திராவிடம், பகுத்தறிவு, திராவிடப் பகுத்தறிவு, திராவிட மயக்கம், திராவிட முயங்கியல்: பல பாகங்களில், ஒரு விளக்கக் கையேடு (1/n)

April 2, 2015

எச்சரிக்கை: மன்னிக்கவும். இது அக்கப்போரல்ல. இவை  ரசக்குறைவான நகைச்சுவைக் கட்டுரைகளுமல்ல. அதற்கு நீங்கள் போகவேண்டிய இணையத் தளங்கள்: வினவும் விடுதலையும் – உடனடி வாயுத்தொல்லை நிவாரணங்களுக்கு, கிச்சுக்கிச்சு மூட்டல்களுக்கு, இதமான புரட்டுகர சொறிதல்களுக்கு நான் உத்திரவாதம்.

இந்தக் கையேட்டுக் குறிப்புகள் வரிசையில், என் வழக்கம் போல, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல விஷயங்களை எழுதலாம் என நினைக்கிறேன் – அதாவது, ஒரு எடுத்துக்காட்டாக திராவிட இயக்கத்தைப் பற்றியும் அதே சமயம் பகுத்தறிவு, நேர்மை போன்ற விஷயங்களெல்லாம் கூட எழுதப் படலாம்… (தற்போது, இந்த வரிசையில் எவ்வளவு பாகங்கள் வருமென்பது தெரியவில்லை, என்னால் அனுமானிக்க முடியவில்லை. பார்க்கலாம்.)

பகுத்தறிவு: சில திராவிடக் குறிப்புகள்

இது  ‘திராவிடப் பகுத்தறிவு’ எனும் ஒரு வகையான கருத்தாக்கத்தினையே, என்னுடைய சொந்த ‘திராவிடப் பகுத்தறிவு’டன் கறாராகப் பரிசீலிக்கும், ஒரு வெகுபின்நவீனத்துவ எத்தனம், கட்டுடைப்பு! [ஆகவே, இந்தக் கட்டுரைக்கு, நான்,  கர்ட்  கெடல் அவர்களின் ‘முழுமையற்றதன் தேற்றம்’ (incompleteness theorem) கோட்பாட்டிற்கு, மிகமிகக் கடமைப் பட்டிருக்கிறேன். நன்றி, கெடல்! நீங்கள் திராவிடப் பகுத்தறிவை அறியாமலேயே செத்துப் போய்விட்டீர்கள்! என்ன கொடுமை!!]

ஆக… இது ஒரு படுஸீரியஸ் ஆராய்ச்சி ஆவணம் – ஏமாந்தால் ஒரே சமயத்தில் கலைமாமணி பட்டத்தையும், நொபெல் பரிசையும், புக்கர் பரிசையும் (அது இல்லாவிட்டால், நொக்கர் விருதாவது) எனக்குப்  பெற்றுத் தந்துவிடும் தரம் வாய்ந்தது, வீரியம் மிக்கது. அதனால், மூளை இருப்பதாக நினைத்துக்கொண்டிருப்போர் மட்டும் தான் இதனைத் தொடர்ந்து படிக்க முடியும். ஆகவே… நீங்கள் எல்லோருமே படிக்கலாம். கவலை வேண்டேல். நானே நான் எழுதியதைப் படித்து இன்புறும்போது, நீங்கள்  இவற்றைப் படிக்கக் கூடாதா என்ன?
-0-0-0-0-0-0-

சரி… வரவர மாமியார்கள் (+மாமானார்கள்) எல்லோரும் பகுத்தறிவு பற்றியே, பொழுதன்னிக்கும் பேசுகிறார்கள். ஆனால் நம்மால், அது கிடக்குது கழுதை, அது அப்படித்தான் என்று விட்டிடமுடியுமா சொல்லுங்கள்? ஆகவே விழுந்துவிழுந்து ஆராய்ச்சி செய்து (சும்மனாச்சிக்கும் திராவிடத்தனமாகத் தான், அதிகமாகவெல்லாம் இல்லை, பயப்படாதீர்கள்!) ஒரு பெரிய்ய கட்டுரையை வடித்திருந்தேன்.

ஆனால் பொதுவாகவே, பகுத்தறிவுக் கஞ்சி என்பதன் ஜவ்வுத் தன்மை மிக அதிகம் என்பதால், அது ஆறஆற அதன் இழுபடும்தன்மை அதிகமாகிக்கொண்டே போகும் என்பதால், சூட்டோடு சூடாக, அதன் கசண்டுகளை விட்டுவிட்டு, அதன் மேன்மையான அடிப்படைக் கருத்தாக்கங்களை மட்டும் வடிகட்டி – ஒரு மாபெரும் லெமூரிய முதுமக்கள்தாழி சோற்றுக்கு, ஒரு பகுத்தறிவுச் சோறு பதம் – என்கிற ரீதியில் கொடுத்திருக்கிறேன்.

மேலும் திராவிடப் பகுத்தறிவுக் கஞ்சி என்பது, எந்த வகை திரவத்தினையும் போலவே, பாத்திரத்திற்கேற்ப தன் வடிவத்தை மாற்றிக்கொள்ள வல்லதானதால், அதன் பச்சோந்தித்தனமான  ‘வளைந்துகொடுக்கும் தன்மை’ என்பது வரலாறேயாதலால், முதுகெலும்பேயில்லாத அது, ஒரு பாவப்பட்ட  ஜந்துவானதினால் – பாத்திரம் அறிந்து பகுத்தறிவுப் பிச்சையிட நான் முயல்கிறேன்.

எப்படியும் ஆவேசப் படவேண்டாம். அடக்கம் அமரருள் உய்க்கும். அமரரானால், அடக்கமும் வாய்க்கும். நன்றி.

-0-0-0-0-0-0-0-

இந்த ‘பகுத்தறிவு‘ எனும் வார்த்தை – பகுத்து + அறிதல் = பகுத்தறிதல் என, பகுத்து அறிந்துகொள்ளப் படுவது.

இதற்கு, பொதுவாகவே இரண்டு வியாக்கியானங்கள் இருக்கின்றன என்று சான்றோர் சொல்கின்றனர்.

முதலாவது நேவதேயப் பாவண்ணனாருடையது – அஃதாகப் பட்டது:

பகுத்து: ஹிந்துஸ்தானியில் பஹூத் என்றால் அதிகம் எனப் பொருள்படும். இதனைத் தமிழ்ப்படுத்தினால், அது ஒரு திசைச்சொல்லாக, பகுத்து என்று உருவாக்கப் பெறும். ஆகவே ‘வெகுமிகையாக விதந்தோதப்பட்ட’  அல்லது ‘வீங்கடிக்கப்பட்ட’ அல்லது ‘இல்லாததை இட்டுக்கட்ட’  என, இடம்பொருளேவல் சார்ந்து, விளங்கிக் கொள்ளலாம்.

அறிவு: தமிழின் முழுமுதல் ஆதிபகவ அறிவார்த்த திரைப்படமான, பண்டமிழனின் பழமையைப் பறை சாற்றும் விதமாக – முப்பாட்டன், நாப்பூட்டன் பெயர்கொண்ட ஆஇரா முருகதாசனார் அவர்களால் எடுக்கப்பட்ட – ஏழாம் அறிவு எனும் வரலாற்று ஆவணத்தின் தலைப்பில் இருந்து எடுக்கப்பட்ட வார்த்தைதான் அறிவு. அதாவது ஆறறிவு படைத்து தெய்வமேயென்று இருந்த சாதா தமிழர்களுக்கு, அதையும் மீறி, திருப்பியடிக்கக் கிடைத்த ஏழாம் (உண்மையில் ஏழரையாம், அதுவும் சனிபகவான் திராவிடருக்கு அருளிச் செய்தது) அறிவு என்பது தான் இந்த பகுத்தறிவு அறிவு.

ஆக, பாவண்ணனாரின் பார்வையில் – பஹூத் + (ஏழரையாம்)அறிவு = பகுத்தறிவாகும் என்பதறிக.

இரண்டாம் வியாக்கியானம், மலைமறைப்பொடிகளாருடையதென்று அறிக:

இவரும் பஹூத் என்பதிலிருந்துதான் பகுத் வந்ததென்கிறார்; ஆனால், தறிவு என்பதற்கு, தறி + வு = ‘நெய்யப் பட்டது’ அல்லது திரித்து உருவாக்கப்பட்ட நூல்களால், துணிவுடன் உருவாக்கப் பட்டதென்கிறார். இதன் ஒரு பாடபேதம்: வெள்ளைக்காரப் பாதிரிமார்கள் எழுதிய திரிக்கப் பட்ட நூல்கள் வழியாக, எழுதப் பட்ட பொய்மைகளை மேலும் திரித்து, குண்டு தைரியத்துடன் (=துணிவுடன்), யார் சரிபார்க்கப் போகிறார்கள் எனும் மனப்பான்மையுடன் மற்றவர்களுக்குப் பிரச்சாரம் செய்யப்படுவதுதான் திராவிடப் பகுத்தறிவு.

ஆக, இவர் பார்வையில்: பஹூத் + தறிவு = பகுத் + தறிவு = பகுத்தறிவு.

மலைமறைப்பொடிகளாரும், நேவதேயப் பாவண்ணனாரும் இல்லையென்றால் – நம் தமிழின் நிலை படுகேவலமாகத்தான் இருந்திருக்குமன்றோ?  ஆஇரா வேங்கடாசலபதிகளெல்லாம் மிகப் பின்னால் அவதரித்தவர்கள் தானே!

-0-0-0-0-0-

இந்த திராவிட ஸ்டைல் பகுத்தறிவு என்பதைக் கொஞ்சம் புரியும்படியாகப் பார்க்கவேண்டுமென்றால்… அது…

அதாவது, நம்மை நாமே மிக அதிகமான அறிவு படைத்தவர்களாகக் கருதிக்கொண்டு, அந்த அறிவை விருத்தி செய்துகொள்வதற்காக தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்து, திரைப்படப் பாடல்களைக் கேட்டு, திரைப்பட உரையாடல்களை அன்றாட வாழ்க்கையில் உபயோகித்து, திரைப்பட ஜாதிவெறி சித்திரிப்புகளை (வெறும் ஜாதி அபிமானங்களையல்ல) அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடித்து, திரைப்பட நகைச்சுவைகளை நிஜ நகைச்சுவைகளென நம்பி, திரைப்படங்கள் காட்டும் வணிகமுறை விருப்புவெறுப்புகளைத் தம்முடையதாக்கிக் கொண்டு,  திரைப்பட நாயகிகளின் பிதுங்கும் பாற்சுரப்பிகளில் நெகிழ்ந்து, அவர்தம் தொப்புள்களில் பம்பரம் விட்டு, திரைப்பட நாயகர்களின் கட் அவுட்களுக்குப் பால்காவடி சந்தனக்காவடி புஷ்பக்காவடி எடுத்து, பீராபிஷேகம் செய்து, தொலைக்காட்சிகளில் மேலதிகமாக திரைப்படச் செய்திகளை மட்டுமே கேட்டு ரசித்து, கிசுகிசு/நேர்காணல் படித்து/பார்த்துக் கிச்சுகிச்சுப் புளகாங்கிதம் அடைந்து (‘குட்டி நடிகை தாடி நடிகருடன் ஜல்சா!’ ‘நீச்சலுடையிலும் நடிக்காமல் எப்போது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்கப் போகிறார், இந்த பஞ்சாபி பிஞ்சு?’  ‘காதல் திருமணம் பற்றி உங்கள் கருத்தென்ன??’ ‘உங்களுக்கும் அந்த தெலெகு நடிகைக்கும் ‘இது’வாமே???’ ”நடிகர் சிம்ப-ன்ஸியுடன் உங்களை பாங்காக் ஹோட்டலில் பார்த்தார்களாமே?’  ‘கமல் ஸார் கூட நடிக்க சான்ஸ் கெடச்சா, நடிப்பீங்களா?’ ) … … … என, சகலசர்வ விஷயங்களுக்கும் திரைப்பட எழவுகளைச் சரணடைவதுதான் இந்த (ஏழரையாம்)அறிவு.

அதாவது மிகையான, அளவுக்கதிகமாக, ஏகோபித்த வாந்தி வரும் வகையிலான –  திரைப்பட ரீதியான அரைகுறை ப்பரப்பா அறிவுதான் பகுத்தறிவு என்பதை அறிக.

–0-0-0-0-0-0–

சாதாரண சாமானியர்களின் மொழியில் சொல்வதானால் – திராவிடப் பகுத்தறிவென்பது, நடிக நடிகை சிகாமணிகள் போடும் வெறிபிடித்த பப்பரப்பா குத்தாட்டங்களை, நிஜ வாழ்க்கையில் நாம் போட்டுக் கொள்ள வைக்கும் அறிவு. (ப + குத்  + அறிவு)

தொழில்முறை திராவிடர்களின் உள்ளுறை உந்துதல்களைச் சுட்டவேண்டுமென்றால் – திராவிடப் பகுத்தறிவு என்பது, எங்கள் தலையில் இருந்தும் நாங்கள் அவ்வப்போது உதிர்க்கும் முடி.  எங்கள் அறிவில்லா முண்டப் பின்னோடிகளை ஒருங்கிணைக்க, நாங்கள் செய்யும் பொய்ப் பிரச்சாரம், உமிழும் வெறுப்புமுதல்வாதம். நாங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இரக்கமற்றுக் கொள்ளையடித்த சொத்துகளை வைத்துக்கொண்டு எங்கள் குடும்பத்தினர் தலைமுறைதலைமுறையாக 1008 தலைமுறைகளுக்காவது வாழ்வாங்கு வாழ, எங்கள் பிழைப்புக்காக நாங்கள் போடும் வேடத்தின் அங்கம்..

தொழில்முறை திராவிடர்களின் வெளிப்புற உச்சாடனங்கள் ரீதியாகப் பார்த்தால் – திராவிடப் பகுத்தறிவு என்பது சமதர்மப் பூங்காவை நோக்கி இந்துக்கள் அல்லாதவர்களை, முக்கியமாக பார்ப்பனர் அல்லாதவரை, இட்டுச் செல்வது.  (ஒரு சந்தேகம்: இந்த சமதர்மப் பூங்கா எழவு என்பது, நம் சென்னைமாநகர மின்சாரரயில் வழித்தடத்தின்,  சமதர்ம எழும்பூருக்கும் சமதர்மக் கோட்டை  ரயில் நிலையங்களுக்கும் நடுசென்டரிலா இருக்கிறது?)

நேர்மையான அறிவுஜீவிய படிப்பாளிகளின் மொழியில் சொல்வதானால் – திராவிடப் பகுத்தறிவென்பது, அடிப்படை அரைகுறைத்தனத்தின் மாற்றுப் புராண அழகியற் கூறு.

அயோக்கியமான அறிவுதிரித்தல் படிப்பாளிகளின் மொழியில் சொல்வதானால் – திராவிடப் பகுத்தறிவுதான் ‘அவாள்’ ஆட்சியிலிருந்து, இந்து மதத்திலிருந்து, ஆரியச் சதிகளிடமிருந்து, பார்ப்பனீயத்திலிருந்து – திராவிடர்களை மீட்கும். இதுதான், தமிழ் நாட்டுக்கான எங்கள் ஃபைனல் ஸொல்யுஷன். ஒருவழியாக தமிழகத்தையே முழுவதுமாக அழித்தொழித்தபின் – தங்கத் தமிழகத்தில் புதிதாக, தமிழர்களை-தமிழ் இனத்தை, டெஸ்ட்ட்யூப்களில் வளர்த்தெடுக்கலாம்!  (பார்க்க: முழுமையானமுடிவு)

அல்லாடும் சாதாரண, சிறிதளவேனும் படிப்பறிவு உள்ள ஆட்களின் மொழியில் சொல்வதானால் – திராவிடப் பகுத்தறிவு என்பது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ஆக்ஸிமொரான். தமிழகத்தின் தமிழ நடைமுறை வாழ்க்கையில் எவ்வளவோ சிடுக்கல் பிரச்சினைகள். சாக்கடை, குப்பைகூளங்கள், திராவிடக் கட்சிகள், விசிலடிச்சான் குஞ்சாமணிகள். திரைப்பட ரிலீஸ்கள், ஸன் குழுமம்… என, பலப்பல. இவைகளோடு, பத்தோடு பதினொன்றாக இந்த திராவிட ப்ரேன்ட் பகுத்தறிவும் இருந்துவிட்டுப் போகட்டுமே! ஆளை விடும்!

என்னுடைய செல்லமான ‘மெட்றாஸ் பாஷை’யில் சொல்லப் போனால்: …டாய்ய்ய்ய்! ஒடாதடா பொர்க்கீ… சொல்றதக் கேள்டா, முட்டாக்கூ… ஆங்… இப்ப என்ன கேட்டீங் சார்? தெராவிட கலகமா? பெரியார் தெடலா?? இன்னாபா அது, புச்சாக்கீதே! … … ஹஹ்ஹா!! … … த்தோ பார்ரா!!  பவ்த்தறிவ் பத்தீ வீர்மணி சார் ஜோக்கடிக்றார்டா!  மவ்னே, வவ்று வெலிக்க சிர்ப்பா வர்த்டா!!   சொல்றத கேட்டுக்கடா, நாயி… ஓடாதடா. அறிவே வளத்துக்கடா… டெய்லி ஆப் அடிச்சா போறுமா? ஃபுல்லே வோண்டாமா?? ஸொங்கிப்பயலே…  ஹ்ம்ம்ம்… இன்னா ஸொல்றதுன்னு தெரியலடா… … பய்த்தறிவ் ன்னாக்க .. ங்கொம்மாள, இன்னாடா  தெராவிடத்துக்கும் பவ்த்தறிவுக்கும் என்ன மசுத்துக்குடா சம்பந்தம்?  ஆனாக்க, ங்கோத்தா, அதுங்க்ளுக்குள்ளாற எதாச்சும் கள்ளத் தொடர்ப் கீதோ? அத்தொட்டு தான் வதந்தி கெள்ப்றானுங்களோ?

ஆள விட்ங்க டா, டாஸ்மாக்கு போயி ஸர்க்கு ஏத்திக்கணுண்டா! ஒர்ரே கொள்ப்பமா கீது… காலங்கார்த்தால பவ்த்தறிவு மசுருன்னு கேட்க வந்துட்டாங்க… இவ்னுங்கள கட்டிவெச்சி ஒதிக்கணும், அப்பதான் வுருப்டுவானுங்க சோமாரீங்க…

எனது அபிமானத்துக்குரிய டிஎம் சௌந்தரராஜன் அவர்களின் கணீர்க் குரலில், திராவிடப் பகுத்தறிவென்பது: திராவிடம் என்பது மடமையடா… பம்முவது திராவிடர் உடமையடா. ஆறிலும் வாழ்வு, நூறிலும் வாழ்வு, ஊழலைக் காப்பது கடமையடா… தன் உடமையக் காப்பது கடமையடா…  சொந்தக் குடும்பவளத்தைப் பெருக்குவது வழமையடா! … … வாழ்ந்தவர் கேடி மறைத்தது கோடி, மாக்களின் மனதில் நிற்பவர் யார்… … ஆ ஆ !

-0-0-0-0-0-0-

அய்யன்மீர்! மற்ற விளக்கங்களை நம்பாதீர்கள்! போலிகளிடம் ஏமாறாதீர்!

… … அடுத்த பகுதியில், உலகத்தில் மற்றவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் சாதா பகுத்தறிவு விவரணைகளை, நடைமுறை திராவிடப் பகுத்தறிவுடன் பொருத்தி, அதன் பல பரிமாணங்களை ஆனந்தமாக விளங்கிக் கொள்ளலாமா? ;-)

அடுத்த பதிவிலும் பகுத்தறிவு ஆராய்ச்சி தொடரும்…

2 Responses to “திராவிடம், பகுத்தறிவு, திராவிடப் பகுத்தறிவு, திராவிட மயக்கம், திராவிட முயங்கியல்: பல பாகங்களில், ஒரு விளக்கக் கையேடு (1/n)”

  1. Venkatachalam's avatar Venkatachalam Says:

    வீரமணி பேட்டி பார்க்க முயற்சித்தேன். இரண்டு நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடியவில்லை. நீங்கள் எப்படிதான் இப்படி மெனக்கெடுகிறீர்களோ தெரியவில்லை. உங்களுக்கு விசேசமான சகிப்புத்தன்மை உள்ளது என்று கருதுகிறேன் எனக்கு திருக்குறள் தொடர்பாக உள்ளதைப்போல.
    நான் ஆறு வருடங்களாக முயற்சித்துக்கொண்டு உள்ளேன். இது வரை இரண்டுபேரைத் தவிர வேறு யாரும் என்னுடைய உரையைப் படிக்கவில்லை. இருந்தாலும் அசராமல் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் வெளியிடலாம், எதிர்காலத்தில் படிப்பார்களென்ற நம்பிக்கையில்!!!

  2. drkrish1's avatar drkrish1 Says:

    Dear Ramasamy,
    You have a great sense of humor, kudos and like the way you present. Thanks for enriching our knowledge and enlighten about the real nonsense of these senseless concept of


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *