மொதல்ல மாட ஓட்டக் கத்துக்குங்கடா, அப்றம் புத்தபிக்‌ஷுக்கள தெர்த்தலாம்…

April 3, 2013

(அல்லது) உற்சாக இளைஞர்களை எப்படி புனரமைப்புப் பணிகளுக்கு உபயோகிப்பது
(அல்லது) போங்கடா நீங்களும் ஒங்க போராட்டமும்
(அல்லது) ராஜபக்ஷ-வுக்கு ஜே!
(அல்லது) ஸ்ரீலங்கா தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க, இந்த மாணவர்கள் என்னதான்  செய்ய வேண்டும்?

-0-0-0-0-0-0-

31.12.2011 மாலை 4 மணி: பள்ளி அறங்காவலரிடமிருந்து ஃபோன்: ஹேய், ராம் – மாலை வணக்கம். வேலைகளுக்கு ஆள் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தாயே – சென்னையிலிருந்து ஆறு உற்சாகமான வாலன்டியர்கள் வந்திருக்கிறார்கள், எஞ்சினீயரிங் கடைசி வருட மாணவர்கள். என் நண்பர்களின் சுபுத்திரர்கள். அவர்கள் என்ன வேலை செய்யவும் தயார் – எப்படியாவது புனரமைப்பு வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். அதில் ஒருவன் நீ படித்த கல்லூரி. காதில் விழுந்ததா? நீ படித்த கல்லூரி. அடுத்த அரைமணிக்குள் நீ அலுவலகம் வந்தால் உனக்குத்தான் அவர்கள் கொத்தாக! அவர்கள். பத்து நாள் போல இருப்பார்கள். என்ன?

மகாமகோ வேலைப்பளுவில் திணறிக் கொண்டிருந்த நான் — அய்யா, இதோ வருகிறேன் என்று சொல்லி, செய்து கொண்டிருந்த வேலையை அம்போ என்று விட்டுவிட்டு, பேய் மாதிரி சைக்கிளை மிதித்து அடுத்த பத்தே நிமிடங்களில் அலுவலகத்தில் இருந்தேன்.

ஆறு இளைஞர்கள் – இவர்களில் மூன்று பேர் வாட்டசாட்டமாக, முறுக்கிய தசைநார்களைக் காட்டியபடி (எனக்குக் கொஞ்சம் பொறாமை தரும் விதத்தில்) இருந்தார்கள்  மீதி இரண்டு பேர்களுக்கு 21 வயதிலேயே தொப்பையோதி தொப்பை – சரிந்து எனக்கு எப்படித்தான் இவர்கள் ஒன்றுக்குப் போவார்கள் என்கிற சுவாரசியமான எண்ணத்தை வரவழைத்தது. ஹ்ம்ம். வேலையில் சேர்ந்து ஒரிரண்டு வருடங்களுக்கு பிறகு வரும் ‘மகிழ்ச்சித் தொப்பை’ (!?) இது என்றால் கூடப் பரவாயில்லை, இப்படிப் பெருந்தீனிய மாணவர்கள், இந்தச் சூழ்நிலையில், எப்படி புனருத்தாரணப் பணிகளில் ஈடுபட முடியும் என யோசித்துக் கொண்டிருக்கும் போதே +  அழகான பெரிய கண்களையுடைய, ஒரு மலங்கேஸ்வரி – விழித்துக் கொண்டிருந்த இளம் பெண்.

உற்சாகமாக வந்தவர்களுக்கு நன்றி சொல்லி – சரி என்று ’எவ்வளவு சீக்கிரமாக என் மலையளவு வேலைகளை முடிக்கலாம்’ என, மனக் கணக்குப் போட்டதில் ஒரே சந்தோஷம்.

இந்தனைக்கும் நான், என்னுடைய முந்தைய அவதாரங்களில்,  ஃப்ரெட்ரிக் ப்ரூக்ஸ் அவர்களின் Mythical Manmonth புத்தகத்தைப் படித்துச், சந்தோஷமாக, என் மேலதிகாரிகள் மீது விட்டெறிந்து கொண்டிருந்தவன்.

ஹ்ம்ம். ஆனால் வாழ்க்கையில் – அதன் ஆழ்ந்த ஆற்றுப் போக்கில் நம்பிக்கை என்ற ஒன்றைப் பற்றித்தான் நம்மை மேலெடுத்துச் செல்ல முடியும், அல்லவா?

-0-0-0-0-0-0-

என்னுடையது ஒரு சிறிய மூன்று அறை வீடு – அப்போது பள்ளி வளாகத்திலேயே வசித்துவந்தேன். குடும்பத்தினர் க்றிஸ்மஸ் விடுமுறைக்கு என்று கிளம்பி விட்டார்கள்.

நான் எனது கல்லூரிப் படிப்பின்(!) 25 வருட நிறைவைக் கொண்டாட, சென்னை செல்லலாமா வேண்டாமா என ஊசலாட்டத்தில் இருந்தேன். (சென்னைக்கு உலகின் பல பாகங்களிலிருந்த என் கூடப் படித்தவர்கள்(!!) ’பேட்ச்மேட்ஸ்’ வந்திருந்தார்கள்)  இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் மறுபடியும் ‘நம்ம  பசங்களைப்’ பார்க்க முடியுமா என்பதே கேள்விக் குறி. இதற்குள்ளேயே எங்கள் வகுப்பு மாணவன் ஒருவன் செத்தே போயிருந்தான் வேறு. நாராசம்.

பள்ளிப் பணிகளும் தலைக்கு மேலே இருந்தன. கடைசியில் பள்ளியிலேயே இருந்து வேலையை முடிக்கலாம் என முடிவு செய்தேன். இந்த முடிவுக்கு, சென்னை நகரத்தின் புகையும் சத்தமும் என்னைப் பொதுவாக பயமுறுத்துபவை என்பதும்தான் ஒரு முக்கிய காரணம்.

ஆனால், தானே புயல் 29 டிஸெம்பர், 2012 வீசி எங்கள் பகுதியெல்லாம் (விழுப்புரம் மாவட்டம்) ஒரே மகாமகோ சேதம். எங்கள் பள்ளி புயல்மையத்தின் பாதையில் இருந்தது வேறு.

இச்சமயம், நீங்கள் நான் முன்பு எழுதிய ஒரு பதிவைப் படித்தால் (அரம்) உங்களுக்கு ஓரளவு பின்புலம் கிடைக்கும்.

-0-0-0-0-0-0-

படித்து விட்டீர்களா? :-)

பலபத்து ஏக்கரா விஸ்தீரண பள்ளி வளாகம் முழுவதும், தாறுமாறான பெரும் மர வீழ்ச்சிகள். உடைந்த பெரும் கிளைகள். ஊடே நடக்கக் கூட முடியாமல், வளாகத்துக்கு வெளியே போய் சுற்றிச் சுற்றி வந்து வேலியை உடைத்து / அகற்றித்தான் உள்ளே நுழைய முடிந்தது. எண்ணிக்கையிலும் தீவிரத்திலும் பெருகியிருந்த ‘புலம் பெயர முடியாத’ பாவப்பட்ட பாம்புகள். சில முக்கியமான கட்டிடங்களில் பயமுறுத்தும் விரிசல்கள். அறுந்து வீழ்ந்திருக்கும் மின்சாரக் கம்பிகள். உடைந்த நீர்க் குழாய்கள், சிதிலமடைந்த நீர் தாங்கிகள், மின்சாரக் கம்ப உடைவுகள். இரும்பு/எஃகுக் கட்டுமானங்கள், கிராதிகள் அனைத்தும் உடைவு / நசுங்கல் / வளையல். மரக் கதவுகள், ஜன்னல்கள், குழந்தைகளின் நாற்காலிகள், பெஞ்சுக்கள் – உடைந்த சிதிலங்கள்.

மரங்கள், மர நிழல் குறைந்ததனால் சுள்ளென்று வெய்யில். வாயுபகவான் வேறெங்கோ வேலையாகச் சென்றிருந்ததால், காற்றோட்டமே இல்லை. சதா வியர்வை நசநசப்பு, வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் குளித்த ஐந்து நிமிடங்களில் உடம்பெல்லாம் பிசுக்பிசுக்.

ஒரு நாளைக்கு 1 பக்கெட் நீர் ரேஷன். மின்சாரம் ஒரு நாளைக்கு 30 நிமிடம் (ஜென்செட் ஓடும்போது, அதுவும் நீர் பம்ப் செய்து கொண்டிருக்கும் போது மட்டும் அல்லது வெல்டிங் வேலைகளின்போது மட்டும்) டீஸல் / பெட்ரோல் / கெரொஸீன் கெடுபிடி – கிடைத்தாலும், 5-6 மடங்கு விலை. வேலை செய்ய, ஆட்கள், திறமையான தொழிலாளர்களையே விடுங்கள் – இல்லவேயில்லை. துப்புரவு / மராமத்து செய்வதற்கான கருவிகள் / உபகரணங்கள் மிகக் கொஞ்சமே இருந்தன. சுற்று வட்டாரத்தில் கடைகள் இல்லை, புதுச்சேரி போனாலும் கடைகளில் கருவிகளோ, ஸ்பேர்பார்ட்களோ இருப்பிலேயே இல்லை. பள்ளி வளாகத்தில் சிறு சிறு களவுகள்.

வளாகத்தில் தங்கியிருந்த ஐந்து பேர்கள், விறகு அடுப்பில் காலையில் ஒரு வேளை சாப்பாடு – வெண்பொங்கல் – செய்வோம். அதனையே மற்ற இரண்டு வேளைகளுக்கும் ஊறுகாயுடன். காலையிலும் மாலையிலும் ஒரு டீ. மின்சாரமே இல்லாததால் மாலை 5.30 மணிக்கு இருட்டு முட்டிவிடும். குளித்தோமோ, குளிக்கவில்லையோ – மாலை 6 மணிக்கு ஒரு மகாமகோ நிர்மலத் தூக்கம் ஆட்கொண்டு விடும். காலையில் 4 மணிக்கு எழுந்திருந்து வேலைகளைத் திட்டமிட்டு மறுபடியும் ‘ நாளை மற்றுமொரு நாளே!’

மலைப்பாக இருந்தது – எப்படி ஓவ்வொரு வேலையையும் எங்கே ஆரம்பித்து எப்படி முடிக்கப் போகிறோம் என்று. ஒரு போர் நடந்து ஓய்ந்தால் கூட அதன் பின்னர் மிஞ்சியுள்ள – பயிற்சி பெற்ற, ஆணைகளுக்குக் கட்டுப்படும், திறமைமிக்க போர் வீரர்களை வைத்து மீள் கட்டுமானங்களைச் செய்யலாம். ஆனால் இங்கு? ஹ்ம்ம்ம்.

என் இளம் மாணவர்கள் சிலர், அவர்கள் சிறு குழந்தைகளாக இருந்தாலும், முடிந்தபோது வந்தார்கள் – ஆனால் அவர்களில் பெரும்பாலோர் வீடுகளும் நாசம் அடைந்திருந்தன – பாவம், இந்த இருப்பில், என் மாணவர்கள் எப்படி பள்ளிக்கு வந்து உதவ முடியும்? சில ஆசிரியர்களும் வந்தனர் – ஆனால், பொதுவாக, இக்காலத்தில் உடல்வலு என்பதும், பல்வேறு தொழில்களில் திறமை இருப்பதும், தன்னம்பிக்கையும் –  நம்மில் பலரில் அதிகமாக இல்லை.

29, 30, 31 தினங்கள் இப்படி ஓடின. 31 மாலையில் இந்த இளைஞர்கள்! மகிழ்ச்சியான செய்திதான்…

-0-0-0-0-0-0-

3 மெக்கானிகல் பொறியாளர்கள்; 2 கணினியியல் காரர்கள்; ஒருவர் மின்னியல். இவர்களில் 5 பேர் ஒரே கல்லூரி. இன்னொருவர் நான் ஒரு காலத்தில் படித்த கல்லூரி.

ஆக, இந்த இளைஞர்களை டீ போடும் இடத்திற்கு அழைத்துப் போய் முடிந்த வரை விவரமாக எல்லாவற்றையும் சொல்லி அவர்களால் என்ன முடியுமோ அதனைச் செய்யலாம், கொஞ்சம் தளர்ந்தால் இளைப்பாறலாம் என்றேன் — இருக்கும் உணவைப் பகிர்ந்துண்ணலாம். சமையல் செய்ய முடியுமென்றால் உங்களில் ஒரிருவர், உங்களுக்குப் பிடித்தமாதிரி சமையல் செய்தாலும் அது ஒரு அற்புதமான உதவியே.

அவர்கள், ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு – நாங்க உதவி பண்ண வந்துருக்கோம் சமையல் பண்ணி சாப்ட வரல்ல என்றார்கள்.  எனக்கும் அது சரியாகப் பட்டது. இவர்களல்லவோ வாலன்டியர்கள் எனப் பெருமையாகவும், திருப்தியாகவும்  நினைத்துக் கொண்டேன்.

எப்படி வந்தீர்கள்?
பைக்-களில். [5 பஜாஜ் அவெஞ்சர் எனப்படும் ஹார்லி-டேவிஸ்ஸன் போன்ற பெட்ரோல்கபளீகரப் பேய்களில்; அவர்கள் மூன்றே வண்டிகளில் வந்திருக்கலாம் கூட!]
ஓ, ஒங்களோட சொந்த வண்டியா இதெல்லாம்?
ஆமாம்.
பரவாயில்லயே – பார்ட் டைம் வேல பண்ணிக்கிட்டே படிக்கிறீங்களா? இது வாங்கணும்னா 60-70 ஆய்டுமே!
இல்ல, அப்பாஅம்மாதான் வாங்கிக் கொடுத்தாங்க.
பெட்ரோல்?
அதுக்கு மாதாந்திர பாக்கெட்மனி கொடுத்துருவாங்க வீட்ல.
ரிப்பேர் கிப்பேர்னா நீங்களே பண்ணிப்பீங்களா?
அதெல்லாம் டைம்வேஸ்ட். கராஜ்ல குடுத்துருவோம்.

எனக்குத் தோன்றியது – இம்மாதிரி சுய நலம் சார்ந்த விஷயங்களைக் கூட, 18 வயதுக்கு மேலாகியும் கூடத் தாங்களே சம்பாதித்தோ உழைத்தோ செய்து கொள்ளாதவர்கள், பிறத்தியாருக்கு என்ன உதவி செய்து விட முடியும்? ஆனால மேலதிகம் இம்மாதிரி யோசிக்காமல், அவர்களிடம் உரையாடி ஏதாவது குறிப்பிட்ட சில தொழிற்களில் அவர்களுக்குப் பயிற்சியோ ஈடுபாடோ திறமையோ இருக்கிறதா எனப் பார்க்க முனைத்தேன். எனக்குக் காரியம் ஆக வேண்டுமல்லவா?

இங்கே பாருங்கள் – பலவிதமான வேலைகள் இங்கே இருக்கின்றன. உங்களுக்கு புல்லி ப்லொக் வைத்து வீழ்ந்த மரங்களை உயர்த்துவது, உடைந்த மரக் கிளைகளைச் செய்ன்-ஸா வைத்து அறுப்பது, ஜென்ஸெட் வைத்து வெல்டிங் செய்வது, எஃகுத் தகடுகளை வளைப்பது, ப்ளம்பிங் வேலை, மர இழைப்பு வேலை, தச்சு வேலை, ஏஸி/டிஸி வயரிங் வேலை, மின் பொருட்களைச் செப்பனிடும் வேலை, கொத்தனார் வேலை, சித்தாள் வேலை, எடுபிடி வேலை, சமையல் வேலை, கடைகளுக்குப் போய் தேவையான கட்டுமான சாமான்கள், சமையல் பொருட்கள் வாங்கி வரும் வேலை, சுற்று வட்டார மீட்டெடுப்புக் குழுக்களுடன் கலந்தாய்வுகள், வேலை ஒருங்கிணைப்புக்கள், கண்காணிப்பு வேலை, இரவுக் காவலாளி வேலை, அரசாங்க ஆய்வாளர்களுடன், மின்சார வாரியத்தினருடன், கிராமப் பஞ்சாயத்துடன் ஒருங்கிணைப்பு வேலைகள், பள்ளி நீர் மேலாண்மை, கிராம மக்களுக்கும் எங்கள் நீரைப் பகிர்ந்தளித்தல், எரிபொருள் சேமிப்பு, மின்சார சேமிப்பு பங்கிடல்,  வேலைக்கான உபகரணங்களைப் பராமரித்தல், அவற்றைப் பழுது பார்த்தல், கிராமக் குழுக்களுக்கு, பள்ளிக்குழுக்களுக்கு முதலுதவி செய்தல்…

இவ்ளோ வேலயா இருக்கு?

ஆமா. நீங்கள் இதில் என்ன வேலை செய்யத் தேவையோ செய்யலாம். ஒங்களுக்குள்ள பேசிக்கிட்டு, மூன்று குழுக்கள் அமச்சு, என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம். ஒங்களுக்கு இப்பவே வேலை எங்கல்லாம் இருக்குன்னு காமிக்கறேன்.

மொதல்ல ஒங்க சாமானெல்லாம் என் வீட்ல வெச்சிட்டுப் போலாம்.

அவர்களை என் வீட்டில் தங்க வைத்தேன். பெண்ணிற்கு ஒரு ரூம். பையன்களுக்கு இரண்டு. நான் இரவில் மரத்தடியில் கொசுவலைக்குள் எனத் திட்டம்.

அவர்களிடம் ஒரு கேள்வியுமில்லை. ஆனால், எந்த  வேலை கொடுத்தாலும் செய்வோம் என்றார்கள். எந்த ஒரு வஸ்துவையும், அதை நகர்ந்தால் டிஜிட்டல் புகைப்படம், நகராவிட்டாலும் புகைப்படம். காதில் நான் சொல்வதெல்லாம் விழுந்ததா எனத் தெரியவில்லை. ஒரு காதில் செவிட்டு மெஷின்.(பாட்டு?) ஆகவே நிலைக்குத்திய பார்வை. (அந்தப் புகைப்படங்களைப் பின்னர் பார்த்தேன் – அதில் மருந்துக்குக் கூட ஒரு ஃப்ரேமை எப்படி கம்போஸ் செய்வது என்கிற அறிவே இல்லை)

எங்கள் உபகரண / கருவியறையைக் (டூல் ஷெட்) காண்பித்தேன். எடுத்த கருவியை, உபயோகப் படுத்திய பின், சுத்தம் செய்து, கூர் செய்ய வேண்டுமானால் செய்து, சாணை தேவையென்றால் பிடித்து, எண்ணெய் தடவி, பின் அவற்றின் இடத்தில் திருப்பி வைக்க வேண்டும் என்றேன்.

டூல் மெய்ன்டெனன்ஸ் தெரியுமில்ல என்று கேட்டேன். தெரியும் தெரியும் என்றார்கள். எதாவது டூல் எடுத்துக் கொண்டு போனால், அதன் பெயரையும், உங்கள் பெயரையும், எடுத்த நேரத்தையும், திரும்பி வைக்கக் கூடிய நேரத்தையும் அங்குள்ள கரும்பலகையில் எழுதி விட்டுப் போகவேண்டும் என்றேன்.

மாலை 5.45 – மின்சாரம் இல்லை, அலுப்பாகவும் இருக்கிறது, நாம் சாப்பிட்டு விட்டுப் படுக்கலாமா என்றேன்.

இல்லை, பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார்கள்.

மாலை 6..30 ஆயிற்று. எனக்கு கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது. காலை 4 மணியிலிருந்து தொடர்ந்து செய்த உடலுழைப்பும் ஒரு காரணம்.

சாப்டீங்களா?
தாங்கள் நூட்ல்ஸ் கொண்டுவந்திருக்கிறோம், பொங்கல் வேண்டாம்.
சரி. உங்கள் இஷ்டம். அடுப்பு இங்கே. பல தடிமன்களில் விறகு அங்கே. வென்னீர் வைத்துச் செய்து கொள்ளுங்கள். முடியுமா?
முடியுமே! காட்லயெல்லாம் ட்ரெக் போயிருக்கோம் சார்,

அரைமணி நேரம் ஆயிற்று.

சார், எங்களுக்கு அடுப்பு பத்த வைக்க முடியல.
ஓ ஒங்களுக்கு பத்த வைக்கத் தெரியல. பசங்களா, பொங்கல் வேணுங்கறது மிச்சம் இருக்குது, அத சாப்டுட்டுப் படுத்துக்குங்களேன்.
இல்ல சார், பொங்கல் சப்பை, நாங்க கொண்டுவந்திருக்கோம் நூட்ல்ஸ். அதயே சாப்ட்டுற்றோம்.

தலையில் அடித்துக் கொண்டு அடுப்பு பற்ற வைத்துக் கொடுத்தேன். படுத்துக் கொண்டேன்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் – பாத்திரத்தில் தளதளத்துக் கொண்டிருந்த வெந்நீரை அடுப்பிலேயே கொட்டி விட்டார்கள்.

எனக்கு மகா கோபம் வந்தது. ஆகவே அவர்கள் பொங்கல் சாப்பிட்டார்கள். தட்டுக்களைக் கழுவி வைத்து விடுங்கள் என்றேன். இருட்டுல போகணுமே, டார்ச் வேண்டும் என்றார்கள். கொண்டுவரவில்லையா என்றேன். ஸெல்ஃபோனை உபயோகியுங்களேன் என்றேன். சார்ஜ் போயுடும், பாட்டுக் கேட்டுக் கொண்டே தூங்க முடியாது என்றார்கள்.

7.30 மணியாகி விட்டது.

சார், இங்க பாம்புங்க இருக்குமா?
நிறைய, சென்னைக்கு எடுத்துட்டுப் போறீங்களா?
ஜோக்கடிக்கிறீங்களா சார், கட்டில் மேல ஏறுமா?
எது விஷப் பாம்பா, விஷமில்லாத பாம்பா?
விஷமில்லாதது.
அது ஏறாது.
அய்யோ அப்போ விஷப் பாம்பு ஏறுமா?
அதுவும் ஏறாது. போய்ப் படுங்க. நான் தோட்டத்துல மரத்தடிலதான படுத்துட்ருக்கேன், என்னைக் கடிக்காம ஒங்களயா வந்து கடிக்கும்?
சரி. ஹ்ம்ம்
என்ன?
ஃபேன் இல்லன்னா தூக்கம் வராது சார்.
என்னப்பா, விளையாடறீங்களா? ஏது கரண்ட்! நீங்க உதவி பண்ணத்தான வந்திருக்கிறீங்க?
இல்ல சார், ஜென்செட் ஆன் பண்ணலாமே!
என்ன? டீஸல் வெல 250 ரூபாய் லிட்டருக்கு!
நாங்க டீஸலுக்கு துட்டு கொடுக்கறோம் சார், அப்டியே எங்க செல்ஃபோனையும் சார்ஜ் பண்ணிக்கறோம்,
சாரி, படுத்துக்குங்க. காலேல அஞ்சு மணிக்கு எழுப்பறேன். அஞ்சரையிலிருந்து வேலை செய்யலாம்.
ப்ளீஸ் சார் – கொசு, கரண்டே இல்லை.
பசங்களா, கொசுவலை கட்டிக் குடுத்தேனே. என்னாச்சு?
கொசுவலைக்குள்ள மூச்சு முட்டுது சார்.
ஜென்செட் போட முடியாது. நாம் மட்டும் உபயோகித்தால் அதன் பவர் வேஸ்ட். மேலும் மற்ற புழுங்கிக் கொண்டிருக்கும் இடங்களில் தூங்கிக் கொண்டிருக்கும் ஆட்களுக்கு அது நீதியில்லை. நான் மரத்தடியில் தூங்கவில்லையா என்ன?
ஒங்ளுக்கு பழக்கம் சார்.
“…”
எங்க அம்மா அப்பா கூப்டுவாங்க, அமெரிக்காலேர்ந்து ஸிஸ்டர் அப்டேட் கேட்பாங்க. வொடாஃபோன் டவரே கெடக்க மாட்டேன்றது
தம்பீ, போய்த் தூங்கு. காலேல பேசலாம்.

இரவு 12 மணி வரை ஏதோ செல்ஃபோன்களில் பேச்சுக்கள், இரவின் நிசப்தத்தைக் குலைத்துக் கொண்டு, உரக்கப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர். இவர்களுக்குத் தாங்கள் பிக்னிக் வந்திருக்கிறோம் என்ற எண்ணம் போலும் என நினைத்துக் கொண்டே தூங்கி விட்டேன்…

காலையில் 4 மணிக்கு எழுந்தேன். எங்கள் மீட்டிங் முடிந்து டீ+ கிச்சடி தயாரித்தோம். 5 மணிக்கு அந்த மாணவர்களை எழுப்ப ஆரம்பித்து, சலித்துப் போய், 5.15க்குப் போங்கடா என்று விட்டு விட்டேன்.

காலை 8.30 மணிக்கு அந்தப் பெண் மலங்கமலங்கேஷ்வரி, நான் வேலை செய்யும் இடத்திற்கு வந்தாள்.

பாத்ரூம்ல கொழாய்ல தண்ணியில்ல. குப்பை போட்றதுக்கு, டஸ்ட் பின் வேணும். என் ஃப்ரென்ட்ஸ் ஷேவிங் பண்ணிக்க கரன்ட் வேணும்.

அம்மா – நேத்தே சொன்னேனில்லையா ஒருத்தருக்கு, ஒரு நாளைக்கி ஒரு பக்கெட் தான்னிட்டு? அத்தனையும் உபயோகிச்சுடீங்களா? கரன்ட் இல்ல, குழாயெல்லாம் ஒடஞ்சிருச்சி – இதெல்லாம் ஒங்களுக்குத் தெரியும் தான? கொஞ்ச நாள் தாடிய செரச்சிக்கலன்னா என்ன பிரச்சின? இதுக்குத்தான, ஒடஞ்சதெல்லாம் சரி பண்றத்துக்குத் தான, சென்னையிலிருந்து இங்கு வந்திருக்கீங்கம்மா?

ஆமாம் சார், ஆனாக்க, இப்ப என்ன பண்றது. தண்ணீ வேணுமே!

சரி. இந்தப் பாதையில 200 மீ போனாக்க ஒரு தரை லெவல் சிமென்ட் தாமரைத்தடாகம் இருக்கும். அதிலேர்ந்து ஒரு வாளி எடுத்துக்கம்மா.

பத்து நிமிடத்திற்குப் பின்.- சார், அதுல எலைங்க ரொம்ப இருக்குதே!

பெண்ணே – வேறு நீர் இல்லை. இதெல்லாம் காட்டுப் பிரதேசம், அவசரத்துக்கு எங்கே வேணும்னாலும் ஒதுங்கலாம், மண்ணை, சத்தையைப் போட்டு மூடிடுங்க. ஒரு பிரச்சினையுமில்லை.

-0-0-0-0-0-

ஒரு வழியாக, காலை பத்து மணி வாக்கில் நான் வீழ்ந்த மரங்களை அறுத்துக் கொண்டிருந்த இடத்திற்கு வந்தார்கள்.

அடுத்த ஆறேழு மணி நேரங்களில் பல அனுபவங்கள், கருவிகளை வைத்து அவர்களால் ஒரு சுக்கும் செய்ய முடியாது என்று தெரிந்த பின்னர் அவர்கள் நான் முயன்ற வேலைகள்  – அவற்றில் ஐந்து மட்டும் இங்கு.

சங்கிலி அரம் எனும் செய்ன்-ஸா புராணம்: ”பசங்களா, இங்க ஒங்க காதுல செவிட்டுமெஷின் போட்டால் அது அபாயம். உங்கள் கவனம் தவறிவிடும். இது பெரிய மரங்கள், கிளைகள் விழுமிடம். கூரான, வேகமாகச் சுற்றும் கருவிகள் இயங்குமிடம்.” ஒரு வழியாக அவர்கள் தங்கள் இசைகேட்பான்கருவிகளை அணைத்தபின் – அனைவரும் செய்ன்-ஸாவில் அறுக்க ஆசையாக இருக்கிறது என்றார்கள். அடுத்த பத்து  நிமிடங்களில் எனக்குப் புரிந்து விட்டது – இது ஒத்து வராது என்று. இதில் ஒருவருக்கொருவர் பயமுறுத்தி வீரவிளையாட்டு வேறு! தொடர்ந்தால் அது வெற்றியே இல்லாத வீரமரணமாக மாத்திரம் மாறிவிடும் என்று எனக்குப் பட்டதால் அவர்களைக் கருவிகளில்லாமல் வெறும் சிரமதானம் செய்தால் போதும் என்று சொல்லிக் கழற்றி விட்டேன்.

பிட்டுக்குக் கூட மண் சுமக்காத புராணம்: சரி, இங்க வெட்டிப் போட்ருக்கற மரத் துண்டுகள வீல் பேரோ (wheel barrow)போட்டு மரசேமிப்பு ஷெட்ல போடுங்க. இதனை இவர்கள் வெறும் மூன்று முறை செய்வதற்குள் முழி (எனக்குப்) பிதுங்கி விட்டது. இத்தனைக்கும் ஆறு பேரும் சேர்ந்துதான் தள்ளி/இழுத்துக் கொண்டு போனார்கள்.  ஆனால், நான் ஒருவனே, இதனை மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து செய்திருக்கிறேன்.  சரி. ஸிமென்ட் கான்க்ரீட் கலவை செய்வார்களா, கலப்பார்களா எனப் பார்த்தேன். அவர்களுக்கு ஸிமென்ட்டுடன் மணல் சேர்ப்பார்கள் என்பதே தெரியவில்லை. (’ நாங்கள் ஸிவில் எஞ்சினீயரிங் படிக்கவில்லை’); எவ்வளவு விகிதாச்சாரம் என்று சொன்னாலும், அதை மனதில் பதிந்து கொள்ளாமல், கலவையைப் பாழடித்தார்கள்.  இதுவும் ஒரு பேட்ச் கலவை கலப்பிற்கு மேலே அவர்களுக்கு உடம்பில் திராணியில்லை. என்ன ஜிம், என்ன ஸிக்ஸ் பேக், என்ன மசுத்துக்கு பைஸெப்ஸ், ட்ரைஸெப்ஸ் – இப்படி அடிப்படை ஸ்டேமினா கூட இல்லாமல் என எனக்குக் கோபமாக வந்தது. (அவர்கள் கொல்ரு (’ட்ரொவெல்’) கொடுத்தால் கொத்தனார் வேலை செய்யத் தயார் என்றார்கள். என் முகத்தில் ஈயாடவில்லை)

கணினி சுத்திகரிப்புக் காதை: சரி, பசங்களா – மழை ஈரம் காரணமாக எங்கள் கணினிகள் மப்பில் இருக்கின்றன. கொஞ்சம் அவற்றைச் சுத்தம் செய்து (ஹ்ம்ம், என்ன, பெட்டிகளுக்குள்ளேயும் தான்!) அனைத்தையும் ஸ்டார்ட் செய்யுங்கள். அவற்றுக்குச் சிறிய யுபிஎஸ் இருக்கிறது. அந்த பேட்டரி டெர்மினல்களில் கொஞ்சம் க்ரீஸ் போடவேண்டும் கூட… அம்மம்மா! ஃபிலிப்ஸ் மரைகளை சாதாரண ஸ்க்ரூட்ரைவர் கொண்டு கூடக் கழட்டலாம் என்று அவர்களுக்கு உதிக்கவில்லை. அடிப்படை கணினித் தொடர்புகள் தெரியவில்லை. கணினியல் (ஏறக்குறைய) பட்டதாரிகளுக்கு எப்படி ரேம்-ஐ மதர்போர்ட் துளைகளிலிருந்து பிடுங்குவது என்று தெரியவில்லை.   எனக்கு, நிமிடத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு! பையோஸ் பேட்டரி என்று ஒன்று இருப்பதையே அன்றுதான் அறிந்தார்கள். அழுத்தித் துடைத்து ஒரு 1 ஜிபி ஸிம் கார்டை உடைத்தார்கள் வேறு. எனக்குப் பொறுக்கவில்லை.

பாடம் சொல்லிப் புராணம்: குறைந்த பட்சம் இங்க வந்திருக்கற குட்டிப் பசங்களுக்குக் பாடம் நடத்த முடியுமா? கணக்கு அறிவியல்னு கூட வேண்டாம். கதை-கித ஏதாவது சொல்ல முடியுமா?  எப்படி படிச்சு நீங்க இந்த மாதிரியானீங்கன்னு நெறய சொல்லலாமே! ஏதாவது புதிர்கள்? சைக்லோன் பற்றிச் சொல்லலாமே! மரம் பத்தி தாவரவியல் செய்திகள் சொல்லலாமே! மன்னிக்கவும். எங்களால் முடியாது. ஏனென்றால்  1) வெட்கம். 2) தெரியாது. 3) நாங்க ரொம்ப நாள் முன்னாடி பட்ச்சத மறந்துட்டோம். 4)  நாங்க எங்க கையால வேல செய்ய வந்திருக்கோம் சார், பாடமெடுக்க வரல்ல.

மாடுவிரட்டி ஜல்லிக்கட்டுப் புராணம்: சரி, எனக்கு எப்படி நீங்கள் உதவ முடியும் என்று தெரியவில்லையே! ஹ்ம்ம்ம். எங்கள் வேலிகள் பல இடங்களில் உடைந்திருப்பதால், சேதமடைந்திருப்பதால் மாட்டுக் கூட்டங்கள் அவற்றுள் புகுந்து வந்து எங்களுடைய சிறிய காய்கறித் தோட்டத்தைப் பதம் பார்த்துக்கொண்டிருக்கின்றன. குறுக்கே ஓடி, எங்கள் வேலைகளுக்குத் தொந்திரவாகவும் இருக்கின்றன. ஆக, இந்த மந்தைகளை விரட்டி  வேலி ஓட்டைகளை முட்கிளைகளைப் போட்டு மூட வேண்டும்.

ப்ரஹஸ்பதிப் பொறியாளர்கள் உடனே வேலையில் இறங்கினர். முதலில் அவர்கள் வேலி ஓட்டைகளை மூடினர். அடுத்த அரை மணி நேரம், வீர மாணவ மறவர்களால் விரட்டப் பட்டு, பீதியடைந்த பாவப்பட்ட மாடுகள் எங்கள் வளாகத்தைச் சுற்றிச் சுற்றி வெறி கொண்டு, வாயோர நுரைதள்ள ஓடிக் கொண்டிருந்தன. ஒரே புழுதி மயம். அந்த மாணவர்களுக்குக் கொண்டாட்டம். டிஜிட்டல் புகைப்படங்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தனர்.  மின்சாரக் கம்பிகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்த எனக்கு என்னுடைய பயந்துபோன சகாவிடமிருந்து ஃபோன் வர, நான் கம்பத்தில் இருந்து அவசரம் அவசரமாக சிராய்ப்புகளுடன் இறங்கி – தலையில் அடித்துக் கொண்டு ஓடிப் போய், இரண்டு வேலியுடைப்புகளைத் திறந்து விட்டு, வளாகத்தின் இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருந்த ஜல்லிக்கட்டு பக்கம் மூச்சிரைக்க ஒடினேன். ஒரு அப்பாவிக் கன்றுக்குட்டியின் வாலைத் திருகி அதற்குப் பாடம் கற்பித்து விரட்டிக் கொண்டிருந்த  அரைகுறை மாணவர்களைத் திட்டி, அவர்களை நிறுத்தி (ஹ்ம்ம் மூன்றே பேர் தான் அங்கு, மிச்சம் எங்கே?) மிகவும் யோசிக்காமல் மெதுவாக மந்தைகளை நான்  திறந்து விட்டிருந்த இரண்டு வேலியுடைப்புகளை நோக்கி விரட்டி முன்னேறினேன்.  மந்தைகள் கொஞ்சம் வேகமெடுத்து, அந்த இடத்துக்குச் சென்றதும் தான் எனக்குத் தெரிந்தது – அங்கு இரண்டு முட்டாள் மாணவர்கள், திரும்ப அந்த வேலியுடைப்புகளை அடைத்து விட்டு குதூகலமாக எங்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தது – அதாவது  முன்னேறிக் கொண்டிருந்த, குழப்பமடைந்திருந்த மந்தைகளை  நோக்கி! மேதகு குமாரி மலங்கமலங்கேஷ்வரி அவர்கள், ஒரு முந்திரி மரக் கிளையிலிருந்து தொங்கிக் கொண்டு புகைப் படம் எடுத்துக் கொண்டிருந்தார்.

ஹோ என்று கத்திக் கொண்டு அந்த ஐந்து அரைகுறை மாணவர்கள் எல்லா பக்கங்களிலிருந்தும் (மாடுகளுக்கு தப்பி ஓடுவதற்கு ஒரு திசையும் மிச்சம் வைக்காமல்) அரண்டு போன மந்தைகளை நோக்கி ஓடினார்கள்! எனக்கு நம்பவே முடியவில்லை, இந்த முட்டாள்தனம்!

எனக்கு வேர்த்து விட்டது. கண் முன்னால் அந்த முட்டாள் மாணவர்கள் கொம்புகளால் குத்தப் பட்டு, குளம்புகளால்  நசுக்கப் பட்டு, பாடம் கற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்று. ஆனால், பிரம்மப் பிரயத்தனம் செய்து எப்படியோ அடுத்த 15 நிமிடங்களில், இந்த முட்டாள்களுக்கும், மாடுகளுக்கும் ஒரு சேதமும் இல்லாமல் பின்னவற்றை வெளியில் துரத்தினேன்…

ஆனால் அந்த மாணவ மணிகளுக்கு இது பற்றியெல்லாம் ஒரு ப்ரக்ஞையும் இல்லை, தங்கள் மாடுவிரட்டும் தந்திரோபாயங்களை வெகுவாகச் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தனர்… மலங்கமலங்கேஷ்வரி அவள் எடுத்த புகைப்படங்களை அந்த வெட்டிப் பயல்களுக்குக் காட்டிக் கொண்டிருந்தாள்…

எனக்கு உடனே வந்த – அந்த சங்கிலி அரத்தை வைத்து அவர்கள் தலைகளை ஒட்ட நறுக்கி வீச வேண்டும் – என்ற வெறியை, பின்னர் நான் தானே அந்த அரத்தைச் சுத்தம் செய்யவேண்டும் என்பதால் விட்டேன்.

-0-0-0-0-0-0-

ஒரு கருவியையும் அது என்ன என்பது கூடத் தெரியவில்லை. உபயோகிக்கத் தெரியவில்லை. தெரிந்து கொள்ளும் முனைப்பும் இல்லை. மெக்கானிகல் பையன்களுக்கு ரிங் ஸ்பேன்னருக்கும் டபிள்ஹெட் ஸ்பேன்னருக்கும் கூட வித்யாசம் தெரியவில்லை. ஏன் இந்த ஸ்பேன்னர்களுக்கு இப்படி எண் வரிசைகள் என்றும் தெரியவில்லை. ஒரு பொடலங்கா ஸ்க்ரூட்ரைவரை சரியாக உபயோகிக்கத் தெரியவில்லை. மின்னியல் பையனுக்கு இன்வெர்டரின் அடிப்படை தெரியவில்லை. டிஸி மின்சாரம் ஷாக் அடிக்காது என்று குண்டுதைரியமாகச்  சொல்கிறான். கணினியியல் காரர்களுக்கு கம்ப்யூட்டரின் தகரடப்பாவே ‘ஸிபியு!’

அரசியல் அறிவு = 0; கலை, இலக்கிய அறிவு = (-)100000000; செயலூக்கம் = (-)20000000 (விதிவிலக்குகள்: அப்பன் செலவில் ஊர் சுற்றுதல், பண/நேர விரயம் செய்தல், செல்ஃபோன் பேசுதல், குறுஞ்செய்தி அனுப்புதல், ஃபேஸ்புக்)

இந்த மாணவர்களுக்கு ஒரு விதமான திறமையும், பயிற்சியும், அனுபவமும் இல்லை. ஆனாலும், இது பரவாயில்லை,  நிச்சயம் சரி செய்து விடக் கூடியதுதான். ஆனால், அவர்களுக்கு இவற்றிலெல்லாம் ஒரு மண்ணும் ஈடுபாடு இல்லை என்கிற விஷயம் கூட அவர்களுக்கே தெரியவில்லை. பின்னது மிகவும் சோகம். மிகமிகச் சோகம்! சோகமோதி சோகம். அவர்களுடைய அனுபவங்கள் எல்லாம் அதிக பட்சம் கடன் வாங்கப் பட்டவையே! சிந்திக்கவே நேரம் இல்லாமல், பயிற்சி இல்லாமல், வெறும் இந்த்ரிய இன்பங்களைத் துய்த்துப் புளகாங்கிதம் அடைவதிலேயே இருக்கிறார்கள். டன்னிங்-க்ரூகர் விளைவின் படு மோசமான குழந்தைகள், வேறென்ன சொல்ல. இவர்களின் ஆசிரியர்களை, கல்லூரிகளையே விடுங்கள் – பெற்றோர்கள் என்ன மசுத்தைப் பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்? தண்டக் கருமாந்திரப் பிள்ளைங்களுக்கு வண்டி வாங்கிக் கொடுத்து பெட்ரோல் செலவுக்கு, பீடிக்குப் பணம் கொடுக்கிறார்கள். முட்டாள்கள்.

அவர்களுக்கு ஒரு கருவியைப் பார்த்தால், உடனே அதனைப் பற்றிய சகல விவரங்களும் புரிந்து விட்டது என நினைக்கிறார்கள். அதனுடன் ஒரு க்ரூப் ஃபோட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். அவ்வளவு மட்டுமல்ல. கஷ்டப் பட்டு புகைப்படங்கள் எடுத்தவுடன், அந்தக் கருவியை உபயோகித்து வேலை எல்லாம் திறமையாகச் செய்துவிட்டதாக வேறு நினைத்துக் கொள்கிறார்கள். உடனே  ஃபேஸ்புக்கில் படம் போட்டால் சுபம் என்று முடித்து விடுகிறார்கள். இவர்கள் என்ன வகை மரீஹ்வானா புகைக்கிறார்கள் என்று எனக்குத் தெரிந்தால், அதனை நானும் உபயோகிக்க வேண்டும் போல!

-0-0-0-0-0-

அவ்வப்போது இவர்கள் உதிர்த்த அறிவுரைகள், பட்ட ஆச்சரியங்கள், கேட்ட கேள்விகள் (எடுத்துக்காட்டுகள் மட்டுமே! ஒரு ஐம்பது அறுபது கேள்விகள் போல இம்மாதிரி என்னைக் கேட்டிருப்பார்கள்)

  • பசங்க ஒங்கள பேர் சொல்லிக் கூப்ட்றாங்க. பெரியவங்கள மதிக்க கத்துக் குடுங்க சார். எங்க காலேஜ்ல இப்படி மரியாத இல்லாம கூப்டா பெரம்பாலயே அடிப்பாரு அறங்காவலர்.
  • ஏன் சார் தமிழ் வழிக் கல்வியில்லையா? ஏன் நம்ம கிராம மக்களுக்கு ஏன் தமிழ்ல கத்துக் கொடுக்க மாட்றீங்க? அது போதாதா அவங்களுக்கு?
  • ஏன் சார் அவ்ங்க இங்க்லீஷ்லயே ஒங்ககூட பேசறாங்க?
  • ஸ்கூல் சாப்பாடு ஆர்கனிக் காய்கறிகள் வெச்சு செய்றீங்களா?
  • இவங்களுக்கு படிப்பு மட்டும் சொல்லிக் கொட்த்தா போதுமா சார்? வேலை வாய்ப்பையும் உருவாக்கித் தரமாட்டீங்க்ளா?
  • ஏன் சார் இவங்க யுனிஃபார்ம் போடணும்? அவங்களோட தனித்தன்மையக் காட்ட விடமாட்டீங்களா? (விசுவின் அசட்டை அரங்க பாதிப்பு?)
  • ஏன் சார் அவ்ங்க வேல பண்ணும்போது ’ரிலாக்ஸா’ சினிமா பாட்டு கேக்க அல்லவ் பண்ண மாட்றீங்க?
  • ஸெக்ஸ் எஜுகேஷன் எல்லாம் உண்டா சார், பெரிய பசங்களுக்கு?
  • வெய்யில்ல வேல செஞ்சா ஒடம்பு கருத்திருமா சார்?
  • ஏன் சார் அவ்ங்க வேற மொழில [ஃப்ரென்ச்] பேசிச் சிரிச்சுக்கறாங்க, எங்களைப் பத்தியா பேசறாங்க?

இவை எதற்கும் நான் பதிலளிக்கவில்லை. சிரித்துக் கொண்டே வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். உதவ வந்திருந்த என்னுடைய சில மாணவர்களுக்கும் இந்தக் காலி டப்பாக்களைப் (ஒரு டப்பியையும்) பற்றிப் புரிந்துகொண்டு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஓரளவுக்கு மேல் நான் என் மாணவர்களை ‘இப்படிப் பேசாதீர்கள்’ எனச் சொல்லவும் இல்லை. ஆக, மன அழுத்தமும் குறைந்தது. இரவு என் குறிப்பேட்டில் இவர்கள் கேள்வி ஞானத்தை எழுதி வைத்துக் கொண்டேன் – இப்போது உபயோகித்திருக்கிறேன்.

-0-0-0-0-0-

ரொமான்டிக் ஆக யோசித்து, ஏதோ, தமிழக கிராமப்புறத்தில் அறியாமையிலும் ஏழ்மையிலும் உழன்று கொண்டிருக்கும் அரைக்கோவண மனிதர்களை, புயலின் ஆவேசத்திலிருந்து காப்பாற்ற – பெரிய மனிதர்களாகிய, கலைகள் பல கற்ற அந்த இளைஞர்கள் ஏதோ செய்ய வேண்டும், உதவ வேண்டும் என நினைத்து வந்திருக்கிறார்கள்.

என்னதான் அது என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை, பாவம். எனக்கும் தான் அது என்னவென்று தெரியவில்லை.

ஆனால், I don’t suffer fools gladly. நேரமும் இல்லை. பொறுமையும் இல்லை.

பள்ளி அறங்காவலரிடம் ‘நான் இன்னொருஇரவு இவர்களுடன் இருக்கமுடியாது’ என்று கண்டிப்பாகச் சொல்லி, அந்த மாணவர்களிடம் – ரொம்ப நன்றி, இனிமே ஒங்க உதவி தேவையில்ல, நீங்க சென்னைக்குத் திரும்பப் போய்விடலாம், உங்கள் விருப்பம் – என்று சொல்லி அவர்களை அன்றே அனுப்புமாறு சொன்னேன்.

அவர்களுக்கும் தாங்கள் உதவி செய்து, சுறுசுறுப்பாகச் செவ்வனே பணி செய்து எங்கள் வேலைகளைச் சுளுவாக்கி, எங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி விட்டதற்காக மிகவும் சந்தோஷம். கொஞ்சம் புளகாங்கிதமெல்லாம் அடங்கியதும் பின்னர், அந்த மாணவர்கள் பள்ளி அறங்காவலரிடம் கேட்டிருக்கிறார்கள் (என்ன குண்டு தைரியம்!) – நாங்க அந்த செய்ன்-ஸாவை கையில் வைத்துக் கொண்டு, அதை ‘ஆன்’ செய்யாமல், மரத்தை அறுப்பது போல புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாமா? அது ஃபேஸ்புக்கில் போடுவதற்காக மட்டும் தான். மிஸ்யூஸ் பண்ண மாட்டோம்.

எனக்கு அவர் ஃபோன் செய்தார். முடியுமா எனச் சுரத்தே இல்லாமல் கேட்டார். நான் என்ன சொல்லியிருப்பேன் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன். இல்லையில்லை, விடவில்லை – அவருக்கும் ஹிந்தி தெரியும். ஆகவே சில பொறுக்கியெடுக்கப் பட்ட பொறுக்கி வார்த்தைகளை உபயோகித்து, ஒரு சிறு அர்ச்சனை செய்தேன் – இந்தப் பயல்களால், என் முட்டாள்தனத்தால் நான் இழந்த பல மணி நேரங்களை நொந்து கொண்டு.

அவர் ஒன்றும் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, சொன்னார்: இரண்டு கேள்விகள் – ஒன்று, நீ இவர்களிடம், அவர்களுடைய இந்த அனுபவத்தின் மேலான கருத்துக்களை (ஃபீட்பேக்) வாங்குகிறாயா, இரண்டு, அவர்களை வேறு ஏதாவது கிராமப் புனரமைப்புக் குழுக்களுக்கு அனுப்பலாமா?

என் பதில்: ஒன்று – நாம் முதலில் அவர்களுக்கு ஃபீட்ஃபார்வேர்ட் கொடுக்கலாம், அவர்களைப் பற்றிய என் கருத்துக்களை முதலில் சொல்லி விட்டு வேண்டுமானால், அவர்களை ஃபீட்பேக் கேட்கலாம். இது இருவழிச்சாலை. இரண்டு – உங்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?

சிரித்துக் கொண்டு தொலைபேசியை வைத்து விட்டார். சுபம்.

ஹ்ம்ம்? சுபமில்லை. இவர்கள் விட்டுச்சென்ற குப்பைகள், கெடுத்த வேலைகள், கழிவறை அடைப்புக்கள், கந்தறகோளமாக்கியிருந்த டூல்ஷெட்… அனைத்தையும் சரியாக்க எனக்கு ஐந்து மணிநேரங்களாயின.

-0-0-0-0-0-

எனக்கு இந்த குறிப்பிட்ட இளைஞர்கள் மேல் ஒரு தனிப்பட்ட பிணக்கும் இல்லை.

அவர்கள் அறிவுரைகளையும் கேட்டுக் கொள்ளத் தயார்தான் நான். எப்பொருள் ‘ஸ்டூடென்ட்’ வாயே கேட்டாலும் கூட, அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது என் அறிவும்தான்.

ஆனால், இவர்களுக்கு வாய் ஒயாது பேசும், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும், தொடர்ந்து செவிட்டு மெஷினைக் காதில் மாட்டிக் கொண்டு கண்ணில் ஒளியில்லாமல் இருப்பதும் (என்ன தான் எழவு அந்த இசையோ!), அச்சந்தர்ப்பமாக டிஜிட்டல் காமெரா படமெடுக்கும் திறமைகளைத் தவிர – வேறெந்த திறமையையும், அறிவையும், ஏன், மீஅறிதல் – மெட்டா-காக்னிஷன் திறமையையும் கொடுக்காத கல்வி என்ன மசுத்துக்குக் கல்வி?

இந்த இளைஞர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம், மனித நேயம் என்றெல்லாம் இல்லாமலில்லை – ஆனால்,  ஒரு விதத் திறமையும் இல்லாமல், வெறும் மேலோட்டமான ’ஃபேஸ்புக்கில் இதைப் பற்றி ரெண்டு படம் தேத்தலாம்’ என்பது போன்ற ஆவலை மட்டும் வைத்துக் கொண்டு அவர்களால், என்ன செய்ய முடியும். அதிக பட்சம், நடக்கும் வேலைகளை ஸ்தம்பிக்க வைக்கத்தான் முடியும்.

I am sorry. I think, good intentions are overrated. And, of course, the path to hell is paved with good intentions.

-0-0-0-0-0-

பத்ரி சேஷாத்ரி கேட்கிறார் – எல்லாம் சரி. ஸ்ரீலங்கா பிரச்சினைக்கு நம் தமிழ் மாணவர்கள் என்னதான் செய்ய வேண்டுமென்று சொல்கிறாய் என்று. அவருடைய கரிசனமும், பதட்டமும், என் மேலுள்ள கோபமும், எரிச்சலும் புரிகிறது.

ஆனால், என்னுடைய மிகக் குறைந்த அனுபவத்தில் நான் சொல்வேன் – அவர்கள் தங்கள் உபயோககரமான திறமைகளை  — பன்மையையே விடுங்கள் – ஏதாவது ஒரே ஒரு துறையில் திறமையை), இப்போதுள்ள 0% அளவிலிருந்து, அதிக பட்சம் 5% வரை (மன்னிக்கவும், இது கொஞ்சம் அதிகம்தான்) வளர்த்திக் கொண்டால் – பின்னர் அவர்கள் என்ன செய்யலாம் என யோசிக்கலாம்.

தெளிவாகச் சொல்லப் போனால் – ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ புகழ் மாணவர்களே! முதலில் கூரையேறிக் கோழி பிடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள், பின்னர் வானமேறி வைகுந்தம் போகலாம்.

கூரையேறுவது கடினம்தான், ஒப்புக் கொள்கிறேன். கீழே விழுந்தால் சிராய்க்கும். இதற்கும் பயிற்சி எடுக்க முனைய வேண்டும். அதுவரை நவத்துவாரங்களையும் மூடிக்கொண்டு, சிந்தியுங்கள்.

இதற்கெல்லாம், இந்த கவைக்குதவாத வேலைகளுக்கும் திறமை வளர்த்தெடுத்தல்களுக்கும், குவிந்த கடுமையான முனைவுகளுக்கும் – நேரமில்லாத பட்சத்தில் ( நீங்களெல்லாம் படுபிஸி, எனக்குத் தெரியாதா!) ,  நீங்கள், தாராளமாக போர் ஆட்டங்கள் ஆடலாம்.

ஆனால், மாணவர்களே! தயவுசெய்து என் பள்ளி வாகனத்தின் மீது இனிமேல் கல் எறியாதீர்கள் – அதன் முன் கண்ணாடிகளை உடைத்தது போதும். ஆனால், உங்கள் வருத்தம் புரிகிறது – ஒரேயொரு குழந்தைக்குத் தான் கண்ணாடி உடைந்து, சில்லு பறந்துதைத்து அடிபட்டது – ஆனால் அது போதுமல்லவா? ஓ! வண்டிக்கு ரையட் க்ளாஸில் காப்பீடு கிடைக்குமே, ஏன் கேட்கிறாய் என்கிறீர்களா? சரிதான். ஜிப்மர் மருத்துவமனையும் இலவசம் தானே என்று சுட்டிக் காட்டுகிறீர்களா? அதுவும் சரிதான்.

ஆனால், .., ஆனால், என் பள்ளிக்கு அருகில் நீங்கள் போட்ட போராட்ட ஷாமியானாவைச் சுற்றிக் குப்பையோதிகுப்பை போட்டதாவது போதுமல்லவா? திருப்திதானே? நன்றி. நாங்களே உங்கள் குப்பைகளை அகற்றி விட்டோம்.

உங்களுக்கு அதற்கெல்லாம் நேரம் இருக்காது என்பது எங்களுக்குத் தெரியும். பாவம் இளைஞர்கள் நீங்கள் – எவ்வளவோ வேலைகள் உங்களுக்கு —  ஐநா சபைக்கு அறிவுரை, கருணாநிதிக்குத் துரோகி பட்டம், அமெரிக்காவுக்கு ஆணை, இந்திய அரசுக்கு எச்சரிக்கை, உலகத் தமிழர்களுக்கு அறைகூவல்கள், ராஜபக்ஷவுக்குத் தூக்கு – இது போறாததற்கு தொலைக்காட்சி நேர்காணல்கள், கல்லெறியல்கள், குப்பை போடல்கள், அடை (அவியல்) ஆள உண்ணாவிரதங்கள்… ….  கடவுளே!!!

… இந்தக் குப்பைக்கூளங்களையும் ஆர்பரிப்பையும், கல்லெறிதல்களையும், உண்ணா விரதத்துக்குப் பின் கொண்டாடிய உண்ணும் விரதத்தையும் பார்த்து — ஏதோ அமெரிக்கா பெரிய மனசு பண்ணி ராஜபக்ஷவை தூக்கில் போட்டால் எங்களுக்கும் சந்தோஷம். சரிதானே?

ஹெல்லொ, இன்னொரு விஷயம் – கேட்க மறந்து விட்டேன். அந்தப் ராஜபக்ஷ தூக்கு ஃப்லெக்ஸ் பேனர் தட்டிகளை கொஞ்சம் இங்கே கொடுத்தீர்களானால், எங்கள் பள்ளிச் சமையலறையின், ஒழுகும் கூரைமேல் போர்த்தி  உபயோகிப்போம். அடுக்கி வைத்துள்ள விறகுகளைப் போர்த்தி வைக்கவும் அவை உதவும். பொறுப்பாகப் படிக்கிற பிள்ளைகள், நீங்கள் – உங்களுக்குத் தெரியாதா என்ன – ஜூலை மாதம் முதல் பருவகால மழை வரலாம் பாருங்கள்.

என்ன? ராஜபக்ஷ-வுக்கு ஜே என்று சொல்லக் கூடாதா? சரி. சொல்லவில்லை. மன்னிக்கவும்.

எப்படியாவது ஈழப் பிரச்சினையை, தேவரீர் நீங்கள் தீர்த்தால் சரிதான்.

நன்றி. வணக்கம்.

‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ நெடு நாள் வாழ்க, வாழ்கவே!

-0-0-0-0-0-

எனக்குப் படிப்பினை: என் குழந்தைகள், என் கண்மணிகள் – பலவித திறமைகளுடன் இருக்க வேண்டும். தொடர்ந்து முனைவோர்களாக, முட்டி மோதிக் காரியங்களைச் சாதிப்பவர்களாக இருக்க வேண்டும். தொடர்ந்து கல்வி (வெறும் ஏட்டுச்சுரைக்காயம் அல்ல) பயிலும் மனப்பான்மை உடையவர்களாக இருக்க வேண்டும். குறை சொல்வதை மட்டும் ஒரு கலையாக பாவிக்காமல் இருக்கவேண்டும். தொழில் / சுய தர்மங்களைக் கடைபிடிப்பவர்களாக இருக்க வேண்டும்.  அரைகுறை / அரைவேக்காட்டுத் தன்மையினராக, பூமிக்குப் பாரமாக இருக்கவே கூடாது. முடிந்தால் தேவையானால் மட்டுமே, மனித நேயத்துடன் இருக்க வேண்டும். இருப்பார்கள், என்பது என் அவா, என் நம்பிக்கை.

எனக்குப் பிடித்த ராபர்ட் ஹென்லென் சொல்வது போல…

“A human being should be able to change a diaper, plan an invasion, butcher a hog, conn a ship, design a building, write a sonnet, balance accounts, build a wall, set a bone, comfort the dying, take orders, give orders, cooperate, act alone, solve equations, analyze a new problem, pitch manure, program a computer, cook a tasty meal, fight efficiently, die gallantly. Specialization is for Insects.”

எனக்குப் பிடித்த சுப்ரமண்ய பாரதி சொல்வது போல:

கிழவனுடைய   அறிவு முதிர்ச்சியும்   
நடு வயதினனுக்குள்ள மனத் திடனும்   
இளைஞனுடைய உத்ஸாகமும்   
குழந்தையின் ஹ்ருதயமும்    தேவர்களே,
எனக்கு எப்போதும்    நிலைத்திருக்கும்படி அருள் செய்க…

ஆனால், நான் நம்பாத தேவர்கள் எனக்கு அருள் புரிவார்களா?

-0-0-0-0-0-0-

பின் குறிப்பு: என்னை வெறுப்பூட்டிய கேள்வி, பின்னர், என் மாணவர்கள் என்னிடம் கேட்டது – ”ஏன் ராம், நீங்க பட்ச்ச காலேஜ்ல படிக்ற ஸ்டூடென்ட்னு சொன்னாங்க – ஆனா வந்த சார், டம்மிபீஸாக இருந்தாரே, ஒரு ஜோக்கு கூட அடிக்கலையே?  நீங்க நெஜம்மாவே அங்கியா படிச்சீங்க??”

தொடர்புள்ள பதிவுகள்:

12 Responses to “மொதல்ல மாட ஓட்டக் கத்துக்குங்கடா, அப்றம் புத்தபிக்‌ஷுக்கள தெர்த்தலாம்…”

  1. marubadiyumpookkum Says:

    you recorded and posted the reality and present attitude of students esp.college students. 100% I am with your views sir. vanakkam. thank u.


  2. உங்களை ஒருமுறை பார்க்கணும்னு தோணுது!

  3. gokulraj Says:

    ஐயா, நீங்க அந்த இளைஞர்களோட அறியாமையை அவங்ககளுக்கு ஏன் புரியவைக்கலா. நீங்க சொல்லற நல்ல விஷயங்கள் உங்களோட மாணவர்களுக்கு மட்டும்தானா?

    இந்த கேள்வி கேட்பதனால் நான் பெரிசா சாதிச்சவனு சொல்ல முடியாது. என்னோட இந்த கேள்வி அறியாமையினால் கூட இருக்கலாம். அந்த மாணவர்களை அடிப்படையா வச்சு நீங்க கேட்க்குற கேள்விகளோடு என்ன பொறுத்தி பாக்கும் கிடைக்கிற பதில்கள் மௌனம் மட்டுமே.

    • ramasami Says:

      கோகுல்ராஜ்,

      எப்பொழுது கேள்விப்படும் விஷயங்களை நம் வாழ்க்கை அனுபவத்துடன் விரித்துப் படிக்கிறோமோ, நம்மை நாமே கேள்விக்குட்படுத்துகிறோமோ, அப்போதே மீஅறிதல் இருக்கிறது என்பது தெளிவு.

      ஆனால் இந்த இளைஞர்கள் அறிவுரை மாற்றி அறிவுரை கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். காதால் பாடல்களை அல்லது ஸெல்ஃபோன் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு சிறிய சந்து கூட எனக்குக் கொடுக்கவில்லை. எனக்கோ அலுப்பு. இவர்களுக்கு ஏதாவது உருப்படியாகச் சொல்வதன் ஆப்பர்சுனிட்டி காஸ்ட் அதிகம் என நினைத்தேன். அதனால்தான்.

  4. Prabhu Raja Says:

    அருமையான பதிவு, இன்றைய மாணவர்களின் நிலை இதுவே, காலையில் விசைதறி ஓட்டி மாலையில் படித்தால் வேலையின் அருமையும் பணத்தின் அருமையும் தெரியும். 15 வயதில் smartphone 18 வயதில் வாகனம் கிடைத்தால் இதுதான் நடக்கும், கடிணமான வேலைகளை விடுங்கள், குறைந்த பட்சம் இவர்களின் “final year project” இன்று எத்தனை மாணவர்கள் சுயமாக செய்கிறார்கள்?

  5. surya Says:

    i would greatly appreciate you views on current educational system and syllabus. The teachers who are teaching this “system” and their ability to take the student community forward.
    Clay (or rock) can be moulded to any shape!! you know isn’t it.
    -Surya

  6. vasudevan Says:

    அருமையான பதிவு!

  7. பூவண்ணன் Says:

    சார் உங்க அறசீற்றம் என்னை ஆச்சரிய பட வைக்கிறது.
    தமிழகத்தில் உள்ள மாணவர்கள் எல்லாம் ஒன்றும் தெரியாதவர்கள்,உங்களிடம் படிப்பவர்களை தவிர என்ற உண்மை பிரமிப்பை ஏற்படுத்துகிறது
    நீங்கள் திட்டும் இதே மாணவர்களில் இருந்து தான் பல ஆயிரம் பேர் ஒவ்வொரு ஆண்டும்,ராணுவம்,விமானபடை,துணை ராணுவ படைகளில் சேர்ந்து பனி சதுக்கங்களில்,பாலைவனங்களில்,அடர்ந்த காடுகளில் பணி புரிகிறார்கள்
    IIT ,குறிப்பிட்ட பொறியியல் கல்லூரிகளில் மட்டும் மாணவர்கள் படிப்பது போல அவர்களை வைத்து மாணவர்களை பற்றி ஒரு உருவகத்தை கட்டமைத்து கொண்டு நக்கல் அடிப்பது உங்களை போன்ற களப்பணியாளருக்கு அழகா
    முப்பது கிலோ எடையை தூக்கி கொண்டு ,துப்பாக்கியோடு ஐந்து கிலோமீட்டர் தூரத்தை 25 நிமிடத்தில் ஓடினால்,அந்த எடையோடு 22 அடி உயர நீல்கயிற்றில் ஏறி உச்சியை தொட்டால் தான் பயிற்சி முடிந்து ராணுவ வீரராக சேர முடியும்.ஒவ்வொரு ஆண்டும் ஊட்டியில் உள்ள மெட்ராஸ் REGIMENTAL சென்டர் சென்று பாருங்களேன் ,அங்கு எந்த பள்ளி மாணவர்கள் சேர்ந்து,பயிற்சி பெற்று தகுதி பெறுகிறார்கள் என்று
    தானே புயலால் பத்து நாட்களுக்கு வாழ்ந்த வாழ்க்கையை விட கடின வாழக்கையை வருடக்கணக்கில் வாழும் இவர்களில் பெரும்பாலோர் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் தான்
    நீங்கள் கிண்டல் செய்யும் கல்லூரி மாணவர்கள் போன்ற பலர் கூட நண்பர்களோடு சரக்கு அடிக்க தடா சென்று காடு ,மேடு ஏறி ,நான்கு ரவுண்டு உள்ளே போன பிறகு கொசுவா,புலிக்கு கூட அஞ்சாமல் காட்டில் கொசுவலை கூட இல்லாமல் உறங்குவார்கள்
    மாமல்லபுரத்தில் சரக்கு தரும் தைரியத்தில் உயிருக்கு அஞ்சாமல் சாஹாசம் புரியும் பலரை இன்றும் பார்க்கலாம்.
    உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தவர்களை நக்கல் அடிக்கும் உங்கள் சீரிய பணி கண்களை பணிக்க வைக்கிறது.
    நான் கூட ஒன்றுக்கும் உதவாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று நினைத்து கொண்டிருந்தேன்.ஆனால் ஏன் வீட்டின் அருகே மதியம்,இரவு பல தாய்மார்கள் குழந்தையோடு காணப்படுவர். என் மனைவியிடம் விசாரித்த போது பெரிய மீசை வைத்து கொண்டு சரக்கால் சிவந்த கண்களை கொண்ட என்னை காட்டி தான் அவர்கள் குழந்தைகளுக்கு சோறு ஊட்டுகிரார்களாம்,வால்தனம் செய்தால் பிடித்து கொடுத்து விடுவேன் என்று அவர்களை நல்வழிபடுத்துகிரார்கலாம்.மக்களுக்கு எப்படி எல்லாம் உதவ முடிகிறது பாருங்கள்

    • ramasami Says:

      அறச்சீற்றம் என்றெல்லாம் இல்லை. இன்னும் செல்ல வேண்டிய தூரம் பற்றிய ஆற்றாமைதான்.

      நீங்கள் சொல்வது போல பல இளைஞர்களை நானும் பார்த்திருக்கிறேன், பழகியிருக்கிறேன், பழகிக் கொண்டிருக்கிறேன். இந்த இளைஞர்களுக்கு அடிப்படை தார்மீகச் சக்தி, மனவலி, உடல்வலி, ’ஹக்’ எல்லாம் இருக்கிறது. ஆனால் இவர்கள் கல்லெறிகிறார்களா? குப்பை போடுகிறார்களா? ஆக, நான் சொல்வது, பேசுவது இவர்களைப் பற்றி அல்ல. வெள்ளை வெள்யாட்டுச் செச்சைகளைப் பற்றிமட்டுமே பேசுகிறேன்.

      இன்னொன்று: நான் என் எண்ணங்களைப் பதிவு செய்கிறேன். நீங்கள் அதனை ஒப்புக் கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கவில்லை. இது இரு வழிச் சாலைதான்.

      இரண்டாவது: பொதுவாக, இந்த மாணவச் செச்சைகளுக்குப் புகழ்மாலைகள்தான் கிடைக்கின்றன. நான் இன்னொரு பக்கக் கருத்துக்களைக் கொடுக்க முயல்கிறேன், அவ்வளவே!

      Leaky Barrel Theory என்று ஒன்று உள்ளது. அதாவது ஒரு மூடப்பட்ட அண்டாவிலிருந்து ஒழுகுவது எண்ணெயானால, அந்த முழு அண்டாவிலும் எண்ணெய் தானிருக்கும் எனும் வாதம். இது கறாரான தர்க்க வாதத்துக்கு ஒத்து வராது. மானுடம் தொடர்பானவைகளுக்கும் ஒத்து வராது. நீங்கள் இந்தக் கோட்பாட்டைச் சார்ந்து இருக்கிறீர்களோ?

      தொடர்ந்து கிண்டல் செய்வதை(யும்) வரவேற்கிறேன். 8-)

      • poovannan Says:

        சார் சாக்கடை ஆய்வாளர் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறீர்களே .கொஞ்சம் யோசித்து பார்த்தீர்கள் என்றால் ஒவ்வொருவரும் தமக்கு எந்த காரணத்தாலோ பிடிக்காமல் போன நாட்டை/இயக்கத்தை/போராட்டங்களை பற்றி எண்ணுவது/எழுதுவது எல்லாமே சாக்கடை ஆய்வு தான் எனபது புரியும்

        மாணவர்களை விடுங்க மருத்துவர்களை கூட இதை விட அதிகமாக திட்டலாம்.
        கோலேராவில் மனுஷன் சாவறான் உனக்கு காஸ்மெடிக் surgery கேட்குதா என்று
        அனாதையாக ஒவ்வொரு ஊரிலும் ஆயிரகணக்கான குழந்தைகள் இருக்குது
        பல லட்சம் செலவு செஞ்சு உனக்கு artificial insemination கேட்குதா
        நாயே நாயே கான்செர் வந்து லட்சக்கணக்குல மக்கள் இறக்கிறார்கள்,உனக்கு எதுக்குடா தோல் மருத்துவம் என்று .முதலில் அனைத்து விதமான கான்செர் நோய்களுக்கும் மருத்துவம் கண்டு பிடித்து விட்டு பிறகு தோல் வியாதி பற்றி கவலைப்படுங்கடா என்றும் திட்டலாம்
        leaking barrel ல எண்ணெய் வழிவதை பார்த்து கருத்து உருவாக்கி கொள்வது தவறு என்றால் எதை பார்த்து மோடியை ஆபத்பாந்தவனாக ஏற்று கொள்கிறீர்கள்
        காந்தியவாதிகள் ஹிந்தியை ஆதரிப்பதை/ஆங்கிலத்தை எதிர்ப்பதை புரிந்து கொள்ளலாம்.ஆனால் வாழ்நாள் முழுக்க இஸ்லாமியன் எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் சரி அவன் என் சகோதரன்.அவன் என்னோடு இருக்க எதை வேண்டுமானாலும் தியாகம் செய்வேன் என்று வாழ்ந்த மனிதனை பின்பற்றுபவர்கள் ,நாம் ஐஞ்சு நமக்கு இருவத்தி ஐஞ்சு என்று மத ரீதியாக குறிப்பிட்ட சமூகத்தை தாகிய/பல தேர்தல்களாக ஒன்பது சதவீதத்திற்கு மேல் இருக்கும் ஒரு சமூகத்திற்கு ஒரு இடம் கூட ஒதுக்காமல் ஒதுக்கி வைத்திருக்கும் மோடியை பார்த்து புளகாங்கிதம் அடைவதை பார்த்தால் இழிவு காந்திக்கா,இல்லை காந்தியவாதிகளுக்கா என்று புரியவில்லை
        பெண் கல்வி/ஆண்-பெண் சதவீதம்(குஜராத்தில் 2001 1000 ஆண்களுக்கு 883 பெண்கள்.2011 il 886 .எவ்வளவு பெரிய சாதனை.தமிழக முதலவர்கள் எல்லாம் இந்த ஒரு சாதனைக்காகவே மோடியோட மூத்திரத்தை குடிக்கணும் )

  8. surya Says:

    poovannan
    can u pls post you blog address
    -surya

    • poovannan Says:

      சார் என்ன பார்த்து எப்படி சார் இப்படி ஒரு கேள்வி கேட்க தோன்றியது உங்களுக்கு
      ப்ளாக் எழுதுற அளவுக்கு எழுத்தாளனா என்னை உயர்த்தி பார்த்ததற்கு சல்யூட்


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s