யுவகிருஷ்ணா ஞானமரபு: ஜெயமோகனின் அங்கலாய்ப்பு, சீதாப்பழத்தின் வரலாறு – சில குறிப்புகள்.

December 3, 2017

நண்பர் ஒருவர் எழுதுகிறார்:

-0-0-0-0-0-0-

2017-12-02 15:34 GMT+05:30 <பெயர் அகற்றப்பட்டது>:

//இவ்வாறு தன்னுடைய மொத்த வரலாற்றையே ஒரு பெருந்தோல்வியாக உருவகித்துக் கொண்டிருக்கும் சமூகம் வேறெங்காவது இருக்குமா என்று தெரியவில்லை. அந்தத் தோல்விகளுக்கெல்லாம் தன்னுடைய மூதாதையரின் மண்ணாந்தைத்தனமும், மாற்றாரின் அளவிடமுடியாத மதியூகித்தனமும்தான் காரணம் என்று நம்பி அதையே அறிவார்ந்த விவாதமாக பேசிக்கொண்டிருக்கும் நம்மைப்போன்ற எவராவது வேறெங்காவது இருப்பார்களா? ஐயம்தான்.// ஜெ.யின் இந்தக் கட்டுரையை பத்ரியின் முகநூலில் நேற்று பகிர்ந்திருந்தார். படித்தேன்.

இன்று காலை முகநூலைத் திறந்தால் கீழே ‘யுவகிருஷ்ணா’ செய்யப்பட்டுள்ள  இந்த பகீர்த் தகவல்:

//16 வகையான நோய்களுக்கு அருமருந்து..

இன்றும் பலரும் தவிக்கும் இரத்த அழுத்தத்தை குறைக்கும் அல்லது சீராக வைக்கும் சர்வ ரோக நிவாரணி

மிகவும் முக்கியமானது புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்ட பழம் ..

கிராமங்களில் வீடுதோறும் என் பாட்டனும் பூட்டனும் விதைத்த அருமருந்து..

சென்ற தலைமுறையால் புறக்கணிக்கப்பட்ட பழம்..

தமிழ் மண்ணில் விளையக்கூடிய பராம்பரியமிக்க பழம்..

வெளிநாட்டுகாரன் இந்த பழத்தின் அருமை உணர்ந்து எப்போதே பயிரிட ஆரம்பித்து ஒவ்வொரு கடையிலும் விற்க ஆரம்பித்துவிட்டான்..
வெளிநாடுகளில் இதன் விலை என்ன தெரியுமா?

பக்கத்து மாநிலம் கேரளாவில் ஒவ்வொரு வீட்டிலும் இந்த மரம் இருக்க வேண்டும் என்று அரசு விழிப்புணர்வு செய்வது தான் நமக்கு தெரியுமா..?

இந்த பழத்தின் வெளி உருவம் பார்த்து குறைத்து மதிப்பிட்டு ஒதுக்கியதின் விளைவு இன்று வெளிநாடுகளில் வெளி மாநிலங்களில் அமோக விற்பனை
தாய் மண்ணில் இந்த பழத்திற்கு அவமரியாதை மட்டும் தான்..

பலரால் விரும்ப படாத புறகணிக்கப்பட்ட பலரால் முகம் சுழிக்கப்பட்ட பழம் இது..

ஆனால் காலம் இன்று அத்தனை பழ கடையிலும் இந்த பழம் இல்லாமல் இல்லை..
அன்று சும்மா கொடுத்தால் கூட வாங்கி சாப்பிடாத சாப்பிட விழிப்புணர்வு இல்லாத பழம் இன்று அத்தணை கடைகளிலும் அதிக காசுக்கு விற்கப்படுகிறது என்றால் மக்களிடையே அடுத்த தலைமுறையிடையே விழிப்புணர்வு வந்துள்ளது..

மருத்துவர்கள் இந்த பழத்தின் அருமை உணர்ந்து இந்த பழத்தை சாப்பிட சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்..

இந்த பழங்கள் விவசாயிகளால் பயிரிட பட்டு விற்பனைக்கு வருகிறது..

தமிழகத்தில் கிராமங்களில் வீடுதோறும் மிண்டு்ம் வளர்க்கப்பட்டு வருகிறது..
நகரங்களில் இல்லை நரகங்களில் தான் இன்னும் என்ன விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பழத்தின் அருமை உணரவில்லை..

காஷ்மீர் ஆப்பிள் சாப்பிட்டு வளர்ந்த நாமல்லவா ?
எங்கேயோ வளர்ந்து வரும் ஆப்பிள் வாங்கி சாப்பிட்டால் நமக்கு போலி கௌரம் அல்லவா?

ஆப்பிளில் உள்ள மருத்துவ குணங்களை விட இந்த பழத்திற்கு அதிக மருத்துவ குணம் உண்டு..

ஆனால் இந்த பழம் வாங்கினால் கௌரவ குறைச்சல் அல்லவா..
ஆப்பிள் போன்ற அழகான பழம் தான் நமக்கு தேவை..

பராம்பரியம் மிக்க மருத்துவத்தன்மை நிறைந்த இது போன்ற அத்துனை பழங்களையும் திட்டமிடப்பட்டு மறைக்கப்பட்டு அத்தனை நோய்களையும் நம் மண்ணில் பரப்பிய அன்னிய நாட்டின் சூழ்ச்சி அறியா நோய்களில் சிக்கினோம்..

இதன் விளைவு இன்று பிறந்த குழந்தைக்கு இரத்த அழுத்தம் 
20 வயதில் இரத்த அழுத்தம் 
40 வயதில் இரத்த அழுத்தம் 
60 வயதில் இரத்த அழுத்தம் .. மாத்திரை இல்லாத மனிதர்களே இல்லாத கேவலமான சூழல் நம் தேசத்தில் உருவாக்கிவிட்டார்கள்..

இரத்த அழுத்தத்தை எளிதிலில் கட்டுபடுத்துவதால் அனைத்து தரப்பினரும் வாங்கி சாப்பிட சிறந்த மருந்துவ பழம்..

போலி கௌரவம் பார்க்காமல் இந்த பழத்தை வாங்கி சாப்பிடுங்கள் அனைவரையும் சாப்பிட சொல்லுங்கள் தங்கள் வீடுகளிலேயே இந்த மரத்தை உருவாக்குங்கள்..
விருத்தினர் விட்டுக்கு சென்றால் ஆப்பிள் தேவையி்ல்லை ஆரஞ்சு தேவையில்லை போலி கௌரவம் தேவையில்லை இந்த பழத்தை வாங்கி சென்று கொடுங்கள்..
இந்தியாவில் அத்தனை வீடுகளிலும் எவரோ ஒருவர் இரத்த அழுத்தத்தில் தான் வாழ்கிறார் என்று உலக சுகாதார அமைப்பு ஆய்வு அறிக்கை சொல்கிறது

இவ்வுளவு பெரிய பதிவு எதற்கு அப்படி என்ன ஞானப்பழமா என்று கேட்காதிர்கள்..

சத்தியமா இல்லைங்கோ

சாதாரண மருத்துவ பழம் தான்கோ அதன் பெயர் சீத்தா பழம் கிராமங்களில் ஆத்தாபழம் என்பார்கள்..

ஏழை சொல் மேடை ஏறாது என்பது உண்மை ஆனால் ஏழை சொல்லில் தான் நியாயம் இருக்கும்..
அதுபாேல 
இந்த சீத்தாபழம் கடைக்கு வர ஒரு நூறாண்டு தேவைப்பட்டுள்ளது..
ஆனால் உண்மையான மருத்துவ குணம் கொண்டது..

லேட்ட வந்தாலும் லேட்டஸ்டா தான் வந்திருக்கிறது..சீத்தாபழம்.//

இந்த இல்லுமினாட்டி பூச்சாண்டிகள் எங்குபோய் முடியும்? இசை முதல் பழம் வரை சகல விஷயங்களிலும் இவ்வளவு கேனையர்களாக ஏமாந்துள்ள நம் முன்னோர்கள் நிஜமாகவே முட்டாள்களா?

😁😁

-0-0-0-0-0-0-0-

நண்பரே. இது உண்மையாகவே பகீர்த்தகவல்தான். அதுவும் வரிக்குப் பத்துத் தவறுகள், உளறல்கள்! இதைத் தவிர ரத்த அழுத்தம் என்றாலே பகீர் என்கிறார்கள் பாவிகள்! அடேய் முட்டாட்களா! சவத்துக்குத் தாண்டா ரத்த அழுத்தமே இருக்காது!

ஜெயமோகன் போன்றவர்கள் பாவம், எவ்வளவுதான் அவலங்களைப் பற்றி எழுதினாலும் – அதுவும், தமிழர்களின் குறைபாடுகளை நிவர்த்திக்கப் பரிந்துரைகளை அளித்தாலும், பட்டவர்த்தனமாக எழுதினாலும் – நாமாவது, திருந்துவதாவது?

சகட்டுமேனிக்கு அட்ச்சுவுட்டே அறிவாளிகளாவது நம் தமிழர்களுக்கு மிகவும் லேசு – அதுவும் ஏதாவது வடநாட்டு ஆரியம் வந்து — விரலைச் சூப்பிக்கொண்டே தெருவோரத்தில் மூத்திரம் அடித்துக்கொண்டு ஆனந்தமாக இருந்த திராவிடனை, அவனுடைய மூத்திரத்திலேயே தள்ளிவிட்டது எனப் புலம்பிப் பெருமைப் பட்டுக்கொள்ளும் யுவகிருஷ்ணாத்தனங்களுக்குக் கதிமோட்சமேயில்லை. சிறுமையில் பெருமை கொள்ளும் அரைவேக்காட்டு அறிவிலிகள், வேறென்ன சொல்ல.

ஆனாலும் பயமாக இருக்கிறது – தமிழன் கண்டுபிடித்தது அதுஇது பாட்டன் பூட்டன் சாவியன் என இந்தச் சாவுகெராக்கிகள் பினாத்தும் விஷயங்களில் சுமார் 95%த்துக்கு தமிழன் சொந்தம் கொண்டாடவே முடியாது என உண்மையாகவே இந்த ஜந்துக்கள் அறிந்தால் – பின் வெட்கமானம் மேலிட்டு திராவிடர்கள் அனைவரும் உடனடியாக நாக்கைப் பிடுங்கிக்கொண்டு செத்துவிட்டால் – பின்னர் யார் நம்மை ஆள்வார்கள்?

-0-0-0-0-0-0-

இனி, சீதாப்பழம் குறித்த சில அறிவியல்-வரலாற்றுக் குறிப்புகள்: (என்னுடைய பழைய நாளேட்டுக் குறிப்புகளிலிருந்து)

1. சர்வ நிச்சயமாக – சீதாப்பழம் தமிழகத்துப் பழம்பாரம்பரியப் பழம் அல்ல.

2. மரபணு மாற்றங்கள்/நகர்தல்கள் படி பார்த்தால் – சீதாப்பழம் (Annona squamosa) வகையறாக்களின் குடும்பம், பெரு, ஈக்வடர் (தென்/மத்திய அமெரிக்கா) பகுதியில் உருவாகி வளர்ந்தவொன்று. பின் மெஹிகோ வந்து – கரீபியத் தீவுகள் சென்று, தெற்காஃப்ரிகாவின் நன்னம்பிக்கை முனை வழியாக பாரதத்தை அடைந்தது. பின் இந்தோனேஷியாவுக்குச் சென்றது. இந்தியாவைப் பொறுத்தவரை – அது குஜராத் பகுதியிலிருந்து மத்திய இந்தியா (கிபி500 வாக்கில்) சென்று, அங்கிருந்து ஒருவழியாகத் தமிழகப்பகுதிகளை சுமார் கிபி1600 வாக்கில் வந்தடைந்தது. லெமூரியாவுக்கும் இதற்கும் (ஏன், எதற்குமே!) தொடர்பில்லை. மன்னிக்கவும்.

3. நம்மூரில் ஷாரிஃபா எனவும் சீதாப்பழம் எனவும் அழைக்கப்படும் இதன் இந்திய ரூபங்கள் பல: ராம்பழம் (Annona reticulata), ஹனுமான்பழம்/லக்ஷ்மண்பழம் (Annona cherimola), மாம்பழம் (Annona muricata); இந்த மாம்பழத்துக்கும் நம்மூர் மாங்கனிக்கும் (Mangifera indica) ஒரு தொடர்புமில்லை. (நான் இந்த சீதாப்பழம் வகைகளில் ராம்பழம் தவிர பிறவற்றைச் சாப்பிட்டிருக்கிறேன்)

4. எழுத்துபூர்வமாக, ஸம்ஸ்க்ருதத்தில் ‘அத்ரிப்ரியா’ என அழைக்கப்படும் இதன் குறிப்புகள் சுமார் 1200 வருடங்களுக்கு முன்னால் பதிக்கப்பட்டன.  இந்தியாவில் இருந்த சீதாப்பழத்தைப் பற்றிய வெள்ளைக்காரர்களின் குறிப்புகள் கிபி1672ல் வின்ஸென்ஸொ மரியாவால் (Vincenzo Maria di Santa Caterina da Siena) பதிக்கப்பட்டன. ‘தமிழ் முதற்சங்க இலக்கியத்தில் சீரிய சீதாப்பழம்‘ எனவொரு பிஹெச்டி ஆய்வு இனிமேல்தான் பண்ணப்படவேண்டும். நன்றி.

5. சிற்பம் இன்னபிற பூர்வமாக, கிபி7ஆவது நூற்றாண்டு வாக்கில் உருவாக்கப்பட்ட அஜந்தா புடைப்புச் சிற்பங்களில் இது இருக்கிறது. (இதனை கடம்பமரப்பூ அல்லது மெருகேற்றப்பட்ட பலாப்பழவடிவம் என்றெல்லாம் சொல்பவர்களும் இருக்கிறார்கள்; ஆனால், நான் பார்த்தமட்டில் இது சீதாப்பழம் போலத்தான் இருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை (எனக்குத் தெரிந்த வரையில்) எந்தவொரு சிற்பக்கூடத்திலுமோ கோவிலிலோ சீதாப்பழம் சித்திரிக்கப்படவில்லை; ஒருகால், இஸ்லாமிய அழித்தொழிப்புகளின்போது இதுவும் போயிருக்கலாம் – ஹம்பெ நகரின் விஜய நகரச் சிற்பங்கள்போல)

6. எல்லா பழங்களைப் போலவே – சீதாப்பழமும் உடலுக்கு ஆரோக்கியமானதுதான்; ஆனால் மிகை/குறை ரத்த அழுத்தம், புற்று நோய் போன்றவற்றிற்கெல்லாம் இது ஒரு 100000000 மடங்கு அதிக வலுவுள்ள மருந்து என்பதெல்லாம், ஸாரி, கொஞ்சம் ஓவர். இம்மாதிரி உளறல்களுக்கெல்லாம் மருத்துவ ரீதியான சான்றுகீன்று எனவொன்றும் இதுவரை இல்லை. நன்றி.

யுவகிருஷ்ணா ஞான மரபும் அதன் ஆழமும் வீச்சமும் வரவரத் தாங்கவே முடியவில்லை. யுவகிருஷ்ணா அவர்கள் இத்தகைய பராக்கிரமம் மிக்கவரா? பயமாக இருக்கிறது.

…இதில் வேறு என் வயிற்றெறிச்சலைக் கொட்டிக்கொள்ள – இதைப் படித்தாயா, அதைப் படித்தாயா என மின்னஞ்சலைத் தட்டிவிட்டுவிட்டு – நான் துடிப்பதைப் பார்ப்பதற்காகவென ஒரு வெட்டி கும்பல். சலிப்பாக இருக்கிறது.

எது எப்படியோ ‘என் பாட்டன் பூட்டன் சாவியன் லெமூரியன் எனக்குச் சொல்லிக்கொடுத்த லிஸ்ப் மொழி, தமிழனின் ஞானப்பழம்பெரும் பாரம்பரியத்தின் ஒரு பெருமை மிக்க அங்கம்‘ எனவொரு பெருமைமிக்க எருமை எழுதி அதையும் நான் படிக்க நேராதிருப்பதாக!

ஆமென்.

8 Responses to “யுவகிருஷ்ணா ஞானமரபு: ஜெயமோகனின் அங்கலாய்ப்பு, சீதாப்பழத்தின் வரலாறு – சில குறிப்புகள்.”

  1. rjgpal20's avatar rjgpal20 Says:

    அய்யா,

    உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஏன் சிற்பங்களில் சீதாபழம் இல்லை என்ற கேள்விக்கு விடை எளிது. ஆரிய சதியினால்தான் அது நிகழ்ந்தது என்பது தெளிபு. இன்று தமிழர் பெருமை என பீடுடை கோயில்கள் பலவும் ஆரிய சதியினால் மண்மூடி நெடுங்காலம் கிடந்து பின் ஐரோப்பியர் வருகையால் அகழ்ந்தெடுக்கப்பட்ட வரலாறு உங்களுக்கு தெரியாதா?
    அவ்வாறு நெடுங்காலம் சிற்பங்கள் மண்மூடி கிடக்கையில் பழங்கள் கெட்டுப்போயிருக்காதா? அகழ்கையில் உதிர்ந்திருக்காதா ? மண்ணின் நுண்ணுயிர்களால் அரிக்கப்பட்டிராதா?

    இன்று அதன் சான்றை சிற்பங்களில் தேடும் நீங்கள் சங்க இலக்கியங்களில் தேடினால் கிடைக்குமே அய்யா … சீத்தலை சாத்தனார் எபது ஒரு மரூஉ பெயரென தெரியுமா ? சீதாப்பழ சாத்தனார் என்பது ஆரியரால் மரூஉ க்கப்பட்டு சீத்தலை சாத்தனார் ஆனது தெரியாதா? அவர் வீட்டு தோட்டத்தில் விளைந்த ஒவ்வொரு சீதாபழத்துக்கும் ஒவ்வொரு பாடல் பாடிய வரலாறு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

    அன்புடன்,
    ராஜகோபாலன் ஜா, சென்னை


    • ​அய்யா! உங்கள் காலில் சாஷ்டாங்கமாக விழுந்துவிட்டேன் என நினைத்துக்கொள்ளவும்!

      நீங்கள் இவ்வளவு பெரிய்ய்ய்ய்ய வரலாற்றாளர் என்பதை நான் இதுவரை அறியவேயில்லை. மன்னிக்கவும். ​

      ​நம்மில் ஒருவருக்கும் (ஏன் உங்களுக்குமேகூட)​ இதுவரை உங்கள் பராக்கிரமம் தெரியாமல் இருந்தது, தமிழனின் சீதாப்பழவினைப் பயன் தானோ?

      ஆனால், திரு கருணாநிதி அவர்களை எப்போதோ சீக்காளிச் சாத்தானார் எனப் புகழ்ந்தது மட்டும் மங்கலாக நினைவில்…​

  2. ஆனந்தம்'s avatar ஆனந்தம் Says:

    என்னது? சீதாப் பழம் தமிழ்ப்பழம் இல்லியா?
    இது லத்தீன் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டதால் சேகுவேரா கண்டிப்பாக இதை உண்டிருப்பார். அதனால் இது ஏகாதிபத்திய எதிர்ப்பின் சின்னம். சீதா என்ற ஆரியப்பெயரை மாற்றி இதைப் புரட்சிப்பழம் என்று பெயர் சூட்டி உண்போம். தவிர, நாட்டு சீதாப்பழங்களை உருவாக்கவும் சூர்ப்பனகை அல்லது தாடகைப்பழம் என்று ஏதாவது புதிதாகக் கண்டுபிடிக்கவும் தடையாக இருக்கும் மத்திய அரசை எதிர்த்து மெரினாவில் கூடிப் போராட்டம் நடத்துவோம்.
    . .

  3. S bmniac's avatar S bmniac Says:

    What can you really do about a people who know only Tamil and Tamilnadu and wallow in the assumed greatness of everything Tamil? You have to put up with such geniuses as Yuva Krishna as the Tamils surely consider them to be.

  4. வெங்கடேசன்'s avatar வெங்கடேசன் Says:

    இந்த பழத்தை பற்றி கேன்சரின் பிடியிலிருந்து மீண்ட என்மகனை பார்க்கவரும்போது பலர் கூறுவதுண்டு. நான் அவர்களுக்கு ஒரு சின்ன வகுப்பே எடுப்பதுண்டு.இதெல்லாம் விட கொடுமை இதை சாப்பிட்டால் கீமோவே வேண்டாம் என்றும் சிலர் வாதிட


  5. அர்த்தமற்ற பழம்பெருமைகளுக்கும் உளறல் புதுமைப் புளகாங்கிதங்களுக்கும் இடையே மாட்டிக்கொண்டு நாம் முழிப்பது இருக்கிறதே! :-(

    இந்த முழிப்பில் – உண்மையான பழம்பெருமைகளும் காத்திரமான புதுமைகளும் படும் பாட்டை நினைத்தால்தான் கொடுமை.

    என்ன செய்யலாம், வேங்கடேசு! :-(


  6. […] யுவகிருஷ்ணா ஞானமரபு: ஜெயமோகனின் அங்க…03/12/2017 […]


Leave a Reply to வெங்கடேசன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *