பாஸ்டன், ஓட்டம், ஆஹா – சில குறிப்புகள்
October 23, 2016
எனக்கு ஓடுவது(ம்) பிடிக்கும்.
1983-4 வாக்கில், சுமார் ஒரேயொரு மாத ஓட்டப் பயிற்சிக்குப் பின் முழு மாரத்தான் ஓடித்தான் தீருவேன் என அப்படியொரு ஓட்டத்தை முட்டாள்தனமாக ஓடி – அதன் முடிவில் தள்ளாடி மாரடைத்துக் கண்மங்கி மயங்கி விழுந்த பைத்தியக்கார மஹாத்மியமும் நடந்திருக்கிறது. :-)
…ஆனாலும் விட்டுவிட்டு – ஒவ்வொரு வருடத்திலும் சில மாதங்களுக்காவது தொடர்ந்து ஓடுவது என்பதை ஒரு சங்கல்பமாக வைத்திருக்கிறேன்.
சென்ற வருடம், என் மகள் ஹிமாலய மலைத்தொடரில் ராலெம் பனியாறு (இது நம்ம க்லேஸியர்தாங்க!) பக்கம் செல்ல முஸ்தீபுகளும் உடற்பயிற்சியும் செய்து கொண்டிருந்தபோது அவளுடன் ஓட்டோதிஓட்டப் பயிற்சிகள் நடந்தன… அதற்கு முந்தைய வருடம், பள்ளிக்குழந்தைகளுடன் அனுதினமும் காலைவேளையில் பத்து கிமீ ஓட்டம். ஆஹா!
ஓடுவதும், ஓட ஆரம்பித்து சுமார் 5-6 கிலோமீட்டர் ஆனதும் உலகத்தில் அனைத்தும் மயங்கி – நான் + பாதை + இருதயத்தின் லப்தப் + தாளகதியில் ஒத்திசையும் மூச்சும் காலடிச் சப்தங்களும் ஏற்படுத்திக் கொடுக்கும் கூட்டணி மட்டுமே கோலோச்சுவதின் கிறக்கமே அலாதிதான்.
-0-0-0-0-0-0-0-
அழகான, அமைதியான புத்தகம் முக்கியமானது – ‘ஓடுவது என்பது பறப்பது’ – Running Is Flying: Aphorisms, Meditations, and Thoughts on a Running Life.
இப்புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை வெட்டியொட்டி – ஒரு ரீடர் போல என் பிள்ளைகளுக்குச் சில மாதங்கள் முன் நடந்த ஒரு பணிமனையில் கொடுத்தேன். :-) அதனை இப்பதிவுடன் இணைத்திருக்கிறேன்: reader3-runningisflying
அதேபோல, மா. அரங்கநாதன் அவர்கள் எழுதிய ‘சித்தி’ எனும் சிறுகதையும் நினைவுக்கு வருகிறது. இதுவும் ஒரு போதிசத்துவ ஒட்டக்காரனைப் பற்றிய கதைதான். இதனை நான் ஆங்கிலத்தில் முழிபெயர்த்து இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் தினசரியில் வெளிவந்ததாக நினைவு – என் மங்கல் வரலாற்றில், 1980களின் கடைசியில் இது நடந்திருக்கலாம் எனப் படுகிறது.
இப்போது யோசித்தால், அந்தக் கதை என்னை ஈர்த்தற்குக் காரணம், நானும் ஒரு ஓட்டக்காரன் என்பதால்தான் என நினைக்கிறேன். ஏனெனில் சில மாதங்கள்முன் இக்கதையை மறுவாசிப்பு செய்தபோது, ஒரே ஏமாற்றமாக இருந்தது. கதையில் கலையில்லை – வலிந்து செய்தியைச் சொல்லும் செயற்கைத்தனம் மட்டுமே மிக்கதாக இருந்தது. இன்னொரு காரணம் – ஒருகால் நான் வளர்ந்துவிட்டேன், ஆனால் கதைத்தளமும் நைந்துபோன கதைசொல்லும் தன்மையும் தேங்கிவிட்டன என்பதாலும் இருக்கலாம்.
எனக்கு மா. அரங்கநாதன் அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் உண்டுதான். ஆனாலும், இது காலத்தை வென்ற சிறுகதை அல்ல எனத்தான் நினைக்கிறேன்.. :-( எது எப்படியோ…
சரி. அமெரிக்காவில் உள்ள சிலபல நகரங்களைப் போலவே பாஸ்டனூரும் – ஓடுபவர்களையும், சைக்கிள் ஓட்டுபவர்களையும் கூடக் கருத்தில் கொண்டு சாலைகளை வடிவமைப்பு செய்திருக்கும் ஊர். ஒடுபவர்களுக்கும் நடப்பவர்களுக்கும் உரிய மரியாதையையும் அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் உருவாக்கி, அவற்றைத் தரமாகவே பேணியும் வரும் ஊர்.
போதாக்குறைக்கு பெத்த பேர் பெற்ற பல பல்கலைக்கழக வளாகங்கள், இளைஞர்கள் எனச் சதா இளமையும், அறிவுப் புலங்களும் எனப் பல்கிப்பெருகித் ததும்பி நுரையோடும் பிரதேசம். உடற்பயிற்சியில் ஈடுபடும் இளைஞர்களும், (என்னைப் போன்ற) கிழபோல்ட்களும். ஆனால், பெரும்பாலும் பாட்டுகேட்டுக்கொண்டேதான் ஒடும் ஜாதியினர்.
எனக்கு, பாட்டு கேட்டுக்கொண்டே ஓடுவது ஒத்துவராது – ஏனெனில், அப்படிச் செய்தால் – 1) இரண்டு விஷயங்களுக்கும் அவைகளுக்குக் கொடுக்கக்கூடிய மரியாதையைக் கொடுக்கமுடியாது – ஏனெனில் ஓட்டம் என்பது தியானம். இசைகேட்பது என்பது துய்ப்பின் இன்பம் 2) அது பாதுகாப்பானதல்ல – ப்பிங்க் ஃப்லாய்ட் குழுவின் ‘அணு இதயம் தாய்’ கேட்டுக்கொண்டேயோ அல்லது பீடோவனின் ஏழாம் ஸிம்ஃபனியின் அல்லெக்ரெட்டொவையும் கேட்டுக்கொண்டேயோ – மனம் குதூகலத்தில் ஈடுபடும்போது ட்ராஃபிக் மீது கவனம் செலுத்த முடியுமா? விபரீதம்தான்!
இன்னொரு விஷயம்: பெரும்பாலும் ஷூ அணியாமல் வெறும் பாதத்துடன் ஓடும் பழக்கம் உள்ள என்னைப் போன்றவர்களுக்கு, ஓடும் பாதைகளில் கண்ணாடிச் சில்லுகளும் ஆணிகளும் கூரான கற்களும் இல்லாமல் இருப்பது முக்கியம். இந்த விஷயத்திலும் ஓடும் பாதைகள் நன்றாகவே இருக்கின்றன, இந்த பாஸ்டனூரில்.
+ மேலும், நம் இந்தியா போலல்லாமல் கோமணத்தைக் கழற்றிக்கொண்டு கட்டிக்கொண்டு ஓடினாலும் ஒருவரும் கண்டுகொள்ளாத மனப்பான்மை இங்கே. ஆக, தொப்பலாக நனைந்த டீஷர்ட்டினைக் களைந்து தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு ஓடினாலும் ஒரு பிரச்சினையும் இல்லை.
-0-0-0-0-0-0-0-

அதிக ஓட்டமில்லை. சுமார் 13-14 கிமீ ஓடுவதற்குள் (பெரும்பாலும் ஸிமென்ட் தரையும் காப்பிள் ஸ்டோன் பாதையாகவும் இருப்பதால்) குதிகால் கொஞ்சம் வலிக்க ஆரம்பித்து விடுகிறது.
இந்த நாட்டில் ஓடுவதற்காக நல்லதொரு ஸ்னீக்கர்ஜோடி வாங்கவேண்டுமோ என்ன எழவோ! :-( இருந்தாலும் விட்டேனா பார்தான். :-)
ஓடும்போது எடுத்த அரைகுறைப்படம் – நீள ஆசாமி சீட்டாட்டம் ( =Longfellow Bridge ©எஸ்ரா)
சில நாட்களில் காலை வேளையில் கொஞ்சம் மழை பெய்கிறது. மழையில் தொப்பலாக நனைந்துகொண்டு, (சார்ல்ஸ்) ஆற்றோரம் ஓடுவதில் உள்ள இன்பம்ஸ் என்பதே தனிதான். அதே சமயம், பல சக கிறுக்கர்களும் மழையில் ஓடுவது ஒரு ஆச்சரியமான விஷயம். ஏனெனில், நம்மூரில், மழை ரெண்டு துளி விழுந்தாலும், சளி வந்துவிடும் எனப் பதறி ஒதுங்கிவிடுபவர்களே அதிகம் – மழையில் ஓடுவதையே விடுங்கள், பூந்தூரலில் நடக்கக்கூட மாட்டார்கள் நம்மவர்கள். :-(
… இன்று கொஞ்சம் குளிர் அதிகமாகவே இருக்கிறது, மழையும் அப்படியே; ஆகவே, நாளை காலையில் ஓடுகிறேன் பேர்வழியென்று கிளம்பப் போவதில்லை.
மாறாக, படிக்கவேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கையை ஒரு 3-4 அளவிலாவது குறைக்கலாம் என ஒரு நப்பாசை. பார்க்கலாம். :-)
செய்துமுடித்தாகவேண்டிய பலவேலைகளும் என்னைப் பார்த்து முழித்துக்கொண்டிருக்கின்றனவேறு…
- பாஸ்டனூர் சுற்றிப் புராணம் – சில குறிப்புகள் 21/10/2016
October 23, 2016 at 07:23
Enjoy while it lasts :) and be ready to enter Chennai airport at 3 am in the morning sweating like pi* and not to mention the attitude of officers.
October 23, 2016 at 07:33
wWhat? :-)
But sir, isn’t it all in the game?
October 23, 2016 at 10:56
I try a Good Morning with a smile, if I could. Poor guys must be having a tough time at home, hardly reciprocate. Yes, it is part of the package.
October 23, 2016 at 12:53
Thanks Kannan & Sridhar – for starting this early morn (for me at least!) meditative trail…
Y0 Jx! 100, 000 Au for each letter. :-)))
I also realize that – I am not any bloody god’s gift to the freakin’ mankind.
And whatever the fuckin’ thing that happens to me is not ‘about me’ and I would refuse to take things very personally.
I also know that – if something good happens to me, it is NOT necessarily because I deserve it. It is NOT ‘about me!’
In other words, I do NOT want to be selective in my responses that I feel are ‘about me!’ I want to be transactional. At least, that is the theory!
It is all in the game of life. It is, as Jx says, a package. It is not at all to be viewed in black and white. It has a zillion shades of gray.
sudo apt-get install -life-is-not-about-me
sudo apt-get upgrade
sudo stop being a pseudo
Amen.
Mea culpa.