பெரியார்பிறந்தமண்ணர்களும் மண்ணாங்கட்டிகளும்

March 19, 2015

:-( இந்த சோகக்கதையை எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை.

‘திராவிட இயக்க அறிவுஜீவி’ (இந்தப் பதம் ஒரு நகைக்கத்தக்க ஆக்ஸிமொரான் – ஏனெனில், திராவிடக் கருத்தாக்கத்துக்கும் அறிவுக்கும் ஒரு சுக்குத் தொடர்புமில்லை – சரியாகச் சொல்லவேண்டுமானால், இவை இரண்டும் எதிரெதிர் துருவங்கள்; ஆனால் மேற்படி முயக்கம், பல உதிரிகளை ஜீவிக்க வைப்பது உண்மை! ஆகவே இவரை ஒரு வெறும் தொழில்முறை திராவிடஜீவி என்றழைப்பதே சரி) எனச் சர்வசாதாரணமாகத் தன்னை விவரித்துக்கொள்ளும் ஒருவருடன் பொறுமையாக உரையாடவேண்டிய நிர்பந்தம், இரண்டு நாட்கள் முன்னர்,  மாலையில் புதுச்சேரி  கணேஷ்ஸ்ரீ உணவகத்தில் ஏற்பட்டது, அந்த திராவிடஜீவியின் பூர்வஜென்மப் பாவமாகத் தான் இருக்கும்.
Map of the Ancient Philistines Territory

இதுதான் ஒரிஜினல் திராவிட நாடு. இந்த திராவிட ஃபிலிஸ்டைன்களைப் பற்றி மேலே தெரியவேண்டுமானால் என்னுடைய செல்லமான அர்பன் டிக்ஷ்னரிக்குச் செல்லவும். ஸ்க்ரோல் செய்து அந்த முழு கட்டுரையையும், பலவித பொழிப்புரைகளையும் படிக்கவும். அப்போதுதான் உங்களுக்கு இந்த திராவிட ஃபிலிஸ்டைன்களைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்துகொள்ள முடியும்! நன்றி.

பாவம், அவருக்கு என்னைப் பலவருடங்களாகத் தெரியும். முன்னாட்களில் புத்திசாலியாகவே (அதிகமாகவெல்லாம் அல்ல – ஆனால், கொஞ்சம் பொறுத்துக்கொள்ளும் படியாக) இருந்தவர்தான் – பரவலான வாசிப்பும் + செறிவூட்டும் வாழ்க்கை அனுபவங்களும் பெரும்பாலும் இல்லாமல் இருந்தாலும்கூட  –   எனத்தான் நினைவு. திராவிடக் குண்டுச் சட்டியில், கழகக் கழுதைகளை ட்ரீயோட்ரீயோ என ஓட்டுவது என்பது மிகமிக லேசு எனும் உண்மைக்கு அப்பாற்பட்டு  – வயதாகவயதாக நிலைப்பாடுகளில் முதிர்ச்சியின்மை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது – மறுபக்கம், மறுபரிசீலனை செய்யும் ஆற்றலும் குறைந்துகொண்டே வருகிறது, என்ன செய்ய. (அவருக்கு மட்டுமல்ல, எனக்கும்தான்! :-( ஒப்புக் கொள்கிறேன்!)

நான் எவ்வளவு கிண்டல் செய்தாலும், அவர் ஒரு தன் முயற்சியில் மனம் தளராத விக்ரமர் தான்! திரும்பத்திரும்ப  (நமக்கெல்லாம் முன்னறிமுகம் ஆகியிருக்கும் மகாமகோ பூவண்ணனார் போல) சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பார் – அவருக்கும் பொழுது போகவேண்டாமா? ஆனால் – எவ்வளவுதான் ஆரியர்களை ஏசினாலும் அவர் அடிப்படையில் ஒரு வெகுளி. வெறும் வாய்ப்பேச்சு வீரமும் வெறுப்பும்தான் – ஆனால் நடைமுறையில் ஒரு பூச்சிக்கும் தீங்கு நினைக்காதவர். இவர்போய் பாவம், எனக்கு அறிமுகமாகித் தொலைத்தது அவர் விதிதான், வேறென்ன சொல்ல.

(நிற்க, இந்த கணேஷ்ஸ்ரீ,  புதுச்சேரி கவர்னர் குடில் பக்கத்தில், மிக அருகிலுள்ள சந்து ஒன்றில் இருக்கிறது – ரொமைய்ன் ரோலான் நூலகத்தின் பின்புறம்; மிக அருமையான பராட்டாக்களும், ஸமோஸாக்களும் – ஆனால் இனிப்ப்ப்ப்ப்ப்பான தேநீரும் – கிடைக்கும் ஒரு ஒடிஷாகார பொந்து. விலை மகாமலிவு. சுவை அருமை. மேலும் இந்தப் பதிவில் இருக்கும் ஒரேயொரு உருப்படியான விஷயம் இதுமட்டும்தான் – மிச்சமெல்லாம் அற்ப திராவிடம் பற்றிய அறிவுஜீவிய உரையாடல் குறித்த என் கருத்துகள் மட்டுமே; ஆகவே, நீங்கள் மேலே படிக்கவேண்டாம்!)
-0-0-0-0-0-0-

… நண்பருக்குத் துக்கம் மாளவில்லை; அதன் காரணங்கள் பல (எதுவுமே புதிதில்லை என்றாலும்!) – அதில் எனக்கு நினைவில் உள்ளவை சிலவற்றின் சாராம்சம்:

பார்ப்பன-ஹிந்துத்துவ வெறியர்களின் சதித் திட்டங்களுக்குத் தமிழகம் பலியாகி விட்டது. தமிழகத்தில் ஜாதிப் பிரச்சினைகள் தலையெடுத்ததற்கு பாஜக தான் காரணம் – முக்கியமாக சங்க இயக்கங்கள்; மோதி, அமித்ஷா போன்றோர் தான் ஜாதி-ஹிந்துத்துவ வன்முறைகளின் சூத்திரதாரிகள். வந்தேறி ஆரியர்கள் இந்தியா முழுவதையும் ஆக்கிரமித்து விட்டார்கள் – திராவிடர்களின் ரத்தத்தை உறிஞ்சிக் கொழுக்கிறார்கள். திராவிட மக்கள், பகுத்தறிவுவாதிகளாக இருந்தாலும் வெகுளிகள். வடவர்களை நம்பி விட்டார்கள்.  ஆகவே பார்ப்பனரல்லாதவர்கள் பார்ப்பனர்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒடுக்கப்படுகிறார்கள். எப்படிப்பட்ட திராவிடத்தை இப்படியாக்கி விட்டார்கள் ஹிந்துத்துவர்கள் – எங்கு பார்த்தாலும் ஜாதிப் பிரச்சினை! பாப்பானையும் பாம்பையும் கண்டவுடனே பாப்பானை முதலில் அடி என அய்யா சொன்னதைச் செய்திருந்தால், நிலைமை இவ்வளவு மோசமாகியிருக்குமா? ஆனால், பார்ப்பன வந்தேறிகளுக்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது – இறுதி வெற்றி எங்களுக்குத்தான்; ஏனெனில், இது பெரியார் அவதரித்த மண் (இதனை அவர் கொஞ்சம் பெருமிதமாகச் சொன்னது போலப் பட்டது); எங்கள் பகுத்தறிவு, அறிவியல் பூர்வமான செயல்பாடுகளின் மூலம் எங்கள் செயல்வீரர்கள், இயக்கத் தோழர்கள், வெற்றிமேல் வெற்றி காண்பார்கள். ஆரிய சூறைக்காற்றை ஃப்பூ என ஊதிவிடும் எங்கள் திராவிடம்! பெரியார் தான் எங்கள் தலைவர் – அம்பேட்கர் அல்லர், அவர் வடவர்! (இந்தக் கடைசி துணுக்கு, நான் முன்னமே அவருடன் பேசியிருந்ததற்கு எதிர்வினை; நான் அவரிடம் வாக்குவாதம் செய்து ஒரு வருடம் முன் நிறுவியிருந்தது – அதாவது – ஏணிகள் பல வைத்தாலும், ஈவெரா அவர்களால், அம்பேட்கரின் ஆராய்ச்சி மனப்பான்மை + ஆகிருதி + ஆழ்ந்த சிந்தனை, படிப்பறிவு + மக்கள் மேல் கரிசனம் + மிக முக்கியமாக – பொறுப்புணர்ச்சி – உள்ளிட்ட பல விஷயங்களின் அடிப்படைகளைக் கூடத் தொட முடிந்திருக்கவில்லை என்பது.)

-0-0-0-0-0-0-0-

அவர் சொல்வதையெல்லாம் மிகப் பொறுமையுடன் – என்னுடைய செல்ல பராட்டா பார்ஸல் ஆறிக்கொண்டிருந்தாலும், தேநீரின் மேல் பழுப்பாடை படிந்துகொண்டிருந்தாலும், பொந்தில் இருந்த பிற சகஜந்துக்கள் சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாலும் – நான் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

அவர் ஒரு பதினைந்து நிமிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோதுதான் எனக்குத் தோன்றியது – இவரும் திராவிட மாயையில் சிக்கிக்கொண்ட ஒரு அப்பாவி. வாயில் நுரை தள்ளாக் குறையாக அவர் பேசியதற்குக் காரணம் – அவருடைய கந்தறகோள ‘பெரியாரிய’ சிந்தாந்தங்களின் படி, வெறுப்புக்கான குவியமாகச் சுட்டிக்காட்டப்பட்ட ஒரு மக்கள்திரளின் பிரதிநிதி நான், அவ்வளவுதான். அதற்குமேல் அவருக்கு ஒரு காரணமும் வேண்டியிருக்கவில்லை. என் கோபத்தை அப்புறப்படுத்திக்கொண்டு, நமட்டுச் சிரிப்புடன் அவதானித்தால், இவையேல்லாமே தமாஷ்தான்.

தொடர்ந்த சொற்பொழிவுக்குப் பின்னர்தான் திடீரென்று அவருக்கு நான் ஒருவார்த்தைகூடப் பதில் பேசாமல் உட்கார்ந்து கொண்டிருப்பது, குவியத்துக்கு வந்தது, பாவம்.  சண்டமாருதத்தின் நடுவே, திராவிடத் திராபை இடிமுழக்கத்துக்கு நடுவே  என்னால் எப்படி உள்ளே நுழைந்திருக்க முடியும்?  “நான் உங்களைப் பிரத்தியேகமாகக் குறை சொல்லவில்லை, கோபமா?” என்று கேட்டார், பாவம்.

நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன், ஆச்சரியத்துடன்.

அவர் தொடர்ந்தார் – “நான் பார்ப்பனர்களுக்கு எதிரானவன் அல்லன், பார்ப்பனீயத்துக்கு மட்டுமே எதிரானவன். ஆனாலும் பார்ப்பனீயத்தின் விஷ நாளங்கள் பார்ப்பனரிடம்தானே இருக்கின்றன? அதை எப்படி தமிழ்ச் சமூகத்தால் மறுக்க, மறக்க முடியும்??”

நான் சொன்னேன் – “அய்யா, நானும் உங்களைப் போலவேதான்! நானும் வெங்கட்டராஜுலுவுக்கு எதிரானவன் அல்லன். வெங்கட்டராஜுலு-நாயுடுவியத்திற்கு மட்டும்தான் எதிரி. ஆனால் திராவிடவிய நாயுடுவியத்தின் விஷ நாளங்கள் வெங்கட்டராஜுலுவிருந்துதானே வருகின்றன?”

அவர் – “என்னைக் கிண்டல் செய்யறீங்க – பரவாயில்ல. ஆனா நான் போய், உங்களை வந்தேறின்னு சொல்வேனா? சும்மா, ஒரு விவாதத்துக்குத்தான் ஸார்! கோபிச்சுக்காதீங்க ஸார்! நாம் நண்பர்கள்தான்!”

நான் சொன்னேன்: “அய்யா, ஒரு கோபமும் இல்லை. நீங்கள்தான் முதல்முறையாக இம்மாதிரி என்னுடன் பேசியவரில்லை; நான் இப்படி கண்டமேனிக்கும், மூளையேயில்லாத ஏச்சைக் கேட்டுக்கொள்ளப்போவதும் கடைசி முறையும் இல்லை. ஏனெனில், இது நம்முடைய செல்லத் தமிழகம், அது அப்படித்தான் இருக்கும். எனக்கு பிரத்தியேகமாக ஒரு பிரச்சினையுமில்லை, சரியா? நான் வீட்டிற்குப் போகவேண்டும், அயல்நாட்டில் இருக்கும் என் தம்பி பேசுகிறேன் என்று சொல்லியிருக்கிறான், ஏதோ அவசர சமாச்சாரம் போல இருக்கிறது.” …

“அப்ப, என் குற்றச் சாட்டுகளுக்கு உங்களிடம் பதில் ஒன்றும் இல்லையா?” எனக் கேட்டார் – ஆணவத்துடன் அல்ல, வெறும் பரிதாபமாகத்தான், பாவம்.

அவரும் என்னதான் செய்வார் – சுயமாக யோசித்தா, அனுபவங்களைப் பொறுத்திப் பார்த்தா அவருடைய மேலான முடிவுகளுக்கு வந்திருக்கிறார்? திராவிட இயக்கக் குஞ்சாமணிகள், அவர்கள் நரைமுடி தோன்றியவர்களாக இருந்தாலும், திராவிட முயக்க எடுப்பார் கைப்பிள்ளைகள்தாமே! அவர்களைக் குறைசொல்லி ஒரு சுக்குக்கும் பிரயோஜனம் இல்லை.

“அய்யா நிறைய இருக்கிறது. வார்த்தைக்கு வார்த்தை, நீங்கள் சொல்வது அபத்தமாக இருக்கிறது. எவ்வளவு முறை கேட்டாலும், முதல்முறை கேட்பதுபோல ஆச்சரியமாக இருக்கிறது. ஒரே கற்பனாவாதம். பொறுக்க முடியவில்லை. உங்களுடன் விலாவாரியாகப் பேச/உரையாட விருப்பம்தான். ஆனால் இன்னொரு சமயம் இதனைப் பார்க்கலாமா? இதே அரைத்த திராவிடமாயை மாவையே எவ்வளவுதடவை மறுபடியும் மறுபடியும் அரைப்பது? எப்படியும் எனக்கு வேறு வேலையிருக்கிறது. இன்றுபோய் நாளை உங்களை வாருகிறேன், சரியா?” என்றேன்.

-0-0-0-0-0-0-0-

“அப்போ, இப்போதைக்குத் தோல்வியை ஒப்புக் கொள்கிறீரா?” எனக் கேட்டார் அவர்!

உசுப்பேற்றப்பட்ட நான் (என் வாழ்க்கையில், நான் எந்த ஒரு எழவையும் பாடமாகக் கற்றுக்கொள்ளப் போவதில்லை என்பது திண்ணம்!) சொன்னேன்: “தோல்வியாவது மசுராவது – நீங்கள் சொன்னதில் இரண்டுமூன்று விஷயங்களைப் பற்றி மட்டும் பார்க்கலாம். ஆனால் ஐந்து நிமிடத்திற்குப் பிறகு நான் கிளம்பிவிடுவேன், சரியா?”

“சரி.”

-0-0-0-0-0-0-0-

இதன் அடுத்த பகுதியையும் மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கவேண்டுமென்றால், சில நாட்கள் காத்திருக்கவும். ஏனெனில், இந்த உரையாடல்நரையாடல் எழவின் என் வடிவத்தை, நாயுடுகாருக்கு அனுப்பி அவர் ஒருவழியாகத் தட்டுத் தடுமாறி அந்தக் கோப்பைத் திறந்து (அவர் கணிநிகளைக் கண்டாலே அஞ்சும் பழம்பஞ்சாங்க அறிவியல்பூர்வ பகுத்தறிவ திராவிடவகை, பாவம்!) அவருடைய ஒப்புதல்/சரிபார்த்தலுக்குப் பின் தான்  பிரசுரிக்க முடியும்.  அவர் எப்படியும், எளிதில் புண்படும் ஆசாமியல்லர் – என்னைப் போலவே மிகமிக தடிமனான மேற்தோல் கொண்டவர்தாம்.

எது எப்படியோ,  நான், நாயுடுவியத்திற்குத் தான் எதிரானவன் அல்லவா? ஆகவே வெங்கட்டராஜுலு அவர்கள் எப்போதுமே என் செல்ல நண்பர்தான், பாவம் அவர்! நன்றி.

11 Responses to “பெரியார்பிறந்தமண்ணர்களும் மண்ணாங்கட்டிகளும்”

  1. Venkatachalam Says:

    ஆரியர்கள் வந்தார்களா இல்லையா என்று தெரியாது. ஆனால் பரிமேலழகர் வெளிக்கருத்தின் அடிப்படையில் திருக்குறளை விளக்கியிருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அவர் மனமாற தான் கூறுவது சரியென்று கருதியே அவ்வாறு விளக்கியிருப்பார் என்றும் நம்புகிறேன்.


  2. அய்யா அனாமதேயம், இவர் அவரல்ல. இந்தப் பின்னூட்டத்தை இட்டிருக்கும் வெங்கடாசலம் அவர்கள் ஒரு (ஓய்வு பெற்ற) பல்கலைக் கழகப் பேராசிரியர், பெங்களூரில் வசிக்கிறார். தமிழ், திருக்குறள் ஆர்வலர். என் மரியாதைக்குரியவர் – ஆகவே அவர் வீட்டிற்குப் போய்கூட அவர் கழுத்தை அறுத்திருக்கிறேன். ஆனால் நான் ஒரு இஸ்லாமிக்ஸ்டேட் பயங்கரவாத உதிரியல்லன்.

    மேலும், என் புதுச்சேரி நண்பரைக் கிண்டல் செய்ய எனக்கு மட்டுமே உரிமையுண்டு – எப்படியும், அவரும் என் கிண்டலை இதுவரை பொருட்படுத்தியது போலத் தெரியவில்லை. ஆகவே, கொஞ்சம் ஒதுங்கிக்கொள்ளவும்.

    நிற்க, அய்யா வெங்கடாசலம், 1850கள் வரை, இந்த திராவிடம் எனும் பதம் (பலவிதமாக முன்னரே மருவி) – ஒரு வெறும் நிலப்பரப்பை மட்டுமே – அதுவும் குஜராத், மஹாராஷ்டிரம் போன்ற பகுதிகளையெல்லாம் சேர்த்து – குறித்து வந்தது. அதற்கு மொழியியல் ரீதியான, இனவியல் ரீதியான அர்த்தங்கள் – மிஷனரிகளால்தான் ஏற்படுத்தப் பட்டன.

    ஆரிய என்னும் பதமும் – இனப்பாகுபாட்டு கோணத்தில் (எப்படியும் இக்காலங்களில், இந்த இனம் என்பதையே பல ஆய்வாளர்கள் கேள்வி கேட்டுவருகிறார்கள் – மிகச் சரியாகவே!) அக்காலங்களில் உபயோகிக்கப் படவில்லை – அது வெறும் – நல்ல, நற்பண்புகளை உடைய – எனும் பொருட்களிலேயே உபயோகப் பட்டிருக்கிறது என்பது என் கருத்து. (மேலும் மெத்தப் படித்த, அறிவார்ந்த ஆராய்ச்சியாளர் நிலைப்பாடும்கூட!)

    இதே பின்புலத்தில்தான் – பல மேதைகள் இந்தப் பதங்களை உபயோகித்து வந்திருக்கிறார்கள் – அதாவது திரிக்கப் படுதல் 1800 களில் ஆரம்பிக்கப்படும் வரை.

    பிரச்சினை என்னவென்றால், இந்த ஆரிய-திராவிட பதங்களின் மேல் ‘இனப் பாகுபாடு’ எனும் பிரிவினை வேதாளம் ஏற்றப்பட்டதால் தான் – நம் தற்காலக் கந்தறகோளங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன என்பது என் துணிபு.

    மற்றபடி, எனக்கு – புனித குதிரைச்சவாரியர் அவர்களை ஏணி வைத்தாலும் எட்டாது என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
    நன்றி.

  3. A.Seshagiri. Says:

    அட போங்க சார் நீங்களும் உங்க செல்ல வெங்கட்டராஜுலு நாயுடுவும்,எங்க மதிமாறன் அண்ணாச்சிக்கு உறை (உரை!) போட கூட காணாது.சாம்பிளுக்கு கீழே ஓன்று!
    https://mathimaran.wordpress.com/2015/03/18/thiilana-1049/
    நன்றி பத்ரி அவர்களுக்கு.


    • அய்யா, மதிமாறன் அவர்களின் நகைச்சுவையுணர்ச்சியும் படையல்திறனும் இணையத்தில் பிரசித்தம். இருந்தாலும் இந்த தில்லானா பதிவு கொஞ்சம் அதிக பராக்கிரமத்துடன் இருப்பதாகவே படுகிறது. ஏற்கனவே எனக்குச் சிரித்துச்சிரித்து வயிற்றில் ஏகத்துக்கும் வலிக்கிறது; இந்த அழகில்…

      எப்படியும் – எனக்கு ஏணி வைத்தாலும் அவருடைய உச்சங்களைக் கூச்சமில்லாமல் தொடமுடியாதுதான். சும்மா உசுப்பேற்றாதீர்கள், சரியா?

      ஒரு விஷயம்: பத்ரி அவர்களுக்கு ஏன் நன்றி?

      • A.Seshagiri. Says:

        பத்ரி அவர்களுக்கு ஏன் நன்றி தெரிவித்தேன் என்றால்,அவர் தனது வலைத்தளத்தில் இருந்து இந்த மாதிரி ”மதி”மாறன்களுக்கு ‘ டெரெக்ட் கனக்சன் கொடுக்கும் புண்ணியவான்.இன்றைய சாம்பிள்:
        http://www.luckylookonline.com/2015/03/blog-post_19.html


      • ஆ! உங்களிடம் சந்தேகம் கேட்டது தப்பாகப் போய்விட்டதே!

        இன்றிலிருந்து உங்கள் பின்னூட்டங்களைத் தடை செய்கிறேன். கோபம்கோபமாக வருகிறது.

        பின்குறிப்பு: உங்கள் லாஜிக் படி, நானும் ஒரு மதிமாறனா? நேரடியாகவே திட்டலாமே! :-(

  4. Saravanan Says:

    The point is, whether Tamil Nadu is better off or worse of becuse of Periyar. Answer is a definit YES! #பெரியார்பிறந்தமண்

    சுற்றிச் சுற்றிப் பெரியாருக்குத் தானே வருகிறீர்கள்? #அங்கநிக்கிறார்பெரியார் !

  5. poovannan73 Says:

    ஆனா கட்டுரையில் ஒரு வரி மறுக்க முடியாத உண்மை. பிராமணர்களின் புரட்டுக்களை,சதிகளை அண்ணல் அம்பேத்கர் பெரியாரை விட பல மடங்கு அதிகமாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்

    பத்ரி சாருக்கு நன்றி

    http://tdharumaraj.blogspot.in/2014/12/6.html


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s