடோசியில், சில புத்தகங்களை சிபாரிசு செய்திருக்கிறேன் என்பதை கவனிக்கவும்!) அதுவும் அவை வெள்ளைக்காரக் கூவான்கள் (அவர்கள் ஆட்டோமெடிக்காக அறிவாளிகள் எனக் கருதப் படுவார்கள். பேரென்ன லல்லீ, ஃபேர் அண்ட் லவ்லீ!) எழுதியவையாக இருந்துவிட்டால் இன்னமும் ஸ்ரேஷ்டம். அவர்களைக் கோடிகாட்டி, என்ன இருந்தாலும் வெள்ளைக்காரனுக்கு ஈடுவருமா எனப் புளகாங்கிதம் அடைந்து – அவற்றுக்குத் தொடர்பேயில்லாமல் நாம் அமோகமாகக் குறுக்குசால் ஓட்டலாம்… (ஐயகோ! ஆனால் எனக்கு, வேண்டாவெறுப்புடன் ஒரு ஹிந்திகாரரின் ஆங்கிலப்புத்தகத்தைக் குறிப்பிடவேண்டிய துர்பாக்கியம் வந்துவிட்டது, என்ன செய்வது – அந்தப் புத்தகம் ஒரு ரத்தினம்!)

ஆனால், ஆயிரம் செய்தாலும் – எல்லாரும் அரவிந்தன் கண்ணையன் ஆகிவிடமுடியுமா சொல்லுங்கள்? எனக்கு இயலாமைக் கழிவிரக்கத்தினால், துக்கம் துக்கமாக வருகிறது. அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டு, அந்த மெச்சத்தகுந்த ஐடி குமாஸ்தா தகுதியினாலேயே இந்தியாவுக்கு சகல சப்ஜெக்டுகளிலும் மேலான சப்ஜாட் அறிவுரை தரும் பாக்கியம் என்பது – எனக்கு இந்த ஜன்மத்தில் வாய்க்கவேயில்லையே, ஐயன்மீர்! :-(

சரி.

திராவிடர்கள் வெறும் அரைகுறைகள் – வெறும் உணர்ச்சி+புணர்ச்சிக் குவியல்களான அவர்களுக்கு மேல்மாடி அமோகமாகக் காலி என்பதால் அவர்களுடைய மட்டித்தனத்தை எதிர்கொள்வது கொஞ்சம் சுலபம். ஏனெனில் திராவிட அறிவுஜீவிகள் என்று ஒருவரைக் கூட அநியாயமாகக் குற்றம் சாட்டமுடியாது, அவர்களுடன் அறிவார்ந்தரீதியில் பொருதமுடியாது. ஏனெனில், ஒரு மனிதர் அறிவுபெற்று வளர்கிறார் என்றால், அவருக்கு அந்த இச்சை குறைந்தபட்சம் இருக்கிறது என்றாலேயேகூட, அவர் ஒரு அக்மார்க் திராவிடனுக்கு இருக்கவேண்டிய அடிப்படைத் தகுதியான ‘வடிகட்டிய முட்டாள்தனத்தை’ இழந்துவிடுகிறார். மார்ஸ் கிரகத்தில் கார்ல் மார்க்ஸ் அவர்களைத் தேடமுடியுமா, சொல்லுங்கள்?

பின்னவரில் முன்னது இருக்கிறது என்பதற்காக முன்னதில் பின்னவர் இருக்கிறார் என அழிச்சாட்டியம் செய்யமுடியுமா?

திராவிடக் கூவான்களைக் கொமட்டில் குத்துவது சுலபம் என்பதால், எல்லா திசைகளிலும் அட்டைவாட்களைச் சுற்றலாமா தலைவா? அது தேவையா?

-0-0-0-0-0-

“‘ இன்றைய இந்தி ஒரு நூறு ஆண்டு சமாச்சாரம் கூட இல்லை,’

‘இன்றைய ஹிந்தி’ என்பதில் ‘இன்றைய’ என்பதை எலாஸ்டிக் ஜவ்வாக உபயோகித்து ஹிந்திபடங்களிலிருந்து தான் ஹிந்திவந்தது எனக்கூடக் கபடியாடலாம். நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த (ஐயய்யோ! ‘முன் இருந்த’ இல்லை, சரியானது: ‘நூறாண்டு சமாச்சாரம் கூட இல்லை’) ஹிந்திக்கும் இன்றைய ஹிந்திக்கும் எவ்ளோ வித்தியாசம் எனவுமேகூடச் சப்பைக்கட்டு கட்டலாம்.

அதன்படி, இன்றைய தமிழ் ஒரு நாள் சமாச்சாரம் கூட இல்லை. ஏனெனில் நேற்று ரிலீஸான விஜய்குஜய் அஜித்குஜித் ரஜினிகஜினி படமெடுத்தாடும் பாம்புகளில் – எத்தையாவது புத்ஸா டாமில் வேர்ட்ஸ் அட்ச்சுவுட்டிருக்கும் சாத்தியக்கூறினால், இன்றைய தமிழ் நேற்று புத்துருவாக்கப்பட்டுவிட்டதே ஐயா!

ஆக, நானும் ஒப்புக்கொள்கிறேன். இன்றைய ஹிந்தி, ஒரு நாள் சமாச்சாரம்கூட இல்லை! நன்றி!

1883ல் – அதாவது 136 வருடங்களுக்கு முன் – ரத்யார்ட் கிப்லிங் (Rudyard Kipling) ஒரு கவிதையில் இப்படி எழுதுகிறார் – அதுவும் பிஏகிருஷ்ணனிடம் அனுமதி பெறாமலேயே!

என்ன துக்கிரித்தனம்! :-(  ^ % $ # @(&

சரி, கிண்டலை விட்டுவிட்டு இப்போது கறாரான தரவுகளை வைத்துக்கொண்டு கிண்டப் பார்க்கலாம்.

சர்வ நிச்சயமாக, குறைந்த பட்சம் சில நூறு ஆண்டுகளாக ஹிந்தி ஆக்கங்கள், பத்திரிகைகள் / சஞ்சிகைகள் வந்துகொண்டிருக்கின்றன.

வங்காளத்தில் முதல் முழுஹிந்தி சஞ்சிகை 1826ல் இருந்து பதிப்பிக்கப்பட்டது – உதந்த் மார்த்தண்ட். உதய சூரியன். (இந்தத் தொடர்பற்ற செய்தியை வைத்துக்கொண்டு ஒரு திராவிட அன்பரைச் சுமார் இருபது வருடங்கள் முன் கலாய்த்தது நினைவுக்கு வருகிறது. “ஹிந்தி எதிர்ப்பு ஒழிப்பு என்கிறீர்களே! உங்கள் சின்னமே ஒரு பழைய ஹிந்தி பத்திரிகையின் பெயரைக் காப்பியடித்ததுதான்! தமிழ்கிமிழ் என ஓலமிடுவதற்குப் பதிலாக – உங்களுடைய அந்த எழவெடுத்த சின்னத்தை எழுஞாயிறு எனக் குறிப்பிடலாமே! ஆனால் மாட்டீர்கள். உங்கள் டமிள்ப்பட்ரு அப்படி. மேலும், உங்கள் கலகச் செயள்வீரர்கலுக்கு வாயிள் தமிள் நுளைவதை விட ஹிந்தியும் ஸம்ஸ்க்ருதமும் சுளுவாகவே நுளையுமே!” – பாவம், அவர். “உன் பாப்பார புத்தியக் காட்டிட்டியே!” – :-) எது எப்படியோ!)

அதற்குமுன்பே சிறுபகுதிகளாக ஹிந்திமொழி ஆக்கங்கள் பிற வங்காள, உருதுமொழி சஞ்சிகைகளில் வந்திருந்திருக்கின்றன. ஹிந்தி பேசுமொழியென்பது அதற்கு முன் பல நூற்றாண்டுகளாகவாவது இருந்திருக்கிறது. 1819ல் இருந்து வெளிவந்த, பாப்டிஸ்ட் மதமாற்றி மிஷனரிகள் நடத்திய சமாச்சார் தர்பன் எனும் வங்காளப் பத்திரிகையில் ஹிந்தி பகுதி எனத் தனியாக இருந்திருக்கிறது. (200 ஆண்டுகளுக்கு முன்!)

1803ல் ‘ராணி கேட்கி கி கஹானி’ எனும் அழகான நாவல் இன்ஷாஅல்லாகான் என்பவரால் எழுதப்பட்டு வெளியிடப்படுகிறது. (நான் இதனைப் படித்திருக்கிறேன்)

1800ல் – ஹிந்தி மொழியின் பரவலையும் பிராபல்யத்தையும் அறிந்த ப்ரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி – கல்கத்தாவின் வில்லியம்ஸ் கோட்டையில் ஒரு பயிற்சிப் பள்ளியை நிறுவுகிறது. அதில் ஹிந்தி பேராசிரியர் ஜான் கில்க்றிஸ்ட், ஹிந்தியைப் பற்றி அதனை வைத்துப் புத்தகங்களை எல்லாம் எழுதுகிறார்!

சரி, பிஏகிருஷ்ணன் அவர்களின் ஃபத்வாவை மீறி (‘இன்றைய ஹிந்திக்கு நூறாண்டுக்கும் குறைவான வரலாறுதான்!’) அவருடைய முன்னனுமதி பெறாமலேயே – படிப்படியாகப் பின்னகர்ந்து ஹிந்தியின் ஆவணபூர்வமான வரலாறு 1800களுக்கு முன்பிலிருந்தே இருக்கிறது என நிறுவியாகிவிட்டது. (அவர் மாறுகால்மாறுகை வாங்கி பின்னர் என் தலையையும் சீவிவிடுவாரோ என நடுக்கமாகவே இருக்கிறது. கொஞ்சம் என் கையைப் பிடித்துக்கொள்கிறீர்களா?) :-(

ஆகவே, இன்னமும் முன்னர் செல்லலாம். அல்லது முதலிலிருந்து வரலாம்.

க்றிஸ்டொஃபர் ஷாக்கிள், ரூபர்ட் ஸ்னெல் போன்ற அறிவார்ந்த ஆய்வாளர்களின் கருத்து என்னவென்றால் – மத்தியகால இந்தோஐரோப்பிய மொழிகளிலில் இருந்து பொதுவருடம் 1000 போல (அதாவது சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே) ஹிந்தி உள்ளிட்ட அண்மைய இந்தோஐரோப்பிய மொழிகள் பிரிய ஆரம்பித்துவிட்டன. ஆனால் இவற்றுக்கான ருசுக்கள், பிற்காலத்தில் அவை சுட்டப்படுவதால் மட்டுமே கிடைக்கின்றன. (தத்பாவம் தத்ஸாமம் தொடர்புள்ள வார்த்தைகள், அவற்றின் வளர்ச்சி எனவெல்லாம் எழுதிக்கொண்டே போகலாம் – ஆனால், இப்போது வேண்டாம்)

பஜார் மொழியாக இருந்து நான்கு பெரும் பிரிவுகளில் இருந்த ஹிந்தி மொழி (கடிபோலி, மைதிலி, ப்ரஜ், அவதி) இஸ்லாமிய ஸுல்தான்களின் காலத்திலிருந்து அவர்களுடைய தேவைகளாலும் வளர்ந்தது.

மேலே உள்ள விவரங்களைப் படிக்கவும், தயவுசெய்து…

1500களில் பிற்பாதியில் வாழ்ந்த துளசிதாசர் என்ன தமிழிலா அல்லது பாரசீகத்திலா தன்னுடைய ராமசரிதமானஸை எழுதினார்? அது ஹிந்திமொழியின் அங்கமாகிய அவதியில்தானே? எனக்கும் பிஏகே அவர்களுக்குமேகூட இந்த ஹிந்தி புரியுமே. இக்கால அலங்கார ஹிந்திக்கும் அக்கால ராமசரிதமானஸின் வசனங்களுக்கும் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் இருக்கின்றனவா என்ன?

இப்படியா பிஏகிருஷ்ணனை ஏமாற்றுவார் இந்த துளஸிதாசர்? என்ன காவித் திமிர்? ஹிந்துத்துவா கொலைவெறி! தேவையா, சொல்லுங்கள்…

இது ஹிந்துபயங்கரவாதம் இல்லையென்றால், எதுதான் அது, சொல்லுங்கள்?

ஆனால் மதச்சார்பின்மை என்பது மிகமிகமிக முக்கியம். ஆகவே இஸ்லாமிய ஆவணக்காரரான அமிர் குஸ்ரோ (12-13 நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்) அவர்களின் சாட்சியையும் கொடுக்கிறேன்.

(இது அம்ரித் ராய் அவர்களின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது – இது ஒரு மாணிக்கம்; அம்ரித் அவர்களை உற்சாகப்படுத்தி அவரை இப்புத்தகத்தை எழுதவைத்தது – ஸுநிதி குமார் சட்டர்ஜி அவர்கள் என்பதைக் குறிப்பிடுகிறேன்; இவர் ஒரு மதிக்கத்தக்க மொழியியலாளர்)

மேற்கண்ட கதையின் நீதி: ஆமாம், பிஏகிருஷ்ணன், ஆமாம். சர்வ நிச்சயமாக “இன்றைய இந்தி ஒரு நூறு ஆண்டு சமாச்சாரம் கூட இல்லை.”
கருத்துக் கபடியாட்டத்தில் உங்களுக்குத்தான் முதல் பரிசு. நன்றி. :-(

-0-0-0-0-0-

பல விஷயங்களில் என்னுடைய பிரத்தியேகமான குரு, என் மனைவி/துணைவிதான். என்னுடைய கொதித்தல்களுக்கு அமைதியான மாற்றாக அவள் திரும்பத் திரும்பச் சொல்வது:

நீ எல்லோரையும் கால்பந்து அல்லது டென்னிஸ்பந்து போல இருக்கவேண்டும் என விரும்புகிறாய்; ஆனால் உலகம் முழுவதும் கால்ஃப் பந்துகளால் நிறைந்துள்ளது – அதாவது, உள்ளே எதுஎப்படியோ, ஆனால் மேற்பரப்பு முழுக்க மேடுபள்ளங்கள். டிம்ப்ள்ஸ்.

எப்படி இருக்கிறார்களோ அப்படியே மற்றவர்களை எடுத்துக்கொண்டு போய்க்கொண்டிருக்காமல் உலகத்துப் பிரச்சினைகள் எல்லாம் மண்டையில் போட்டுக்கொண்டு என்னவோ நீதான் அவற்றைச் சிடுக்கவிழ்க்கவேண்டும் என சதா உபத்திரவம் கொடுக்கிறாய். இப்படியே போனால், என்னைக் கூடியவிரைவில் விதவையாக்கிவிடுவாய்.

ஹ்ம்ம். கொஞ்சம் யோசித்தால், நானும் கோல்ஃப்பந்தாசாமிதான்.

இந்த உலகமே டிம்பிள் கபடியாட்டக்காரர்களால் நிரப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கெல்லாம் முன்னோடி கீழே இருக்கும் அம்மணிதான்.

மேலும், எனக்கு – என்னையும் உலகத்தையும் பார்த்து விழுந்துவிழுந்து சிரிக்கும் பண்புமுண்டு. இதுதான் என்னைக் கடைத்தேற்ற (shop’s theorem) வேண்டும்.

நன்றி.

பின்குறிப்பு: பாவம், அந்த இளம் ராஜஸ்தானி தம்பதி பிற்காலத்தில் ஒருவேளை உண்மைகளைத் தெரிந்துகொண்டால், ஒட்டுமொத்தமாக மதராஸிகளையே, பொய்யர்கள் – அட்ச்சிவுட்டாலஜிஸ்டுகள் என நினைத்துக்கொள்ளாமல் இருந்தால் சரி. என்ன சொல்கிறீர்கள்? :-(

ஹிந்தி பற்றிய வரலாறுகளை அறிய உதவக்கூடிய புத்தகங்கள்:

  1. A house divided: The origin and development of Hindi/Hindavi, by Amrit Rai, New Deli: Oxford University Press, 1984 (this is a real gem, so many details from primary sources!)
  2. One language, Two scripts: The Hindi Movement in Nineteenth Century North India, by Christopher R. King, New Delhi: Oxford University Press, 1994 (whole book is available online – http://www.columbia.edu/itc/mealac/pritchett/00urduhindilinks/king/king.html)
  3. Hindi and Urdu Since 1800: A Common Reader, by Christopher Shackle, Rupert Snell, South Asia Books, 1990
  4. Headlines from the Heartland: Reinventing the Hindi Public Sphere, by Sevanti Ninan, Sage publications, 2007

18 Responses to “நீங்களுமா பிஏகிருஷ்ணன்?”

  1. Sridhar Tiruchendurai Says:

    I liked it. தருமி நாகேஷ் சொல்வது போல், எவ்வளவு தவறு இருக்கிறதோ, அதற்கு
    ஏற்றார் போல் பாராட்டை கழித்துக் கொள்வது நல்லது.

    நான் ஒரு அரைகுறை என்பது எனக்கு மிக நன்றாகத் தெரிந்ததாலும், கொஞ்சம்
    யேஸ்ஸுவும் வள்ளுவனும் நினைவிருப்பதாலும், சிறு குறைகள் பெரிதாகத்
    தெரிவதில்லை.

    பெரியவர் நம் பெரியப்பா மாதிரி. கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் நம்ம
    பெரியப்பா இல்லையா.


    • யோவ்!

      நீங்கள் அரைகுறையும் இல்லை (வரவர நீங்கள் ஒரு பெரிய மீனவர் ஆகிக்கொண்டு வருகிறீர்கள்! Fishing for compliments, I mean).

      பெரியவர் பெரியப்பாவுமல்லர். நாமெல்லாரும் கருத்தரிப்பு, கருச்சிதைவு உலகைச் சார்ந்த கருத்திருமர்கள்தாம் என்பது என் கருத்து.

      சரி. பொதுச்சபையில் கருத்து சொல்வது என்பதே ஒரு பத்தாண்டு சமாச்சாரம் கூட இல்லை எனச் சொன்னால், என்னை ஒருமாதிரியாகப் பார்த்துக்கொண்டு “:தேங்க்யூ அங்கிள்” எனச் சொல்லி விலகிவிடாமல் – நீங்கள் என்னை இப்படி வதைப்பது சரியோ?

      இதோ என்னுடைய லேட்டஸ்ட் கர்த்து: “இன்றைய கர்த்து சொல்வதேன்பதே ஒரு நிமிட சமாச்சாரம் கூட இல்லை”

      எங்கே என் “:தேங்க்யூ அங்கிள்” – கடனே என இதனைச் சொல்லிவிட்டு உடனே விலகவும்.

      இப்படிக்கு:

      அங்கிள்.

      பின்குறிப்பு: ஊக்கபோனஸாக, இதனை அவசியம் ‘லைக்’ செய்யவும். இது மிக முக்கியம்.

  2. Sridhar Tiruchendurai Says:

    ஒத்திசைவு ராமசாமி எங்கிருந்தாலும் facebookகிற்கு வரவும்.

    அரசியல் அக்கப்போர்கள், மொண்ணை விவாதங்கள், முதுகு சொறிந்து விடல் போன்ற
    விஷயங்கள் நீக்கமற நிறைந்திருக்கும் அங்கு வராமல் என்ன செய்து
    கொண்டிருக்கிறீர்கள்?

    அங்குதான் லைக் செய்து முதுகு சொறிந்து விட முடியும்.


    • கொமட்ல குத்தட்டா?

      எனக்கு மட்டும்தான் வேறுவேலையில்லை என நினைத்தேன்! நல்ல இளைஞர்களாக ஒளிர்வதை விட்டுவிட்டு ஏன்தான் உங்கள் புத்தி இப்படிப் போகிறதோ!

      ஆகவே, உடனடி இளம்பிராயச்சித்தமாக – இன்று கண்ணில்படும் அனைவருக்கும் ஒய்ங்குமருவாதியா ‘டேங்க்ஸ் அங்கிள்,’ ‘டேங்க்ஸ் ஆண்டீ’ அல்லது ‘ஐயய்யோ அது பெண்டீ’ எனச் சொல்லி அகன்றுகொண்டே செல்லவும்.

      ஆனால் மிகவும் அகன்று குண்டாகிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் சரியா? குடமுருட்டிச் செல்வது திராவிடனுக்கு அழகென்பதைத் தவிரப் பிறிதொன்றில்லை.

      நிற்க, ‘அகன்று’ என்றால் un-calf எனவும் மோனியர் வில்லியம்ஸ் அகராதியில் இருக்கிறதாமே?

  3. anon Says:

    சார், அந்த அம்மணியை பார்த்திருக்கிறேன். அவர் யார்? தலை பிளக்கிறது


    • ஐயா, உங்களுக்கு மட்டும் சொல்லிக்கொள்கிறேன். வேறு யாருக்கும் இந்தச் செய்தி தெரியவேண்டாம் – நமக்குள்ளேயே இருக்கட்டும்.

      அவர்தாம் எம் உள்ளம்கவர் களவுக் கள்ளி – டிம்பிள் கபாடியா. இவர் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிபெற்ற கபாடியாட்ட வீராங்கனை – என்பது நம்மில் எவ்வளவுபேருக்குத் தெரியுமென்பது எவ்வளவு பேருக்குத் தெரியுமென்பது… …. … எவ்ளோ…

      கபாடியாட்டத்தில் கால் உடைந்துபோனால், ஒருவேளை அல்லது ஒருகால் அது கபடியாட்டம் என அறியப்படும்வேறு என்பது இன்னொரு செய்தி.

      “தேங்க்யூ அங்கிள்” எனச் சொல்லிவிட்டு ஒருமாதிரியாக அகலவும்.

      இப்படிக்கு,

      ஸிம்பிள் அங்கிள்

  4. SB Says:

    Sir,
    Quote :
    தொகுருவது
    Unquote-
    Loved it …Renaissance of a beautiful colloquialism.
    (Uppetio!).

    Arnica veritas or Amica veritas…not sure of.

    A ballpark range of 100 years given by PAK . Whereas the core matter is about ‘ National Language’ and ‘ Official Language’ where he got a point to share . ‘Can’t see the wood for the trees’ has any place here ? Leave it to Author’s discretion but for us it is a clear gain of some new learning towards subject matter and we are thankful for same.

    Like Bogan Shankar, PAK may come and say ‘ En intha kolaveri?’.

    Regards
    SB

  5. RC Says:

    அன்பு ஐயா,
    ஆட்சி மொழி குறித்த பதிவுப் பின்புலத்தில் திரு பிஏகே அவர்களின் கருத்து சரிதானே :-) தவிர இந்தி மொழி வரலாறு குறித்து அறியாமலிருப்பார் என்று நான் நினைக்கவில்லை.திரு பிஏகே எழுதிய பதிவு அந்நாளைய கீச்சு ட்ரெண்டான https://twitter.com/abrahamsamuel/status/1082722195221008384 செய்தி ஏற்படுத்திய விளைவு என்றே யூகிக்கிறேன்.
    இல்லை ஊர்க்காரர் என்பதால் எனக்குதான் அப்படி வக்காலத்து வாங்கத் தோன்றுகிறதா?

    இந்த வாரத்தில் திருமதி.கனிமொழி இந்தி குறித்து பாராளுமன்றத்தில் பேசியவை, சாமானியன் எதைப்பற்றி இந்த வாரம் யோசிக்கவேண்டும் என்பதை யாரோ ரூம் போட்டு முடிவு செய்து நடத்துவது போல் உள்ளது ..இல்லை என் மனப்பிராந்தியா? தொடர்புடைய சுட்டி- https://www.dtnext.in/News/TamilNadu/2019/01/11052308/1102456/Kanimozhi-revives-antiHindi-debate.vpf

    தேங்யூ சார்


    • யோவ் ஆர்ஸி,

      வெறுமனே தேங்க்யூ சொன்னால் போதாது. ஒருமாதிரியாகப் பார்த்து விலகவும் வேண்டும். இப்படியே பதிலை எதிர்பார்த்துக்கொண்டு நின்றால் என்ன செய்வதாம்?

      எனக்கு நீங்கள் சொல்லும் விஷயம் (ஏர்போர்ட்) தெரியாது. அந்த அப்ரஹாம் ஒரு அதீத உணர்ச்சிப் பிழம்புக் கிறுக்கர் போல! அவருடைய கிறுக்கு ட்வீட்களைப் படித்தேன். (முன்னாலும் இப்படிப் பொறுமையேயில்லாமல் காச்மூச் எனக் கத்துபவர்கள் இருந்தார்கள்; ஆனால் அந்தக் காலத்தில் ஸெல்ஃபியும் சுயபிரகடனமும் சமூகவளைத்தல எலி மனப்பான்மையும் இருந்திருக்கவில்லை)

      ஆனால் கனிமொழி ஒரு சிறந்த நடிகையர் திலகம் என்பது தெரியும். https://twitter.com/othisaivu/status/1084369534939684864

      பின்னர் விரிவாக பதில் கொடுக்கிறேன், சரியா?

      • mekaviraj Says:

        அன்புள்ள ராம்,
        தங்கள் பார்வைக்கு :
        https://www.bbc.com/tamil/india-46848482

        அப்ரஹாம் – ஒரு அதீத உணர்ச்சிப் பிழம்புக் கிறுக்கர்
        அந்த immigration officer ரொம்ப நல்லவர் – அப்படித்தானே

        நீங்கள் அவர் இடத்தில் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் ? –
        – உங்களுக்கு ஹிந்தி தெரியவில்லை – இதனால் உங்களை immigration officer அவமானபடுத்தி இருந்தால்?

        நான் சிந்திப்பது மட்டுமே சரி என்ற மனோபாவம் உங்களுக்கு உள்ளது – முடிந்தால் உங்கள் துணையிடம் இந்த comment -ஐ காட்டி இது சரியா என்று கேட்கவும் ;)

        <<பின்னர் விரிவாக பதில் கொடுக்கிறேன், சரியா?
        ஹிந்தி கற்காததால் நாம் இழந்தது என்ன (அல்லது) கற்பதால் நமக்கு கிடைக்கும் நன்மை என்ன ? நீங்களே கூறியுள்ளது போல விரிவாக பதில் கொடுக்கவும்.


      • ஐயா, நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். (அதாவது நான் சொல்வதுதான் சரியென்று நான் நினைப்பது)

        பதில்கள்:

        பிபிஸி என்பது பொதுவாகவே ஒரு புளுகுணி மாங்கொட்டை அமைப்பு; அதன் மேட்டிமைத்தனத்தை எட்டுமளவுக்கு எனக்கு மட்டும்தான் மேட்டிமைத்தனம் இருக்கிறது.

        கிறுக்கருக்கு எதிர்ப்பதம் நல்லவர் அல்ல – மாறாக அது கிறுக்கர் என்றே இருக்கலாம். ஆனால் அப்ரஹாம் அந்த சிப்பந்தியை முட்டாள் என அழைக்கிறார்.

        எவ்வளவோ கவைக்குதவாத விஷயங்களை வீம்பினால் ஊதிஊதிப் பெருக்கும், பின் அல்லாடும் மனிதர்களைப் பார்த்திருக்கிறேன்.

        ​அப்ரஹாம் இளைஞர் – ஆக இன்னமும் சுமார் 20 வருடங்கள் இப்படியே இயங்கினால் உலகப் புகழ்பெற்ற போராளியாகிவிடலாம்.

        இம்மிக்ரேஷன் டெஸ்க் என்பது ஒரு அலுப்புதரும் வேலை. இந்த ப்ளாக் நடத்துவதைப் போலவேதான். ஆகவே, அந்த சிப்பந்தியிடம் சென்று இன்முகத்துடன் ஹல்லோ எனச் சொல்லி ஆங்கிலத்திலேயே பேசியிருக்கலாம். ஆனால் அப்ரஹாம் கடமைகளுக்கு(அடிப்படை பண்புகளுக்கு) முன்பு உரிமையை வைத்து உர் உர்ரென்று விவாதம் செய்யும் வகையினர் போல; கண்டமேனிக்கும் கண்டவர்களுக்கும் அதை காப்பி /டேக் செய்திருக்கிறார் என்பது புரிகிறது. இசுடாலிருக்கெல்லாம்!!


        ஓர்ரே உணர்ச்சிவசம். இந்த சமூகவலைத்தள எழவுகள் கொடுக்கும் இன்ப லாகிரிக்காகவே இன்னமும் இப்படி நிறைய சண்டை போடலாம். குய்யோ முறையோ எனப் புலம்பலாம்.​

        இதை அப்படியே ஊதி தமிழகத்தில் பாஜக வராது என்றெல்லாம் சொல்வது அவருடைய நகைச்சுவை உணர்ச்சியைக் காட்டுகிறது.

        அடுத்தமுறை இப்படி நடக்கும்போது (அவருடைய இஷ்டம், அவருக்கு வேண்டியது அதுதான்) மறக்காமல் ஐநா சபை அமெரிக்க டொனல்ட் ட்ரம்ப் கனிமொழி சீமான் உங்களுக்கு எல்லாம் டேக் பண்ணச் சொல்லவும். அனைவருக்கும் பொழுதுபோகும். அனுதினமும் பொங்கல்தான். வாழ்த்துகள்.

        நன்றி.

      • mekaviraj Says:

        பிபிஸி என்பது பொதுவாகவே ஒரு புளுகுணி மாங்கொட்டை அமைப்பு; – உண்மையில் இதை நீங்கள் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன் – முடிந்தால் இதை உங்கள் துணைக்கும் , உங்கள் குழந்தைகளுக்கும் காட்டி அவர்கள் அங்கே இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று கேளுங்கள் –
        நீங்கள் எப்படியும் என் கேள்விக்கு பதில் சொல்ல போவதில்லை.

        இசுடாலிருக்கெல்லாம்!! – உங்களுடைய திருட்டு திமுக எதிர்ப்பு எல்லாவற்றையும் ஒரு திரை போட்டு பார்க்க சொல்லுகிறது.


      • அன்பரே!

        அந்த மனிதர் ஒரு ஆண், விடலைப் பருவத்தைத் தாண்டி வளர்ந்த (ஒரு பேச்சுக்காகச் சொல்கிறேன் – ஸீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள்) ஒருவர், அவருடைய திடீரெக்ஸ் ஆவேசங்களுக்கும் – என் பிள்ளைகள், மனைவிக்கும் என்ன தொடர்பு? அந்த பிபிஸி எழுதியதை நீங்கள் அனுப்பினீர்களே என்று படித்தேன்; அந்தக் கருமாந்திரத்தை ஏன் என் குடும்பத்தினரும் படிக்கவேண்டும்? ஏன் இப்படித் தொடர்பேயில்லாத விஷயங்களைத் தொடர்புபடுத்திப் படுத்திஎடுக்கிறீர்கள்?

        என் குடும்பத்தினர் இப்படியெல்லாம் பிறரையும் முகாந்திரம் இல்லாமல் பொங்கி அசிங்கம் செய்து தன்னையும் அசிங்கம் செய்துகொள்ள மாட்டார்கள் என்பது என் நம்பிக்கை. பார்க்கலாம்.

        நானும் ஒருகாலத்தில் திராவிடலும்பன்களிடம் அடிஉதை செய்து அடியும் வாங்கியிருக்கிறேன், கொடுத்திருக்கிறேன் என்பதால், தமிழர்களில் பெரும்பாலும் திராவிடக் கட்சிகளின் ஆதரவாளர்கள் என்பதால் – தமிழர்கள் அனைவரையும் அயோக்கியர்கள் என்பேனா? அவர்கள் சோம்பேறிகள், இலவசத்துக்குப் பேயாக அலைபவர்கள் என மட்டுமே கருதி அவர்களை விட்டுவிடுவேன்.

        அலுப்பாக இருக்கிறது. உணர்ச்சிவசப்பட்டுப்பட்டே நாம் காயடிக்கப்பட்டுவிட்டோம்.

        அடுத்த அலை: தில்லியில் பான்பீடா கடைக்காரருடன் ஒரு தமிழர் தமிழில்தான் பேசுவேன் என வீரம்! திராவிடத் தொன்மங்களின் ஆதாரத்தின் பேரில் பீடா-பீடி கணவன்மனைவி எனப் புறநானூறு சொல்கிறதை அந்தப் பான்பீடா கடைக்காரர் ஏற்க மறுத்திருக்கிறார். மோதி ஹிந்துத்துவா ஒழிக!

        அடுத்தடுத்த அலை: டேய் ராமசாமி, இதனைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? உன் குடும்பத்திடம் இதனைக் காட்டி அவர்களை ஒப்புக்கொள்ள வை!!

        காலை வணக்கம்.

        நன்றி.

  6. K.Muthuramakrishnan Says:

    பி.ஏ கே ‘அட்ச்சுவுடமாட்டார்’ என்று நீங்களாகக் கற்பனை செய்துகொண்டீர்கள் போல. இல்லாவிட்டால் ‘நீங்களுமா?’ என்ற கேள்வி தோன்றியிருக்குமா?
    ‘யூ டூ ப்ரூடஸ்?’ போல புலம்ப வேண்டியிருந்திருக்காதே! எந்த ஆதாரத்தில் அவரைப்பற்றி ‘அப்படியெல்லாம் செய்ய மாட்டார்’ என்று எண்ணியிருந்தீரோ?

  7. P A Krishnan Says:

    அன்புள்ள நண்பருக்கு,
    நீங்கள் எழுதியிருப்பதை இன்றுதான் பார்த்தேன். நான் சொன்னது இந்தி மொழியே நூறு ஆண்டுகளுக்கு முன்னால்தான் பிறநதது என்ற பொருளில் அல்ல. நீங்கள் அப்படி நினைத்துக் கொண்டதைப் பார்க்கும்போது நான் இன்னும் தெளிவாக எழுதியிருக்கலாம் என்று தோன்றியது. நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பேசப்பட்ட உருது கலந்த இந்தியை இப்போது பேசப்படுவதில்லை எழுதப்பட்டுவதில்லை என்ற பொருளில் நான் சொன்னேன். அதுவும் எரிச்சலில் சொன்னதுதான். சப்பைக்கட்டு அல்ல. உண்மையாகவே அந்தப் பொருளில்தான் சொன்னேன்.

    என்னைப் பொறுத்த அளவில் நான் இந்தியை வெகுவாக மதிக்கிறவன். அது வளர்ந்திருக்கும் விதம் பிரமிக்கத் தக்கது. ஆனால் தென்னிந்தியர் பேசும் மொழிகளை இங்கு சிலர் கேலி செய்வதைப் பார்த்தால் உங்களுக்கே தனியாகப் பிரிந்து போய் விடலாமா என்று தோன்றும். இந்திய ஒற்றுமைக்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும் என்ற கூற்றுக்கு உங்கள் ஒப்புதல் இருக்கும் என்று நம்புகிறேன்.


  8. […] ஒன்றைக் குறித்த பதிவில் அவர் அட்ச்சிவுட்டதைப் பற்றி எழுதியிருந்தேன். அதற்கு அவர் […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s