படபடக்கும் பகீர் தொபயியல் சான்றுகள் மூன்று: இளையராஜா ஒரு மடையர்!

April 26, 2016

அய்யோ! நான் இளையராஜாவைச் சில்லுண்டித்தனமாக வம்புக்கிழுக்கும் – அவருடைய அடிப்பொடிகளைச் சீண்டும், ஒருமாதிரி ஏஆர்ரஹ்மானுடைய ரசிகக் குஞ்சாமணியல்லன். கோபப்படாதீர்கள்!  நானும் பலப்பல இளையராஜா பாடல்களை என்னையும் அறியாமல்(!) பாடிக்கொண்டு தாளம்போட்டுக்கினு தாடிவுட்டுக்கினு சென்றுகொண்டிருப்பவன்தான்.

ஆனால், அதே சமயத்தில், மகாமகோ டமிளணங்கின் பேரன் நான்! புத்துருக்கு குலையாத தொபயியல் துறையின் மாபெரும் வல்லுனன். ஆகவே பெருமிதமிக்கவன். அதனால்தான்,  இப்படி வரலாற்றுண்மைகளை அதிர்ச்சியளிக்கும் விதத்தில் அள்ளித் தெளிப்பேன், போட்டு உடைப்பேன். என்னை ஆதரிக்கவேண்டியது உங்கள் தலையாய கடமை.

மேலும் தொபயியல் கொள்கைகளுக்கு மாறாக – அவற்றுக்கும் அப்பாற்பட்டு, அடியேன், தரவு பூர்வமாகவும் சிந்திக்கக்கூடியவன். அதாவது – நான் ஒரு கர்வம் பிடித்த பூர்ஷ்வா தரவுமுதலாளியன்! ஆகவே.

இளையராஜா ஒரு மடையர்தான்! இதில் எனக்குச் சந்தேகமேயில்லை!

-0-0-0-0-0-0-0-

…நம் தமிழகத்தின் செல்ல மடையர்களைப் பற்றி ஆழமாகவும், செறிவுடனும், வீச்சுடனும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர், பேராசிரியர் தொ ‘தொ.ப’ பரமசிவம் அவர்கள். மகிழ்வரசு அவர்கள், தொப அவர்களுடைய எண்ணிறந்த சிஷ்யகோடிகளில் ஒருவரும்,  இணைய தொபவியல் இளஞ்சிங்கங்களில் முக்கியமானவரும் ஆவர்.

இவர்கள் இருவரும் இன்றேல், தொபவியல் எனும் அரும்பெரும் துறை என்பது சமகாலவரலாற்றின் உச்சங்களை எட்டியே இருக்கமுடியாது!

ஆகவே, இவர்கள் இருவருக்கும் இந்த மூன்றாம் ஆவணத்தைச் சமர்ப்பணம் செய்வதில், பெருமையடைபவனே நான்தான்! நன்ரி! நன்றி!! நண்றீ!!!

சரி. ஏற்கனவே இந்த மடைய விஷயத்தில் இரு பதிவுகளை – அதாவது, தமிழக வரலாற்றையே புரட்டிப் போடும் காத்திரமான ஆவணங்களை எழுதியிருக்கிறேன்.

என் அன்புள்ள நண்பரும், மதிப்புக்குரிய எழுத்தாளருமான ஜெயமோகன் அவர்களும் என் ஆராய்ச்சியைச் சிலாகித்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்கள்.

ஆக, என்னுடைய நாட்டாரியல் பிஹெச்டி-க்காக என் கறார் ஆராய்ச்சியைத் தொடரலாம் என்று நினைக்கிறேன் – அதற்கு ஜெயமோகன் அவர்கள்தாம், தயைகூர்ந்து என்னை நெறிப்படுத்தவேண்டும்; என்னுடைய ஃப்ரென்ட், ஃபிலாஸஃபர், கைடாக இருக்கவேண்டும்!

நான் பலவிதங்களில் கொடுத்துவைத்தவன், வேறென்ன சொல்ல. ஊழி வெள்ளம் எனைச் சூழ்ந்தாலும், என்னுடைய செல்ல தவளை நடையில் தத்தித் தத்தியே தப்பித்துவிடுவேன், நன்றி!

-0-0-0-0-0-0-0-0-0-

சரி. இளையராஜா ஒரு மடையர்தான்!  இதற்கு மூன்று ஆதாரங்களைச் சுட்டிக் காட்டுகிறேன்.

#1. இதனை, நான் தொபவியல் நோக்கில்தான் எழுதியிருக்கிறேன்! அதாவது மடையர் என்ற வகைமுறையில் ‘தமிழ் வீரத்தியாகி’ என ஒருவர் கருதப்படுவதற்கு அப்பாற்பட்டு, அது அப்படித்தான் என்பது மட்டுமல்லாமல், ‘ஒரு ஊக்கத்தையும் தியாகத்தையும் ஊட்டும்’ வகை மனிதர்களும் அடங்குவர். இளையராஜா அவர்களால், குழந்தைகள் மட்டுமில்லாமல், அரைக்கிழங்களான அடியேன் போன்றவர்களும் ஊக்கத்தைப் பெறுகிறார்கள் அல்லவா? அவருடைய இசையமைப்பில் பலப்பல மகோன்னதமான பாட்டுக்களும் வந்துள்ளதுதாமே!

#2. மேற்கண்ட ஆதாரத்தைத் தவிர எழுத்துபூர்வமான இணையவழி தரவு / ஆதாரம் / சான்று / பாடல்வரிகள்:

மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்

படம் : நிழல்கள் (1980) | இயக்குநர்: பாரதிராஜா | இசை : இளையராஜா | பாடல் வரி : வைரமுத்து | பாடியவர் : S.P. பாலசுப்பிரமணியம் | ரசித்தவர்: வெ. ராமசாமி |

ஆக, இளையராஜாவும், ஏன் – பாரதிராஜாவும், எஸ்பிபாலசுப்ரமணியமும், நடிகர் சந்திரசேகரும் – அனைவருமே, பழம்பெரும் பெருமைமிக்க மடையர் வம்சாவளியினர் எனத் தங்களைப் பிரகடனப் படுத்திக்கொண்டிருக்கின்றனர் என்பதுதான் உண்மை, நான் ஒன்றும் இட்டுக்கட்டிச் சொல்லவில்லை. நன்றி.

இப்பாடலை எழுதிய வைரமுத்து அவர்களும் அதே மடையர் வழித் தோன்றல்தான் என்பதை அவர் சங்கோஜத்தின் காரணமாகச் சொல்லாவிட்டாலும், நாம் அனைவரும் அதனை அவருச்குச் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில் என்னுடைய ஆசானான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களைப் போலவே, இவரும் பலப்பல அலக்கணப் பிழைகளை (இந்த  ‘மடை திறந்து’ பாடல் உட்பட = ‘கதவுகள் திறந்தது’) மகிழ்ச்சியுடன் செய்துகொண்டிருந்தாலும், நைந்துபோன சொல்லாடல்களை மட்டும் தொடர்ந்து உபயோகித்துக்கொண்டிருப்பவர் என்றாலும், ஆச்சரியம் தரும் விதத்தில், அவருடைய எழுத்துகளைவைத்துக்கொண்டு பிழைப்பை நடத்துபவர் அவர்.

#3. மூன்றாவது ஆதாரம்: சங்ககால புகைப்படச் சான்றுகள் – அனைத்தும் கடைச்சங்ககால யூட்யூப் விடியோ ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டவை!:

சாராம்சம்: அலைகடலெனப் பொங்கிவரும் ஆற்றுவெள்ளப் பெரும்புனலின் பின்புலத்தில் – மடையர் ஒருவர் வீரமாகக் கிளம்புகிறார்; சங்ககாலத் தமிழ்ப்பெண்டிர் அவரைக் கொண்டாடி  வழியனுப்புகின்றனர்.

எதிர்காலத்தில் மகாமடையராகப் பரிணாம வளர்ச்சியடையப் போகும், வெள்ளத்தினை வடிக்க தினவெடுத்துக்கொண்டு குதித்துச் செல்லும் அந்த வீரர், ஆனந்தத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்.  பெருமிதத்தில் வீறுகொண்டு எழுகிறார். இந்தக் குதூகல சங்ககால நிகழ்வை விளக்க, விவரிக்க, சித்திரிக்க எனக்கு ஒரு தட்டச்சு விசைப்பலகை போதாது! ஆகவே கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள்!

வெள்ளம் பொங்கி வருகிறது!

Screenshot from 2016-04-26 11:43:10

பொங்கிப் புனலோடும் வெள்ளத்தின் பின்புலத்தில், மங்கலகரமான மஞ்சள் புடவையுடுத்தி, கற்பிற் சிறந்த புற நானூற்றுத் தாய்மார்கள், கிட்டார் வாசித்துக்கொண்டே குலவையிடும் காட்சி!

Screenshot from 2016-04-26 11:50:39

தமிழர்தம் கிரீடமாம் டாப்-ஹேட்டுடன், கூத்தாடிக்கொண்டே தொலைதூர வெள்ளத்தை நோக்கும் பண்டமிழ் வீரன்!

Screenshot from 2016-04-26 11:59:33

உயிரைத் துச்சமாக மதித்து வெள்ளத்தோடு நேரடியாகப் பொருத குதித்துக்கொண்டேகும் மானமிகு திராவிடக் காளை!

Screenshot from 2016-04-26 12:01:34

ஊன்றிக் கவனிக்கவும், திமிறிக் குதிக்கும் காளையின் வலது கையில் பனங்குழாய் மடையைக் குத்தித் திறக்க ஒரு கடப்பாரை!

Screenshot from 2016-04-26 12:05:05

வீரனை வழியனுப்ப, தெறிக்கும் பறையுடன் தமிழிளைஞர்கள்! (கவனிக்கவும், தோற்டமாரங்களெல்லாம் தமிழகத்தில்தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன!)

Screenshot from 2016-04-26 12:08:09

இளங்காளையைச் சூழ்ந்து பிரியாவிடை கொடுக்கும் தமிழ்ப் பெண்டிர்!

Screenshot from 2016-04-26 12:12:45

பலூன்களாலும், பூமாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட, ஐம்பது குதிரைகளால் இழுக்கப்படும் (50 HP) செந்நிறத் தேரில், மடையை நோக்கித் தமிழணங்குகளால் அழைத்துச் செல்லப்படும் திராவிடக் காளை!

Screenshot from 2016-04-26 12:29:44

ஆரணங்குகளால் பூமாரிச் சொறியப்படும் வீரன்!

Screenshot from 2016-04-26 12:33:55

சொந்த பந்தங்களிடம், தாய்த்திரு நாட்டிடம் செம்பேசி மூலமாகப் பிரியாவிடை பெறும் வீரத் தமிழ் மறவன்!

Screenshot from 2016-04-26 12:36:34

வீரன் மறைந்தான்! மடைகள் திறந்துவிடப்பட்டன… புது வெள்ளம்!

… …. கீழே, மஞ்சளுடை தரித்த வீரக் கன்னிப் பெண்கள், இளம் மறவனின் சடலத்தைக் கொண்டு வருகிறார்கள்! (உற்றுப் பாருங்கள் – பிண நிலையிலும் அம்மறவன் எப்படிச் சிரித்துக்கொண்டிருக்கிறான் என்று! இவன்தாண்டா தமிழ் இளைஞன்!!)
Screenshot from 2016-04-26 12:43:47
முழு சோகக்கதையையும் பார்க்க, யூட்யூப் செல்லவும்! :-(

-0-0-0-0-0-0-0-

வெள்ளம் வடியும்! குள்ளம் உயரும்!

பனைகள் வளரும்! பனைவிலக்கியம் நிமிரும்!!

மடைகள் மடியும்! மடையர்கள் தொடர்வார்கள்!!

வாழ்க தொபயியல்! வளர்க டமிள்!!

நன்றி!

-0-0-0-0-0-

நான்  மிக்க மகிழ்ச்சியுடன், தொடர்ந்து செய்யும் பாவங்களுக்கு அளவேயில்லாமல் போய்விட்டது!

எனக்கு விமோசனம் உண்டா? :-(

8 Responses to “படபடக்கும் பகீர் தொபயியல் சான்றுகள் மூன்று: இளையராஜா ஒரு மடையர்!”

  1. Unknown's avatar Yayathi Says:

    “அவர் ஒரு ஹீரோன நான் ஒரு வில்லன்”
    “வில்லனா?””தச்சு வேலை செய்பவன் தச்சன், கணக்கு வேலை செய்பவன் கணக்கன், வில்லை எடுத்தவன் வில்லன்”
    “அப்படி பார்த்தா ராமயணத்தில வர ராமர் வில்லனா”
    “இங்க வா. அடுத்த நிகழ்ச்சிக்கு நீ வராத, எங்கயாவது சித்தாள் வேலைக்கு போய்டு. நான் எவ்வளவு சிரமப்பட்டு அஞ்சு முட்டாள்கள சேர்த்து வச்சு ஒரு செட்டப் பண்ணியிருக்கேன். நீ கொஞ்சம் தெரிஞ்சுட்டு வந்துட்டு செட்டப்பை கலைச்சுருவ போலயிருக்கே ”
    ‘ஹிட்லர் உமாநாத்’ திரைப்படத்தில் சுருளிராஜனின் வில்லுபாட்டு காட்சியில் இருந்து.
    :-)

  2. Aathma's avatar Aathma Says:

    Aiyoo..enough..I can’t stop laughing.. Rolling..appa..saamy..superb..

  3. Sudharsan Krishnan's avatar Sudharsan Krishnan Says:

    Aasane ummai padaitha aandavanuku nandri…

  4. Rajaram's avatar Rajaram Says:

    One coincidence. The person in this song is really a “Dravidian”!!! He is Vaagai Chandrasekar from DMK.

  5. Karthik's avatar Karthik Says:

    “madai thiranthu” song penned by Vaali. before write anything please check twice.


    • அய்யா கார்த்திக்:

      தங்கள் அறிவுரைக்கு நன்றி. திருத்திக் கொள்கிறேன்.

      எனக்குத் தமிழ் சினிமா பற்றிய ஞானம் மிக மிகக் குறைவு. கடந்த 25 வருடங்களில் மொத்தம் இரண்டேகால் சினிமா தான் பார்த்திருக்கிறேன் – இந்த கால் சினிமா அதில் ‘எழவாவது அறிவு.’ (https://othisaivu.wordpress.com/2013/03/01/post-168/)

      ஆகவே எனக்கு அறிமுகமில்லாத துறையைப் பற்றி எழுதினால் யாராவது ஞானியைத் தொடர்பு கொண்டுவிட்டுதான் எழுதுவேன் – அதாவது அப்படி எழுதியே ஆகவேண்டுமென்றால்…

      ஆக – ஒரு வலை தளத்தில் (=http://tamillyricspakeecreation.blogspot.in/2012/08/blog-post_7144.html) இதனைப் பார்த்துவிட்டு, பின்னர் ‘தமிழ் சினிமா’ வெறியர் ஒருவரிடம் கேட்டுவிட்டு சரி(!) பார்த்துவிட்டுத்தான் எழுதினேன்.

      முதலில் கேட்டபோது என்னை அவர் கவிழ்த்திவிட்டார் என்றாலும் என் தவறு தவறுதான்.

      இப்போது (இரவு 8 மணி, 27 ஏப்ரல்) அவரைப் பிடித்து ‘பில் பிலு’ என்று கேட்டால் சொல்கிறார்:

      1. ‘மடை திறந்து’ பாடலை முதலில் எழுதியது மணிவண்ணன். அதன் கருவை அளித்ததும் மணிவண்ணன்.

      2. மணிவண்ணன் அவர்களால் எழுதப்பட்ட பாடலை, சந்தம் சரியாக வருவதற்காக, மேன்மைப் படுத்தியவர் வாலி.

      இதற்காவது ஏதாவது தரவு உண்டா எனக் கேட்டதற்கு, கோபித்துகொண்டு விட்டார்; இவர் ஃபிலிம் ந்யூஸ் ஆனந்தன் அவர்களின் நண்பர்; ஒரு காலத்தில் ‘பேசும் படம்’ எனும் சஞ்சிகையில் வேலை செய்தவர்.

      எப்படியும் நான் – வாலி அவர்களுக்கும் வைரமுத்து அவர்களுக்கும் (திரைப்பாடல்கள் பொறுத்தவரையில்) வித்தியாசம் பார்க்கமாட்டேன்.

      மீண்டும் நன்றி.


  6. Your write up is great…😀😀😀


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *