டீடலஸ், இகரஸ் – நான்கு குறிப்புகள் (=கொஞ்சம் தொன்மம் + கொஞ்சம் ஸானெட்+ கொஞ்சம் தவிப்பு)

October 15, 2013

கடந்த நான்கு மாதங்களில் இலியட் + ஆடிஸ்ஸி காவியங்களைப் பிழிந்து, சக்கையை மட்டும் என் குழந்தைகளுக்குக் கொடுத்ததை, உதவியாக இருந்த புத்தக ஜாபிதாவைப் பற்றியென்று — இரண்டு பதிவுகளில் எழுதியிருந்தேன்; பாவம் அந்தப் பிள்ளைகள். (ஏன், நீங்களும் தான்!)

இதன் தொடர்ச்சியாக, இந்த டீடலஸ்+இகரஸ் (Daedalus, Icarus) கதைகளை, சென்ற பத்து நாட்களில்  – நான்கு நாட்கள் (மொத்தமாக சுமார் ஒன்றரை மணி நேரம்) என் குழந்தைகளுக்குச் சொன்னேன்.

எது எப்படியோ…

இந்த டீடலஸ், ஸிஸிபஸ் (Sisyphus) கதைகளெல்லாம் எனக்குப் பிடித்தமானவை. இதற்கு முக்கியமான காரணம், டீடலஸ் பாத்திரம் – இவன் ஒரு நல்ல பொறியியலாளன், கண்டுபிடிப்போன், கட்டமைப்போன் – என்பவை மட்டுமல்ல, அவன் மனிதனின் உட்கிடக்கையின் உன்னதங்களும் சகல கீழ்த்தரங்களும் உள்ளவனாக – ஒரு சாதாரணனாகச் சித்திரிக்கப் படுவதனாலும்தான் எனக் கருதுகிறேன்.

<–/-0-0-0-0- குறிப்பு #1 -0-0-0-0-\–>

கொஞ்சம் அதிகமாகவே  சுருக்கமாக இந்த டீடலஸ், இகரஸ் (கிரேக்க) கர்ண பரம்பரைக் கதைகளை – அவற்றின் ஒருவிதமான கதையாக்கத்தைக் கொடுக்கிறேன்:

பிரசித்தி பெற்ற டீடலஸ் தன் மகன் இகரஸ்-உடன் ஏதென்ஸ் (Athens) நகரத்தில் வசிக்கிறான். ஒரு நல்ல பொறியியலாளனும், ஆராய்ச்சியாளனும், சித்திரம் வரைவோனும், சிற்பியும், கட்டிடக் கட்டமைப்பாளனுமாகிய டீடலஸ்ஸிடம் குருகுலப் படிப்பு படிக்க வருகிறான், அவனுடைய மருமகன் டான்டலஸ் (Tantalus). ஆனால், இவன் குருவை மிஞ்சிய சிஷ்யனாக இருந்ததனால், பொறாமையுற்ற டீடலஸ் ஒரு நாள் – ஒரு யோசிக்காத, சிறுநேர முட்டாள்தனக் கோபத்தின் காரணமாக – இந்த டான்டலஸ் சிறுவனை, அக்ரோபொலிஸில் (Acropolis) இருந்த ஒரு உயரமான கட்டிடத்தின் மேலிருந்து கீழே தள்ளிக் கொலை செய்து விடுகிறான்.

ஏதென்ஸ் ராஜாவுக்கு இது குறித்துத் தெரியவரும்போது, அவன், டீடலஸ்ஸை, நாட்டை விட்டுத் துரத்தி விடுகிறான். ஆகவே, ஈஜியன் கடலில் உள்ள ஒரு தீவுநாடான க்ரீட்-ல் (Crete), டீடலஸ் தஞ்சம் கேட்கிறான். அதன் ராஜா (மினோஸ் – Minos), டீடலஸ்ஸின் புகழைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்ததனால், மகிழ்ச்சியுடன் அவனுக்கு அடைக்கலம் கொடுத்து அவன் ஆய்வுகளுக்கு உதவி செய்கிறான்.

ஒரு குட்டி ஃபேலேஷ்பேக்: தனக்கு ஒரு சமயத்தில் உதவி செய்த மினோஸ்-ஐ மெச்சி, பொசைடன் (கடற்கடவுள் – Poseidon) – தன்னிடம் இருந்த ஒரு காத்திரம் மிக்க எருதை, ஒரு அன்பளிப்பாக அளிக்கிறது, ஆனால் இந்த எருதைப் புணர்ந்த, மினோஸ் ராஜாவின் மனைவி பேஸிஃபீ (Paciphae) – ஒரு மேல்பாதி எருதும் கீழ்பாதி மனிதனுமான ஒரு ஜந்துவைப் பெற்றெடுக்கிறாள்; இதன் பெயர் மினோடார். (Mino-taur)

ஆக, இந்த மினோடாரைப் பற்றிய ஒரு அவமான உணர்ச்சியில் இருந்த மினோஸ், டீடலஸை விட்டு ஒரு தரைக்கடிக் கட்டுமானத்தை கட்டுவிக்கிறான். இது ஒரு சிக்கலறை – maze! அரண்மனைக்கு அடியில் கட்டப்பட்டது – உள்ளே போன யாரும் வெளியே வரவேமுடியாது. இந்தச் சிக்கலறையில் மினோடாரைச் சிறை வைக்கிறான், மினோஸ்.

மினோடாருக்கு உணவு – மனிதர்கள்; ஆகவே மினோஸ் வெற்றி கொண்ட பிரதேசங்களிலிருந்து / நாடுகளிலிருந்து சில வருடங்களுக்கு ஒரு முறை சில இளைஞர்களை, யுவதிகளை கொணர்ந்து மினோராருக்குப் படையல் வைக்கும் முறை தொடங்கியது.

ஆனால், ஏதென்ஸின் முறை வரும்போது, அதன் அப்போதைய அரசன் தீஸியூஸ் (Theseus), தன் பிரஜைகளை படையலாக அனுப்புவதற்குப் பதிலாகத் தானே க்ரீட் தேசத்திற்குச் செல்கிறான். அங்கு போய் சிக்கலறைக்குள் சென்று, மினோடாரைக் கொன்று, தான் மீண்டு, தப்பித்து, தாய்நாடு வருவதாகத் திட்டம்.

ஆக, க்ரீட் போன தீஸியூஸ்ஸைப் பார்த்த இளவரசி அரியாட்னீ (Ariadne – மினோஸுக்கும் பேஸிஃபீக்கும் பிறந்தவள் இவள்) கண்டதும் காதல்; தீஸியூஸ்ஸின் வீரதீரத்தின் மேல் பற்றி நம்பிக்கை இருந்தாலும் அவன் எப்படி சிக்கலறையிலிருந்து மீண்டுவருவான் எனக் கவலை.

ஆகவே, தீஸியூஸும், அரியாட்னீயும் – டீடலஸ்ஸிடம் சென்று அறிவுரை கேட்கிறார்கள். இளகிய மனம் படைத்த டீடலஸ் அவர்களுக்கு ஒரு தப்பிக்கும் வழியைக் கற்றுக் கொடுக்கிறான். தயவுசெய்து, தான் இப்படி உதவியதை யாருக்கும் சொல்லவேண்டாம் எனவும் சொல்கிறான்.

தீஸியூஸ், டீடலஸ் யோசனைப் படி ஒரு நூல்கண்டின் முனையை சிக்கலறையில் வாசலில் கட்டிவிட்டு, அதை கழற்றி விட்டுக்கொண்டே உள்ளேபோய், மினோடாரைக் கொன்று வெளியே வந்தும் விடுகிறான். மினோஸ் அரசனுக்கு ஒரே கோபம்; கோபுத்திர சோகம், வேறென்ன.

ஆக, 1+1=2 என்று யோசித்த மினோஸ் – மிகச் சரியாகவே, தீஸியூஸுக்கு, டீடலஸ் தான் உதவியிருக்கவேண்டும் எனும் முடிவுக்கு வருகிறான். டீடலஸ்ஸும் தன் குற்றத்தை ஒப்புக் கொள்கிறான்.

இப்போது, மினோஸ், டீடலஸ்ஸையும் அவன் மகன் இகரஸ்ஸையும்  ஆயுள்தண்டனை கொடுத்து, ஒரு தன்னந்தனித் தீவில், கடற்கரையோரத் தனிக்கோபுரச் சிறையில் தள்ளுகிறான்.

முதலில் இந்தச் சிறையில் வாடிக்கொண்டிருந்த டீடலஸ், பின்னர் – வருடக் கணக்காக, அவன் சாகிற வரை இங்கேயே, இப்படியே இருக்கக் கூடாதென்று, மனச்சோர்வை விட்டுவிட்டு, எப்படித் தப்பிப்பது என யோசிக்கலானான். அந்தச் சிறையில் ஒரு விதமான உபகரணமும் இல்லை, ஒரு புத்தகமுமில்லை, பேசுவதற்கே ஆளில்லை – ஆனால் அவனிடமிருந்தது அவனுடைய கற்பனா சக்தியும், மாளாது உழைத்து கடைந்தேறும், வெற்றி கொள்ளும் மனப்பான்மையும்தான்.

ஆக, தன் சுற்று வட்டாரத்தை வைத்து, இருப்பதை வைத்து, தன்னால் என்ன செய்யக்கூடும், எப்படித் தப்பிக்கலாம் என்பதை அவதானிக்க ஆரம்பிக்கிறான். சிறை ஜன்னல் கிராதிகளைப் பிடித்துக் கொண்டு, வெளியே பறவைகள் ஆனந்தமாக விட்டுவிடுதலையாகிப் பறப்பதைப் பார்க்கிறான். ஆனால் கழிவிரக்கப் பெருமூச்சு விடாமல் செயலில் இறங்குகிறான்.

தன் மகன் இகரஸ்ஸிடம் சொல்கிறான்: நாம் ஒரு நாள், இந்தப் பறவைகள் போலச் செட்டையடித்துப் பறந்து தப்பிக்கப் போகிறோம்.

அவர்கள் சிறைக்கோபுரத்தில் கூடுகள் கட்டித் தங்கியிருந்த புறாக்களின், மற்ற பறவைகளின் இறகுகளைச் சேகரிக்கிறார்கள். அங்கே தேனீக்கள் கட்டியிருந்த தேனடைகளையும் எடுத்துக் கொண்டு பத்திரப் படுத்துகிறார்கள். தொடர்ந்து பலவருடம் இப்படிச் சேகரம் செய்கிறார்கள்.

கொஞ்சம்கொஞ்சமாக, இந்த இறகுகளை, வரிசை வரிசையாக அடுக்கி, தேனடைகளிலிருந்த மெழுகை சூரியவெப்பத்தில் உருக்கி ஒட்டிச் சேர்த்து அழகான இறக்கைகள் தயாரிக்கிறான் டீடலஸ். பின் அவர்கள் போட்டிருந்த துணிமணிகளைக் கிழித்து கயிறுகள் போலாக்கி இறக்கைகளைத் தோளுடன் கட்டிக் கொள்வதற்கு ஏதுவாய்ச் செய்து கொள்கிறான்.

இதே சமயம், இகரஸ்ஸும் டீடலஸ்ஸும் தினமும் கைகளை அசைத்து, இறக்கைகளைக் கட்டிக்கொண்டு ஆட்டி, பறவைகள் போலத் தொய்வில்லாமல் பறப்பதற்கு பயிற்சி கொடுத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இகரஸ்ஸிடம் அவன் தகப்பன் சொல்கிறான்: நாம் பறக்கும் போது அதி உயரத்துக்குப் போகாதே, சூரியன் உன் மெழுகை உருக்கி விடும். நீ விழுந்து விடுவாய். மிகவும் கீழே பறக்காதே, கடல் நீர் உன் சிறகுகளை நனைத்தால் உன் கனம் அதிகமாகிக் கீழே விழுந்து விடுவாய். படித்துப் படித்துச் சொல்கிறான்.

தப்பிக்கும் நாளும் வருகிறது. மறுபடியும் இகரஸ்ஸுக்கு அறிவுரை சொல்கிறான், டீடலஸ்.

பறக்கிறார்கள். கற்பனையும், படைப்பாற்றலும், மனோதிடனும், கடின உழைப்பும் கூடி வந்த தினம்.

அப்பன் சொன்னதை நினைவில் வைத்துக் கொள்ள முயற்சித்தாலும் இகரஸ்ஸுக்கு, தான் உயரே உயரே பறக்க ஆசை; தகப்பன் எச்சரிக்கிறான். பையனால் அதைக் கேட்டுக் கொள்ள முடியவில்லை.

மெழுகு உருகுகிறது. இறகுகள் உதிர்கின்றன. கூடவே, அவன் உயிரும், (அவன் தன் வாழ் நாளில் பெரும்பகுதியை சிறையில் கழித்தவனாதலால், நீச்சலும் தெரியாது. சுபம்)

பாவம், டீடலஸ் – ஆனால் அவன் தப்பிக்கிறான். இருந்தாலும், புத்திரசோகம் என்பது ஒரு மகாமகோ கோரமான விஷயம்.

… இன்னமும் இவன் கதை கொஞ்சம் இருக்கிறது; ஆனால், நான், அதை இங்கு முடித்து விட்டேன்; குழந்தைகள் மூஞ்சியெல்லாம் படு சோகம். ‘அவன் அப்பா பேச்சைக் கேட்ருந்தா’ என்று அவர்கள் யோசனையில் ஆழ்ந்தார்கள். அவர்களை மீட்க, இன்னொரு கருவி…

பசங்களா, இதெல்லாம் கதைதான்,  கற்பனைதான்… இதிலேர்ந்து என்ன கத்துக்கிட்டோம்கறது தானே முக்கியம். வாருங்கள், நாம் கவிதை – ஒரு ஸானெட் எழுதலாம்…

<–/-0-0-0-0- குறிப்பு #2 -0-0-0-0-\–>

நம் விக்ரம் சேத் அவர்களால் எழுதப் பட்ட இந்த பெட்ரார்க் வகை ஸானெட், நம் ராமாயணத்தில் வரும் சம்பாதி என்கிற கழுகரசன் (நமக்கெல்லாம் முன்னறிமுகமாகியிருக்கும் ஜடாயுவின் சகோதரன்; கம்பன் ஜடாயு பற்றி எழுதியிருக்கிறான். சரி, மன்னிக்கலாம். ஆனால் ஜடாயுவும் கம்பனைப் பற்றி எழுதுவது எனக்குக் கொஞ்சம் மூளைக் குடைச்சல் தரும் விஷயம் தான்.. இதற்கு மேல், அந்த ஜடாயுவைப் பற்றி, கம்பன் எழுதியதை, இந்த ஜடாயு எழுதினால்… அய்யய்யோ! இந்த self-referenceம் recursionம் தான் என் பரம தலைவலிக்காரர்கள், என் செய்வது!) பற்றி, இலக்கண சுத்தமாக யாப்பப்பட்ட ஒரு கவிதை.

Sampati
(A Petrarchan sonnet based on a character in the Ramayana)

Why
do
you
cry?
I
flew
too
high
Un-
done
all
see
me
fall.

Vikram Seth

ஸானெட் என்பது 14 வரிகள் கொண்ட பொதுவான கவிதை வடிவம். இதில் ஷேக்ஸ்பியர் வகை ஸானெட் பிரசித்தி பெற்றது. இந்த பெட்ரார்க் வகை ஸானெட் – இதை இத்தாலிய ஸானெட் வகை என்றும் சொல்லலாம்: முதல் 8 எண்ம வரிகள் – அஆஆஅஅஆஆஅ என ஒலி இயைப (rhyme) வேண்டும்; அடுத்த 6 வரிகள், இதற்குப் பலவகைக் கட்டமைப்புகள் – விக்ரம் சேத் உபயோகித்ததில் இஇஎஏஏஎ என்கிற விதமான ஒலி இயைபு வேண்டும். அவ்வளவுதான். மிக சுலபமாக, ஒரு அற்ப கம்ப்யூட்டரை வைத்தே, தட்டி எடுத்து விடலாம். (யாப்பு அமையும் சரி, கவிதை எங்கன்னு ஆப்பு வெச்சா? காப்பு போட்டுக்கினு மாப்பு கேக்க வேண்டீத்தாம்பா, வாப்பா!)

சரி, சம்பாதிக்கு (சம்பாதிக்க அல்ல) வருவோம்.

இகரஸ் கதைக்கும் சம்பாதிக்கும் என்ன தொடர்பு என்றால், சூரியனுக்கு மிக அருகில் பறந்து செல்லும் சாகச ஆவல் மிகுந்த சம்பாதி, எரிந்து வீழ்கிறான். டீடலஸ் போல, கூடப் பறந்த ஜடாயு தப்பிக்கிறது. (பல தொன்மவாதிகள் இப் பௌராணிகக் கதையை, நம் டீடலஸ், இகரஸ் நண்பர்களோடு ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார்கள். சுபம்.)

உபகுறிப்பு: என் குழந்தைகளை, அவர்கள் விருப்பப் பட்டால் இம்மாதிரி பெட்ரார்க் வகை ஸானெட்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிக் காண்பிக்கச் சொன்னேன். பல குழந்தைகள் எழுதிக் காண்பித்தன. ஆனால் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் – ஒருசில குழந்தைகள் மட்டுமே தான் தமிழிலும் எழுதின; அதுவும், அவைகள் அவர்களுடைய ஆங்கில ஸானெட்-ஐ விட கொஞ்சம் பாவமாகவே இருந்தன. இத்தனைக்கும் நான் தமிழில் ஒரு ஸானெட்-ஐ எப்படி எழுதுவது என்று ஒரு எடுத்துக் காட்டு வேறு எழுதிக் காண்பித்தேன்.கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது. யோசித்தேன்.

ஆக, பல விஷயங்கள், படிப்பினைகள் பளிச்சென்று தோன்றின; அவை யாவையென்றால் –

ஒன்று: அவர்களுக்கு தமிழை விட ஆங்கிலத்தில் புலமை, வார்த்தை வீச்சுகள் (vocabulary) அதிகம்.

இரண்டு: அவர்கள் வீட்டில் படிப்பே இல்லை, தமிழ்ப் பேச்சுமில்லை; தமிழ் என்பது பள்ளியில் மட்டும்தான். வீட்டில், அந்த கேடு கெட்ட குப்பைகளான கலைஞர் டீவியையும், ஸன் டீவியையும் பொழுதன்னிக்கும் பார்த்துக் கொண்டிருந்தால் தமிழ் எப்படி வரும்?

மூன்று: நான் அவர்களுக்கு ஸானெட் எழுதுவதில் ஒரு தவறான முன்மாதிரியாக இருந்திருக்கிறேன்.

<–/-0-0-0-0- குறிப்பு #3 -0-0-0-0-\–>

சரி. டீடலஸ், இகரஸ், டான்டலஸ் தலைப்புகளில் மூன்று அற்புதமான அறிஞர்களால் எழுதப் பட்டிருக்கும் மூன்று அழகான கட்டுரைகளைப் பற்றி, எனக்கு இப்போது சொல்லியே ஆக வேண்டும்.

இவை மூன்றும், மானுடத்தின் / சக்திகளின் கட்டற்ற வளர்ச்சிக்கும், மானுடத்தின் அடிப்படை விழுமியங்களுக்கும் உள்ள முரணியக்கங்களைப் பற்றி (கொஞ்சம் எதிர்மறையாகவேதான் – ஆனால், இவை எழுதப்பட்டு சுமார் 90 வருடங்களுக்குப் பின் இவை பெரும்பாலும் சரியாகவே எதிர்காலத்தைக் கணித்திருக்கின்றன என்பது என் கருத்து)  ஆத்மார்த்தமாகப்  பேசுகின்றன.

முதல் கட்டுரை:  ஜேபிஎஸ் ஹல்டேன் அவர்கள் 1923ல் எழுதிய டீடலஸ் (அல்லது) அறிவியலும் எதிர்காலமும் (DAEDALUS – or Science and the Future)

இவர் ஒரு உயிரியல் (மரபியல்) காரர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றியவர். என்னுடய இளமைக்கால ஆதர்சங்களில் ஒருவர். மானுடத்தின் எதிர்காலத்தைப் பற்றி ‘முரணியக்கப் பொருள்முதல்வாதப் பார்வையில்’ மிகுந்த எதிர்பார்ப்புடன் எழுதப் பட்டுள்ள கட்டுரை இது.

இரண்டாவது கட்டுரை: பெர்ட்ரன்ட் ரஸ்ஸெல் அவர்கள் 1924ல் எழுதிய இகரஸ் (அல்லது) அறிவியலின் எதிர்காலம் (ICARUS – or The Future of Science)

இவர் ஒரு தருக்கவியல் / கணிதக் காரர். இந்தக் கட்டுரை ஹல்டேன் கட்டுரையால் உந்தப் பட்டு எழுதப் பட்டது. இதில் அரசாங்கங்களின் திறமையின்மை பற்றி நன்றாகவே எழுதியிருக்கிறார் இவர்.

மூன்றாவது கட்டுரை:  எஃப்ஸிஎஸ் ஷில்லர் அவர்கள் 1924ல் எழுதிய டான்டலஸ் (அல்லது) மனிதனின் எதிர்காலம் (Tantalus – or the Future of Man)

இவரை ஒரு மனிதநேயவாதி என்று சொல்லலாம். இவர் பார்வை நம் கல்வி முறையைப் பற்றி, அதன் போதாமையைப் பற்றி இருக்கிறது. எவ்வளவு எளிமையாகவும், தர்க்கரீதியிலும் தம் கருத்தை விரிக்கிறார் இவர்.

இப்பொழுது ஒரு கோரிக்கை: அவசியம் இந்த மூன்று புத்தகங்களை/கட்டுரைகளை வாசிக்கவும். மூன்று வெவ்வேறு திசைகளிலிருந்து மானுடத்தின் எதிர்காலத்தை அவதானிக்கும் கட்டுரைகள் இவை – நமது யோசிப்பின் எல்லைகளை விரிவு படுத்துபவை. முதலில் கொஞ்சம் சோர்வளித்தாலும், அவைகளின் துல்லியமான பார்வைகளால் ‘ஆஹா’வென்ற மனவெழுச்சி கொடுப்பவை.

-0-0-0-0-0-0-

… தமிழில் மிக அவசியமாக மொழிபெயர்க்கப்படவேண்டும் என நான் 2000 புத்தகங்களுக்கு மேற்பட்ட ஜாபிதாவை, சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை வைத்திருந்தேன். அவற்றில் இவைகளும் இருந்தன / இருக்கின்றன. இந்த ஜாபிதாவில் ஒன்று கூட கதையோ, நாவலோ, கவிதைத் தொகுப்போ அல்ல – இவற்றுக்கு வேறு ஒரு ஜாபிதா.

நம் தமிழில் வந்தே ஆக வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. நாம் போக வேண்டிய தூரம் மிக, மிக அதிகம்தான்.

… எப்படி அறிவை, உழைப்பை, மேன்மையைக் கொண்டாடிய, மேலெழும்பிக் கொண்டிருந்த சமூகம், கடந்த  ஐம்பது வருடங்களில் தேக்கமடைந்து இப்படியாகிவிட்டது… ஏன் இப்படியாகியது? என்ன செய்யவேண்டும் நாம்? ஹ்ம்ம்??

-0-0-0-0-0-0-

சரி, சோகத்திலிருந்து நகைச்சுவைக்குப் போகலாமா? :-)

அடுத்த பதிவு:  டீடலஸ், இகரஸ் –  நான்காவது குறிப்பு (=கொஞ்சம் நகைச்சுவை)

12 Responses to “டீடலஸ், இகரஸ் – நான்கு குறிப்புகள் (=கொஞ்சம் தொன்மம் + கொஞ்சம் ஸானெட்+ கொஞ்சம் தவிப்பு)”

  1. m ravi chandran Says:

    this is a very good piece of writing. i thank you for this. Your translation – in the debate ‘fidelity vs. beauty’ scores well – with your rendering of “ko putra sog”.

    Your reference to J B S Halldane is a proof of your honesty in that long after you have disowned dialectical materialism, you still think it fit to inform your readers of the greatness of Halldane.

    I think this translation should not go the way of your transation of Mahatma Gandhi. Pl take time off to publish the epic stories in Tamil.Marxists will love to read them, knowing how much Marx loved the epics and how he read them ” year after year” as Paul Lafargue testifies.

    There is so much we can do , such of us who love Tamil , without hating other languages or cultures.
    My best wishes to you and the lucky children you teach. Our hope lies in them.
    Ravichandran

    • ramasami Says:

      Dear Sir, thanks for all the kind words.

      Am really happy that, one more soul is able to relate to that great man called Haldane. Thanks.

      I noted your point about the state of my translation of the Bapuji book.

      __r.

  2. bseshadri Says:

    ராம்,

    உங்கள் மாணவர்களின் ஆங்கிலம் தமிழைவிடச் சிறப்பாக உள்ளது என்றால் காரணம் நீங்கள்தான்! ஆங்கிலவழிக் கல்விதானே கற்றுத் தருகிறீர்கள். பின் எப்படி தமிழில் சொல்வளம் பெருகும்?

    இந்தத் தொடர் நன்றாக உள்ளது! (என் பெண்ணுக்கு Alfred Church எழுதியுள்ள The Iliad for Children & The Odyssey for Children இரண்டும் வாங்கிக்கொண்டுத்துள்ளேன். படித்துக்கொண்டிருக்கிறாள். உங்கள் மாணவர்கள் நேரடியாக இப்புத்தகங்கள் இரண்டும் படிக்க முற்படுவதற்குமுன் எளிதாகத் தாங்களே படிக்க விரும்பினால் இந்த இரண்டு புத்தகங்கள் உதவலாம்.)

  3. ramasami Says:

    அய்யா பத்ரி:

    1. நான் தமிழ் வழிக் கல்வி கொடுக்கத்தான் ஆசை. நான் தமிழ் வழிக்கல்வி மூலம்தான் படித்தேன். இதில் பெருமையுள்ளவன் தான் – இதனால் பல நடைமுறைப் பிரச்சினைகளை எதிர்கொண்டு மீள வேண்டியிருந்தது என்றாலும்…

    ஆனால், நீங்கள் எழுதியிருக்கிற:

    >> காரணம் நீங்கள்தான்! ஆங்கிலவழிக்
    >> கல்விதானே கற்றுத் தருகிறீர்கள். பின்
    >> எப்படி தமிழில் சொல்வளம் பெருகும்?

    … விஷயம் எளிமையான புரிதலுக்குட்படாத சிக்கல் – குறைந்த பட்சம் என்னிடம் ஸில்வர் புல்லெட் இல்லாத பெரிய சிக்கல்… இதைப் பற்றி ஒரு 5000 வார்த்தைக் கட்டுரையே எழுதியிருந்தேன். ஒரு வெறுப்புற்ற தருணத்தில் கிழித்து எரித்தேன்.

    இதில் முக்கியமாக, ஐந்து பிரச்சினைகள்:

    அ) நான் தமிழ் வழியாக (சில முக்கியமான, தமிழ்க் கலாச்சாரம் சார்ந்தவைகளை) படிப்பிக்க முனைந்த போது – பல பெற்றோர்கள், பள்ளிக்கும் வந்து நிர்வாகத்துடன் சண்டையே போட்டனர் – அவர்கள் பார்வையில், தங்கள் குழந்தைகளை ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவதற்குத்தான் பள்ளிக்கே அனுப்புகிறார்கள் (என் பள்ளியும் ஒரு மிக நல்ல ஆங்கில வழிப் பள்ளிதான்; தமிழும் கற்றுக் கொடுக்கும் பள்ளிதான்) – ஏன் இந்த பைத்தியக்காரன் வகுப்பில் தமிழில் பேசுகிறான் என்று. என் காலரை இரண்டு தடவை பிடித்திருக்கிறார்கள். ஒரு தடவை சாக்கடையில் தள்ளப் பட்டிருக்கிறேன். நான் இந்தப் பெற்றோர் வீடுகளுக்கெல்லாம் இதைப் பற்றிப் பேச, பலமுறை சென்றிருக்கிறேன். பேச முயன்றிருக்கிறேன்.

    குடிகார, அர்த்தமற்ற ஆங்கில மோகிகளுடன், மாலை நேரங்களில், தாய்மொழிக் கல்வியின் மேன்மையைப் பற்றி, கொசுக் கடிகளுக்கு மத்தியில் நீங்கள் பேசியிருந்தால் – ஆச்சரியப் படுவீர்கள் – நம் திராவிடக் குஞ்சுகள், நகரங்களிலும் சரி, கிராமங்களிலும் சரி — ஆங்கிலத்தின் தரத்தையும் உயர்த்தாமல், தமிழையும் நரகல்லில் தேய்த்து துப்புரவாக ஒழித்திருக்கும் நிலையைப் பற்றி. நான் முயற்சி செய்யாமல் இல்லை…

    ஆ) அவ்வப்போது, நான் தமிழில் பேசினாலும், குழந்தைகளுக்கு நான் பேசுவதே புரியவில்லை – தமிழ் நாட்டின் வடக்கத்திய மாவட்டங்களில் (விழுப்புரம் உட்பட) வழக்கில் இருக்கும் ‘மெட்றாஸ் பாஷை’யும் எனக்கு மிக நன்றாக வரும் – இதில் பேசினாலும் அவர்களுக்குப் பிரச்சினை. ஏனெனில் அவர்களுடைய குடும்பச் சூழல் எனும் விஷயத்திற்கு அப்பாற்பட்டு, அவர்களுடைய தமிழ் வார்த்தைகள் வங்கி மிகவும் சிறிதானது – இந்த ‘மெட்றாஸ் பாஷை’யிலும் கூட! இச்சிறிய அளவிலான வங்கியும் — தமிழ் விளம்பர வாசகங்களும், தமிழ் சினிமா வசனங்களும், தமிழ்த் திரைப்படப் பாடல்(!) வரிகளாலும் நிரம்பியது. (எனக்கு தற்காலத் திரைப்படப் பாடல்களின் ’தமிழ்’ சொல்லாடல்களை உபயோகித்து கற்றுக் கொடுப்பது என்பது இயலாது. ஆனால், இதற்கும் நான் முயற்சி செய்தேன். 12 அண்மைய படங்களின் பாடல் வரிகளை – ‘ஹிட் ஸாங்’ – வரிகளை எடுத்து அதன் மூலமாக தமிழை நுழைக்கலாம் என்று. ஆராய்ச்சி செய்தேன் – மிகுந்த வருத்தமாக இருந்தது, அந்தச் சொல்லாடல் சகதி. இதனை வைத்து ஒப்பேற்றுவது எனக்கு ஏலாது. என்னால் முடியவில்லை இந்தத் தமிழ்; ஆக, அந்த கேடுகெட்ட முட்டாள் ஆங்கிலமே பரவாயில்லை என்ற முடிவில் இருக்கிறேன்)

    இ) தமிழிலேயே கற்றுக் கொடுக்கவேண்டுமென்றால் – நல்ல, தரமான தமிழ்ப் புத்தகங்கள் கிடைப்பது அரிது. தமிழ் நாட்டுப் பாடனூல் நிறுவனப் புத்தகங்களின் ஆபாசங்களும், அவற்றின் யாப்பிலக்கணத்தை முன்னிறுத்தும் முறையும், நடைமுறை தமிழிற்கு, உரை நடைக்கு, பேசுதல்களுக்கு எதிரானவை. உலகத்தின் பல மொழிகளில், நம் நற்றமிழுக்கு மட்டுமேயுள்ள மகத்தான, மயிர் பிளக்கவைக்கும் diglossia பிரச்சினையை (செம்மொழிக்கும், உரைநடைக்கும் நடைமுறைச் சொல்லாடல்களுக்கும், உச்சரிப்புகளுக்கும் உள்ள மகாமகோ இடைவெளிகள் – உண்மையாக இது multiglossia தான்) நாம் தீர்க்க முடிந்தாலே, நாம் உருப்பட முடியும். இதற்குப் பிறகு நம்முடைய புனிதப் பசுவான monosyllabary யை மாற்றி – உச்சரிப்புகளுக்கும் எழுத்துருக்களுக்கும் ஒற்றைப் பொருத்தங்களை உருவாக்கவேண்டும் வேறு. மலட்டு மொழியையும் ’திராவிட’ர்களால்காயடிக்கப் பட்ட தமிழர் பண்பாட்டையும் வைத்துக் கொண்டு என்னதான் செய்வது, சொல்லுங்கள்… ஆனால்…

    ஈ) குழந்தைகளுக்கும் தமிழில் பேசுவது பற்றி ஒரு தாழ்மையுணர்ச்சி இருக்கிறது. வீட்டில் அற்புதமாக, மிகக் கடினமான, வெகு சிக்கலான வேலைகளைத் தொடர்ந்து, அயராமல், மெய்வருத்தம் பாராமல், சுணங்காமல் செய்து கொண்டிருக்கும் மனைவிகள் – தங்களை ‘I am ONLY a housewife’ என்று சொல்லிக் கொள்வது போலத்தான்.

    குழந்தைகளுக்கு தமிழ் பற்றிய ஒரு மதிப்பே இல்லை – உயர்வான மதிப்பு என்பதையே விடுங்கள். இம்மாதிரியானதற்கு இந்தக் கேடுகெட்ட பிலிம் காரர்களைத்தான், குப்பை டீவீக்களைத்தான் – அவைகளுடைய மறைமுகச் செய்திகளைத்தான் காரணமாகச் சொல்வேன்.

    இந்த நிலைமையில் – அவர்களுக்கு தமிழ் வார்த்தை வங்கிகளைச் சொல்லாடல்களை, கருத்தாக்கங்களை வளர்த்திக் கொள்ள ஊக்கிகள் இல்லை ( நாங்கள் எவ்வளவுதான் தமிழ் நாடகம் அது இது, விழாமேடையென்று முயன்றாலும்).

    உ) குழந்தைகளின் பண்பாட்டுச் சுட்டிகள் (cultural references) எல்லாம் தமிழ்ப் பண்பாட்டுச் சூழலின் ஒரு அசிங்கமான அங்கமான பிலிம் உலகத்தைச் சுற்றியே அமைந்து விடுகின்றன – என்கிற விஷயம் தவிர்க்கவே முடியவில்லை. ஆக, பிலிம் மூலமாக அவர்கள் கற்றுக் கொள்ளும் விஷயங்கள் தாம் அவர்களுடைய வங்கியில் சேர்கின்றன.

    ஆக…

    இன்னும் இருக்கின்றன, அவை பின்னொரு சமயம்.

    ஆனால் ஒப்புக் கொள்கிறேன் – என்னாலும் தாம் தமிழ் சொல் வளம் பெருகாமல் இருக்கிறது. என்ன செய்யலாம் சொல்லுங்கள். :-(

    உங்கள் புத்தகப் பரிந்துரைக்கு நன்றி. இந்தப் புத்தகங்களை – எங்கள் நூலகத்துக்காக ஏற்கனவே வாங்கியிருக்கிறோம். சார்ல்ஸ் லேம்ப் எழுதிய ’யுலிஸீஸின் சாகசங்கள்’ புத்தகத்தை நான் உங்கள் குழந்தைக்குப் பரிந்துரை செய்கிறேன். (ஆனால் இதுவும் வரிக்குவரி மொழிபெயர்ப்பே அல்ல)

    பின்குறிப்பு: என் புரிதல்களை மீறி நல்ல விஷயங்கள் – நெகிழ்வுகள், என் வாழ்விலும் இருக்கத்தான் செய்கின்றன. அத்தி பூத்தாற்போல சில பெற்றோர்கள், குழந்தைகள் இருக்கிறார்கள் தான். இவர்களால் தான் வண்டி ஓடுகிறது.

    • bseshadri Says:

      என் பின்னூட்டத்தின் நோக்கம் உங்களைத் தொந்தரவு செய்து பதில் வாங்குவதுதான்! கிடைத்துவிட்டது. நானும் இந்த தமிழ்-ஆங்கிலம் பற்றி என்ன செய்வது என்று வழி தெரியாமல் திண்டாடுகிறவன்தான். பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்க்கவில்லையே தவிர பல பள்ளிக்கூடங்களுக்கும் போய்க்கொண்டிருக்கிறேன். உங்கள் பள்ளியிலாவது மாணவர்கள் ஆங்கிலத்தை ஒழுங்காகக் கற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. நான் பார்க்கும் பல ஆங்கிலப் பள்ளிகளில் ஆங்கிலமும் கோவிந்தா, தமிழும் கோவிந்தா.

      சிங்கப்பூரில் உள்ளவர்கள், தம் தாய்மொழி எதுவாக இருந்தாலும் (சீனம்/மலாய்/தமிழ்) பள்ளியில் பயிற்றுவிக்கும் மொழி ஆங்கிலம்தான் என்று கறாராகச் சொல்லி, வேலை செய்துவருகின்றனர். அவரவர் தாய்மொழி என்பது இரண்டாம் மொழிதான். மலேசியாவில் நிலை வேறு. உயர்கல்வி மட்டும்தான் ஆங்கிலம் (அல்லது மலாய்). மலாய் மொழிக்காரர் ஒருவரால் கல்லூரியில் மலாய் மொழியில் படித்து இளநிலைப் பட்டம் பெற்றுவிட முடியும். அதற்குமேல் முதுநிலை அல்லது ஆராய்ச்சி என்றால்தான் ஆங்கிலம் தேவைப்படும் என்று நினைக்கிறேன்.

      இந்தியாவுக்குத் தேவை சிங்கப்பூரா அல்லது மலேசியாவா? சட்டம் போட்டு எதனைச் சாதிக்க முடியும்? சட்டம் இல்லாவிட்டால் மக்களின் விருப்பம் காரணமாக சிங்கப்பூர்தான் நிகழப்போகிறது என்று தெரிகிறது. பேசாமல் இதனையே சட்டமாகப் போட்டுவிட்டால் என்ன? மாறாக, ஒருவர் தன் தாய்மொழியில்தான் இளநிலை வரை கல்வி கற்கவேண்டும் என்று சட்டம் இயற்றினால் இந்தியாவில் ரத்த ஆறு ஓடும் என்று நினைக்கிறேன்.

      தரமான புத்தகங்களை உருவாக்குதல் என்பதெல்லாம் நமக்குச் சாத்தியமே. அதாவது இதனைக் கட்டாயம் செய்ய முடியும் – இன்று அரசமைப்புகளால் செய்ய முடியாவிட்டாலும்கூட. பிரச்னையே மக்கள் மனத்தில்தான். அதனை சட்டம் இயற்றிச் சரி செய்ய முடியாது. தமிழில் பேசினால் தாழ்வு மனப்பான்மை என்பதை யார் உருவாக்கியது?

      • ramasami Says:

        அஹோய் கேளும் பத்ரி!

        இதற்கெல்லாம் ஒரு காத்திரமாக பதில் / உரையாடல் வேண்டும் – இதில் ஈடுபடுவதற்கு மேலதிகமாக நேரம் வேண்டும். விரிவாக (பின்னர்) பதில் எழுதுகிறேன்.

        யார் காரணம், ஏன் அப்படியானது, எப்படி முடிச்சுகளை (அலெக்ஸான்டர் மாதிரியில்லாமல்) அவிழ்க்கலாம் என்பதற்கும் – என் பார்வையில், இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் வழிகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை, ஸ்கேலபல்/பரந்துபடவைக்கும் வழிகளாக்குவது, அணுகுமுறைகளாக்குவது என்பதற்கு நம் செயல்முறைகள் கொஞ்சம் நேர்மையாக இருந்தாலே போதும். கொஞ்சம் பொறுமையும் வேண்டும்.

        … நினைவிலிருந்து எழுதுகிறேன். கொஞ்சம் தவறாகக் கூட இருக்கலாம்…

        let us, there, be up and doing
        with a heart for any fate
        still achieving, still persisting
        learn to labour and to wait

        (longfellow / psalm of life)

        ம். ஸில்வர் புல்லெட் இல்லாமலிருக்கலாம். ஆனால், ஸில்வர் லைனிங் நிச்சயம் தென்படுகிறதோ?

        கொஞ்சம் கஞ்சா புகைத்துவிட்டு, பின்னர் வருகிறேன். சரியா?

        பின்குறிப்பு: ”என் பின்னூட்டத்தின் நோக்கம் உங்களைத் தொந்தரவு செய்து பதில் வாங்குவதுதான்! கிடைத்துவிட்டது.” நான் என்னவோ சாதாரணமாகக் கேட்டால் பதில் கொடுக்காதவன் என்ற கருத்தோ? தொந்திரவும் இல்லை. ஒன்றும் இல்லை.

        எப்படிக் கேட்டாலும் கொடுக்க மாட்டேன்.


  4. Ram,

    Tank you for another delectable post. A variant of the story of minotaur ran as a series in a childrens magazine called ‘Rathnabala’. (i run the risk of revealing my age by this confession :-) but so be it). That was my first introduction to the story.

    Reading this brought back some old memories

    Thanks for the links.

    Regarding your statement on the difference between spoken and written tamil, would you be kind enough to elaborate on it when you find time?

    • ramasami Says:

      அய்யோ ரமணா!

      என்னைத் தொட்டிக்குள் அமிழ்த்த வேண்டாம். நான் இந்தப் பதிவை எழுதியிருக்கக் கூடாதுதான். என்னை மன்னித்தேன் என்று இரண்டு வார்த்தை சொல்வீர்களா?

      ரத்னபாலாவைக் கேள்விப்பட்டதில்லை. ஆக நீங்கள் என்னை விடவும் வயதானவரோ? ;-)

      கொஞ்சம் இதைப் படிக்கவும்:

      Diglossia as a Sociolinguistic Situation
      http://www.sas.upenn.edu/~haroldfs/messeas/diglossia/handbuk.html


      • ராம்,

        நன்றி.
        It is surprising that there aren’t too many references to rathnabala on the net. குட்டிக்குரங்கு கபிஷ் ( with powers to lengthen his tail to fight bad elements) நான் இந்த மாசாந்த்ரியில் தான் முதலில் படித்தேன்.

        நான் உங்களை விட மிகவும் இளையவனாகவும் இருக்கலாம் இல்லையா? why discount that possibility? :-)

        diglossia – thanks for the link. will you also explain/share a similar link to understand “monosyllabary”?

        you got ‘psalms of life’ almost right. When i checked out the poem on the web (http://allspirit.co.uk/longfellow.html#life) i came to know that i was familiar with this stanza

        Lives of great men all remind us
        We can make our lives sublime,
        And, departing, leave behind us
        Footprints on the sands of time;

        from the same poem.

        If i remember right, it is an epigraph in Sidney Sheldon’s book ‘The Sands of Time’ :-)

        Thank you.

  5. Prabhu Says:

    Brilliant post. I thoroughly enjoyed it. Opened several unknown doors. Also couldn’t control my laughter about the recursive call of kamban-jatayu-kamban.

  6. Prabhu Says:

    Hey!!!The links for (ICARUS – or The Future of Science) and (DAEDALUS – or Science and the Future) are swapped and also don’t seem to be working.

    நன்றி. சரி செய்து விட்டேன். சுட்டிகள் நிச்சயம் வேலை செய்கின்றன.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s